பிடவம்

304. முல்லை
இரு விசும்பு இவர்ந்த கருவி மா மழை,
நீர் செறி நுங்கின் கண் சிதர்ந்தவை போல்,
சூர் பனிப்பன்ன தண் வரல் ஆலியொடு
பரூஉப் பெயல் அழி துளி தலைஇ, வான் நவின்று,
5
குரூஉத் துளி பொழிந்த பெரும் புலர் வைகறை,
செய்து விட்டன்ன செந் நில மருங்கில்,
செறித்து நிறுத்தன்ன தெள் அறல் பருகி,
சிறு மறி தழீஇய தெறிநடை மடப் பிணை,
வலம் திரி மருப்பின் அண்ணல் இரலையொடு,
10
அலங்கு சினைக் குருந்தின் அல்கு நிழல் வதிய,
சுரும்பு இமிர்பு ஊத, பிடவுத் தளை அவிழ,
அரும் பொறி மஞ்ஞை ஆல, வரி மணல்
மணி மிடை பவளம் போல, அணி மிகக்
காயாஞ் செம்மல் தாஅய், பல உடன்
15
ஈயல் மூதாய் ஈர்ம் புறம் வரிப்ப,
புலன் அணி கொண்ட கார் எதிர் காலை,
'ஏந்து கோட்டு யானை வேந்தன் பாசறை
வினையொடு வேறு புலத்து அல்கி, நன்றும்
அறவர்அல்லர், நம் அருளாதோர்' என,
20
நம் நோய் தன்வயின் அறியாள்,
எம் நொந்து புலக்கும்கொல், மாஅயோளே?

பாசறைக்கண் தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது. - இடைக்காடனார்

344. முல்லை
வள மழை பொழிந்த வால் நிறக் களரி,
உளர்தரு தண் வளி உறுதொறும், நிலவு எனத்
தொகு முகை விரிந்த முடக் காற் பிடவின்,
வை ஏர் வால் எயிற்று, ஒள் நுதல், மகளிர்
5
கை மாண் தோணி கடுப்ப, பையென,
மயிலினம் பயிலும் மரம் பயில் கானம்
எல் இடை உறாஅ அளவை, வல்லே,
கழல் ஒலி நாவின் தெண் மணி கறங்க,
நிழல் ஒளிப்பன்ன நிமிர் பரிப் புரவி
10
வயக்கு உறு கொடிஞ்சி பொலிய, வள்பு ஆய்ந்து,
இயக்குமதி வாழியோ, கையுடை வலவ!
பயப்புறு படர் அட வருந்திய
நயப்பு இன் காதலி நகை முகம் பெறவே!

வினை முற்றிய தலைமகன் தேர்ப்பாகற்குச் சொல்லியது. - மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார்