சாத்தந்தையார்

80
இன் கடுங் கள்ளின் ஆமூர் ஆங்கண்,
மைந்துடை மல்லன் மத வலி முருக்கி,
ஒரு கால் மார்பு ஒதுங்கின்றே; ஒரு கால்
வரு தார் தாங்கிப் பின் ஒதுங்கின்றே
5
நல்கினும் நல்கான் ஆயினும், வெல் போர்ப்
பொரல் அருந் தித்தன் காண்கதில் அம்ம
பசித்துப் பணை முயலும் யானை போல,
இரு தலை ஒசிய எற்றி,
களம் புகு மல்லற் கடந்து அடு நிலையே.

திணை தும்பை; துறை எருமை மறம்.
சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி முக்காவனாட்டு ஆமூர் மல்லனைப் பொருது அட்டு நின்றானைச் சாத்தந்தையார் பாடியது.

81
ஆர்ப்பு எழு கடலினும் பெரிது; அவன் களிறே
கார்ப் பெயல் உருமின் முழங்கல் ஆனாவே;
யார்கொல் அளியர்தாமே ஆர் நார்ச்
செறியத் தொடுத்த கண்ணிக்
5
கவி கை மள்ளன் கைப்பட்டோரே?

திணை வாகை; துறை அரச வாகை.
அவனை அவர் பாடியது.

82
சாறு தலைக்கொண்டென, பெண் ஈற்று உற்றென,
பட்ட மாரி ஞான்ற ஞாயிற்று,
கட்டில் நிணக்கும் இழிசினன் கையது
போழ் தூண்டு ஊசியின் விரைந்தன்று மாதோ
5
ஊர் கொள வந்த பொருநனொடு,
ஆர் புனை தெரியல் நெடுந்தகை போரே!

திணையும் துறையும் அவை.
அவனை அவர் பாடியது.

287
துடி எறியும் புலைய!
எறி கோல் கொள்ளும் இழிசின!
காலம் மாரியின் அம்பு தைப்பினும்,
வயல் கெண்டையின் வேல் பிறழினும்,
5
பொலம் புனை ஓடை அண்ணல் யானை
இலங்கு வால் மருப்பின் நுதி மடுத்து ஊன்றினும்,
ஓடல் செல்லாப் பீடுடையாளர்
நெடு நீர்ப் பொய்கைப் பிறழிய வாளை
நெல்லுடை நெடு நகர்க் கூட்டுமுதல் புரளும்,
10
தண்ணடை பெறுதல் யாவது? படினே,
மாசு இல் மகளிர் மன்றல் நன்றும்,
உயர் நிலை உலகத்து, நுகர்ப; அதனால்
வம்ப வேந்தன் தானை
இம்பர் நின்றும் காண்டிரோ, வரவே!

திணை கரந்தை; துறை நீண்மொழி.
சாத்தந்தையார் பாடியது.