மாக விசும்பின் மழை தொழில்

 
317. பாலை
' "மாக விசும்பின் மழை தொழில் உலந்தென,
பாஅய் அன்ன பகல் இருள் பரப்பி,
புகை நிற உருவின் அற்சிரம் நீங்க,
குவிமுகை முருக்கின் கூர் நுனை வை எயிற்று
5
நகை முக மகளிர் ஊட்டு உகிர் கடுக்கும்
முதிராப் பல் இதழ் உதிரப் பாய்ந்து, உடன்
மலர் உண் வேட்கையின் சிதர் சிதர்ந்து உகுப்ப,
பொன் செய் கன்னம் பொலிய, வெள்ளி
நுண் கோல் அறை குறைந்து உதிர்வன போல,
10
அரவ வண்டினம் ஊதுதொறும் குரவத்து
ஓங்கு சினை நறு வீ கோங்கு அலர் உறைப்ப,
துவைத்து எழு தும்பி, தவிர் இசை விளரி
புதைத்து விடு நரம்பின், இம்மென இமிரும்
ஆன் ஏமுற்ற காமர் வேனில்,
15
வெயில் அவிர் புரையும் வீ ததை மராஅத்துக்
குயில் இடு பூசல் எம்மொடு கேட்ப
வருவேம்" என்ற பருவம் ஆண்டை
இல்லைகொல்?' என மெல்ல நோக்கி,
நினைந்தனம் இருந்தனமாக, நயந்து ஆங்கு
20
உள்ளிய மருங்கின் உள்ளம் போல,
வந்து நின்றனரே காதலர்; நந் துறந்து
என்னுழியதுகொல் தானே பல் நாள்
அன்னையும் அறிவுற அணங்கி,
நல் நுதல் பாஅய பசலை நோயே?

தலைமகன் வரவு உணர்ந்த தோழி தலைமகட்குச் சொல்லியது. - வடமோதங் கிழார்