நொச்சி

21. பாலை
'மனை இள நொச்சி மௌவல் வால் முகைத்
துணை நிரைத்தன்ன, மா வீழ், வெண் பல்,
அவ் வயிற்று, அகன்ற அல்குல், தைஇத்
தாழ் மென் கூந்தல், தட மென் பணைத் தோள்,
5
மடந்தை மாண் நலம் புலம்ப, சேய் நாட்டுச்
செல்லல்' என்று, யான் சொல்லவும், ஒல்லாய்,
வினை நயந்து அமைந்தனைஆயின், மனை நகப்
பல் வேறு வெறுக்கை தருகம் வல்லே,
எழு இனி, வாழி, என் நெஞ்சே! புரி இணர்
10
மெல் அவிழ் அம் சினை புலம்ப, வல்லோன்
கோடு அறை கொம்பின் வீ உகத் தீண்டி,
மராஅம் அலைத்த மண வாய்த் தென்றல்,
சுரம் செல் மள்ளர் சுரியல் தூற்றும்,
என்றூழ் நின்ற புன் தலை வைப்பில்,
15
பருந்து இளைப்படூஉம் பாறு தலை ஓமை
இருங் கல் விடரகத்து, ஈன்று இளைப்பட்ட,
மென் புனிற்று அம் பிணவு பசித்தென, பைங் கட்
செந்நாய் ஏற்றை கேழல் தாக்க,
இரியற் பிணவல் தீண்டலின், பரீஇச்
20
செங் காய் உதிர்ந்த பைங் குலை ஈந்தின்
பரல் மண் சுவல முரண் நிலம் உடைத்த
வல் வாய்க் கணிச்சி, கூழ் ஆர், கோவலர்
ஊறாது இட்ட உவலைக் கூவல்,
வெண் கோடு நயந்த அன்பு இல் கானவர்
25
இகழ்ந்து இயங்கு இயவின் அகழ்ந்த குழி செத்து,
இருங் களிற்று இன நிரை, தூர்க்கும்
பெருங் கல் அத்தம் விலங்கிய காடே.

பொருள் வலிக்கப்பட்டுப் பிரிந்த தலைமகன் இடைச் சுரத்துநின்று மீளலுற்ற நெஞ்சினைக் கழறியது. - காவன்முல்லைப் பூதனார்

23. பாலை
மண்கண் குளிர்ப்ப, வீசித் தண் பெயல்,
பாடு உலந்தன்றே, பறைக் குரல் எழிலி;
புதல்மிசைத் தளவின் இதல் முட் செந் நனை
நெருங்கு குலைப் பிடவமொடு ஒருங்கு பிணி அவிழ,
5
காடே கம்மென்றன்றே; அவல,
கோடு உடைந்தன்ன கோடற் பைம் பயிர்,
பதவின் பாவை, முனைஇ, மதவு நடை
அண்ணல் இரலை அமர் பிணை தழீஇ,
தண் அறல் பருகித் தாழ்ந்துபட்டனவே;
10
அனையகொல் வாழி, தோழி! மனைய
தாழ்வின் நொச்சி, சூழ்வன மலரும்
மௌவல், மாச் சினை காட்டி,
அவ்அளவு என்றார், ஆண்டுச் செய் பொருளே!

தலைமகன் பிரிவின்கண் தலைமகள் தோழிக்குச் சொல்லியது. - ஒரோடோகத்துக் கந்தரத்தனார்

117. பாலை
மௌவலொடு மலர்ந்த மாக் குரல் நொச்சியும்,
அவ் வரி அல்குல் ஆயமும், உள்ளாள்,
ஏதிலன் பொய்ம்மொழி நம்பி, ஏர் வினை
வளம் கெழு திரு நகர் புலம்பப் போகி,
5
வெருவரு கவலை ஆங்கண், அருள்வர,
கருங் கால் ஓமை ஏறி, வெண் தலைப்
பருந்து பெடை பயிரும் பாழ் நாட்டு ஆங்கண்,
பொலந்தொடி தெளிர்ப்ப வீசி; சேவடிச்
சிலம்பு நக இயலிச் சென்ற என் மகட்கே
10
சாந்து உளர் வணர் குரல் வாரி, வகைவகுத்து;
யான் போது துணைப்ப, தகரம் மண்ணாள்,
தன் ஓரன்ன தகை வெங் காதலன்
வெறி கமழ் பல் மலர் புனையப் பின்னுவிட,
சிறுபுறம் புதைய நெறிபு தாழ்ந்தனகொல்
15
நெடுங் கால் மாஅத்து ஊழுறு வெண் பழம்
கொடுந் தாள் யாமை பார்ப்பொடு கவரும்
பொய்கை சூழ்ந்த, பொய்யா யாணர்,
வாணன் சிறுகுடி வடாஅது
தீம் நீர்க் கான்யாற்று அவிர்அறல் போன்றே?

மகட் போக்கிய செவிலித்தாய் சொல்லியது. - .........

165. பாலை
கயந் தலை மடப் பிடி பயம்பில் பட்டென,
களிறு விளிப்படுத்த கம்பலை வெரீஇ,
ஒய்யென எழுந்த செவ் வாய்க் குழவி
தாது எரு மறுகின் மூதூர் ஆங்கண்,
5
எருமை நல் ஆன் பெறு முலை மாந்தும்
நாடு பல இறந்த நன்னராட்டிக்கு
ஆயமும் அணி இழந்து அழுங்கின்று; தாயும்
'இன் தோள் தாராய், இறீஇயர் என் உயிர்!' என,
கண்ணும் நுதலும் நீவி, தண்ணென,
10
தடவு நிலை நொச்சி வரி நிழல் அசைஇ,
தாழிக் குவளை வாடு மலர் சூட்டி,
'தருமணற் கிடந்த பாவை என்
அருமகளே என முயங்கினள் அழுமே!

மகட் போக்கிய தாயது நிலைமை கண்டார் சொல்லியது. - ......

203. பாலை
'உவக்குநள்ஆயினும், உடலுநள்ஆயினும்,
யாய் அறிந்து உணர்க' என்னார், தீ வாய்
அலர் வினை மேவல் அம்பற் பெண்டிர்,
'இன்னள் இனையள், நின் மகள்' என, பல் நாள்
5
எனக்கு வந்து உரைப்பவும், தனக்கு உரைப்பு அறியேன்,
'நாணுவள் இவள்' என, நனி கரந்து உறையும்
யான் இவ் வறு மனை ஒழிய, தானே,
'அன்னை அறியின், இவண் உறை வாழ்க்கை
எனக்கு எளிது ஆகல் இல்' என, கழற் கால்
10
மின் ஒளிர் நெடு வேல் இளையோன் முன்னுற,
பல் மலை அருஞ் சுரம் போகிய தனக்கு, யான்
அன்னேன் அன்மை நன் வாயாக,
மான் அதர் மயங்கிய மலைமுதல் சிறு நெறி
வெய்து இடையுறாஅது எய்தி, முன்னர்ப்
15
புல்லென் மா மலைப் புலம்பு கொள் சீறூர்,
செல் விருந்து ஆற்றி, துச்சில் இருத்த,
நுனை குழைத்து அலமரும் நொச்சி
மனை கெழு பெண்டு யான் ஆகுகமன்னே!

மகட் போக்கிய தாய் சொல்லியது. - கபிலர்

259. பாலை
வேலும் விளங்கின; இளையரும் இயன்றனர்;
தாரும் தையின; தழையும் தொடுத்தன;
நிலம் நீர் அற்ற வெம்மை நீங்கப்
பெயல் நீர் தலைஇ, உலவை இலை நீத்துக்
5
குறு முறி ஈன்றன, மரனே; நறு மலர்
வேய்ந்தன போலத் தோன்றி, பல உடன்
தேம் படப் பொதுளின பொழிலே; கானமும்,
நனி நன்று ஆகிய பனி நீங்கு வழி நாள்,
பால் எனப் பரத்தரும் நிலவின் மாலைப்
10
போது வந்தன்று, தூதே; நீயும்
கலங்கா மனத்தை ஆகி, என் சொல்
நயந்தனை கொண்மோ நெஞ்சு அமர் தகுவி!
தெற்றி உலறினும், வயலை வாடினும்,
நொச்சி மென் சினை வணர் குரல் சாயினும்,
15
நின்னினும் மடவள் நனி நின் நயந்த
அன்னை அல்லல் தாங்கி, நின் ஐயர்
புலி மருள் செம்மல் நோக்கி,
வலியாய் இன்னும்; தோய்கம், நின் முலையே!

உடன்போக்கு நேர்ந்த தோழி தலைமகட்குச் சொல்லியது. - கயமனார்

275. பாலை
ஓங்கு நிலைத் தாழி மல்கச் சார்த்தி,
குடை அடை நீரின் மடையினள் எடுத்த
பந்தர் வயலை, பந்து எறிந்து ஆடி,
இளமைத் தகைமையை வள மனைக் கிழத்தி!
5
'பிதிர்வை நீரை வெண் நீறு ஆக' என,
யாம் தற் கழறுங் காலை, தான் தன்
மழலை இன் சொல், கழறல் இன்றி,
இன் உயிர் கலப்பக் கூறி, நன்னுதல்
பெருஞ் சோற்று இல்லத்து ஒருங்கு இவண் இராஅள்,
10
ஏதிலாளன் காதல் நம்பி,
திரள் அரை இருப்பைத் தொள்ளை வான் பூக்
குருளை எண்கின் இருங் கிளை கவரும்
வெம் மலை அருஞ் சுரம், நம் இவண் ஒழிய,
இரு நிலன் உயிர்க்கும் இன்னாக் கானம்,
15
நெருநைப் போகிய பெரு மடத் தகுவி
ஐது அகல் அல்குல் தழை அணிக் கூட்டும்
கூழை நொச்சிக் கீழது, என் மகள்
செம் புடைச் சிறு விரல் வரித்த
வண்டலும் காண்டிரோ, கண் உடையீரே?

மகட் போக்கிய தாய் சொல்லியது. - கயமனார்

367. பாலை
இலங்கு சுடர் மண்டிலம் புலம் தலைப்பெயர்ந்து,
பல் கதிர் மழுகிய கல் சேர் அமையத்து,
அலந்தலை மூதேறு ஆண் குரல் விளிப்ப,
மனை வளர் நொச்சி மா சேர்பு வதிய,
5
முனை உழை இருந்த அம் குடிச் சீறூர்,
கருங் கால் வேங்கைச் செஞ் சுவல் வரகின்
மிகு பதம் நிறைந்த தொகு கூட்டு ஒரு சிறை,
குவி அடி வெருகின் பைங் கண் ஏற்றை
ஊன் நசைப் பிணவின் உயங்கு பசி களைஇயர்,
10
தளிர் புரை கொடிற்றின், செறி மயிர் எருத்தின்,
கதிர்த்த சென்னிக் கவிர்ப் பூ அன்ன
நெற்றிச் சேவல் அற்றம் பார்க்கும்
புல்லென் மாலையும், இனிது மன்றம்ம
நல் அக வன முலை அடையப் புல்லுதொறும்
15
உயிர் குழைப்பன்ன சாயல்,
செயிர் தீர், இன் துணைப் புணர்ந்திசினோர்க்கே.

பிரிவிடை வேறுபட்ட தலைமகள் வற்புறுக்கும் தோழிக்குச் சொல்லியது. - பரணர்