தாமரை

6. மருதம்
அரி பெய் சிலம்பின் ஆம்பல் அம் தொடலை,
அரம் போழ் அவ் வளைப் பொலிந்த முன்கை,
இழை அணி பணைத் தோள், ஐயை தந்தை,
மழை வளம் தரூஉம் மா வண் தித்தன்,
5
பிண்ட நெல்லின் உறந்தை ஆங்கண்
கழை நிலை பெறாஅக் காவிரி நீத்தம்,
குழை மாண் ஒள் இழை நீ வெய்யோளொடு,
வேழ வெண் புணை தழீஇ, பூழியர்
கயம் நாடு யானையின் முகன் அமர்ந்தாஅங்கு,
10
ஏந்து எழில் ஆகத்துப் பூந் தார் குழைய,
நெருநல் ஆடினை, புனலே; இன்று வந்து,
'ஆக வன முலை அரும்பிய சுணங்கின்,
மாசு இல் கற்பின், புதல்வன் தாய்!' என,
மாயப் பொய்ம்மொழி சாயினை பயிற்றி, எம்
15
முதுமை எள்ளல்; அஃது அமைகும் தில்ல!
சுடர்ப் பூந் தாமரை நீர் முதிர் பழனத்து,
அம் தூம்பு வள்ளை ஆய் கொடி மயக்கி,
வாளை மேய்ந்த வள் எயிற்று நீர்நாய்,
முள் அரைப் பிரம்பின் மூதரில் செறியும்,
20
பல் வேல் மத்தி, கழாஅர் அன்ன எம்
இளமை சென்று தவத் தொல்லஃதே;
இனிமை எவன் செய்வது, பொய்ம்மொழி, எமக்கே?

பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகற்குக் கிழத்தி கூறியது. - பரணர்

16. மருதம்
நாயுடை முது நீர்க் கலித்த தாமரைத்
தாதின் அல்லி அவிர் இதழ் புரையும்,
மாசு இல் அங்கை, மணி மருள் அவ் வாய்,
நாவொடு நவிலா நகைபடு தீம் சொல்,
5
யாவரும் விழையும் பொலந்தொடிப் புதல்வனை,
தேர் வழங்கு தெருவில், தமியோற் கண்டே!
கூர் எயிற்று அரிவை குறுகினள்; யாவரும்
காணுநர் இன்மையின், செத்தனள் பேணி,
பொலங்கலம் சுமந்த பூண் தாங்கு இள முலை,
10
'வருகமாள, என் உயிர்!' எனப் பெரிது உவந்து,
கொண்டனள் நின்றோட் கண்டு, நிலைச் செல்லேன்,
'மாசு இல் குறுமகள்! எவன் பேதுற்றனை?
நீயும் தாயை இவற்கு?' என, யான் தற்
கரைய, வந்து விரைவனென் கவைஇ
15
களவு உடம்படுநரின் கவிழ்ந்து, நிலம் கிளையா,
நாணி நின்றோள் நிலை கண்டு, யானும்
பேணினென் அல்லெனோ மகிழ்ந! வானத்து
அணங்கு அருங் கடவுள் அன்னோள் நின்
மகன் தாய் ஆதல் புரைவது ஆங்கு எனவே?

பரத்தையர் சேரியினின்றும் வந்த தலைமகன், 'யாரையும் அறியேன்' என்றாற்குத் தலைமகள் சொல்லியது. - சாகலாசனார்

46. மருதம்
சேற்று நிலை முனைஇய செங் கட் காரான்
ஊர் மடி கங்குலில், நோன் தளை பரிந்து,
கூர் முள் வேலி கோட்டின் நீக்கி,
நீர் முதிர் பழனத்து மீன் உடன் இரிய
5
அம் தூம்பு வள்ளை மயக்கி, தாமரை
வண்டு ஊது பனி மலர் ஆரும் ஊர!
யாரையோ? நிற் புலக்கேம். வாருற்று,
உறை இறந்து, ஒளிரும் தாழ் இருங் கூந்தல்,
பிறரும், ஒருத்தியை நம் மனைத் தந்து,
10
வதுவை அயர்ந்தனை என்ப. அஃது யாம்
கூறேம். வாழியர், எந்தை! செறுநர்
களிறுடை அருஞ் சமம் ததைய நூறும்
ஒளிறு வாட் தானைக் கொற்றச் செழியன்
பிண்ட நெல்லின் அள்ளூர் அன்ன என்
15
ஒண் தொடி நெகிழினும் நெகிழ்க;
சென்றி, பெரும! நிற் தகைக்குநர் யாரோ?

வாயில் வேண்டிச் சென்ற தலைமகற்குத் தோழி வாயில் மறுத்தது.- அள்ளூர் நன் முல்லையார்

91. பாலை
விளங்குபகல் உதவிய பல் கதிர் ஞாயிறு
வளம் கெழு மா மலை பயம் கெடத் தெறுதலின்,
அருவி ஆன்ற பெரு வரை மருங்கில்
சூர்ச் சுனை துழைஇ நீர்ப்பயம் காணாது,
5
பாசி தின்ற பைங் கண் யானை
ஓய் பசிப் பிடியொடு ஒருதிறன் ஒடுங்க,
வேய் கண் உடைந்த வெயில் அவிர் நனந்தலை
அரும் பொருள் வேட்கையின் அகன்றனர் ஆயினும்,
பெரும் பேர் அன்பினர் தோழி!-இருங் கேழ்
10
இரலை சேக்கும், பரல் உயர் பதுக்கைக்
கடுங்கண் மழவர் களவு உழவு எழுந்த
நெடுங் கால் ஆசினி ஒடுங்காட்டு உம்பர்,
விசிபிணி முழவின் குட்டுவன் காப்ப,
பசி என அறியாப் பணை பயில் இருக்கை,
15
தட மருப்பு எருமை தாமரை முனையின்,
முடம் முதிர் பலவின் கொழு நிழல் வதியும்,
குடநாடு பெறினும் தவிரலர்
மடமான் நோக்கி! நின் மாண் நலம் மறந்தே.

பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. - மாமூலனார்

106. மருதம்
எரி அகைந்தன்ன தாமரைப் பழனத்து,
பொரி அகைந்தன்ன பொங்கு பல் சிறு மீன்,
வெறி கொள் பாசடை, உணீஇயர், பைப்பயப்
பறை தபு முது சிரல் அசைபு வந்து இருக்கும்
5
துறைகேழ் ஊரன் பெண்டு தன் கொழுநனை
நம்மொடு புலக்கும் என்ப நாம் அது
செய்யாம்ஆயினும், உய்யாமையின்,
செறிதொடி தெளிர்ப்ப வீசி, சிறிது அவண்
உலமந்து வருகம் சென்மோ தோழி!
10
ஒளிறு வாட் தானைக் கொற்றச் செழியன்
வெளிறு இல் கற்பின் மண்டு அமர் அடுதொறும்
களிறு பெறு வல்சிப் பாணன் எறியும்
தண்ணுமைக் கண்ணின் அலைஇயர், தன் வயிறே.

தலைமகள் தன்னைப் புறங்கூறினாளாகக் கேட்ட பரத்தை, அவட்குப் பாங்காயினார் கேட்ப, சொல்லியது. - ஆலங்குடி வங்கனார்

116. மருதம்
எரி அகைந்தன்ன தாமரை இடை இடை
அரிந்து கால் குவித்த செந் நெல் வினைஞர்
கள் கொண்டு மறுகும் சாகாடு அளற்று உறின்,
ஆய் கரும்பு அடுக்கும் பாய்புனல் ஊர!
5
பெரிய நாண் இலைமன்ற; 'பொரி எனப்
புன்கு அவிழ் அகன்துறைப் பொலிய, ஒள் நுதல்,
நறு மலர்க்காண் வரும் குறும் பல் கூந்தல்,
மாழை நோக்கின், காழ் இயல் வன முலை,
எஃகுடை எழில் நலத்து, ஒருத்தியொடு நெருநை
10
வைகுபுனல் அயர்ந்தனை' என்ப; அதுவே,
பொய் புறம் பொதிந்து, யாம் கரப்பவும், கையிகந்து
அலர் ஆகின்றால் தானே; மலர்தார்,
மை அணி யானை, மறப் போர்ச் செழியன்
பொய்யா விழவின் கூடற் பறந்தலை,
15
உடன் இயைந்து எழுந்த இரு பெரு வேந்தர்
கடல் மருள் பெரும் படை கலங்கத் தாக்கி,
இரங்குஇசை முரசம் ஒழிய, பரந்து அவர்
ஓடுபுறம் கண்ட ஞான்றை,
ஆடு கொள் வியன் களத்து ஆர்ப்பினும் பெரிதே.

தோழி தலைமகனை வாயில் மறுத்தது. - பரணர்

176. மருதம்
கடல் கண்டன்ன கண் அகன் பரப்பின்
நிலம் பக வீழ்ந்த வேர் முதிர் கிழங்கின்
கழை கண்டன்ன தூம்புடைத் திரள் கால்,
களிற்றுச் செவி அன்ன பாசடை மருங்கில்,
5
கழு நிவந்தன்ன கொழு முகை இடை இடை
முறுவல் முகத்தின் பல் மலர் தயங்க,
பூத்த தாமரைப் புள் இமிழ் பழனத்து,
வேப்பு நனை அன்ன நெடுங் கண் நீர்ஞெண்டு
இரை தேர் வெண் குருகு அஞ்சி, அயலது
10
ஒலித்த பகன்றை இருஞ் சேற்று அள்ளல்,
திதலையின் வரிப்ப ஓடி, விரைந்து தன்
நீர் மலி மண் அளைச் செறியும் ஊர!
மனை நகு வயலை மரன் இவர் கொழுங் கொடி
அரி மலர் ஆம்பலொடு ஆர்தழை தைஇ,
15
விழவு ஆடு மகளிரொடு தழூஉ அணிப் பொலிந்து,
மலர் ஏர் உண்கண் மாண் இழை முன்கைக்
குறுந் தொடி துடக்கிய நெடுந் தொடர் விடுத்தது
உடன்றனள் போலும், நின் காதலி? எம் போல்
புல் உளைக் குடுமிப் புதல்வற் பயந்து,
20
நெல்லுடை நெடு நகர் நின் இன்று உறைய,
என்ன கடத்தளோ, மற்றே? தன் முகத்து
எழுது எழில் சிதைய அழுதனள் ஏங்கி,
அடித்தென உருத்த தித்திப் பல் ஊழ்
நொடித்தெனச் சிவந்த மெல் விரல் திருகுபு,
25
கூர்நுனை மழுகிய எயிற்றள்
ஊர் முழுதும் நுவலும் நிற் காணிய சென்மே.

தோழி தலைமகனை வாயில் மறுத்தது. மருதம் -
பாடிய இளங்கடுங்கோ

361. பாலை
'தூ மலர்த் தாமரைப் பூவின் அம் கண்,
மா இதழ்க் குவளை மலர் பிணைத்தன்ன,
திரு முகத்து அலமரும் பெரு மதர் மழைக் கண்,
அணி வளை முன்கை, ஆய் இதழ் மடந்தை
5
வார் முலை முற்றத்து நூல் இடை விலங்கினும்,
கவவுப் புலந்து உறையும் கழி பெருங் காமத்து
இன்புறு நுகர்ச்சியின் சிறந்தது ஒன்று இல்' என
அன்பால் மொழிந்த என் மொழி கொள்ளாய்,
பொருள் புரிவுண்ட மருளி நெஞ்சே!
10
கரியாப் பூவின் பெரியோர் ஆர,
அழல் எழு தித்தியம் அடுத்த யாமை
நிழலுடை நெடுங் கயம் புகல் வேட்டாஅங்கு,
உள்ளுதல் ஓம்புமதி, இனி நீ, முள் எயிற்று,
சில் மொழி, அரிவை தோளே பல் மலை
15
வெவ் அறை மருங்கின் வியன் சுரம்,
எவ்வம் கூர, இறந்தனம், யாமே.

பொருள்வயிற் பிரிந்து போகாநின்ற தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - எயினந்தை மகனார் இளங்கீரனார்