இருங் கோவேள்

201
'இவர் யார்?' என்குவைஆயின், இவரே,
ஊருடன் இரவலர்க்கு அருளி, தேருடன்
முல்லைக்கு ஈத்த செல்லா நல் இசை,
படு மணி யானை, பறம்பின் கோமான்
5
நெடு மாப் பாரி மகளிர்; யானே
தந்தை தோழன்; இவர் என் மகளிர்;
அந்தணன், புலவன், கொண்டு வந்தனனே.
நீயே, வடபால் முனிவன் தடவினுள் தோன்றி,
செம்பு புனைந்து இயற்றிய சேண் நெடும் புரிசை,
10
உவரா ஈகை, துவரை ஆண்டு,
நாற்பத்தொன்பது வழிமுறை வந்த
வேளிருள் வேளே! விறல் போர் அண்ணல்!
தார் அணி யானைச் சேட்டு இருங் கோவே!
ஆண் கடன் உடைமையின், பாண் கடன் ஆற்றிய
15
ஒலியற் கண்ணிப் புலிகடி மாஅல்!
யான் தர, இவரைக் கொண்மதி! வான் கவித்து
இருங் கடல் உடுத்த இவ் வையகத்து, அருந் திறல்
பொன் படு மால் வரைக் கிழவ! வென் வேல்
உடலுநர் உட்கும் தானை,
20
கெடல் அருங்குரைய நாடு கிழவோயே!

திணையும் துறையும் அவை.
பாரி மகளிரை இருங்கோவேளுழைக் கொண்டு சென்ற கபிலர் பாடியது.

202
வெட்சிக் கானத்து வேட்டுவர் ஆட்ட,
கட்சி காணாக் கடமா நல் ஏறு
கடறு மணி கிளர, சிதறு பொன் மிளிர,
கடிய கதழும் நெடு வரைப் படப்பை
5
வென்றி நிலைஇய விழுப் புகழ் ஒன்றி,
இரு பால் பெயரிய உரு கெழு மூதூர்,
கோடி பல அடுக்கிய பொருள் நுமக்கு உதவிய
நீடு நிலை அரையத்துக் கேடும் கேள், இனி:
நுந்தை தாயம் நிறைவுற எய்திய
10
ஒலியல் கண்ணிப் புலிகடி மாஅல்!
நும் போல் அறிவின் நுமருள் ஒருவன்
புகழ்ந்த செய்யுள் கழாஅத்தலையை
இகழ்ந்ததன் பயனே; இயல் தேர் அண்ணல்!
எவ்வி தொல் குடிப் படீஇயர், மற்று, 'இவர்
15
கை வண் பாரி மகளிர்' என்ற என்
தேற்றாப் புன்சொல் நோற்றிசின்; பெரும!
விடுத்தனென்; வெலீஇயர், நின் வேலே! அடுக்கத்து,
அரும்பு அற மலர்ந்த கருங் கால் வேங்கை
மாத் தகட்டு ஒள் வீ தாய துறுகல்
20
இரும் புலி வரிப் புறம் கடுக்கும்
பெருங் கல் வைப்பின் நாடு கிழவோயே!

திணையும் துறையும் அவை.
இருங்கோவேள் பாரிமகளிரைக் கொள்ளானாக, கபிலர் பாடியது.