நன்னாகனார்

381
ஊனும் ஊணும் முனையின், இனிது என,
பாலின் பெய்தவும், பாகின் கொண்டவும்,
அளவுபு கலந்து, மெல்லிது பருகி,
விருந்துறுத்து, ஆற்றி இருந்தனெமாக,
5
'சென்மோ, பெரும! எம் விழவுடை நாட்டு?' என,
யாம் தன் அறியுநமாக, தான் பெரிது
அன்பு உடைமையின், எம் பிரிவு அஞ்சி,
துணரியது கொளாஅவாகி, பழம் ஊழ்த்து,
பயம் பகர்வு அறியா மயங்கு அரில் முது பாழ்,
10
பெயல் பெய்தன்ன, செல்வத்து ஆங்கண்,
ஈயா மன்னர் புறங்கடைத் தோன்றி,
சிதாஅர் வள்பின் சிதர்ப் புறத் தடாரி
ஊன் சுகிர் வலந்த தெண் கண் ஒற்றி,
விரல் விசை தவிர்க்கும் அரலை இல் பாணியின்,
15
இலம்பாடு அகற்றல் யாவது? புலம்பொடு
தெருமரல் உயக்கமும் தீர்க்குவெம்; அதனால்,
இரு நிலம் கூலம் பாற, கோடை
வரு மழை முழக்கு இசைக்கு ஓடிய பின்றை,
சேயைஆயினும், இவணைஆயினும்,
20
இதற்கொண்டு அறிநை; வாழியோ, கிணைவ!
சிறு நனி, ஒரு வழிப் படர்க என்றோனே எந்தை,
ஒலி வெள் அருவி வேங்கட நாடன்,
உறுவரும் சிறுவரும் ஊழ் மாறு உய்க்கும்
அறத்துறை அம்பியின் மான, மறப்பு இன்று,
25
இருங் கோள் ஈராப் பூட்கை,
கரும்பனூரன் காதல் மகனே.

திணையும் துறையும் அவை.
கரும்பனூர் கிழானை நன்னாகனார் பாடியது.