உலோச்சனார்

258
முள் கால் காரை முது பழன் ஏய்ப்பத்
தெறிப்ப விளைந்த தீம் கந்தாரம்
நிறுத்த ஆயம் தலைச்சென்று உண்டு,
பச்சூன் தின்று, பைந் நிணம் பெருத்த
5
எச்சில் ஈர்ங் கை வில்புறம் திமிரி,
புலம் புக்கனனே, புல் அணல் காளை;
ஒரு முறை உண்ணாஅளவை, பெரு நிரை
ஊர்ப் புறம் நிறையத் தருகுவன்; யார்க்கும்
தொடுதல் ஓம்புமதி, முது கள் சாடி;
10
ஆ தரக் கழுமிய துகளன்,
காய்தலும் உண்டு, அக் கள் வெய்யோனே.

திணையும் துறையும் அவை.
......................உலோச்சனார் பாடியது.

274
நீலக் கச்சை, பூ ஆர் ஆடை,
பீலிக் கண்ணிப் பெருந்தகை மறவன்
மேல் வருங் களிற்றொடு வேல் துரந்து, இனியே,
தன்னும் துரக்குவன் போலும் ஒன்னலர்
5
எஃகுடை வலத்தர் மாவொடு பரத்தர,
கையின் வாங்கி, தழீஇ,
மொய்ம்பின் ஊக்கி, மெய்க் கொண்டனனே!

திணை அது; துறை எருமை மறம்.
உலோச்சனார் பாடியது.

377
பனி பழுநிய பல் யாமத்துப்
பாறு தலை மயிர் நனைய,
இனிது துஞ்சும் திரு நகர் வரைப்பின்,
இனையல் அகற்ற, என் கிணை தொடாக் குறுகி,
5
'அவி உணவினோர் புறங்காப்ப,
அற நெஞ்சத்தோன் வாழ, நாள்' என்று,
அதற் கொண்டு வரல் ஏத்தி,
'''கரவு இல்லாக் கவி வண் கையான்,
வாழ்க!'' எனப் பெயர் பெற்றோர்
10
பிறர்க்கு உவமம் தான் அல்லது,
தனக்கு உவமம் பிறர் இல்' என,
அது நினைந்து, மதி மழுகி,
ஆங்கு நின்ற எற் காணூஉச்
'சேய் நாட்டுச் செல் கிணைஞனை!
15
நீ புரவலை, எமக்கு' என்ன,
மலை பயந்த மணியும், கடறு பயந்த பொன்னும்,
கடல் பயந்த கதிர் முத்தமும்,
வேறு பட்ட உடையும், சேறுபட்ட தசும்பும்,
கனவில் கண்டாங்கு, வருந்தாது நிற்ப,
20
நனவின் நல்கியோன், நசைசால் தோன்றல்;
நாடு என மொழிவோர், 'அவன் நாடு' என மொழிவோர்;
வேந்து என மொழிவோர், 'அவன் வேந்து' என மொழிவோர்;
.........................பொற் கோட்டு யானையர்,
கவர் பரிக் கச்சை நல் மான்,
25
வடி மணி, வாங்கு உருள,
.....................,..........நல் தேர்க் குழுவினர்,
கதழ் இசை வன்கணினர்,
வாளின் வாழ்நர், ஆர்வமொடு ஈண்டி,
கடல் ஒலி கொண்ட தானை
30
அடல் வெங் குருசில்! மன்னிய நெடிதே!

திணை அது; துறை வாழ்த்தியல்.
சோழன் இராசசூயம் வேட்ட பெரு நற்கிள்ளியை உலோச்சனார் பாடியது.