கோவூர் கிழார்

31
சிறப்புடை மரபின் பொருளும் இன்பமும்
அறத்து வழிப்படூஉம் தோற்றம் போல,
இரு குடை பின்பட ஓங்கிய ஒரு குடை,
உரு கெழு மதியின், நிவந்து, சேண் விளங்க,
5
நல் இசை வேட்டம் வேண்டி, வெல் போர்ப்
பாசறை அல்லது நீ ஒல்லாயே;
நுதிமுகம் மழுங்க மண்டி, ஒன்னார்
கடி மதில் பாயும் நின் களிறு அடங்கலவே;
'போர்' எனின், புகலும் புனை கழல் மறவர்,
10
'காடு இடைக் கிடந்த நாடு நனி சேஎய;
செல்வேம் அல்லேம்' என்னார்; 'கல்லென்
விழவுடை ஆங்கண் வேற்றுப் புலத்து இறுத்து,
குண கடல் பின்னது ஆக, குட கடல்
வெண் தலைப் புணரி நின் மான் குளம்பு அலைப்ப,
15
வல முறை வருதலும் உண்டு' என்று அலமந்து,
நெஞ்சு நடுங்கு அவலம் பாய,
துஞ்சாக் கண்ண, வட புலத்து அரசே.

திணை வாகை; துறை அரச வாகை; மழபுலவஞ்சியும் ஆம்.
அவனைக் கோவூர் கிழார் பாடியது.

32
கடும்பின் அடுகலம் நிறையாக, நெடுங் கொடிப்
பூவா வஞ்சியும் தருகுவன்; ஒன்றோ?
'வண்ணம் நீவிய வணங்கு இறைப் பணைத் தோள்,
ஒள் நுதல், விறலியர் பூவிலை பெறுக!' என,
5
மாட மதுரையும் தருகுவன்; எல்லாம்
பாடுகம் வம்மினோ, பரிசில் மாக்கள்!
தொல் நிலக் கிழமை சுட்டின், நல் மதி
வேட்கோச் சிறாஅர் தேர்க் கால் வைத்த
பசு மண் குரூஉத் திரள் போல, அவன்
10
கொண்ட குடுமித்து, இத் தண் பணை நாடே.

திணை பாடாண்திணை; துறை இயன்மொழி.
அவனை அவர் பாடியது.

33
கான் உறை வாழ்க்கை, கத நாய், வேட்டுவன்
மான் தசை சொரிந்த வட்டியும், ஆய்மகள்
தயிர் கொடு வந்த தசும்பும், நிறைய,
ஏரின் வாழ்நர் பேர் இல் அரிவையர்
5
குளக் கீழ் விளைந்த களக் கொள் வெண்ணெல்
முகந்தனர் கொடுப்ப, உகந்தனர் பெயரும்
தென்னம் பொருப்பன் நல் நாட்டுள்ளும்,
ஏழ் எயில் கதவம் எறிந்து, கைக்கொண்டு, நின்
பேழ்வாய் உழுவை பொறிக்கும் ஆற்றலை;
10
பாடுநர் வஞ்சி பாட, படையோர்
தாது எரு மறுகின் பாசறை பொலிய,
புலராப் பச்சிலை இடை இடுபு தொடுத்த
மலரா மாலைப் பந்து கண்டன்ன
ஊன் சோற்று அமலை பாண் கடும்பு அருத்தும்
15
செம்மற்று அம்ம, நின் வெம் முனை இருக்கை
வல்லோன் தைஇய வரி வனப்பு உற்ற
அல்லிப் பாவை ஆடு வனப்பு ஏய்ப்ப,
காம இருவர் அல்லது, யாமத்துத்
தனி மகன் வழங்காப் பனி மலர்க் காவின்,
20
ஒதுக்குஇன் திணி மணல் புதுப் பூம் பள்ளி
வாயில் மாடந்தொறும் மை விடை வீழ்ப்ப,
நீ ஆங்குக் கொண்ட விழவினும் பலவே.

திணை வாகை; துறை அரச வாகை.
அவனை அவர் பாடியது.

41
காலனும் காலம் பார்க்கும்; பாராது,
வேல் ஈண்டு தானை விழுமியோர் தொலைய,
வேண்டு இடத்து அடூஉம் வெல் போர் வேந்தே!
திசை இரு நான்கும் உற்கம் உற்கவும்,
5
பெரு மரத்து, இலை இல் நெடுங் கோடு வற்றல் பற்றவும்,
வெங் கதிர்க் கனலி துற்றவும், பிறவும்,
அஞ்சுவரத் தகுந புள்ளுக் குரல் இயம்பவும்,
எயிறு நிலத்து வீழவும், எண்ணெய் ஆடவும்,
களிறு மேல் கொள்ளவும், காழகம் நீப்பவும்,
10
வெள்ளி நோன் படை கட்டிலொடு கவிழவும்,
கனவின் அரியன காணா, நனவில்
செருச் செய் முன்ப! நின் வரு திறன் நோக்கி,
மையல் கொண்ட ஏமம் இல் இருக்கையர்,
புதல்வர் பூங் கண் முத்தி, மனையோட்கு
15
எவ்வம் கரக்கும் பைதல் மாக்களொடு
பெருங் கலக்குற்றன்றால் தானே காற்றோடு
எரி நிகழ்ந்தன்ன செலவின்
செரு மிகு வளவ! நின் சினைஇயோர் நாடே.

திணை வஞ்சி; துறை கொற்றவள்ளை.
அவனைக் கோவூர் கிழார் பாடியது.

44
இரும் பிடித் தொழுதியொடு பெருங் கயம் படியா,
நெல்லுடைக் கவளமொடு நெய்ம் மிதி பெறாஅ,
திருந்து அரை நோன் வெளில் வருந்த ஒற்றி,
நிலமிசைப் புரளும் கைய, வெய்து உயிர்த்து,
5
அலமரல் யானை உரும் என முழங்கவும்,
பால் இல் குழவி அலறவும், மகளிர்
பூ இல் வறுந் தலை முடிப்பவும், நீர் இல்
வினை புனை நல் இல் இனைகூஉக் கேட்பவும்,
இன்னாது அம்ம, ஈங்கு இனிது இருத்தல்;
10
துன் அருந் துப்பின் வய மான் தோன்றல்!
அறவை ஆயின்,' நினது' எனத் திறத்தல்;
மறவை ஆயின், போரொடு திறத்தல்;
அறவையும் மறவையும் அல்லையாக,
திறவாது அடைத்த திண் நிலைக் கதவின்
15
நீள் மதில் ஒரு சிறை ஒடுங்குதல்
நாணுத்தகவு உடைத்து, இது காணுங்காலே.

திணையும் துறையும் அவை.
அவன் ஆவூர் முற்றியிருந்த காலத்து அடைத்து இருந்த நெடுங்கிள்ளியைக் கோவூர் கிழார் பாடியது.

45
இரும் பனை வெண் தோடு மலைந்தோன்அல்லன்;
கருஞ் சினை வேம்பின் தெரியலோன்அல்லன்;
நின்ன கண்ணியும் ஆர் மிடைந்தன்றே; நின்னொடு
பொருவோன் கண்ணியும் ஆர் மிடைந்தன்றே;
5
ஒருவீர் தோற்பினும், தோற்ப நும் குடியே;
இருவீர் வேறல் இயற்கையும் அன்றே; அதனால்,
குடிப்பொருள் அன்று, நும் செய்தி; கொடித் தேர்
நும் ஓர்அன்ன வேந்தர்க்கு
மெய்ம் மலி உவகை செய்யும்; இவ் இகலே.

திணை வஞ்சி; துறை துணைவஞ்சி.
சோழன் நலங்கிள்ளி உறையூர் முற்றி இருந்தானையும், அடைத்திருந்த நெடுங் கிள்ளியையும், கோவூர் கிழார் பாடியது.

46
நீயே, புறவின் அல்லல் அன்றியும், பிறவும்
இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை,
இவரே, புலன் உழுது உண்மார் புன்கண் அஞ்சி,
தமது பகுத்து உண்ணும் தண் நிழல் வாழ்நர்;
5
களிறு கண்டு அழூஉம் அழாஅல் மறந்த
புன் தலைச் சிறாஅர்; மன்று மருண்டு நோக்கி,
விருந்தின் புன்கண் நோவுடையர்;
கேட்டனைஆயின், நீ வேட்டது செய்ம்மே!

திணையும் துறையும் அவை.
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் மலையமான் மக்களை யானைக்கு இடுவுழி, கோவூர் கிழார் பாடி, உய்யக் கொண்டது.

47
வள்ளியோர்ப் படர்ந்து, புள்ளின் போகி,
'நெடிய' என்னாது சுரம் பல கடந்து
வடியா நாவின் வல்லாங்குப் பாடி,
பெற்றது மகிழ்ந்து, சுற்றம் அருத்தி,
5
ஓம்பாது உண்டு, கூம்பாது வீசி,
வரிசைக்கு வருந்தும் இப் பரிசில் வாழ்க்கை
பிறர்க்குத் தீது அறிந்தன்றோ? இன்றே; திறப்பட
நண்ணார் நாண, அண்ணாந்து ஏகி,
ஆங்கு இனிது ஒழுகின் அல்லது, ஓங்கு புகழ்
10
மண் ஆள் செல்வம் எய்திய
நும் ஓரன்ன செம்மலும் உடைத்தே.

திணையும் துறையும் அவை.
சோழன் நளங்கிள்ளியுழைநின்று உறையூர் புகுந்த இளந்தத்தன் என்னும் புலவனை, காரியாற்றுத் துஞ்சிய நெடுங்கிள்ளி, 'ஒற்று வந்தான்' என்று கொல்லப் புக்குழி, கோவூர் கிழார் பாடி, உய்யக்கொண்டது.

68
உடும்பு உரித்தன்ன என்பு எழு மருங்கின்
கடும்பின் கடும் பசி களையுநர்க் காணாது,
சில் செவித்து ஆகிய கேள்வி நொந்து நொந்து,
ஈங்கு எவன் செய்தியோ? பாண! 'பூண் சுமந்து,
5
அம் பகட்டு எழிலிய செம் பொறி ஆகத்து
மென்மையின் மகளிர்க்கு வணங்கி, வன்மையின்
ஆடவர்ப் பிணிக்கும் பீடு கெழு நெடுந் தகை,
புனிறு தீர் குழவிக்கு இலிற்று முலை போலச்
சுரந்த காவிரி மரம் கொல் மலி நீர்
10
மன்பதை புரக்கும் நல் நாட்டுப் பொருநன்,
உட்பகை ஒரு திறம் பட்டென, புட் பகைக்கு
ஏவான் ஆகலின், சாவேம் யாம்' என,
நீங்கா மறவர் வீங்கு தோள் புடைப்ப,
தணி பறை அறையும் அணி கொள் தேர் வழி,
15
கடுங் கள் பருகுநர் நடுங்கு கை உகுத்த
நறுஞ் சேறு ஆடிய வறுந் தலை யானை
நெடு நகர் வரைப்பில் படு முழா ஓர்க்கும்
உறந்தையோனே குருசில்;
பிறன் கடை மறப்ப, நல்குவன், செலினே.

திணை அது; துறை பாணாற்றுப்படை.
சோழன் நலங்கிள்ளியைக் கோவூர் கிழார் பாடியது.

70
தேஎம் தீம் தொடைச் சீறியாழ்ப் பாண!
'கயத்து வாழ் யாமை காழ் கோத்தன்ன
நுண் கோல் தகைத்த தெண் கண் மாக் கிணை
இனிய காண்க; இவண் தணிக' எனக் கூறி;
5
வினவல் ஆனா முது வாய் இரவல!
தைஇத் திங்கள் தண் கயம் போல,
கொளக்கொளக் குறைபடாக் கூழுடை வியல் நகர்,
அடுதீ அல்லது சுடுதீ அறியாது;
இரு மருந்து விளைக்கும் நல் நாட்டுப் பொருநன்,
10
கிள்ளி வளவன் நல் இசை உள்ளி,
நாற்ற நாட்டத்து அறு கால் பறவை
சிறு வெள் ஆம்பல் ஞாங்கர் ஊதும்
கை வள் ஈகைப் பண்ணன் சிறுகுடிப்
பாதிரி கமழும் ஓதி, ஒள் நுதல்,
15
இன் நகை விறலியொடு மென்மெல இயலிச்
செல்வைஆயின், செல்வை ஆகுவை;
விறகு ஒய் மாக்கள் பொன் பெற்றன்னதோர்
தலைப்பாடு அன்று, அவன் ஈகை;
நினைக்க வேண்டா; வாழ்க, அவன் தாளே!

திணையும் துறையும் அவை.
அவனைக் கோவூர் கிழார் பாடியது.

308
பொன் வார்ந்தன்ன புரி அடங்கு நரம்பின்,
மின் நேர் பச்சை, மிஞிற்றுக் குரல் சீறியாழ்
நன்மை நிறைந்த நய வரு பாண!
சீறூர் மன்னன் சிறியிலை எஃகம்
5
வேந்து ஊர் யானை ஏந்து முகத்ததுவே;
வேந்து உடன்று எறிந்த வேலே, என்னை
சாந்து ஆர் அகலம் உளம் கழிந்தன்றே;
உளம் கழி சுடர்ப் படை ஏந்தி, நம் பெருவிறல்
ஓச்சினன் துரந்த காலை, மற்றவன்
10
புன் தலை மடப் பிடி நாண,
குஞ்சரம் எல்லாம் புறக்கொடுத்தனவே.

திணை வாகை; துறை மூதில் முல்லை.
கோவூர் கிழார் பாடியது.

373
உருமிசை முழக்கு என முரசம் இசைப்ப,
செரு நவில் வேழம் கொண்மூ ஆக,
தேர் மா அழி துளி தலைஇ, நாம் உறக்
கணைக் காற்று எடுத்த கண் அகன் பாசறை,
5
இழிதரு குருதியொடு ஏந்திய ஒள் வாள்
பிழிவது போலப் பிட்டை ஊறு உவப்ப,
மைந்தர் ஆடிய மயங்கு பெருந் தானை,
கொங்கு புறம்பெற்ற கொற்ற வேந்தே!
.............................................தண்ட மாப் பொறி.
10
மடக் கண் மயில் இயல் மறலியாங்கு,
நெடுஞ் சுவர் நல் இல் புலம்ப, கடை கழிந்து,
மென் தோள் மகளிர் மன்றம் பேணார்,
புண்ணுவ
..........................அணியப் புரவி வாழ்க என,
15
சொல் நிழல் இன்மையின் நல் நிழல் சேர,
நுண் பூண் மார்பின் புன் தலைச் சிறாஅர்
அம்பு அழி பொழுதில் தமர் முகம் காணா,
............................................ற் றொக்கான
வேந்து புறங்கொடுத்த வீய்ந்து உகு பறந்தலை,
20
மாடம் மயங்கு எரி மண்டி, கோடு இறுபு,
உரும் எறி மலையின், இரு நிலம் சேர,
சென்றோன் மன்ற, சொ
........................ ண்ணறிநர் கண்டு கண் அலைப்ப,
வஞ்சி முற்றம் வயக் களன் ஆக,
25
அஞ்சா மறவர் ஆட் போர்பு அழித்துக்
கொண்டனை, பெரும! குட புலத்து அதரி;
பொலிக அத்தை, நின் பணைதனற............ளம்!
விளங்கு திணை வேந்தர் களம்தொறும் சென்று,
''புகர்முக முகவை பொலிக!'' என்று ஏத்தி,
30
கொண்டனர்' என்ப, பெரியோர்; யானும்
அம் கண் மாக் கிணை அதிர ஒற்ற,
............... லென்ஆயினும், காதலின் ஏத்தி,
நின்னோர் அன்னோர் பிறர் இவண் இன்மையின்,
மன் எயில் முகவைக்கு வந்திசின், பெரும!
35
பகைவர் புகழ்ந்த ஆண்மை, நகைவர்க்குத்
தா இன்று உதவும் பண்பின், பேயொடு
கண நரி திரிதரூஉம் ஆங்கண், நிணன் அருந்து
செஞ் செவி எருவை குழீஇ,
அஞ்சுவரு கிடக்கைய களம் கிழவோயே!
40
திணை அது; துறை மறக்களவழி; ஏர்க்கள உருவகமும் ஆம்.

சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவன் கருவூர் எறிந்தானைக் கோவூர்
கிழார் பாடியது.

382
கடல்படை அடல் கொண்டி,
மண்டுற்ற மலிர் நோன் தாள்,
தண் சோழ நாட்டுப் பொருநன்,
அலங்கு உளை அணி இவுளி
5
நலங்கிள்ளி நசைப் பொருநரேம்;
பிறர்ப் பாடிப் பெறல் வேண்டேம்;
அவற் பாடுதும், 'அவன் தாள் வாழிய!' என;
நெய் குய்ய ஊன் நவின்ற
பல் சோற்றான், இன் சுவைய
10
நல்குரவின் பசித் துன்பின் நின்
முன்னநாள் விட்ட மூது அறி சிறாஅரும்,
யானும், ஏழ் மணி, அம் கேழ், அணி உத்தி,
கண் கேள்வி, கவை நாவின்,
நிறன் உற்ற, அராஅப் போலும்
15
வறன் ஒரீஇ வழங்கு வாய்ப்ப,
விடுமதி அத்தை, கடு மான் தோன்றல்!
நினதே, முந்நீர் உடுத்த இவ் வியன் உலகு, அறிய;
எனதே, கிடைக் காழ் அன்ன தெண் கண் மாக் கிணை
கண் அகத்து யாத்த நுண் அரிச் சிறு கோல்
20
ஏறிதொறும் நுடங்கியாங்கு, நின் பகைஞர்
கேட்டொறும் நடுங்க, ஏத்துவென்,
வென்ற தேர், பிறர் வேத்தவையானே.

திணை அது; துறை கடைநிலை.
சோழன் நலங்கிள்ளியைக் கோவூர் கிழார் பாடியது.

386
நெடு நீர நிறை கயத்துப்
படு மாரித் துளி போல,
நெய் துள்ளிய வறை முகக்கவும்,
சூடு கிழித்து வாடுஊன் மிசையவும்,
5
ஊன் கொண்ட வெண் மண்டை
ஆன் பயத்தான் முற்று அழிப்பவும்,
வெய்து உண்ட வியர்ப்பு அல்லது,
செய் தொழிலான் வியர்ப்பு அறியாமை
ஈத்தோன், எந்தை, இசை தனது ஆக;
10
வயலே, நெல்லின் வேலி நீடிய கரும்பின்
பாத்திப் பன் மலர்ப் பூத் ததும்பின;
புறவே, புல் அருந்து பல் ஆயத்தான்,
வில் இருந்த வெங் குறும்பின்று;
கடலே, கால் தந்த கலன் எண்ணுவோர்
15
கானல் புன்னைச் சினை நிலைக்குந்து;
கழியே, சிறு வெள் உப்பின் கொள்ளை சாற்றி,
பெருங் கல் நல் நாட்டு உமண் ஒலிக்குந்து;
அன்ன நல் நாட்டுப் பொருநம், யாமே;
பொராஅப் பொருநரேம்;
20
குண திசை நின்று குடமுதல் செலினும்,
குட திசை நின்று குணமுதல் செலினும்,
வட திசை நின்று தென்வயின் செலினும்,
தென் திசை நின்று குறுகாது நீடினும்,
யாண்டும் நிற்க, வெள்ளி; யாம்
25
வேண்டியது உணர்ந்தோன் தாள் வாழியவே!

திணையும் துறையும் அவை.
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைக் கோவூர் கிழார் பாடியது.

400
மாக விசும்பின் வெண் திங்கள்
மூ ஐந்தான் முறை முற்ற,
கடல் நடுவண் கண்டன்ன என்
இயம் இசையா, மரபு ஏத்தி,
5
கடைத் தோன்றிய கடைக் கங்குலான்
பலர் துஞ்சவும் தான் துஞ்சான்,
உலகு காக்கும் உயர் ெ..........க்
கேட்டோன், எந்தை, என் தெண் கிணைக் குரலே;
கேட்டதற்கொண்டும், வேட்கை தண்டாது,
10
தொன்று படு சிதாஅர் மருங்கு நீக்கி,
மிகப் பெருஞ் சிறப்பின் வீறு.......
............................................லவான
கலிங்கம் அளித்திட்டு என் அரை நோக்கி,
நார் அரி நறவின் நாள் மகிழ் தூங்குந்து;
15
போது அறியேன், பதிப் பழகவும்,
தன் பகை கடிதல் அன்றியும், சேர்ந்தோர்
பசிப் பகை கடிதலும் வல்லன் மாதோ;
மறவர் மலிந்த த.............................................
கேள்வி மலிந்த வேள்வித் தூணத்து,
20
இருங் கழி இழிதரு........ கலி வங்கம்
தேறு நீர்ப் பரப்பின் யாறு சீத்து உய்த்து,
துறைதொறும் பிணிக்கும் நல் ஊர்,
உறைவு இன் யாணர்,........ கிழவோனே!
திணை அது; துறை இயன்மொழி.