முரஞ்சியூர் முடி நாகராயர்

2
மண் திணிந்த நிலனும்,
நிலன் ஏந்திய விசும்பும்,
விசும்பு தைவரு வளியும்,
வளித் தலைஇய தீயும்,
5
தீ முரணிய நீரும், என்றாங்கு
ஐம் பெரும் பூதத்து இயற்கை போல
போற்றார்ப் பொறுத்தலும், சூழ்ச்சியது அகலமும்,
வலியும், தெறலும், அளியும், உடையோய்!
நின் கடல் பிறந்த ஞாயிறு பெயர்த்தும் நின்
10
வெண் தலைப் புணரிக் குட கடல் குளிக்கும்,
யாணர் வைப்பின், நல் நாட்டுப் பொருந!
வான வரம்பனை! நீயோ, பெரும!
அலங்கு உளைப் புரவி ஐவரொடு சினைஇ,
நிலம் தலைக்கொண்ட பொலம் பூந் தும்பை
15
ஈர் ஐம்பதின்மரும் பொருது, களத்து ஒழிய,
பெருஞ் சோற்று மிகு பதம் வரையாது கொடுத்தோய்!
பாஅல் புளிப்பினும், பகல் இருளினும்,
நாஅல் வேத நெறி திரியினும்,
திரியாச் சுற்றமொடு முழுது சேண் விளங்கி,
20
நடுக்கின்றி நிலியரோ அத்தை அடுக்கத்து,
சிறு தலை நவ்விப் பெருங் கண் மாப் பிணை,
அந்தி அந்தணர் அருங் கடன் இறுக்கும்
முத் தீ விளக்கின், துஞ்சும்
பொற் கோட்டு இமயமும், பொதியமும், போன்றே!

திணை பாடாண் திணை; துறை செவியறிவுறூஉ; வாழ்த்தியலும் ஆம்.
சேரமான் பெருஞ் சோற்று உதியஞ் சேரலாதனை முரஞ்சியூர் முடிநாகராயர்பாடியது.