முளை வளர் முதல

 
332. குறிஞ்சி
முளை வளர் முதல மூங்கில் முருக்கி,
கிளையொடு மேய்ந்த கேழ் கிளர் யானை,
நீர் நசை மருங்கின் நிறம் பார்த்து ஒடுங்கிய,
பொரு முரண் உழுவை தொலைச்சி, கூர் நுனைக்
5
குருதிச் செங் கோட்டு அழி துளி கழாஅ,
கல் முகை அடுக்கத்து மென்மெல இயலி,
செறு பகை வாட்டிய செம்மலொடு, அறு கால்
யாழ் இசைப் பறவை இமிர, பிடி புணர்ந்து,
வாழை அம் சிலம்பில் துஞ்சும் நாடன்
10
நின் புரை தக்க சாயலன் என, நீ
அன்பு உரைத்து அடங்கக் கூறிய இன் சொல்
வாய்த்தன வாழி, தோழி! வேட்டோர்க்கு
அமிழ்தத்து அன்ன கமழ் தார் மார்பின்
வண்டு இடைப் படாஅ முயக்கமும்,
15
தண்டாக் காதலும், தலை நாள் போன்மே!

இரவுக்குறிச் சிறைப்புறமாகத் தோழிக்குத் தலைமகள் இயற்பட மொழிந்தது. -கபிலர்