மாறோக்கத்து நப்பசலையார்

37
நஞ்சுடை வால் எயிற்று, ஐந் தலை சுமந்த,
வேக வெந் திறல், நாகம் புக்கென,
விசும்பு தீப் பிறப்பத் திருகி, பசுங் கொடிப்
பெரு மலை விடரகத்து உரும் எறிந்தாங்கு,
5
புள் உறு புன்கண் தீர்த்த, வெள் வேல்,
சினம் கெழு தானை, செம்பியன் மருக!
கராஅம் கலித்த குண்டு கண் அகழி,
இடம் கருங் குட்டத்து உடன் தொக்கு ஓடி,
யாமம் கொள்பவர் சுடர் நிழல் கதூஉம்
10
கடு முரண் முதலைய நெடு நீர் இலஞ்சி,
செம்பு உறழ் புரிசை, செம்மல் மூதூர்,
வம்பு அணி யானை வேந்து அகத்து உண்மையின்,
'நல்ல' என்னாது, சிதைத்தல்
வல்லையால், நெடுந்தகை! செருவத்தானே.

திணை வாகை; துறை அரசவாகை; முதல் வஞ்சியும் ஆம்.
அவனை மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.

39
புறவின் அல்லல் சொல்லிய, கறை அடி
யானை வால் மருப்பு எறிந்த வெண் கடைக்
கோல் நிறை துலாஅம் புக்கோன் மருக!
ஈதல் நின் புகழும் அன்றே; சார்தல்
5
ஒன்னார் உட்கும் துன் அருங் கடுந் திறல்
தூங்கு எயில் எறிந்த நின் ஊங்கணோர் நினைப்பின்,
அடுதல் நின் புகழும் அன்றே; கெடு இன்று,
மறம் கெழு சோழர் உறந்தை அவையத்து,
அறம் நின்று நிலையிற்று ஆகலின், அதனால்
10
முறைமை நின் புகழும் அன்றே; மறம் மிக்கு
எழு சமம் கடந்த எழு உறழ் திணி தோள்,
கண் ஆர் கண்ணி, கலி மான், வளவ!
யாங்கனம் மொழிகோ யானே ஓங்கிய
வரை அளந்து அறியாப் பொன் படு நெடுங் கோட்டு
15
இமயம் சூட்டிய ஏம விற்பொறி,
மாண் வினை நெடுந் தேர், வானவன் தொலைய,
வாடா வஞ்சி வாட்டும் நின்
பீடு கெழு நோன் தாள் பாடுங்காலே?

திணையும் துறையும் அவை.
அவனை மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.

126
ஒன்னார் யானை ஓடைப் பொன் கொண்டு,
பாணர் சென்னி பொலியத் தைஇ,
வாடாத் தாமரை சூட்டிய விழுச் சீர்
ஓடாப் பூட்கை உரவோன் மருக!
5
வல்லேம் அல்லேம் ஆயினும், வல்லே
நின்வயின் கிளக்குவமாயின், கங்குல்
துயில் மடிந்தன்ன தூங்கு இருள் இறும்பின்,
பறை இசை அருவி, முள்ளூர்ப் பொருந!
தெறல் அரு மரபின் நின் கிளையொடும் பொலிய,
10
நிலமிசைப் பரந்த மக்கட்கு எல்லாம்
புலன் அழுக்கு அற்ற அந்தணாளன்,
இரந்து செல் மாக்கட்கு இனி இடன் இன்றி,
பரந்து இசை நிற்கப் பாடினன்; அதற்கொண்டு
சினம் மிகு தானை வானவன் குட கடல்,
15
பொலம் தரு நாவாய் ஓட்டிய அவ் வழி,
பிற கலம் செல்கலாது அனையேம் அத்தை,
இன்மை துரப்ப, இசை தர வந்து, நின்
வண்மையின் தொடுத்தனம், யாமே முள் எயிற்று
அரவு எறி உருமின் முரசு எழுந்து இயம்ப,
20
அண்ணல் யானையொடு வேந்து களத்து ஒழிய,
அருஞ் சமம் ததையத் தாக்கி, நன்றும்
நண்ணாத் தெவ்வர்த் தாங்கும்
பெண்ணை அம் படப்பை நாடு கிழவோயே!

திணை பாடாண் திணை; துறை பரிசில் துறை.
மலையமான் திருமுடிக் காரியை மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.

174
அணங்குடை அவுணர் கணம் கொண்டு ஒளித்தென,
சேண் விளங்கு சிறப்பின் ஞாயிறு காணாது,
இருள் கண் கெடுத்த பருதி ஞாலத்து
இடும்பை கொள் பருவரல் தீர, கடுந் திறல்
5
அஞ்சன உருவன் தந்து நிறுத்தாங்கு,
அரசு இழந்திருந்த அல்லல் காலை,
முரசு எழுந்து இரங்கும் முற்றமொடு, கரை பொருது
இரங்கு புனல் நெரிதரு மிகு பெருங் காவிரி
மல்லல் நல் நாட்டு அல்லல் தீர,
10
பொய்யா நாவின் கபிலன் பாடிய,
மை அணி நெடு வரை ஆங்கண், ஒய்யெனச்
செருப் புகல் மறவர் செல்புறம் கண்ட
எள் அறு சிறப்பின் முள்ளூர் மீமிசை,
அரு வழி இருந்த பெரு விறல் வளவன்
15
மதி மருள் வெண்குடை காட்டி, அக் குடை
புதுமையின் நிறுத்த புகழ் மேம்படுந!
விடர்ப் புலி பொறித்த கோட்டை, சுடர்ப் பூண்,
சுரும்பு ஆர் கண்ணி, பெரும் பெயர் நும் முன்
ஈண்டுச் செய் நல் வினை ஆண்டுச் சென்று உணீஇயர்,
20
உயர்ந்தோர் உலகத்துப் பெயர்ந்தனன் ஆகலின்,
ஆறு கொல் மருங்கின் மாதிரம் துழவும்
கவலை நெஞ்சத்து அவலம் தீர,
நீ தோன்றினையே நிரைத் தார் அண்ணல்!
கல் கண் பொடிய, கானம் வெம்ப,
25
மல்கு நீர் வரைப்பின் கயம் பல உணங்க,
கோடை நீடிய பைது அறு காலை,
இரு நிலம் நெளிய ஈண்டி,
உரும் உரறு கருவிய மழை பொழிந்தாங்கே.

திணை வாகை; துறை அரச வாகை.
மலையமான் சோழிய ஏனாதி திருக்கண்ணனை மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.

226
செற்றன்று ஆயினும், செயிர்த்தன்று ஆயினும்,
உற்றன்று ஆயினும், உய்வு இன்று மாதோ;
பாடுநர் போலக் கைதொழுது ஏத்தி,
இரந்தன்றாகல் வேண்டும் பொலந் தார்
5
மண்டு அமர் கடக்கும் தானைத்
திண் தேர் வளவற் கொண்ட கூற்றே.

திணையும் துறையும் அவை.
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவனை மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.

280
என்னை மார்பில் புண்ணும் வெய்ய;
நடு நாள் வந்து தும்பியும் துவைக்கும்;
நெடு நகர் வரைப்பின் விளக்கும் நில்லா;
துஞ்சாக் கண்ணே துயிலும் வேட்கும்;
5
அஞ்சுவரு குராஅல் குரலும் தூற்றும்;
நெல் நீர் எறிந்து விரிச்சி ஓர்க்கும்
செம் முது பெண்டின் சொல்லும் நிரம்பா;
துடிய! பாண! பாடு வல் விறலி!
என் ஆகுவிர்கொல்? அளியிர்; நுமக்கும்
10
இவண் உறை வாழ்க்கையோ, அரிதே! யானும்
மண்ணுறு மழித் தலைத் தெண் நீர் வார,
தொன்று தாம் உடுத்த அம் பகைத் தெரியல்
சிறு வெள் ஆம்பல் அல்லி உண்ணும்
கழி கல மகளிர் போல,
15
வழி நினைந்திருத்தல், அதனினும் அரிதே!

திணை பொதுவியல்; துறை ஆனந்தப்பையுள்.
மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.

383
ஒண்பொறிச் சேவல் எடுப்ப, ஏற்றெழுந்து,
தண் பனி உறைக்கும் புலரா ஞாங்கர்,
நுண் கோல் சிறு கிணை சிலம்ப ஒற்றி,
நெடுங் கடை நின்று, பகடு பல வாழ்த்தி,
5
தன் புகழ் ஏத்தினெனாக, ஊன் புலந்து,
அருங் கடி வியல் நகர்க் குறுகல் வேண்டி,
கூம்பு விடு மென் பிணி அவிழ்த்த ஆம்பல்
தேம் பாய் உள்ள தம் கமழ் மடர் உள,
பாம்பு உரி அன்ன வடிவின, காம்பின்
10
கழை படு சொலியின் இழை அணி வாரா,
ஒண் பூங் கலிங்கம் உடீஇ, நுண் பூண்
வசிந்து வாங்கு நுசுப்பின், அவ் வாங்கு உந்தி,
கற்புடை மடந்தை தன் புறம் புல்ல,
எற் பெயர்ந்த நோக்கி.....................................
15
..............................................கல் கொண்டு,
அழித்துப் பிறந்தனெனாகி, அவ் வழி,
பிறர், பாடு புகழ் பாடிப் படர்பு அறியேனே;
குறு முலைக்கு அலமரும் பால் ஆர் வெண் மறி,
நரை முக ஊகமொடு, உகளும், சென................
20
.......................கன்று பல கெழீஇய
கான் கெழு நாடன், கடுந் தேர் அவியன், என
ஒருவனை உடையேன்மன்னே, யானே;
அறான்; எவன் பரிகோ, வெள்ளியது நிலையே?

திணையும் துறையும் அவை.
...........................மாறோக்கத்து நப்பசலையார் (அவியனைப்) பாடியது.