பெருங்குன்றூர் கிழார்

147
கல் முழை அருவிப் பல் மலை நீந்தி,
சீறியாழ் செவ்வழி பண்ணி வந்ததை,
கார் வான் இன் உறை தமியள் கேளா,
நெருநல் ஒரு சிறைப் புலம்புகொண்டு உறையும்
5
அரி மதர் மழைக் கண், அம் மா அரிவை
நெய்யொடு துறந்த மை இருங் கூந்தல்
மண்ணுறு மணியின் மாசு அற மண்ணி,
புது மலர் கஞல, இன்று பெயரின்,
அதுமன், எம் பரிசில் ஆவியர் கோவே!

திணையும் துறையும் அவை.
அவள் காரணமாக அவனைப் பெருங்குன்றூர் கிழார் பாடியது.

 
210
மன்பதை காக்கும் நின் புரைமை நோக்காது,
அன்பு கண் மாறிய அறன் இல் காட்சியொடு,
நும்மனோரும் மற்று இனையர் ஆயின்,
எம்மனோர் இவண் பிறவலர் மாதோ;
5
செயிர் தீர் கொள்கை எம் வெங் காதலி
உயிர் சிறிது உடையள்ஆயின், எம்வயின்
உள்ளாது இருத்தலோ அரிதே; அதனால்,
'அறன் இல் கூற்றம் திறன் இன்று துணியப்
பிறன் ஆயினன்கொல்? இறீஇயர், என் உயிர்!' என
10
நுவல்வுறு சிறுமையள் பல புலந்து உறையும்
இடுக்கண் மனையோள் தீரிய, இந் நிலை
விடுத்தேன்; வாழியர், குருசில்! உதுக் காண்:
அவல நெஞ்சமொடு செல்வல் நிற் கறுத்தோர்
அருங் கடி முனை அரண் போலப்
15
பெருங் கையற்ற என் புலம்பு முந்துறுத்தே.

திணையும் துறையும் அவை.
சேரமான் குடக்கோச் சேரல் இரும்பொறை பரிசில் நீட்டித்தானைப் பெருங் குன்றூர் கிழார் பாடியது.

211
அஞ்சுவரு மரபின் வெஞ் சினப் புயலேறு
அணங்குடை அரவின் அருந் தலை துமிய,
நின்று காண்பன்ன நீள் மலை மிளிர,
குன்று தூவ எறியும் அரவம் போல,
5
முரசு எழுந்து இரங்கும் தானையொடு தலைச்சென்று,
அரைசு படக் கடக்கும் உரைசால் தோன்றல்! நின்
உள்ளி வந்த ஓங்கு நிலைப் பரிசிலென்,
'வள்ளியை ஆதலின் வணங்குவன் இவன்' என,
கொள்ளா மாந்தர் கொடுமை கூற, நின்
10
உள்ளியது முடித்தோய் மன்ற; முன் நாள்
கை உள்ளது போல் காட்டி, வழி நாள்
பொய்யொடு நின்ற புறநிலை வருத்தம்
நாணாய் ஆயினும், நாணக் கூறி, என்
நுணங்கு செந் நா அணங்க ஏத்தி,
15
பாடப் பாடப் பாடுபுகழ் கொண்ட நின்
ஆடு கொள் வியன் மார்பு தொழுதனென் பழிச்சிச்
செல்வல் அத்தை, யானே வைகலும்,
வல்சி இன்மையின் வயின்வயின் மாறி,
இல் எலி மடிந்த தொல் சுவர் வரைப்பின்,
20
பாஅல் இன்மையின் பல் பாடு சுவைத்து,
முலைக்கோள் மறந்த புதல்வனொடு,
மனைத் தொலைந்திருந்த என் வாள்நுதல் படர்ந்தே.

திணையும் துறையும் அவை.
அவனை அவர் பாடியது.

266
பயம் கெழு மா மழை பெய்யாது மாறி,
கயம் களி முளியும் கோடைஆயினும்,
புழல்கால் ஆம்பல் அகல் அடை நீழல்,
கதிர்க் கோட்டு நந்தின் சுரி முக ஏற்றை
5
நாகு இள வளையொடு பகல் மணம் புகூஉம்
நீர் திகழ் கழனி நாடு கெழு பெரு விறல்!
வான் தோய் நீள் குடை, வய மான் சென்னி!
சான்றோர் இருந்த அவையத்து உற்றோன்,
'ஆசு ஆகு' என்னும் பூசல் போல,
10
வல்லே களைமதிஅத்தை உள்ளிய
விருந்து கண்டு ஒளிக்கும் திருந்தா வாழ்க்கை,
பொறிப் புணர் உடம்பில் தோன்றி என்
அறிவு கெட நின்ற நல்கூர்மையே!

திணை பாடாண் திணை; துறை பரிசில் கடாநிலை.
சோழன் உருவப் பல் தேர் இளஞ் சேட்சென்னியைப் பெருங்குன்றூர் கிழார் பாடியது.

318
கொய் அடகு வாட, தரு விறகு உணங்க,
மயில்அம் சாயல் மாஅயோளொடு
பசித்தன்று அம்ம, பெருந்தகை ஊரே
மனை உறை குரீஇக் கறை அணல் சேவல்,
5
பாணர் நரம்பின் சுகிரொடு, வய மான்
குரல் செய் பீலியின் இழைத்த குடம்பை,
பெருஞ் செய் நெல்லின் அரிசி ஆர்ந்து, தன்
புன் புறப் பெடையொடு வதியும்
யாணர்த்து ஆகும் வேந்து விழுமுறினே.

திணையும் துறையும் அவை.
பெருங் குன்றூர் கிழார் பாடியது.