வெறி பாடிய காமக்கண்ணியார்

271
நீர் அறவு அறியா நிலமுதல் கலந்த
கருங் குரல் நொச்சிக் கண் ஆர் குரூஉத் தழை,
மெல் இழை மகளிர் ஐது அகல் அல்குல்,
தொடலை ஆகவும் கண்டனம்; இனியே,
5
வெருவரு குருதியொடு மயங்கி, உருவு கரந்து,
ஒறுவாய்ப் பட்ட தெரியல் ஊன் செத்து,
பருந்து கொண்டு உகப்ப யாம் கண்டனம்
மறம் புகல் மைந்தன் மலைந்தமாறே!

திணை நொச்சி; துறை செருவிடை வீழ்தல்.
வெறி பாடிய காமக்கண்ணியார் பாடியது.

302
வெடி வேய் கொள்வது போல ஓடி,
தாவுபு உகளும், மாவே; பூவே,
விளங்குஇழை மகளிர் கூந்தல் கொண்ட;
நரந்தப் பல் காழ்க் கோதை சுற்றிய
5
ஐது அமை பாணி வணர் கோட்டுச் சீறியாழ்க்
கை வார் நரம்பின் பாணர்க்கு ஓக்கிய,
நிரம்பா இயல்பின் கரம்பைச் சீறூர்;
நோக்கினர்ச் செகுக்கும் காளை ஊக்கி,
வேலின் அட்ட களிறு பெயர்த்து எண்ணின்,
10
விண் இவர் விசும்பின் மீனும்,
தண் பெயல் உறையும், உறை ஆற்றாவே.

திணை அது; துறை குதிரை மறம்.
வெறி பாடிய காமக்கண்ணியார் பாடியது.