வரால்

36. மருதம்
பகுவாய் வராஅற் பல் வரி இரும் போத்துக்
கொடு வாய் இரும்பின் கோள் இரை துற்றி,
ஆம்பல் மெல் அடை கிழிய, குவளைக்
கூம்பு விடு பல் மலர் சிதையப் பாய்ந்து, எழுந்து,
5
அரில் படு வள்ளை ஆய் கொடி மயக்கி,
தூண்டில் வேட்டுவன் வாங்க வாராது,
கயிறு இடு கதச் சேப் போல, மதம் மிக்கு,
நாள், கயம் உழக்கும் பூக் கேழ் ஊர!
வரு புனல் வையை வார் மணல் அகன் துறை,
10
திரு மருது ஓங்கிய விரி மலர்க் காவில்,
நறும் பல் கூந்தற் குறுந் தொடி மடந்தையொடு
வதுவை அயர்ந்தனை என்ப. அலரே,
கொய் சுவல் புரவிக் கொடித் தேர்ச் செழியன்
ஆலங்கானத்து அகன் தலை சிவப்ப,
15
சேரல், செம்பியன், சினம் கெழு திதியன்,
போர் வல் யானைப் பொலம் பூண் எழினி,
நார் அரி நறவின் எருமையூரன்,
தேம் கமழ் அகலத்துப் புலர்ந்த சாந்தின்
இருங்கோ வேண்மான், இயல் தேர்ப் பொருநன், என்று
20
எழுவர் நல் வலம் அடங்க, ஒரு பகல்
முரைசொடு வெண்குடை அகப்படுத்து, உரை செல,
கொன்று, களம்வேட்ட ஞான்றை,
வென்றி கொள் வீரர் ஆர்ப்பினும் பெரிதே!

தலைமகள் பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகனொடு புலந்து சொல்லியது. - மதுரை நக்கீரர்

196. மருதம்
நெடுங் கொடி நுடங்கும் நறவு மலி பாக்கத்து,
நாள் துறைப்பட்ட மோட்டு இரு வராஅல்
துடிக்கண் கொழுங் குறை நொடுத்து, உண்டு ஆடி,
வேட்டம் மறந்து, துஞ்சும் கொழுநர்க்குப் பாட்டி
5
ஆம்பல் அகல் இலை, அமலை வெஞ் சோறு
தீம் புளிப் பிரம்பின் திரள்கனி பெய்து,
விடியல் வைகறை இடூஉம் ஊர!
தொடுகலம்; குறுக வாரல் தந்தை
கண் கவின் அழித்ததன் தப்பல், தெறுவர,
10
ஒன்றுமொழிக் கோசர்க் கொன்று, முரண் போகிய,
கடுந் தேர்த் திதியன் அழுந்தை, கொடுங் குழை
அன்னிமிஞிலியின் இயலும்
நின் நலத் தகுவியை முயங்கிய மார்பே.

பரத்தையிற் பிரிந்து வந்த தலைமகற்குச் கிழத்தி சொல்லியது. - பரணர்

216. மருதம்
'நாண் கொள் நுண் கோலின் மீன் கொள் பாண் மகள்
தான் புனல் அடைகரைப் படுத்த வராஅல்,
நார் அரி நறவு உண்டு இருந்த தந்தைக்கு,
வஞ்சி விறகின் சுட்டு, வாய் உறுக்கும்
5
தண் துறை ஊரன் பெண்டிர் எம்மைப்
பெட்டாங்கு மொழிப' என்ப; அவ் அலர்ப்
பட்டனம்ஆயின், இனி எவன் ஆகியர்;
கடல் ஆடு மகளிர் கொய்த ஞாழலும்,
கழனி உழவர் குற்ற குவளையும்,
10
கடி மிளைப் புறவின் பூத்த முல்லையொடு,
பல் இளங் கோசர் கண்ணி அயரும்,
மல்லல் யாணர்ச் செல்லிக் கோமான்
எறிவிடத்து உலையாச் செறி சுரை வெள் வேல்
ஆதன் எழினி அரு நிறத்து அழுத்திய
15
பெருங் களிற்று எவ்வம் போல,
வருந்துபமாது, அவர் சேரி யாம் செலினே.

தலைமகட்குப் பாங்காயினார் கேட்ப, தனக்குப் பாங்காயினார்க்குப் பரத்தை சொல்லியது. - ஐயூர் முடவனார்

286. மருதம்
வெள்ளி விழுத் தொடி மென் கருப்பு உலக்கை,
வள்ளி நுண் இடை வயின் வயின் நுடங்க;
மீன் சினை அன்ன வெண் மணல் குவைஇ,
காஞ்சி நீழல், தமர் வளம் பாடி,
5
ஊர்க் குறுமகளிர் குறுவழி, விறந்த
வராஅல் அருந்திய சிறு சிரல் மருதின்
தாழ் சினை உறங்கும் தண் துறை ஊர!
விழையா உள்ளம் விழையும் ஆயினும்,
என்றும், கேட்டவை தோட்டி ஆக மீட்டு, ஆங்கு,
10
அறனும் பொருளும் வழாமை நாடி,
தற் தகவு உடைமை நோக்கி, மற்று அதன்
பின் ஆகும்மே, முன்னியது முடித்தல்;
அனைய, பெரியோர் ஒழுக்கம்; அதனால்,
அரிய பெரியோர்த் தெரியுங்காலை,
15
நும்மோர் அன்னோர் மாட்டும், இன்ன
பொய்யொடு மிடைந்தவை தோன்றின்,
மெய் யாண்டு உளதோ, இவ் உலகத்தானே?

'வரைந்து எய்துவல்' என்று நீங்கும் தலைமகன், 'தலைமகளை ஆற்றுவித்துக் கொண் டிருத்தல் வேண்டும்' என்று தோழியைக் கைப்பற்றினாற்கு, கைப்பற்றியது தன்னைத் தொட்டுச் சூளுறுவானாகக் கருதி, சொல்லியது. - ஓரம்போகியார்

316. மருதம்
'துறை மீன் வழங்கும் பெரு நீர்ப் பொய்கை,
அரி மலர் ஆம்பல் மேய்ந்த நெறி மருப்பு
ஈர்ந் தண் எருமைச் சுவல் படு முது போத்து,
தூங்கு சேற்று அள்ளல் துஞ்சி, பொழுது பட,
5
பைந் நிண வராஅல் குறையப் பெயர்தந்து,
குரூஉக் கொடிப் பகன்றை சூடி, மூதூர்ப்
போர் செறி மள்ளரின் புகுதரும் ஊரன்
தேர் தர வந்த, தெரிஇழை, நெகிழ் தோள்,
ஊர் கொள்கல்லா, மகளிர் தரத் தர,
10
பரத்தைமை தாங்கலோ இலென்' என வறிது நீ
புலத்தல் ஒல்லுமோ? மனை கெழு மடந்தை!
அது புலந்து உறைதல் வல்லியோரே,
செய்யோள் நீங்க, சில் பதம் கொழித்து,
தாம் அட்டு உண்டு, தமியர் ஆகி,
15
தே மொழிப் புதல்வர் திரங்கு முலை சுவைப்ப,
வைகுநர் ஆகுதல் அறிந்தும்,
அறியார் அம்ம, அஃது உடலுமோரே!

தலைமகற்கு வாயில் நேர்ந்த தோழி தலைமகளை நெருங்கிச் சொல்லியது. -ஓரம்போகியார்