சுறா(கோட்டுமீன்)

10. நெய்தல்
வான் கடற் பரப்பில் தூவற்கு எதிரிய,
மீன் கண்டன்ன மெல் அரும்பு ஊழ்த்த,
முடவு முதிர் புன்னைத் தடவு நிலை மாச் சினை,
புள் இறைகூரும் மெல்லம் புலம்ப!
5
நெய்தல் உண்கண் பைதல கலுழ,
பிரிதல் எண்ணினைஆயின், நன்றும்
அரிது உற்றனையால் பெரும! உரிதினின்
கொண்டு ஆங்குப் பெயர்தல்வேண்டும் கொண்டலொடு
குரூஉத் திரைப் புணரி உடைதரும் எக்கர்ப்
10
பழந் திமில் கொன்ற புது வலைப் பரதவர்
மோட்டு மணல் அடைகரைக் கோட்டுமீன் கெண்டி,
மணம் கமழ் பாக்கத்துப் பகுக்கும்
வளம் கெழு தொண்டி அன்ன இவள் நலனே.

இரவுக்குறி வந்து தலைமகளைக் கண்ணுற்று நீங்கும் தலைமகனை எதிர்ப்பட்டு நின்று, தோழி சொல்லியது. - அம்மூவனார்

30. நெய்தல்
நெடுங் கயிறு வலந்த குறுங் கண் அவ் வலை,
கடல் பாடு அழிய, இன மீன் முகந்து,
துணை புணர் உவகையர் பரத மாக்கள்
இளையரும் முதியரும் கிளையுடன் துவன்றி,
5
உப்பு ஒய் உமணர் அருந் துறைபோக்கும்
ஒழுகை நோன் பகடு ஒப்பக் குழீஇ,
அயிர் திணி அடைகரை ஒலிப்ப வாங்கி,
பெருங் களம் தொகுத்த உழவர் போல,
இரந்தோர் வறுங் கலம் மல்க வீசி,
10
பாடு பல அமைத்து, கொள்ளை சாற்றி,
கோடு உயர் திணி மணல் துஞ்சும் துறைவ!
பெருமை என்பது கெடுமோ ஒரு நாள்
மண்ணா முத்தம் அரும்பிய புன்னைத்
தண் நறுங் கானல் வந்து, 'நும்
15
வண்ணம் எவனோ?' என்றனிர் செலினே?

பகற்குறி வந்த தலைமகற்குத் தோழி சொல்லியது. - முடங்கிக் கிடந்த நெடுஞ்சேரலாதன்

80. நெய்தல்
கொடுந் தாள் முதலையொடு கோட்டுமீன் வழங்கும்
இருங் கழி இட்டுச் சுரம் நீந்தி, இரவின்
வந்தோய்மன்ற தண் கடற் சேர்ப்ப!
நினக்கு எவன் அரியமோ, யாமே? எந்தை
5
புணர் திரைப் பரப்பகம் துழைஇத் தந்த
பல் மீன் உணங்கற் படுபுள் ஓப்புதும்.
முண்டகம் கலித்த முதுநீர் அடைகரை
ஒண் பல் மலர கவட்டு இலை அடும்பின்
செங் கேழ் மென் கொடி ஆழி அறுப்ப,
10
இன மணிப் புரவி நெடுந் தேர் கடைஇ,
மின் இலைப் பொலிந்த விளங்கு இணர் அவிழ் பொன்
தண் நறும் பைந் தாது உறைக்கும்
புன்னைஅம் கானல், பகல் வந்தீமே.

இரவுக்குறி வந்த தலைமகற்குத் தோழி சொல்லியது. - மருங்கூர் கிழார் பெருங் கண்ணனார்

120. நெய்தல்
நெடு வேள் மார்பின் ஆரம் போல,
செவ் வாய் வானம் தீண்டி, மீன் அருந்தும்
பைங் காற் கொக்கினம் நிரை பறை உகப்ப,
எல்லை பைப்பயக் கழிப்பி, குடவயின்
5
கல் சேர்ந்தன்றே, பல் கதிர் ஞாயிறு
மதர் எழில் மழைக் கண் கலுழ, இவளே
பெரு நாண் அணிந்த சிறு மென் சாயல்
மாண் நலம் சிதைய ஏங்கி, ஆனாது,
அழல் தொடங்கினளே பெரும! அதனால்
10
கழிச் சுறா எறிந்த புண் தாள் அத்திரி
நெடு நீர் இருங் கழிப் பரி மெலிந்து, அசைஇ,
வல் வில் இளையரொடு எல்லிச் செல்லாது,
சேர்ந்தனை செலினே சிதைகுவது உண்டோ
பெண்ணை ஓங்கிய வெண் மணற் படப்பை
15
அன்றில் அகவும் ஆங்கண்,
சிறு குரல் நெய்தல் எம் பெருங் கழி நாட்டே?

தோழி, பகற்குறிக்கண் தலைமகனை இடத்து உய்த்து வந்து, தலைமகனை எதிர்ப்பட்டு நின்று சொல்லியது. - நக்கீரனார்

150. நெய்தல்
பின்னுவிட நெறித்த கூந்தலும், பொன்னென
ஆகத்து அரும்பிய சுணங்கும், வம்பு விடக்
கண் உருத்து எழுதரு முலையும், நோக்கி;
'எல்லினை பெரிது' எனப் பல் மாண் கூறி,
5
பெருந் தோள் அடைய முயங்கி, நீடு நினைந்து,
அருங் கடிப்படுத்தனள் யாயே; கடுஞ் செலல்
வாட் சுறா வழங்கும் வளை மேய் பெருந் துறை,
கனைத்த நெய்தற் கண் போல் மா மலர்
நனைத்த செருந்திப் போது வாய் அவிழ,
10
மாலை மணி இதழ் கூம்ப, காலைக்
கள் நாறு காவியொடு தண்ணென மலரும்
கழியும், கானலும், காண்தொறும் பல புலந்து;
'வாரார்கொல்?' எனப் பருவரும்
தாரார் மார்ப! நீ தணந்த ஞான்றே!

பகற்குறி வந்து கண்ணுற்று நீங்கும் தலைமகனைத் தோழி, தலைமகளை இடத்து உய்த்து வந்து, செறிப்பு அறிவுறீஇ, வரைவு கடாயது. - குறுவழுதியார்

170. நெய்தல்
கானலும் கழறாது; கழியும் கூறாது;
தேன் இமிர் நறு மலர்ப் புன்னையும் மொழியாது;
ஒரு நின் அல்லது பிறிது யாதும் இலனே;
இருங் கழி மலர்ந்த கண் போல் நெய்தல்
5
கமழ் இதழ் நாற்றம் அமிழ்து என நசைஇ,
தண் தாது ஊதிய வண்டினம் களி சிறந்து,
பறைஇ தளரும் துறைவனை, நீயே,
சொல்லல் வேண்டுமால் அலவ! பல்கால்
கைதைஅம் படுசினை எவ்வமொடு அசாஅம்
10
கடற் சிறு காக்கை காமர் பெடையொடு
கோட்டுமீன் வழங்கும் வேட்டம் மடி பரப்பின்
வெள் இறாக் கனவும் நள்ளென் யாமத்து,
'நின் உறு விழுமம் களைந்தோள்
தன் உறு விழுமம் நீந்துமோ!' எனவே.

தலைமகள் காமம் மிக்க கழிபடர் கிளவியாற் சொற்றது. - மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார்

187. பாலை
தோள் புலம்பு அகலத் துஞ்சி, நம்மொடு
நாள் பல நீடிய கரந்து உறை புணர்ச்சி
நாண் உடைமையின் நீங்கி, சேய் நாட்டு
அரும் பொருள் வலித்த நெஞ்சமொடு ஏகி,
5
நம் உயர்வு உள்ளினர் காதலர் கறுத்தோர்
தெம் முனை சிதைத்த, கடும் பரிப் புரவி,
வார் கழற் பொலிந்த வன்கண் மழவர்
பூந் தொடை விழவின் தலை நாள் அன்ன,
தரு மணல் ஞெமிரிய திரு நகர் முற்றம்
10
புலம்புறும்கொல்லோ தோழி! சேண் ஓங்கு
அலந்தலை ஞெமையத்து ஆள் இல் ஆங்கண்,
கல் சேர்பு இருந்த சில் குடிப் பாக்கத்து,
எல் விருந்து அயர, ஏமத்து அல்கி,
மனை உறை கோழி அணல் தாழ்பு அன்ன
15
கவை ஒண் தளிர கருங்கால் யாஅத்து
வேனில் வெற்பின் கானம் காய,
முனை எழுந்து ஓடிய கெடு நாட்டு ஆர் இடை,
பனை வெளிறு அருந்து பைங் கண் யானை
ஒண் சுடர் முதிரா இளங் கதிர் அமையத்து,
20
கண்படு பாயல் கை ஒடுங்கு அசை நிலை
வாள் வாய்ச் சுறவின் பனித் துறை நீந்தி,
நாள் வேட்டு எழுந்த நயன் இல் பரதவர்
வைகு கடல் அம்பியின் தோன்றும்
மை படு மா மலை விலங்கிய சுரனே?

பிரிவு உணர்த்திய தோழிக்குத் தலைமகள் சொல்லியது; தலைமகன் பிரிவின்கண் தலைமகட்குத் தோழி சொல்லியதூஉம் ஆம். - மாமூலனார்

190. நெய்தல்
திரை உழந்து அசைஇய நிரைவளை ஆயமொடு
உப்பின் குப்பை ஏறி, எல் பட,
வரு திமில் எண்ணும் துறைவனொடு, ஊரே
ஒரு தன் கொடுமையின் அலர் பாடும்மே;
5
அலமரல் மழைக் கண் அமர்ந்து நோக்காள்;
அலையல் வாழி! வேண்டு, அன்னை! உயர்சிமைப்
பொதும்பில், புன்னைச் சினை சேர்பு இருந்த
வம்ப நாரை இரிய, ஒரு நாள்,
பொங்கு வரல் ஊதையொடு புணரி அலைப்பவும்,
10
உழைக்கடல் வழங்கலும் உரியன்; அதன்தலை
இருங் கழிப் புகாஅர் பொருந்தத் தாக்கி
வயச் சுறா எறிந்தென, வலவன் அழிப்ப,
எழில் பயம் குன்றிய சிறை அழி தொழில
நிரைமணிப் புரவி விரைநடை தவிர,
15
இழுமென் கானல் விழு மணல் அசைஇ,
ஆய்ந்த பரியன் வந்து, இவண்
மான்ற மாலைச் சேர்ந்தன்றோ இலனே!

தோழி செவிலித்தாய்க்கு அறத்தொடு நின்றது. - உலோச்சனார்

340. நெய்தல்
பல் நாள் எவ்வம் தீர, பகல் வந்து,
புன்னை அம் பொதும்பின் இன் நிழல் கழிப்பி,
மாலை மால் கொள நோக்கி, பண் ஆய்ந்து,
வலவன் வண் தேர் இயக்க, நீயும்
5
செலவு விருப்புறுதல் ஒழிகதில் அம்ம
'செல்லா நல் இசை, பொலம் பூண், திரையன்
பல் பூங் கானற் பவத்திரி அன்ன இவள்
நல் எழில் இள நலம் தொலைய, ஒல்லென,
கழியே ஓதம் மல்கின்று; வழியே
10
வள் எயிற்று அரவொடு வய மீன் கொட்கும்;
சென்றோர் மன்ற; மான்றன்று பொழுது' என,
சேப்பின் எவனோ பூக் கேழ் புலம்ப!
பசு மீன் நொடுத்த வெண் நெல் மாஅத்
15
தயிர் மிதி மிதவை ஆர்த்துவம் நினக்கே;
வடவர் தந்த வான் கேழ் வட்டம்
குட புல உறுப்பின் கூட்டுபு நிகழ்த்திய
வண்டு இமிர் நறுஞ் சாந்து அணிகுவம் திண் திமில்
எல்லுத் தொழில் மடுத்த வல் வினைப் பரதவர்
20
கூர் உளிக் கடு விசை மாட்டலின், பாய்பு உடன்,
கோட் சுறாக் கிழித்த கொடு முடி நெடு வலை
தண் கடல் அசைவளி எறிதொறும், வினை விட்டு,
முன்றில் தாழைத் தூங்கும்
தெண் கடற் பரப்பின், எம் உறைவு இன், ஊர்க்கே?

பகற் குறிக்கண் தோழி தலைமகற்குச் சொல்லியது. - நக்கீரர்

350. நெய்தல்
கழியே, சிறு குரல் நெய்தலொடு காவி கூம்ப,
எறி திரை ஓதம் தரல் ஆனாதே;
துறையே, மருங்கின் போகிய மாக் கவை மருப்பின்
இருஞ் சேற்று ஈர் அளை அலவன் நீப்ப,
5
வழங்குநர் இன்மையின் பாடு ஆன்றன்றே;
கொடு நுகம் நுழைந்த கணைக் கால் அத்திரி
வடி மணி நெடுந் தேர் பூண ஏவாது,
ஏந்து எழில் மழைக் கண் இவள் குறையாகச்
சேந்தனை சென்மோ பெரு நீர்ச் சேர்ப்ப!
10
இலங்கு இரும் பரப்பின் எறி சுறா நீக்கி,
வலம்புரி மூழ்கிய வான் திமிற் பரதவர்
ஒலி தலைப் பணிலம் ஆர்ப்ப, கல்லென,
கலி கெழு கொற்கை எதிர்கொள, இழிதரும்
குவவு மணல் நெடுங் கோட்டு ஆங்கண்,
15
உவக்காண் தோன்றும், எம் சிறு நல் ஊரே!

பகற்குறி வந்து நீங்கும் தலைமகற்குத் தோழி சொல்லியது. - சேந்தன் கண்ணனார்