பாடாண் திணை

2
மண் திணிந்த நிலனும்,
நிலன் ஏந்திய விசும்பும்,
விசும்பு தைவரு வளியும்,
வளித் தலைஇய தீயும்,
5
தீ முரணிய நீரும், என்றாங்கு
ஐம் பெரும் பூதத்து இயற்கை போல
போற்றார்ப் பொறுத்தலும், சூழ்ச்சியது அகலமும்,
வலியும், தெறலும், அளியும், உடையோய்!
நின் கடல் பிறந்த ஞாயிறு பெயர்த்தும் நின்
10
வெண் தலைப் புணரிக் குட கடல் குளிக்கும்,
யாணர் வைப்பின், நல் நாட்டுப் பொருந!
வான வரம்பனை! நீயோ, பெரும!
அலங்கு உளைப் புரவி ஐவரொடு சினைஇ,
நிலம் தலைக்கொண்ட பொலம் பூந் தும்பை
15
ஈர் ஐம்பதின்மரும் பொருது, களத்து ஒழிய,
பெருஞ் சோற்று மிகு பதம் வரையாது கொடுத்தோய்!
பாஅல் புளிப்பினும், பகல் இருளினும்,
நாஅல் வேத நெறி திரியினும்,
திரியாச் சுற்றமொடு முழுது சேண் விளங்கி,
20
நடுக்கின்றி நிலியரோ அத்தை அடுக்கத்து,
சிறு தலை நவ்விப் பெருங் கண் மாப் பிணை,
அந்தி அந்தணர் அருங் கடன் இறுக்கும்
முத் தீ விளக்கின், துஞ்சும்
பொற் கோட்டு இமயமும், பொதியமும், போன்றே!

திணை பாடாண் திணை; துறை செவியறிவுறூஉ; வாழ்த்தியலும் ஆம்.
சேரமான் பெருஞ் சோற்று உதியஞ் சேரலாதனை முரஞ்சியூர் முடிநாகராயர்பாடியது.

3
உவவு மதி உருவின் ஓங்கல் வெண் குடை
நிலவுக் கடல் வரைப்பின் மண்ணகம் நிழற்ற,
ஏம முரசம் இழுமென முழங்க,
நேமி உய்த்த நேஎ நெஞ்சின்,
5
தவிரா ஈகை, கவுரியர் மருக!
செயிர் தீர் கற்பின் சேயிழை கணவ!
பொன் ஓடைப் புகர் அணி நுதல்,
துன் அருந் திறல், கமழ் கடாஅத்து,
எயிறு படையாக எயிற் கதவு இடாஅ,
10
கயிறு பிணிக்கொண்ட கவிழ் மணி மருங்கின்,
பெருங் கை, யானை இரும் பிடர்த் தலை இருந்து,
மருந்து இல் கூற்றத்து அருந் தொழில் சாயாக்
கருங் கை ஒள் வாட் பெரும்பெயர் வழுதி!
நிலம் பெயரினும், நின் சொல் பெயரல்;
15
பொலங் கழற் கால், புலர் சாந்தின்
விலங்கு அகன்ற வியல் மார்ப!
ஊர் இல்ல, உயவு அரிய,
நீர் இல்ல, நீள் இடைய,
பார்வல் இருக்கை, கவி கண் நோக்கின்,
20
செந் தொடை பிழையா வன்கண் ஆடவர்
அம்பு விட, வீழ்ந்தோர் வம்பப் பதுக்கை,
திருந்து சிறை வளை வாய்ப் பருந்து இருந்து உயவும்
உன்ன மரத்த துன் அருங் கவலை,
நின் நசை வேட்கையின் இரவலர் வருவர் அது
25
முன்னம் முகத்தின் உணர்ந்து, அவர்
இன்மை தீர்த்தல் வன்மையானே.

திணையும் துறையும் அவை.
பாண்டியன் கருங் கை ஒள்வாட் பெரும்பெயர் வழுதியை இரும்பிடர்த்தலையார்பாடியது.

5
எருமை அன்ன கருங் கல் இடை தோறு,
ஆனின் பரக்கும் யானைய, முன்பின்,
கானக நாடனை! நீயோ, பெரும!
நீ ஓர் ஆகலின், நின் ஒன்று மொழிவல்:
5
அருளும் அன்பும் நீக்கி, நீங்கா
நிரயம் கொள்பவரொடு ஒன்றாது, காவல்,
குழவி கொள்பவரின், ஓம்புமதி!
அளிதோ தானே; அது பெறல் அருங் குரைத்தே.

திணை பாடாண்திணை; துறை செவியறிவுறூஉ; பொருண்மொழிக் காஞ்சியும் ஆம்.
சேரமான் கருவூர் ஏறிய ஒள் வாட் கோப் பெருஞ்சேரல் இரும்பொறையைக் கண்ட ஞான்று, நின் உடம்பு பெறுவாயாக!' என, அவனைச் சென்று கண்டு, தம் உடம்பு பெற்று நின்ற நரிவெரூஉத்தலையார் பாடியது.

6
வடாஅது பனி படு நெடு வரை வடக்கும்,
தெனாஅது உரு கெழு குமரியின் தெற்கும்,
குணாஅது கரை பொரு தொடு கடற் குணக்கும்,
குடாஅது தொன்று முதிர் பௌவத்தின் குடக்கும்,
5
கீழது முப் புணர் அடுக்கிய முறை முதற் கட்டின்
நீர் நிலை நிவப்பின் கீழும், மேலது
ஆனிலை உலகத்தானும், ஆனாது,
உருவும் புகழும் ஆகி, விரி சீர்த்
தெரி கோல் ஞமன் போல, ஒரு திறம்
10
பற்றல் இலியரோ! நின் திறம் சிறக்க!
செய் வினைக்கு எதிர்ந்த தெவ்வர் தேஎத்து,
கடல் படை குளிப்ப மண்டி, அடர் புகர்ச்
சிறு கண் யானை செவ்விதின் ஏவி,
பாசவல் படப்பை ஆர் எயில் பல தந்து,
15
அவ் எயில் கொண்ட செய்வுறு நன் கலம்
பரிசில் மாக்கட்கு வரிசையின் நல்கி,
பணியியர் அத்தை, நின் குடையே முனிவர்
முக் கட் செல்வர் நகர் வலம் செயற்கே!
இறைஞ்சுக, பெரும! நின் சென்னி சிறந்த
20
நான்மறை முனிவர் ஏந்து கை எதிரே!
வாடுக, இறைவ! நின் கண்ணி ஒன்னார்
நாடு சுடு கமழ் புகை எறித்தலானே!
செலியர் அத்தை, நின் வெகுளி வால் இழை
மங்கையர் துனித்த வாள் முகத்து எதிரே!
25
ஆங்க, வென்றி எல்லாம் வென்று அகத்து அடக்கிய
தண்டா ஈகைத் தகை மாண் குடுமி!
தண் கதிர் மதியம் போலவும், தெறு சுடர்
ஒண் கதிர் ஞாயிறு போலவும்,
மன்னிய, பெரும! நீ நிலமிசையானே!

திணையும் துறையும் அவை; துறை வாழ்த்தியலும் ஆம்.
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைக் காரி கிழார் பாடியது.

8
வையம் காவலர் வழிமொழிந்து ஒழுக,
போகம் வேண்டி, பொதுச் சொல் பொறாஅது,
இடம் சிறிது என்னும் ஊக்கம் துரப்ப,
ஒடுங்கா உள்ளத்து, ஓம்பா ஈகை,
5
கடந்து அடு தானைச் சேரலாதனை
யாங்கனம் ஒத்தியோ? வீங்கு செலல் மண்டிலம்!
பொழுது என வரைதி; புறக்கொடுத்து இறத்தி;
மாறி வருதி; மலை மறைந்து ஒளித்தி;
அகல் இரு விசும்பினானும்
10
பகல் விளங்குதியால், பல் கதிர் விரித்தே.

திணை பாடாண் திணை; துறை இயன்மொழி; பூவை நிலையும் ஆம்.
சேரமான் கடுங்கோ வாழியாதனைக் கபிலர் பாடியது.

9
'ஆவும், ஆன் இயற் பார்ப்பன மாக்களும்,
பெண்டிரும், பிணியுடையீரும், பேணித்
தென் புல வாழ்நர்க்கு அருங் கடன் இறுக்கும்
பொன் போல் புதல்வர்ப் பெறாஅதீரும்,
5
எம் அம்பு கடி விடுதும், நும் அரண் சேர்மின்' என,
அறத்து ஆறு நுவலும் பூட்கை, மறத்தின்
கொல் களிற்று மீமிசைக் கொடி விசும்பு நிழற்றும்
எம் கோ, வாழிய, குடுமி தம் கோச்
செந் நீர்ப் பசும் பொன் வயிரியர்க்கு ஈத்த,
10
முந்நீர் விழவின், நெடியோன்
நல் நீர்ப் பஃறுளி மணலினும் பலவே!

திணையும் துறையும் அவை.
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் பாடியது.

10
வழிபடுவோரை வல் அறிதீயே;
பிறர் பழி கூறுவோர் மொழி தேறலையே;
நீ மெய் கண்ட தீமை காணின்;
ஒப்ப நாடி, அத் தக ஒறுத்தி;
5
வந்து, அடி பொருந்தி, முந்தை நிற்பின்,
தண்டமும் தணிதி, நீ பண்டையின் பெரிதே
அமிழ்து அட்டு ஆனாக் கமழ் குய் அடிசில்
வருநர்க்கு வரையா வசை இல் வாழ்க்கை
மகளிர் மலைத்தல் அல்லது, மள்ளர்
10
மலைத்தல் போகிய, சிலைத் தார் மார்ப!
செய்து இரங்கா வினை, சேண் விளங்கும் புகழ்,
நெய்தலங்கானல் நெடியோய்!
எய்த வந்தனம் யாம்; ஏத்துகம் பலவே!

திணையும் துறையும் அவை.
சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னியை ஊன்பொதி பசுங்குடையார் பாடியது.

11
அரி மயிர்த் திரள் முன்கை,
வால் இழை, மட மங்கையர்
வரி மணல் புனை பாவைக்குக்
குலவுச் சினைப் பூக் கொய்து,
5
தண் பொருநைப் புனல் பாயும்,
விண் பொரு புகழ், விறல் வஞ்சி,
பாடல் சான்ற விறல் வேந்தனும்மே,
வெப்பு உடைய அரண் கடந்து,
துப்பு உறுவர் புறம் பெற்றிசினே;
10
புறம் பெற்ற வய வேந்தன்
மறம் பாடிய பாடினியும்மே,
ஏர் உடைய விழுக் கழஞ்சின்,
சீர் உடைய இழை பெற்றிசினே;
இழை பெற்ற பாடினிக்குக்
15
குரல் புணர் சீர்க் கொளை வல் பாண் மகனும்மே,
என ஆங்கு,
ஒள் அழல் புரிந்த தாமரை
வெள்ளி நாரால் பூ பெற்றிசினே.

திணை பாடாண் திணை; துறை பரிசில் கடா நிலை.
சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோவைப் பேய்மகள் இளவெயினி பாடியது.

12
பாணர் தாமரை மலையவும், புலவர்
பூ நுதல் யானையொடு புனை தேர் பண்ணவும்,
அறனோ மற்று இது விறல் மாண் குடுமி!
இன்னா ஆகப் பிறர் மண் கொண்டு,
5
இனிய செய்தி, நின் ஆர்வலர் முகத்தே?

திணை அது; துறை இயன்மொழி.
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் பாடியது.

13
'இவன் யார்?' என்குவை ஆயின், இவனே
புலி நிறக் கவசம் பூம் பொறி சிதைய,
எய் கணை கிழித்த பகட்டு எழில் மார்பின்,
மறலி அன்ன களிற்று மிசையோனே;
5
களிறே, முந்நீர் வழங்கு நாவாய் போலவும்,
பல் மீன் நாப்பண் திங்கள் போலவும்,
சுறவினத்து அன்ன வாளோர் மொய்ப்ப,
மரீஇயோர் அறியாது, மைந்து பட்டன்றே;
நோய் இலன் ஆகிப் பெயர்கதில் அம்ம!
10
பழன மஞ்ஞை உகுத்த பீலி
கழனி உழவர் சூட்டொடு தொகுக்கும்,
கொழு மீன், விளைந்த கள்ளின்,
விழு நீர் வேலி நாடு கிழவோனே.

திணை பாடாண் திணை; துறை வாழ்த்தியல்.
சோழன் முடித் தலைக் கோப் பெருநற்கிள்ளி கருவூரிடம் செல்வானைக் கண்டு,சேரமான் அந்துவஞ் சேரல் இரும்பொறையோடு வேண்மாடத்து மேல் இருந்து,உறையூர் ஏணிச்சேரி முட மோசியார் பாடியது.

14
கடுங் கண்ண கொல் களிற்றால்
காப்பு உடைய எழு முருக்கி,
பொன் இயல் புனை தோட்டியால்
முன்பு துரந்து, சமம் தாங்கவும்;
5
பார் உடைத்த குண்டு அகழி
நீர் அழுவ நிவப்புக் குறித்து,
நிமிர் பரிய மா தாங்கவும்;
ஆவம் சேர்ந்த புறத்தை தேர் மிசைச்
சாப நோன் ஞாண் வடுக் கொள வழங்கவும்;
10
பரிசிலர்க்கு அருங் கலம் நல்கவும்; குரிசில்!
வலிய ஆகும், நின் தாள் தோய் தடக் கை.
புலவு நாற்றத்த பைந் தடி
பூ நாற்றத்த புகை கொளீஇ, ஊன் துவை
கறி சோறு உண்டு வருந்து தொழில் அல்லது,
15
பிறிது தொழில் அறியா ஆகலின், நன்றும்
மெல்லிய பெரும! தாமே. நல்லவர்க்கு
ஆர் அணங்கு ஆகிய மார்பின், பொருநர்க்கு
இரு நிலத்து அன்ன நோன்மை,
செரு மிகு சேஎய்! நிற் பாடுநர் கையே.

திணை அது; துறை இயன்மொழி.
சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன் கபிலர் கைப் பற்றி, 'மெல்லியவாமால் நூம்கை' என, கபிலர் பாடியது.

15
கடுந் தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண்,
வெள் வாய்க் கழுதைப் புல் இனம் பூட்டி,
பாழ் செய்தனை, அவர் நனந் தலை நல் எயில்;
புள்ளினம் இமிழும் புகழ்சால் விளை வயல்,
5
வெள் உளைக் கலி மான் கவி குளம்பு உகளத்
தேர் வழங்கினை, நின் தெவ்வர் தேஎத்து;
துளங்கு இயலான், பணை எருத்தின்,
பாவு அடியான், செறல் நோக்கின்,
ஒளிறு மருப்பின் களிறு அவர
10
காப்பு உடைய கயம் படியினை;
அன்ன சீற்றத்து அனையை; ஆகலின்,
விளங்கு பொன் எறிந்த நலம் கிளர் பலகையொடு
நிழல் படு நெடு வேல் ஏந்தி, ஒன்னார்
ஒண் படைக் கடுந் தார் முன்பு தலைக் கொண்மார்,
15
நசை தர வந்தோர் நசை பிறக்கு ஒழிய,
வசை பட வாழ்ந்தோர் பலர்கொல்? புரை இல்
நல் பனுவல், நால் வேதத்து,
அருஞ் சீர்த்திப் பெருங் கண்ணுறை
நெய்ம் மலி ஆவுதி பொங்க, பல் மாண்
20
வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி,
யூபம் நட்ட வியன் களம் பலகொல்?
யா பலகொல்லோ? பெரும! வார் உற்று
விசி பிணிக்கொண்ட மண் கனை முழவின்
பாடினி பாடும் வஞ்சிக்கு
25
நாடல் சான்ற மைந்தினோய்! நினக்கே.

திணையும் துறையும் அவை.
பாண்டியன் பல் யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் பாடியது.

30
செஞ் ஞாயிற்றுச் செலவும்,
அஞ் ஞாயிற்றுப் பரிப்பும்,
பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்,
வளி திரிதரு திசையும்,
5
வறிது நிலைஇய காயமும், என்று இவை
சென்று அளந்து அறிந்தோர் போல, என்றும்
இனைத்து என்போரும் உளரே; அனைத்தும்
அறி அறிவு ஆகாச் செறிவினை ஆகி,
களிறு கவுள் அடுத்த எறிகல் போல
10
ஒளித்த துப்பினைஆதலின், வெளிப்பட
யாங்ஙனம் பாடுவர், புலவர்? கூம்பொடு
மீப் பாய் களையாது மிசைப் பரம் தோண்டாது
புகாஅர்ப் புகுந்த பெருங் கலம் தகாஅர்
இடைப் புலப் பெரு வழிச் சொரியும்
15
கடல் பல் தாரத்த நாடு கிழவோயே!

திணை பாடாண் திணை; துறை இயன்மொழி
அவனை அவர் பாடியது.

32
கடும்பின் அடுகலம் நிறையாக, நெடுங் கொடிப்
பூவா வஞ்சியும் தருகுவன்; ஒன்றோ?
'வண்ணம் நீவிய வணங்கு இறைப் பணைத் தோள்,
ஒள் நுதல், விறலியர் பூவிலை பெறுக!' என,
5
மாட மதுரையும் தருகுவன்; எல்லாம்
பாடுகம் வம்மினோ, பரிசில் மாக்கள்!
தொல் நிலக் கிழமை சுட்டின், நல் மதி
வேட்கோச் சிறாஅர் தேர்க் கால் வைத்த
பசு மண் குரூஉத் திரள் போல, அவன்
10
கொண்ட குடுமித்து, இத் தண் பணை நாடே.

திணை பாடாண்திணை; துறை இயன்மொழி.
அவனை அவர் பாடியது.

34
'ஆன் முலை அறுத்த அறனிலோர்க்கும்,
மாண் இழை மகளிர் கருச் சிதைத்தோர்க்கும்,
பார்ப்பார்த் தப்பிய கொடுமையோர்க்கும்,
வழுவாய் மருங்கில் கழுவாயும் உள' என,
5
'நிலம் புடைபெயர்வது ஆயினும், ஒருவன்
செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்' என,
அறம் பாடின்றே ஆயிழை கணவ!
'காலை அந்தியும், மாலை அந்தியும்,
புறவுக் கரு அன்ன புன் புல வரகின்
10
பால் பெய் புன்கம் தேனொடு மயக்கி,
குறு முயல் கொழுஞ் சூடு கிழித்த ஒக்கலொடு,
இரத்தி நீடிய அகன் தலை மன்றத்து,
கரப்பு இல் உள்ளமொடு வேண்டு மொழி பயிற்றி,
அமலைக் கொழுஞ் சோறு ஆர்ந்த பாணர்க்கு
15
அகலாச் செல்வம் முழுவதும் செய்தோன்,
எம் கோன், வளவன் வாழ்க!' என்று, நின்
பீடு கெழு நோன் தாள் பாடேன் ஆயின்,
படுபு அறியலனே, பல் கதிர்ச் செல்வன்;
யானோ தஞ்சம்; பெரும! இவ் உலகத்து,
20
சான்றோர் செய்த நன்று உண்டாயின்,
இமயத்து ஈண்டி, இன் குரல் பயிற்றி,
கொண்டல் மா மழை பொழிந்த
நுண் பல் துளியினும் வாழிய, பலவே!

திணை பாடாண் திணை; துறை இயன்மொழி.
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை ஆலத்தூர் கிழார் பாடியது.

35
நளி இரு முந்நீர் ஏணி ஆக,
வளி இடை வழங்கா வானம் சூடிய
மண் திணி கிடக்கைத் தண் தமிழ்க் கிழவர்,
முரசு முழங்கு தானை மூவருள்ளும்,
5
அரசு எனப்படுவது நினதே, பெரும!
அலங்குகதிர்க் கனலி நால்வயின் தோன்றினும்,
இலங்குகதிர் வெள்ளி தென் புலம் படரினும்,
அம் தண் காவிரி வந்து கவர்பு ஊட்ட,
தோடு கொள் வேலின் தோற்றம் போல,
10
ஆடு கண் கரும்பின் வெண் பூ நுடங்கும்
நாடு எனப்படுவது நினதே அத்தை; ஆங்க
நாடு கெழு செல்வத்துப் பீடு கெழு வேந்தே!
நினவ கூறுவல்; எனவ கேண்மதி!
அறம் புரிந்தன்ன செங்கோல் நாட்டத்து
15
முறை வேண்டு பொழுதில் பதன் எளியோர் ஈண்டு
உறை வேண்டு பொழுதில் பெயல் பெற்றோரே;
ஞாயிறு சுமந்த கோடு திரள் கொண்மூ
மாக விசும்பின் நடுவு நின்றாங்கு,
கண் பொர விளங்கு நின் விண் பொரு வியன்குடை
20
வெயில் மறைக் கொண்டன்றோ? அன்றே; வருந்திய
குடி மறைப்பதுவே; கூர்வேல் வளவ!
வெளிற்றுப் பனந் துணியின் வீற்றுவீற்றுக் கிடப்ப,
களிற்றுக் கணம் பொருத கண் அகன் பறந்தலை,
வருபடை தாங்கி, பெயர் புறத்து ஆர்த்து,
25
பொருபடை தரூஉம் கொற்றமும் உழுபடை
ஊன்று சால் மருங்கின் ஈன்றதன் பயனே;
மாரி பொய்ப்பினும், வாரி குன்றினும்,
இயற்கை அல்லன செயற்கையில் தோன்றினும்,
காவலர்ப் பழிக்கும், இக் கண் அகல் ஞாலம்;
30
அது நற்கு அறிந்தனைஆயின், நீயும்
நொதுமலாளர் பொதுமொழி கொள்ளாது,
பகடு புறந்தருநர் பாரம் ஓம்பி,
குடி புறந்தருகுவை ஆயின், நின்
அடி புறந்தருகுவர், அடங்காதோரே.

திணை அது; துறை செவியறிவுறூஉ.
அவனை வெள்ளைக்குடி நாகனார் பாடி, பழஞ் செய்க்கடன் வீடுகொண்டது.

38
வரை புரையும் மழ களிற்றின் மிசை,
வான் துடைக்கும் வகைய போல,
விரவு உருவின கொடி நுடங்கும்
வியன் தானை விறல் வேந்தே!
5
நீ, உடன்று நோக்கும்வாய் எரி தவழ,
நீ, நயந்து நோக்கும்வாய் பொன் பூப்ப,
செஞ் ஞாயிற்று நிலவு வேண்டினும்,
வெண் திங்களுள் வெயில் வேண்டினும்,
வேண்டியது விளைக்கும் ஆற்றலைஆகலின்,
10
நின் நிழல் பிறந்து, நின் நிழல் வளர்ந்த,
எம் அளவு எவனோ மற்றே? 'இன் நிலைப்
பொலம் பூங் காவின் நல் நாட்டோரும்
செய் வினை மருங்கின் எய்தல் அல்லதை,
உடையோர் ஈதலும் இல்லோர் இரத்தலும்
15
கடவது அன்மையின், கையறவு உடைத்து' என,
ஆண்டுச் செய் நுகர்ச்சி ஈண்டும் கூடலின்,
நின் நாடு உள்ளுவர், பரிசிலர்
ஒன்னார் தேஎத்தும், நின்னுடைத்து எனவே.

திணை பாடாண் திணை; துறை இயன்மொழி.
அவன், 'எம் உள்ளீர்? எம் நாட்டீர்?' என்றாற்கு ஆவூர் மூலங்கிழார் பாடியது.

39
புறவின் அல்லல் சொல்லிய, கறை அடி
யானை வால் மருப்பு எறிந்த வெண் கடைக்
கோல் நிறை துலாஅம் புக்கோன் மருக!
ஈதல் நின் புகழும் அன்றே; சார்தல்
5
ஒன்னார் உட்கும் துன் அருங் கடுந் திறல்
தூங்கு எயில் எறிந்த நின் ஊங்கணோர் நினைப்பின்,
அடுதல் நின் புகழும் அன்றே; கெடு இன்று,
மறம் கெழு சோழர் உறந்தை அவையத்து,
அறம் நின்று நிலையிற்று ஆகலின், அதனால்
10
முறைமை நின் புகழும் அன்றே; மறம் மிக்கு
எழு சமம் கடந்த எழு உறழ் திணி தோள்,
கண் ஆர் கண்ணி, கலி மான், வளவ!
யாங்கனம் மொழிகோ யானே ஓங்கிய
வரை அளந்து அறியாப் பொன் படு நெடுங் கோட்டு
15
இமயம் சூட்டிய ஏம விற்பொறி,
மாண் வினை நெடுந் தேர், வானவன் தொலைய,
வாடா வஞ்சி வாட்டும் நின்
பீடு கெழு நோன் தாள் பாடுங்காலே?

திணையும் துறையும் அவை.
அவனை மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.

40
நீயே, பிறர் ஓம்புறு மற மன் எயில்
ஓம்பாது கடந்து அட்டு, அவர்
முடி புனைந்த பசும் பொன் நின்
அடி பொலியக் கழல் தைஇய
5
வல்லாளனை; வய வேந்தே!
யாமே, நின், இகழ் பாடுவோர் எருத்து அடங்க,
புகழ் பாடுவோர் பொலிவு தோன்ற,
இன்று கண்டாங்குக் காண்குவம் என்றும்
இன்சொல் எண் பதத்தை ஆகுமதி பெரும!
10
ஒரு பிடி படியும் சீறிடம்
எழு களிறு புரக்கும் நாடு கிழவோயே!

திணை அது; துறை செவியறிவுறூஉ.
அவனை ஆவூர் முலங்கிழார் பாடியது.

48
கோதை மார்பின் கோதையானும்,
கோதையைப் புணர்ந்தோர் கோதையானும்,
மாக் கழி மலர்ந்த நெய்தலானும்,
கள் நாறும்மே, கானலம் தொண்டி;
5
அஃது எம் ஊரே; அவன் எம் இறைவன்;
அன்னோற் படர்தியாயின், நீயும்
எம்மும் உள்ளுமோ முது வாய் இரவல!
'அமர் மேம்படூஉம் காலை, நின்
புகழ் மேம்படுநனைக் கண்டனம்' எனவே.

திணை பாடாண் திணை; துறை புலவராற்றுப் படை.
சேரமான் கோக்கோதை மார்பனைப் பொய்கையார் பாடியது.

49
நாடன் என்கோ? ஊரன் என்கோ?
பாடு இமிழ் பனிக் கடல் சேர்ப்பன் என்கோ?
யாங்கனம் மொழிகோ, ஓங்கு வாள் கோதையை?
புனவர் தட்டை புடைப்பின், அயலது
5
இறங்கு கதிர் அலமரு கழனியும்,
பிறங்கு நீர்ச் சேர்ப்பினும், புள் ஒருங்கு எழுமே!

திணையும் துறையும் அவை; துறை இயன்மொழியும் ஆம்.
அவனை அவர் பாடியது.

50
மாசு அற விசித்த வார்புறு வள்பின்
மை படு மருங்குல் பொலிய, மஞ்ஞை
ஒலி நெடும் பீலி ஒண் பொறி மணித் தார்,
பொலங் குழை உழிஞையொடு, பொலியச் சூட்டி,
5
குருதி வேட்கை உரு கெழு முரசம்
மண்ணி வாரா அளவை, எண்ணெய்
நுரை முகந்தன்ன மென் பூஞ் சேக்கை
அறியாது ஏறிய என்னைத் தெறுவர,
இரு பாற்படுக்கும் நின் வாள் வாய் ஒழித்ததை
10
அதூஉம் சாலும், நல் தமிழ் முழுது அறிதல்;
அதனொடும் அமையாது, அணுக வந்து, நின்
மதனுடை முழவுத்தோள் ஓச்சி, தண்ணென
வீசியோயே; வியலிடம் கமழ,
இவண் இசை உடையோர்க்கு அல்லது, அவணது
15
உயர் நிலை உலகத்து உறையுள் இன்மை
விளங்கக் கேட்ட மாறுகொல்
வலம் படு குருசில்! நீ ஈங்கு இது செயலே?

திணை அது; துறை இயன்மொழி.
சேரமான் தகடூர் எறிந்த பெருஞ் சேரல் இரும்பொறை முரசுகட்டில் அறியாது ஏறிய மோசிகீரனைத் தவறு செய்யாது, அவன் துயில் எழுந்துணையும் கவரி கொண்டு வீசியானை மோசிகீரனார் பாடியது.

55
ஓங்கு மலைப் பெரு வில் பாம்பு ஞாண் கொளீஇ,
ஒரு கணை கொண்டு மூஎயில் உடற்றி,
பெரு விறல் அமரர்க்கு வென்றி தந்த
கறை மிடற்று அண்ணல் காமர் சென்னிப்
5
பிறை நுதல் விளங்கும் ஒரு கண் போல,
வேந்து மேம்பட்ட பூந் தார் மாற!
கடுஞ் சினத்த கொல் களிறும்; கதழ் பரிய கலி மாவும்,
நெடுங் கொடிய நிமிர் தேரும், நெஞ்சு உடைய புகல் மறவரும், என
நான்குடன் மாண்டதுஆயினும், மாண்ட
10
அற நெறி முதற்றே, அரசின் கொற்றம்;
அதனால், 'நமர்' எனக் கோல் கோடாது,
'பிறர்' எனக் குணம் கொல்லாது,
ஞாயிற்று அன்ன வெந் திறல் ஆண்மையும்,
திங்கள் அன்ன தண் பெருஞ் சாயலும்,
15
வானத்து அன்ன வண்மையும், மூன்றும்,
உடையை ஆகி, இல்லோர் கையற,
நீ நீடு வாழிய நெடுந்தகை! தாழ் நீர்
வெண் தலைப் புணரி அலைக்கும் செந்தில்
நெடு வேள் நிலைஇய காமர் வியன் துறை,
20
கடு வளி தொகுப்ப ஈண்டிய
வடு ஆழ் எக்கர் மணலினும் பலவே!

திணை பாடாண் திணை; துறை செவியறிவுறூஉ.
பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனை மதுரை மருதன் இளநாகனார் பாடியது.

56
ஏற்று வலன் உயரிய எரி மருள் அவிர் சடை,
மாற்று அருங் கணிச்சி, மணி மிடற்றோனும்;
கடல் வளர் புரி வளை புரையும் மேனி,
அடல் வெந் நாஞ்சில், பனைக் கொடியோனும்;
5
மண்ணுறு திரு மணி புரையும் மேனி,
விண் உயர் புள் கொடி, விறல் வெய்யோனும்,
மணி மயில் உயரிய மாறா வென்றி,
பிணிமுக ஊர்தி, ஒண் செய்யோனும் என
ஞாலம் காக்கும் கால முன்பின்,
10
தோலா நல் இசை, நால்வருள்ளும்,
கூற்று ஒத்தீயே, மாற்று அருஞ் சீற்றம்;
வலி ஒத்தீயே, வாலியோனை;
புகழ் ஒத்தீயே, இகழுநர் அடுநனை;
முருகு ஒத்தீயே, முன்னியது முடித்தலின்;
15
ஆங்கு ஆங்கு அவர் அவர் ஒத்தலின், யாங்கும்
அரியவும் உளவோ, நினக்கே? அதனால்,
இரவலர்க்கு அருங் கலம் அருகாது ஈயா,
யவனர் நன் கலம் தந்த தண் கமழ் தேறல்
பொன் செய் புனை கலத்து ஏந்தி, நாளும்
20
ஒண் தொடி மகளிர் மடுப்ப, மகிழ் சிறந்து,
ஆங்கு இனிது ஒழுகுமதி! ஓங்கு வாள் மாற!
அம் கண் விசும்பின் ஆர் இருள் அகற்றும்
வெங் கதிர்ச் செல்வன் போலவும், குட திசைத்
தண் கதிர் மதியம் போலவும்,
25
நின்று நிலைஇயர், உலகமோடு உடனே!

திணை அது; துறை பூவை நிலை.
அவனை மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் பாடியது.

58
நீயே, தண் புனல் காவிரிக் கிழவனை; இவனே,
முழு முதல் தொலைந்த கோளி ஆலத்துக்
கொழு நிழல் நெடுஞ் சினை வீழ் பொறுத்தாங்கு,
தொல்லோர் மாய்ந்தெனத் துளங்கல் செல்லாது,
5
நல் இசை முது குடி நடுக்கு அறத் தழீஇ,
இளையது ஆயினும் கிளை அரா எறியும்
அருநரை உருமின், பொருநரைப் பொறாஅச்
செரு மாண் பஞ்சவர் ஏறே; நீயே,
அறம் துஞ்சு உறந்தைப் பொருநனை; இவனே,
10
நெல்லும் நீரும் எல்லார்க்கும் எளிய என,
வரைய சாந்தமும், திரைய முத்தமும்,
இமிழ் குரல் முரசம் மூன்றுடன் ஆளும்
தமிழ் கெழு கூடல் தண் கோல் வேந்தே;
பால் நிற உருவின் பனைக் கொடியோனும்,
15
நீல் நிற உருவின் நேமியோனும், என்று
இரு பெருந் தெய்வமும் உடன் நின்றாஅங்கு,
உரு கெழு தோற்றமொடு உட்குவர விளங்கி,
இன்னீர் ஆகலின், இனியவும் உளவோ?
இன்னும் கேண்மின்: நும் இசை வாழியவே;
20
ஒருவீர் ஒருவீர்க்கு ஆற்றுதிர்; இருவீரும்
உடன் நிலை திரியீர்ஆயின், இமிழ்திரைப்
பௌவம் உடுத்த இப் பயம் கெழு மா நிலம்
கையகப்படுவது பொய் ஆகாதே;
அதனால், நல்ல போலவும், நயவ போலவும்,
25
தொல்லோர் சென்ற நெறிய போலவும்,
காதல் நெஞ்சின் நும் இடை புகற்கு அலமரும்
ஏதில் மாக்கள் பொதுமொழி கொள்ளாது,
இன்றே போல்க, நும் புணர்ச்சி; வென்று வென்று
அடு களத்து உயர்க, நும் வேலே; கொடுவரிக்
30
கோள்மாக் குயின்ற சேண் விளங்கு தொடு பொறி
நெடு நீர்க் கெண்டையொடு பொறித்த
குடுமிய ஆக, பிறர் குன்று கெழு நாடே.

திணை பாடாண் திணை; துறை உடனிலை.
சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவனும், பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும், ஒருங்கு இருந்தாரைக் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியது.

59
ஆரம் தாழ்ந்த அணி கிளர் மார்பின்,
தாள் தோய் தடக் கை, தகை மாண் வழுதி!
வல்லை மன்ற, நீ நயந்து அளித்தல்;
தேற்றாய், பெரும! பொய்யே; என்றும்
5
காய் சினம் தவிராது கடல் ஊர்பு எழுதரும்
ஞாயிறு அனையை, நின் பகைவர்க்கு;
திங்கள் அனையை, எம்மனோர்க்கே.

திணை அது; துறை பூவை நிலை.
பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறனை மதுரைக் கூல வாணிகன் சீத்தலைச் சாத்தனார் பாடியது.

60
முந்நீர் நாப்பண் திமில் சுடர் போல,
செம்மீன் இமைக்கும் மாக விசும்பின்
உச்சி நின்ற உவவு மதி கண்டு,
கட்சி மஞ்ஞையின் சுரமுதல் சேர்ந்த,
5
சில் வளை விறலியும், யானும், வல் விரைந்து,
தொழுதனெம் அல்லமோ, பலவே கானல்
கழி உப்பு முகந்து கல் நாடு மடுக்கும்
ஆரைச் சாகாட்டு ஆழ்ச்சி போக்கும்
உரனுடை நோன் பகட்டு அன்ன எம் கோன்,
10
வலன் இரங்கு முரசின் வாய் வாள் வளவன்,
வெயில் மறைக் கொண்ட உரு கெழு சிறப்பின்
மாலை வெண் குடை ஒக்குமால் எனவே?

திணை அது; துறை குடை மங்கலம்.
சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவனை உறையூர் மருத்துவன் தாமோதரனார் பாடியது.

64
நல் யாழ், ஆகுளி, பதலையொடு சுருக்கி,
செல்லாமோதில் சில் வளை விறலி!
களிற்றுக் கணம் பொருத கண் அகன் பறந்தலை,
விசும்பு ஆடு எருவை பசுந் தடி தடுப்ப,
5
பகைப் புலம் மரீஇய தகைப் பெருஞ் சிறப்பின்
குடுமிக் கோமாற் கண்டு,
நெடு நீர்ப் புற்கை நீத்தனம் வரற்கே?

திணை பாடாண் திணை; துறை விறலியாற்றுப்படை.
பாண்டியன் பல் யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெடும்பல்லியத்தனார் பாடியது.

67
அன்னச் சேவல்! அன்னச் சேவல்!
ஆடு கொள் வென்றி அடு போர் அண்ணல்
நாடு தலை அளிக்கும் ஒள் முகம் போல,
கோடு கூடு மதியம் முகிழ் நிலா விளங்கும்
5
மையல் மாலை, யாம் கையறுபு இனைய,
குமரிஅம் பெருந் துறை அயிரை மாந்தி,
வடமலைப் பெயர்குவைஆயின், இடையது
சோழ நல் நாட்டுப் படினே, கோழி
உயர் நிலை மாடத்து, குறும்பறை அசைஇ,
10
வாயில் விடாது கோயில் புக்கு, எம்
பெருங் கோக் கிள்ளி கேட்க, 'இரும் பிசிர்
ஆந்தை அடியுறை' எனினே, மாண்ட நின்
இன்புறு பேடை அணிய, தன்
அன்புறு நன் கலம் நல்குவன் நினக்கே.

திணை பாடாண் திணை; துறை இயன்மொழி.
கோப்பெருஞ் சோழனைப் பிசிராந்தையார் பாடியது.

68
உடும்பு உரித்தன்ன என்பு எழு மருங்கின்
கடும்பின் கடும் பசி களையுநர்க் காணாது,
சில் செவித்து ஆகிய கேள்வி நொந்து நொந்து,
ஈங்கு எவன் செய்தியோ? பாண! 'பூண் சுமந்து,
5
அம் பகட்டு எழிலிய செம் பொறி ஆகத்து
மென்மையின் மகளிர்க்கு வணங்கி, வன்மையின்
ஆடவர்ப் பிணிக்கும் பீடு கெழு நெடுந் தகை,
புனிறு தீர் குழவிக்கு இலிற்று முலை போலச்
சுரந்த காவிரி மரம் கொல் மலி நீர்
10
மன்பதை புரக்கும் நல் நாட்டுப் பொருநன்,
உட்பகை ஒரு திறம் பட்டென, புட் பகைக்கு
ஏவான் ஆகலின், சாவேம் யாம்' என,
நீங்கா மறவர் வீங்கு தோள் புடைப்ப,
தணி பறை அறையும் அணி கொள் தேர் வழி,
15
கடுங் கள் பருகுநர் நடுங்கு கை உகுத்த
நறுஞ் சேறு ஆடிய வறுந் தலை யானை
நெடு நகர் வரைப்பில் படு முழா ஓர்க்கும்
உறந்தையோனே குருசில்;
பிறன் கடை மறப்ப, நல்குவன், செலினே.

திணை அது; துறை பாணாற்றுப்படை.
சோழன் நலங்கிள்ளியைக் கோவூர் கிழார் பாடியது.

69
கையது, கடன் நிறை யாழே; மெய்யது,
புரவலர் இன்மையின் பசியே; அரையது,
வேற்று இழை நுழைந்த வேர் நனை சிதாஅர்
ஓம்பி உடுத்த உயவல் பாண!
5
பூட்கை இல்லோன் யாக்கை போலப்
பெரும் புல்லென்ற இரும் பேர் ஒக்கலை;
வையகம் முழுதுடன் வளைஇ, பையென
என்னை வினவுதி ஆயின், மன்னர்
அடு களிறு உயவும் கொடி கொள் பாசறை,
10
குருதிப் பரப்பின் கோட்டு மா தொலைச்சி,
புலாக் களம் செய்த கலாஅத் தானையன்
பிறங்கு நிலை மாடத்து உறந்தையோனே;
பொருநர்க்கு ஓக்கிய வேலன், ஒரு நிலைப்
பகைப் புலம் படர்தலும் உரியன்; தகைத் தார்
15
ஒள் எரி புரையும் உரு கெழு பசும் பூண்
கிள்ளி வளவற் படர்குவை ஆயின்,
நெடுங் கடை நிற்றலும் இலையே; கடும் பகல்
தேர் வீசு இருக்கை ஆர நோக்கி,
நீ அவற் கண்ட பின்றை, பூவின்
20
ஆடு வண்டு இமிராத் தாமரை
சூடாயாதல் அதனினும் இலையே.

திணையும் துறையும் அவை.
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை ஆலத்தூர் கிழார் பாடியது.

70
தேஎம் தீம் தொடைச் சீறியாழ்ப் பாண!
'கயத்து வாழ் யாமை காழ் கோத்தன்ன
நுண் கோல் தகைத்த தெண் கண் மாக் கிணை
இனிய காண்க; இவண் தணிக' எனக் கூறி;
5
வினவல் ஆனா முது வாய் இரவல!
தைஇத் திங்கள் தண் கயம் போல,
கொளக்கொளக் குறைபடாக் கூழுடை வியல் நகர்,
அடுதீ அல்லது சுடுதீ அறியாது;
இரு மருந்து விளைக்கும் நல் நாட்டுப் பொருநன்,
10
கிள்ளி வளவன் நல் இசை உள்ளி,
நாற்ற நாட்டத்து அறு கால் பறவை
சிறு வெள் ஆம்பல் ஞாங்கர் ஊதும்
கை வள் ஈகைப் பண்ணன் சிறுகுடிப்
பாதிரி கமழும் ஓதி, ஒள் நுதல்,
15
இன் நகை விறலியொடு மென்மெல இயலிச்
செல்வைஆயின், செல்வை ஆகுவை;
விறகு ஒய் மாக்கள் பொன் பெற்றன்னதோர்
தலைப்பாடு அன்று, அவன் ஈகை;
நினைக்க வேண்டா; வாழ்க, அவன் தாளே!

திணையும் துறையும் அவை.
அவனைக் கோவூர் கிழார் பாடியது.

91
வலம் படு வாய்வாள் ஏந்தி, ஒன்னார்
களம் படக் கடந்த கழல் தொடித் தடக் கை,
ஆர் கலி நறவின், அதியர் கோமான்!
போர் அடு திருவின் பொலந் தார் அஞ்சி!
5
பால் புரை பிறை நுதல் பொலிந்த சென்னி
நீலமணி மிடற்று ஒருவன் போல
மன்னுக பெரும! நீயே, தொல் நிலைப்
பெரு மலை விடரகத்து அரு மிசைக் கொண்ட
சிறியிலை நெல்லித் தீம் கனி குறியாது,
10
ஆதல் நின் அகத்து அடக்கி,
சாதல் நீங்க, எமக்கு ஈத்தனையே!

திணை பாடாண் திணை; துறை வாழ்த்தியல்.
அவனை அவர் நெல்லிப் பழம் பெற்றுப் பாடியது.

92
யாழொடும் கொள்ளா; பொழுதொடும் புணரா;
பொருள் அறிவாரா; ஆயினும், தந்தையர்க்கு
அருள் வந்தனவால், புதல்வர்தம் மழலை;
என் வாய்ச் சொல்லும் அன்ன ஒன்னார்
5
கடி மதில் அரண் பல கடந்த
நெடுமான் அஞ்சி! நீ அருளல்மாறே.

திணை அது; துறை இயன்மொழி.
அவனை அவர் பாடியது.

95
இவ்வே, பீலி அணிந்து, மாலை சூட்டி,
கண் திரள் நோன் காழ் திருத்தி, நெய் அணிந்து,
கடியுடை வியல் நகரவ்வே; அவ்வே,
பகைவர்க் குத்தி, கோடு, நுதி, சிதைந்து,
5
கொல் துறைக் குற்றில மாதோ என்றும்
உண்டாயின் பதம் கொடுத்து,
இல்லாயின் உடன் உண்ணும்,
இல்லோர் ஒக்கல் தலைவன்,
அண்ணல் எம் கோமான், வைந் நுதி வேலே.

திணை பாடாண் திணை; துறை வாள் மங்கலம்.
அவன் தூதுவிட, தொண்டைமானுழைச் சென்ற ஒளவைக்கு அவன் படைக்கலக் கொட்டில் காட்ட, அவர் பாடியது.

96
அலர் பூந் தும்பை அம் பகட்டு மார்பின்,
திரண்டு நீடு தடக்கை, என்னை இளையோற்கு
இரண்டு எழுந்தனவால், பகையே: ஒன்றே,
பூப் போல் உண்கண் பசந்து, தோள் நுணுகி,
5
நோக்கிய மகளிர்ப் பிணித்தன்று; ஒன்றே,
'விழவின்றுஆயினும், படு பதம் பிழையாது,
மை ஊன் மொசித்த ஒக்கலொடு, துறை நீர்க்
கைமான் கொள்ளுமோ?' என,
உறையுள் முனியும், அவன் செல்லும் ஊரே.

திணை அது; துறை இயன்மொழி.
அவன் மகன் பொகுட்டெழினியை அவர் பாடியது.

97
போர்க்கு உரைஇப் புகன்று கழித்த வாள்,
உடன்றவர் காப்புடை மதில் அழித்தலின்,
ஊன் உற மூழ்கி, உரு இழந்தனவே;
வேலே, குறும்பு அடைந்த அரண் கடந்து, அவர்
5
நறுங் கள்ளின் நாடு நைத்தலின்,
சுரை தழீஇய இருங் காழொடு
மடை கலங்கி நிலை திரிந்தனவே;
களிறே, எழூஉத் தாங்கிய கதவம் மலைத்து, அவர்
குழூஉக் களிற்றுக் குறும்பு உடைத்தலின்,
10
பரூஉப் பிணிய தொடி கழிந்தனவே;
மாவே, பரந்து ஒருங்கு மலைந்த மறவர்
பொலம் பைந் தார் கெடப் பரிதலின்,
களன் உழந்து அசைஇய மறுக் குளம்பினவே;
அவன் தானும், நிலம் திரைக்கும் கடல் தானைப்
15
பொலந் தும்பைக் கழல் பாண்டில்
கணை பொருத துளைத் தோலன்னே.
ஆயிடை, உடன்றோர் உய்தல் யாவது? 'தடந் தாள்,
பிணிக் கதிர், நெல்லின் செம்மல் மூதூர்
நுமக்கு உரித்தாகல் வேண்டின், சென்று அவற்கு
20
இறுக்கல் வேண்டும், திறையே; மறுப்பின்,
ஒல்வான் அல்லன், வெல்போரான்' எனச்
சொல்லவும் தேறீராயின், மெல் இயல்,
கழல் கனி வகுத்த துணைச் சில் ஓதி,
குறுந் தொடி மகளிர் தோள் விடல்
25
இறும்பூது அன்று; அஃது அறிந்து ஆடுமினே.

திணையும் துறையும் அவை.
அதியமான் நெடுமான் அஞ்சியை அவர் பாடியது.

101
ஒரு நாள் செல்லலம்; இரு நாள் செல்லலம்;
பல நாள் பயின்று, பலரொடு செல்லினும்,
தலை நாள் போன்ற விருப்பினன்மாதோ
இழை அணி யானை இயல் தேர் அஞ்சி
5
அதியமான்; பரிசில் பெறூஉம் காலம்
நீட்டினும், நீட்டாதுஆயினும், களிறு தன்
கோட்டு இடை வைத்த கவளம் போலக்
கையகத்தது; அது பொய் ஆகாதே;
அருந்த ஏமாந்த நெஞ்சம்!
10
வருந்த வேண்டா; வாழ்க, அவன் தாளே!

திணை பாடாண் திணை; துறை பரிசில் கடாநிலை.
அவனை அவர் பாடியது.

102
'எருதே இளைய; நுகம் உணராவே;
சகடம் பண்டம் பெரிது பெய்தன்றே;
அவல் இழியினும், மிசை ஏறினும்,
அவணது அறியுநர் யார்?' என, உமணர்
5
கீழ் மரத்து யாத்த சேம அச்சு அன்ன,
இசை விளங்கு கவி கை நெடியோய்! திங்கள்
நாள் நிறை மதியத்து அனையை; இருள்
யாவணதோ, நின் நிழல் வாழ்வோர்க்கே?

திணை அது; துறை இயன்மொழி.
அவன் மகன் பொகுட்டெழினியை அவர் பாடியது.

103
ஒரு தலைப் பதலை தூங்க, ஒரு தலைத்
தூம்பு அகச் சிறு முழாத் தூங்கத் தூக்கி,
'கவிழ்ந்த மண்டை மலர்க்குநர் யார்?' எனச்
சுரன்முதல் இருந்த சில் வளை விறலி!
5
செல்வைஆயின், சேணோன் அல்லன்;
முனை சுட எழுந்த மங்குல் மாப் புகை
மலை சூழ் மஞ்சின், மழ களிறு அணியும்
பகைப் புலத்தோனே, பல் வேல் அஞ்சி;
பொழுது இடைப்படாஅப் புலரா மண்டை
10
மெழுகு மெல் அடையின் கொழு நிணம் பெருப்ப,
அலத்தற் காலை ஆயினும்,
புரத்தல் வல்லன்; வாழ்க, அவன் தாளே!

திணை அது; துறை விறலியாற்றுப்படை.
அதியமான் நெடுமான் அஞ்சியை அவர் பாடியது.

105
சேயிழை பெறுகுவை வாள் நுதல் விறலி!
தடவு வாய்க் கலித்த மா இதழ்க் குவளை
வண்டு படு புது மலர்த் தண் சிதர் கலாவப்
பெய்யினும், பெய்யாது ஆயினும், அருவி
5
கொள் உழு வியன் புலத்துழை கால் ஆக,
மால்புடை நெடு வரைக் கோடுதோறு இழிதரும்
நீரினும் இனிய சாயல்
பாரி வேள்பால் பாடினை செலினே.

திணை பாடாண் திணை; துறை விறலியாற்றுப்படை.
வேள் பாரியைக் கபிலர் பாடியது.

106
நல்லவும் தீயவும் அல்ல குவி இணர்ப்
புல் இலை எருக்கம் ஆயினும், உடையவை
கடவுள் பேணேம் என்னா; ஆங்கு,
மடவர் மெல்லியர் செல்லினும்,
5
கடவன், பாரி கை வண்மையே.

திணை அது; துறை இயன்மொழி.
அவனை அவர் பாடியது.

107
'பாரி பாரி' என்று பல ஏத்தி,
ஒருவற் புகழ்வர், செந் நாப் புலவர்;
பாரி ஒருவனும் அல்லன்;
மாரியும் உண்டு, ஈண்டு உலகு புரப்பதுவே.

திணையும் துறையும் அவை.
அவனை அவர் பாடியது.

108
குறத்தி மாட்டிய வறல் கடைக் கொள்ளி
ஆரம் ஆதலின், அம் புகை அயலது
சாரல் வேங்கைப் பூஞ் சினைத் தவழும்
பறம்பு பாடினரதுவே; அறம் பூண்டு,
5
பாரியும், பரிசிலர் இரப்பின்,
'வாரேன்' என்னான், அவர் வரையன்னே.

திணையும் துறையும் அவை.
அவனை அவர் பாடியது.

122
கடல் கொளப்படாஅது, உடலுநர் ஊக்கார்,
கழல் புனை திருந்து அடிக் காரி! நின் நாடே;
அழல் புறந்தரூஉம் அந்தணரதுவே;
வீயாத் திருவின் விறல் கெழு தானை
5
மூவருள் ஒருவன், 'துப்பு ஆகியர்' என,
ஏத்தினர் தரூஉம் கூழே, நும் குடி
வாழ்த்தினர் வரூஉம் இரவலரதுவே;
வடமீன் புரையும் கற்பின், மட மொழி,
அரிவை தோள் அளவு அல்லதை,
10
நினது என இலை நீ பெருமிதத்தையே.

திணை பாடாண் திணை; துறை இயன்மொழி.
அவனை அவர் பாடியது.

123
நாள் கள் உண்டு, நாள் மகிழ் மகிழின்,
யார்க்கும் எளிதே, தேர் ஈதல்லே;
தொலையா நல் இசை விளங்கு மலையன்
மகிழாது ஈத்த இழை அணி நெடுந் தேர்
5
பயன் கெழு முள்ளூர் மீமிசைப்
பட்ட மாரி உறையினும் பலவே.

திணையும் துறையும் அவை.
அவனை அவர் பாடியது.

124
நாள் அன்று போகி, புள் இடை தட்ப,
பதன் அன்று புக்கு, திறன் அன்று மொழியினும்,
வறிது பெயர்குநர்அல்லர் நெறி கொளப்
பாடு ஆன்று, இரங்கும் அருவிப்
5
பீடு கெழு மலையன் பாடியோரே.

திணையும் துறையும் அவை.
அவனை அவர் பாடியது.

126
ஒன்னார் யானை ஓடைப் பொன் கொண்டு,
பாணர் சென்னி பொலியத் தைஇ,
வாடாத் தாமரை சூட்டிய விழுச் சீர்
ஓடாப் பூட்கை உரவோன் மருக!
5
வல்லேம் அல்லேம் ஆயினும், வல்லே
நின்வயின் கிளக்குவமாயின், கங்குல்
துயில் மடிந்தன்ன தூங்கு இருள் இறும்பின்,
பறை இசை அருவி, முள்ளூர்ப் பொருந!
தெறல் அரு மரபின் நின் கிளையொடும் பொலிய,
10
நிலமிசைப் பரந்த மக்கட்கு எல்லாம்
புலன் அழுக்கு அற்ற அந்தணாளன்,
இரந்து செல் மாக்கட்கு இனி இடன் இன்றி,
பரந்து இசை நிற்கப் பாடினன்; அதற்கொண்டு
சினம் மிகு தானை வானவன் குட கடல்,
15
பொலம் தரு நாவாய் ஓட்டிய அவ் வழி,
பிற கலம் செல்கலாது அனையேம் அத்தை,
இன்மை துரப்ப, இசை தர வந்து, நின்
வண்மையின் தொடுத்தனம், யாமே முள் எயிற்று
அரவு எறி உருமின் முரசு எழுந்து இயம்ப,
20
அண்ணல் யானையொடு வேந்து களத்து ஒழிய,
அருஞ் சமம் ததையத் தாக்கி, நன்றும்
நண்ணாத் தெவ்வர்த் தாங்கும்
பெண்ணை அம் படப்பை நாடு கிழவோயே!

திணை பாடாண் திணை; துறை பரிசில் துறை.
மலையமான் திருமுடிக் காரியை மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.

127
'களங்கனி அன்ன கருங் கோட்டுச் சீறியாழ்ப்
பாடு இன் பனுவல் பாணர் உய்த்தென,
களிறு இலவாகிய புல் அரை நெடு வெளில்,
கான மஞ்ஞை கணனொடு சேப்ப,
5
ஈகை அரிய இழை அணி மகளிரொடு
சாயின்று' என்ப, ஆஅய் கோயில்;
சுவைக்கு இனிது ஆகிய குய்யுடை அடிசில்
பிறர்க்கு ஈவு இன்றித் தம் வயிறு அருத்தி,
உரைசால் ஓங்கு புகழ் ஒரீஇய
10
முரைசு கெழு செல்வர் நகர் போலாதே.

திணை அது; துறை கடைநிலை.
ஆயை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடியது.

128
மன்றப் பலவின் மாச் சினை மந்தி
இரவலர் நாற்றிய விசி கூடு முழவின்
பாடு இன் தெண் கண், கனி செத்து, அடிப்பின்,
அன்னச் சேவல் மாறு எழுந்து ஆலும்,
5
கழல் தொடி ஆஅய் மழை தவழ் பொதியில்
ஆடுமகள் குறுகின் அல்லது,
பீடு கெழு மன்னர் குறுகலோ அரிதே.

திணை அது; துறை வாழ்த்து; இயன்மொழியும் ஆம்.
அவனை அவர் பாடியது.

129
குறி இறைக் குரம்பைக் குறவர் மாக்கள்
வாங்கு அமைப் பழுனிய தேறல் மகிழ்ந்து,
வேங்கை முன்றில் குரவை அயரும்,
தீம் சுளைப் பலவின், மா மலைக் கிழவன்
5
ஆஅய் அண்டிரன், அடு போர் அண்ணல்
இரவலர்க்கு ஈத்த யானையின், கரவு இன்று,
வானம் மீன் பல பூப்பின், ஆனாது
ஒரு வழிக் கரு வழி இன்றிப்
பெரு வெள்ளென்னின், பிழையாது மன்னே.

திணை அது; துறை இயன்மொழி.
அவனை அவர் பாடியது.

130
விளங்கு மணிக் கொடும் பூண் ஆஅய்! நின் நாட்டு
இளம் பிடி ஒரு சூல் பத்து ஈனும்மோ?
நின்னும் நின்மலையும் பாடி வருநர்க்கு,
இன் முகம் கரவாது, உவந்து நீ அளித்த
5
அண்ணல் யானை எண்ணின், கொங்கர்க்
குட கடல் ஓட்டிய ஞான்றைத்
தலைப்பெயர்த்திட்ட வேலினும் பலவே!

திணையும் துறையும் அவை.
அவனை அவர் பாடியது.

131
மழைக் கணம் சேக்கும் மா மலைக் கிழவன்,
வழைப் பூங் கண்ணி வாய் வாள் அண்டிரன்,
குன்றம் பாடினகொல்லோ
களிறு மிக உடைய இக் கவின் பெறு காடே?

திணையும் துறையும் அவை.
அவனை அவர் பாடியது.

132
முன் உள்ளுவோனைப் பின் உள்ளினேனே!
ஆழ்க, என் உள்ளம்! போழ்க, என் நாவே!
பாழ் ஊர்க் கிணற்றின் தூர்க, என் செவியே!
நரந்தை நறும் புல் மேய்ந்த கவரி
5
குவளைப் பைஞ் சுனை பருகி, அயல
தகரத் தண் நிழல் பிணையொடு வதியும்
வட திசையதுவே வான் தோய் இமயம்.
தென் திசை ஆஅய் குடி இன்றாயின்,
பிறழ்வது மன்னோ, இம் மலர் தலை உலகே.

திணையும் துறையும் அவை.
அவனை அவர் பாடியது.

133
மெல் இயல் விறலி! நீ நல் இசை செவியின்
கேட்பின் அல்லது, காண்பு அறியலையே;
காண்டல் வேண்டினைஆயின் மாண்ட நின்
விரை வளர் கூந்தல் வரை வளி உளர,
5
கலவ மஞ்ஞையின் காண்வர இயலி,
மாரி அன்ன வண்மைத்
தேர் வேள் ஆயைக் காணிய சென்மே!

திணை அது; துறை விறலியாற்றுப்படை.
அவனை அவர் பாடியது.

134
'இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம்' எனும்
அற விலை வணிகன் ஆஅய் அல்லன்;
பிறரும் சான்றோர் சென்ற நெறி என,
ஆங்குப் பட்டன்று, அவன் கைவண்மையே.

திணை அது; துறை இயன்மொழி.
அவனை அவர் பாடியது.

135
கொடுவரி வழங்கும் கோடு உயர் நெடு வரை,
அரு விடர்ச் சிறு நெறி ஏறலின், வருந்தி,
தடவரல் கொண்ட தகை மெல் ஒதுக்கின்,
வளைக் கை விறலி என் பின்னள் ஆக,
5
பொன் வார்ந்தன்ன புரி அடங்கு நரம்பின்
வரி நவில் பனுவல் புலம் பெயர்ந்து இசைப்ப,
படுமலை நின்ற பயம் கெழு சீறியாழ்
ஒல்கல் உள்ளமொடு ஒரு புடைத் தழீஇ,
புகழ்சால் சிறப்பின் நின் நல் இசை உள்ளி,
10
வந்தனென் எந்தை! யானே: என்றும்,
மன்று படு பரிசிலர்க் காணின், கன்றொடு
கறை அடி யானை இரியல் போக்கும்
மலை கெழு நாடன்! மா வேள் ஆஅய்!
களிறும் அன்றே; மாவும் அன்றே;
15
ஒளிறு படைப் புரவிய தேரும் அன்றே;
பாணர், பாடுநர், பரிசிலர், ஆங்கு அவர்,
தமது எனத் தொடுக்குவராயின், 'எமது' எனப்
பற்றல் தேற்றாப் பயங் கெழு தாயமொடு,
அன்ன ஆக, நின் ஊழி; நின்னைக்
20
காண்டல் வேண்டிய அளவை வேண்டார்
உறு முரண் கடந்த ஆற்றல்
பொது மீக்கூற்றத்து நாடு கிழவோயே!

திணை அது; துறை பரிசில் துறை.
அவனை அவர் பாடியது.

136
யாழ்ப் பத்தர்ப் புறம் கடுப்ப
இழை வலந்த பல் துன்னத்து
இடைப் புரை பற்றி, பிணி விடாஅ
ஈர்க் குழாத்தோடு இறை கூர்ந்த
5
பேஎன் பகை என ஒன்று என்கோ?
உண்ணாமையின் ஊன் வாடி,
தெண் நீரின் கண் மல்கி,
கசிவுற்ற என் பல் கிளையொடு
பசி அலைக்கும் பகை ஒன்று என்கோ?
10
அன்ன தன்மையும் அறிந்து ஈயார்,
'நின்னது தா' என, நிலை தளர,
மரம் பிறங்கிய நளிச் சிலம்பில்,
குரங்கு அன்ன புன் குறுங் கூளியர்
பரந்து அலைக்கும் பகை ஒன்று என்கோ?
15
'ஆஅங்கு, எனைப் பகையும் அறியுநன் ஆய்'
எனக் கருதி, பெயர் ஏத்தி,
வாய் ஆர நின் இசை நம்பி,
சுடர் சுட்ட சுரத்து ஏறி,
இவண் வந்த பெரு நசையேம்;
20
'எமக்கு ஈவோர் பிறர்க்கு ஈவோர்;
பிறர்க்கு ஈவோர் தமக்கு ஈப' என,
அனைத்து உரைத்தனன் யான் ஆக,
நினக்கு ஒத்தது நீ நாடி,
நல்கினை விடுமதி, பரிசில்! அல்கலும்,
25
தண் புனல் வாயில் துறையூர் முன்துறை
நுண் பல மணலினும் ஏத்தி,
உண்குவம், பெரும! நீ நல்கிய வளனே.

திணை அது; துறை பரிசில் கடாநிலை.
அவனைத் துறையூர் ஓடைகிழார் பாடியது.

137
இரங்கு முரசின், இனம்சால் யானை,
முந்நீர் ஏணி விறல் கெழு மூவரை
இன்னும் ஓர் யான் அவா அறியேனே;
நீயே, முன் யான் அறியுமோனே துவன்றிய
5
கயத்து இட்ட வித்து வறத்தின் சாவாது,
கழைக் கரும்பின் ஒலிக்குந்து,
கொண்டல் கொண்ட நீர் கோடை காயினும்,
கண் அன்ன மலர் பூக்குந்து,
கருங் கால் வேங்கை மலரின், நாளும்
10
பொன் அன்ன வீ சுமந்து,
மணி அன்ன நீர் கடல் படரும்;
செவ் வரைப் படப்பை நாஞ்சில் பொருந!
சிறு வெள் அருவிப் பெருங் கல் நாடனை!
நீ வாழியர்! நின் தந்தை
15
தாய் வாழியர், நிற் பயந்திசினோரே!

திணை அது; துறை இயன்மொழி; பரிசில் துறையும் ஆம்.
நாஞ்சில் வள்ளுவனை ஒரு சிறைப் பெரியனார் பாடியது.

138
5
ஆனினம் கலித்த அதர் பல கடந்து,
மானினம் கலித்த மலை பின் ஒழிய,
மீனினம் கலித்த துறை பல நீந்தி,

5
உள்ளி வந்த, வள் உயிர்ச் சீறியாழ்,
சிதாஅர் உடுக்கை, முதாஅரிப் பாண!
நீயே, பேர் எண்ணலையே; நின் இறை,
'மாறி வா' என மொழியலன் மாதோ;
ஒலி இருங் கதுப்பின் ஆயிழை கணவன்
கிளி மரீஇய வியன் புனத்து
10
மரன் அணி பெருங் குரல் அனையன் ஆதலின்,
நின்னை வருதல் அறிந்தனர் யாரே?

திணை அது; துறை பாணாற்றுப்படை.
அவனை மருதன் இளநாகனார் பாடியது.

139
சுவல் அழுந்தப் பல காய
சில் ஓதிப் பல் இளைஞருமே,
அடி வருந்த நெடிது ஏறிய
கொடி மருங்குல் விறலியருமே,
5
வாழ்தல் வேண்டிப்
பொய் கூறேன்; மெய் கூறுவல்;
ஓடாப் பூட்கை உரவோர் மருக!
உயர் சிமைய உழாஅ நாஞ்சில் பொருந!
மாயா உள்ளமொடு பரிசில் துன்னி,
10
கனி பதம் பார்க்கும் காலை அன்றே;
ஈதல் ஆனான், வேந்தே; வேந்தற்குச்
சாதல் அஞ்சாய், நீயே; ஆயிடை,
இரு நிலம் மிளிர்ந்திசினாஅங்கு, ஒரு நாள்,
அருஞ் சமம் வருகுவதுஆயின்,
15
வருந்தலும் உண்டு, என் பைதல் அம் கடும்பே.

திணை அது; துறை பரிசில் கடாநிலை.
அவனை அவர் பாடியது.

140
தடவு நிலைப் பலவின் நாஞ்சில் பொருநன்
மடவன், மன்ற; செந் நாப் புலவீர்!
வளைக் கை விறலியர் படப்பைக் கொய்த
அடகின் கண்ணுறைஆக யாம் சில
5
அரிசி வேண்டினேமாக, தான் பிற
வரிசை அறிதலின், தன்னும் தூக்கி,
இருங் கடறு வளைஇய குன்றத்து அன்னது ஓர்
பெருங் களிறு நல்கியோனே; அன்னது ஓர்
தேற்றா ஈகையும் உளதுகொல்?
10
போற்றார் அம்ம, பெரியோர் தம் கடனே?

திணை அது; துறை பரிசில் விடை.
அவனை ஒளவையார் பாடியது.

141
'பாணன் சூடிய பசும் பொன் தாமரை
மாண் இழை விறலி மாலையொடு விளங்க,
கடும் பரி நெடுந் தேர் பூட்டு விட்டு அசைஇ,
ஊரீர் போலச் சுரத்திடை இருந்தனிர்!
5
யாரீரோ?' என, வினவல் ஆனா,
காரென் ஒக்கல், கடும் பசி, இரவல!
வென் வேல் அண்ணல் காணா ஊங்கே,
நின்னினும் புல்லியேம் மன்னே; இனியே,
இன்னேம் ஆயினேம் மன்னே; என்றும்
10
உடாஅ, போரா ஆகுதல் அறிந்தும்,
படாஅம் மஞ்ஞைக்கு ஈத்த எம் கோ,
கடாஅ யானைக் கலி மான் பேகன்,
'எத் துணை ஆயினும் ஈத்தல் நன்று' என,
மறுமை நோக்கின்றோ அன்றே,
15
பிறர், வறுமை நோக்கின்று, அவன் கை வண்மையே.

திணை அது; துறை பாணாற்றுப்படை; புலவராற்றுப்படையும் ஆம்.
வையாவிக் கோப்பெரும் பேகனைப் பரணர் பாடியது.

142
அறு குளத்து உகுத்தும், அகல் வயல் பொழிந்தும்,
உறும் இடத்து உதவாது உவர் நிலம் ஊட்டியும்,
வரையா மரபின் மாரிபோல,
கடாஅ யானைக் கழல் கால் பேகன்
5
கொடைமடம் படுதல் அல்லது,
படைமடம் படான், பிறர் படை மயக்குறினே.

திணை அது; துறை இயன்மொழி.
அவனை அவர் பாடியது.

148
கறங்கு மிசை அருவிய பிறங்கு மலை நள்ளி! நின்
அசைவு இல் நோன் தாள் நசை வளன் ஏத்தி,
நாள்தொறும் நன் கலம் களிற்றொடு கொணர்ந்து,
கூடு விளங்கு வியல் நகர், பரிசில் முற்று அளிப்ப;
5
பீடு இல் மன்னர்ப் புகழ்ச்சி வேண்டி,
செய்யா கூறிக் கிளத்தல்
எய்யாதாகின்று, எம் சிறு செந் நாவே.

திணை பாடாண் திணை; துறை பரிசில் துறை.
கண்டீரக் கோப் பெருநள்ளியை வன்பரணர் பாடியது.

149
நள்ளி! வாழியோ; நள்ளி! நள்ளென்
மாலை மருதம் பண்ணி, காலை
கைவழி மருங்கின் செவ்வழி பண்ணி,
வரவு எமர் மறந்தனர் அது நீ
5
புரவுக் கடன் பூண்ட வண்மையானே.

திணை அது; துறை இயன்மொழி.
அவனை அவர் பாடியது.

150
கூதிர்ப் பருந்தின் இருஞ் சிறகு அன்ன
பாறிய சிதாரேன், பலவு முதல் பொருந்தி,
தன்னும் உள்ளேன், பிறிது புலம் படர்ந்த என்
உயங்கு படர் வருத்தமும் உலைவும் நோக்கி,
5
மான் கணம் தொலைச்சிய குருதி அம் கழல் கால்,
வான் கதிர்த் திரு மணி விளங்கும் சென்னி,
செல்வத் தோன்றல், ஓர் வல் வில் வேட்டுவன்,
தொழுதனென் எழுவேற் கை கவித்து இரீஇ,
இழுதின் அன்ன வால் நிணக் கொழுங் குறை,
10
கான் அதர் மயங்கிய இளையர் வல்லே
தாம் வந்து எய்தாஅளவை, ஒய்யெனத்
தான் ஞெலி தீயின் விரைவனன் சுட்டு, 'நின்
இரும் பேர் ஒக்கலொடு தின்ம்' எனத் தருதலின்,
அமிழ்தின் மிசைந்து, காய்பசி நீங்கி,
15
நல் மரன் நளிய நறுந் தண் சாரல்,
கல் மிசை அருவி தண்ணெனப் பருகி,
விடுத்தல் தொடங்கினேனாக, வல்லே,
'பெறுதற்கு அரிய வீறுசால் நன் கலம்
பிறிது ஒன்று இல்லை; காட்டு நாட்டேம்' என,
20
மார்பில் பூண்ட வயங்கு காழ் ஆரம்
மடை செறி முன்கைக் கடகமொடு ஈத்தனன்;
'எந் நாடோ?' என, நாடும் சொல்லான்;
'யாரீரோ?' என, பேரும் சொல்லான்;
பிறர் பிறர் கூற வழிக் கேட்டிசினே
25
'இரும்பு புனைந்து இயற்றாப் பெரும் பெயர்த் தோட்டி
அம் மலை காக்கும் அணி நெடுங் குன்றின்,
பளிங்கு வகுத்தன்ன தீம் நீர்,
நளி மலை நாடன் நள்ளி அவன்' எனவே.

திணை அது; துறை இயன்மொழி.
அவனை அவர் பாடியது.

151
பண்டும் பண்டும் பாடுநர் உவப்ப,
விண் தோய் சிமைய விறல் வரைக் கவாஅன்,
கிழவன் சேட் புலம் படரின், இழை அணிந்து,
புன் தலை மடப் பிடி பரிசிலாக,
5
பெண்டிரும் தம் பதம் கொடுக்கும் வண் புகழ்க்
கண்டீரக்கோன்ஆகலின், நன்றும்
முயங்கல் ஆன்றிசின், யானே; பொலந் தேர்
நன்னன் மருகன் அன்றியும், நீயும்
முயங்கற்கு ஒத்தனை மன்னே; வயங்கு மொழிப்
10
பாடுநர்க்கு அடைத்த கதவின், ஆடு மழை
அணங்கு சால் அடுக்கம் பொழியும் நும்
மணம் கமழ் மால் வரை வரைந்தனர், எமரே.

திணையும் துறையும் அவை.
இளங் கண்டீரக்கோவும் இள விச்சிக்கோவும் ஒருங்கு இருந்தவழி, சென்ற பெருந்தலைச் சாத்தனார் இளங் கண்டீரக்கோவைப் புல்லி, இள விச்சிக்கோவைப் புல்லாராக 'என்னை என் செயப் புல்லீராயினீர்?' என, அவர் பாடியது.

152
'வேழம் வீழ்த்த விழுத் தொடைப் பகழி
பேழ் வாய் உழுவையைப் பெரும்பிறிது உறீஇ,
புழல் தலைப் புகர்க் கலை உருட்டி, உரல் தலைக்
கேழற் பன்றி வீழ, அயலது
5
ஆழல் புற்றத்து உடும்பில் செற்றும்,
வல் வில் வேட்டம் வலம் படுத்து இருந்தோன்,
புகழ்சால் சிறப்பின் அம்பு மிகத் திளைக்கும்
கொலைவன் யார்கொலோ? கொலைவன் மற்று இவன்
விலைவன் போலான்; வெறுக்கை நன்கு உடையன்;
10
ஆரம் தாழ்ந்த அம் பகட்டு மார்பின்,
சாரல் அருவிப் பய மலைக் கிழவன்,
ஓரி கொலோ? அல்லன்கொல்லோ?
பாடுவல், விறலி! ஓர் வண்ணம்; நீரும்
மண் முழா அமைமின்; பண் யாழ் நிறுமின்;
15
கண் விடு தூம்பின் களிற்று உயிர் தொடுமின்;
எல்லரி தொடுமின்; ஆகுளி தொடுமின்;
பதலை ஒரு கண் பையென இயக்குமின்;
மதலை மாக் கோல் கைவலம் தமின்' என்று,
இறைவன் ஆகலின், சொல்லுபு குறுகி,
20
மூ ஏழ் துறையும் முறையுளிக் கழிப்பி,
'கோ' எனப் பெயரிய காலை, ஆங்கு அது
தன் பெயர் ஆகலின் நாணி, மற்று, 'யாம்
நாட்டிடன் நாட்டிடன் வருதும்; ஈங்கு ஓர்
வேட்டுவர் இல்லை, நின் ஒப்போர்' என,
25
வேட்டது மொழியவும் விடாஅன், வேட்டத்தில்
தான் உயிர் செகுத்த மான் நிணப் புழுக்கோடு,
ஆன் உருக்கு அன்ன வேரியை நல்கி,
தன் மலைப் பிறந்த தா இல் நன் பொன்,
பல் மணிக் குவையொடும் விரைஇ, 'கொண்ம்' என,
30
சுரத்திடை நல்கியோனே விடர்ச் சிமை
ஓங்கு இருங் கொல்லிப் பொருநன்,
ஓம்பா ஈகை விறல் வெய்யோனே!

திணை அது; துறை பரிசில் விடை.
வல் வில் ஓரியை வன்பரணர் பாடியது.

153
இழை அணி யானை இரப்போர்க்கு ஈயும்,
சுடர் விடு பசும் பூண், சூர்ப்பு அமை முன் கை,
அடு போர் ஆனா, ஆதன் ஓரி
5
மாரி வண் கொடை காணிய, நன்றும்
சென்றதுமன், எம் கண்ணுளங் கடும்பே;
பனி நீர்ப் பூவா மணி மிடை குவளை
வால் நார்த் தொடுத்த கண்ணியும், கலனும்,
யானை இனத்தொடு பெற்றனர், நீங்கி,
10
பசியாராகல் மாறுகொல் விசி பிணிக்
கூடு கொள் இன் இயம் கறங்க,
ஆடலும் ஒல்லார், தம் பாடலும் மறந்தே?

திணை அது; துறை இயன்மொழி.
அவனை அவர் பாடியது.

154
திரை பொரு முந்நீர்க் கரை நணிச் செலினும்,
அறியுநர்க் காணின், வேட்கை நீக்கும்
சில் நீர் வினவுவர், மாந்தர்; அது போல்,
அரசர் உழையராகவும், புரை தபு
5
வள்ளியோர்ப் படர்குவர், புலவர்: அதனால்,
யானும், 'பெற்றது ஊதியம்; பேறு யாது?' என்னேன்;
உற்றனென் ஆதலின் உள்ளி வந்தனனே;
'ஈ' என இரத்தலோ அரிதே; நீ அது
நல்கினும், நல்காய் ஆயினும், வெல் போர்
10
எறி படைக்கு ஓடா ஆண்மை, அறுவைத்
தூ விரி கடுப்பத் துவன்றி மீமிசைத்
தண் பல இழிதரும் அருவி நின்
கொண் பெருங் கானம், பாடல் எனக்கு எளிதே.

திணை அது; துறை பரிசில் துறை.
கொண்கானங்கிழானை மோசிகீரனார் பாடியது.

155
வணர் கோட்டுச் சீறியாழ் வாடுபுடைத் தழீஇ,
'உணர்வோர் யார், என் இடும்பை தீர்க்க?' என,
கிளக்கும், பாண! கேள், இனி நயத்தின்,
பாழ் ஊர் நெருஞ்சிப் பசலை வான் பூ
5
ஏர்தரு சுடரின் எதிர்கொண்டாஅங்கு,
இலம்படு புலவர் மண்டை விளங்கு புகழ்க்
கொண் பெருங் கானத்துக் கிழவன்
தண் தார் அகலம் நோக்கின, மலர்ந்தே.

திணை அது; துறை பாணாற்றுப்படை.
அவனை அவர் பாடியது.

156
ஒன்று நன்கு உடைய பிறர் குன்றம்; என்றும்
இரண்டு நன்கு உடைத்தே கொண் பெருங் கானம்;
நச்சிச் சென்ற இரவலர்ச் சுட்டித்
தொடுத்து உணக் கிடப்பினும் கிடக்கும்; அஃதான்று
5
நிறை அருந் தானை வேந்தரைத்
திறை கொண்டு பெயர்க்கும் செம்மலும் உடைத்தே.

திணை அது; துறை இயன் மொழி.
அவனை அவர் பாடியது.

157
தமர் தற் தப்பின் அது நோன்றல்லும்,
பிறர் கையறவு தான் நாணுதலும்,
படைப் பழி தாரா மைந்தினன் ஆகலும்,
வேந்துடை அவையத்து ஓங்குபு நடத்தலும்,
5
நும்மோர்க்குத் தகுவன அல்ல; எம்மோன்,
சிலை செல மலர்ந்த மார்பின், கொலை வேல்,
கோடல் கண்ணி, குறவர் பெருமகன்
ஆடு மழை தவிர்க்கும் பயம் கெழு மீமிசை,
எல் படு பொழுதின், இனம் தலைமயங்கி,
10
கட்சி காணாக் கடமான் நல் ஏறு
மட மான் நாகு பிணை பயிரின், விடர் முழை
இரும் புலிப் புகர்ப் போத்து ஓர்க்கும்
பெருங் கல் நாடன் எம் ஏறைக்குத் தகுமே.

திணையும் துறையும் அவை.
ஏறைக் கோனைக் குறமகள் இளவெயினி பாடியது.

158
முரசு கடிப்பு இகுப்பவும், வால் வளை துவைப்பவும்,
அரசுடன் பொருத அண்ணல் நெடு வரை,
கறங்கு வெள் அருவி கல் அலைத்து ஒழுகும்
பறம்பின் கோமான் பாரியும்; பிறங்கு மிசைக்
5
கொல்லி ஆண்ட வல் வில் ஓரியும்;
காரி ஊர்ந்து பேர் அமர்க் கடந்த,
மாரி ஈகை, மறப் போர் மலையனும்;
ஊராது ஏந்திய குதிரை, கூர் வேல்,
கூவிளங் கண்ணி, கொடும் பூண், எழினியும்;
10
ஈர்ந் தண் சிலம்பின் இருள் தூங்கு நளி முழை,
அருந் திறல் கடவுள் காக்கும் உயர் சிமை,
பெருங் கல் நாடன் பேகனும்; திருந்து மொழி
மோசி பாடிய ஆயும்; ஆர்வம் உற்று
உள்ளி வருநர் உலைவு நனி தீர,
15
தள்ளாது ஈயும் தகைசால் வண்மை,
கொள்ளார் ஓட்டிய, நள்ளியும் என ஆங்கு
எழுவர் மாய்ந்த பின்றை, 'அழிவரப்
பாடி வருநரும் பிறரும் கூடி
இரந்தோர் அற்றம் தீர்க்கு' என, விரைந்து, இவண்
20
உள்ளி வந்தனென், யானே; விசும்புறக்
கழை வளர் சிலம்பின் வழையொடு நீடி,
ஆசினிக் கவினிய பலவின் ஆர்வுற்று,
முள் புற முது கனி பெற்ற கடுவன்
துய்த் தலை மந்தியைக் கையிடூஉப் பயிரும்,
25
அதிரா யாணர், முதிரத்துக் கிழவ!
இவண் விளங்கு சிறப்பின், இயல் தேர்க் குமண!
இசை மேந்தோன்றிய வண்மையொடு,
பகை மேம்படுக, நீ ஏந்திய வேலே!

திணை அது; துறை வாழ்த்தியல்; பரிசில் கடா நிலையும் ஆம்.
குமணனைப் பெருஞ்சித்திரனார் பாடியது.

159
'வாழும் நாளோடு யாண்டு பல உண்மையின்,
தீர்தல் செல்லாது, என் உயிர்' எனப் பல புலந்து,
கோல் காலாகக் குறும் பல ஒதுங்கி,
நூல் விரித்தன்ன கதுப்பினள், கண் துயின்று,
5
முன்றில் போகா முதிர்வினள் யாயும்;
பசந்த மேனியொடு படர் அட வருந்தி,
மருங்கில் கொண்ட பல் குறுமாக்கள்
பிசைந்து தின, வாடிய முலையள், பெரிது அழிந்து,
குப்பைக் கீரை கொய்கண் அகைத்த
10
முற்றா இளந் தளிர் கொய்துகொண்டு, உப்பு இன்று,
நீர் உலைஆக ஏற்றி, மோர் இன்று,
அவிழ்ப் பதம் மறந்து, பாசடகு மிசைந்து,
மாசொடு குறைந்த உடுக்கையள், அறம் பழியா,
துவ்வாளாகிய என் வெய்யோளும்;
15
என்றாங்கு, இருவர் நெஞ்சமும் உவப்ப கானவர்
கரி புனம் மயக்கிய அகன்கண் கொல்லை,
ஐவனம் வித்தி, மையுறக் கவினி,
ஈனல்செல்லா ஏனற்கு இழுமெனக்
கருவி வானம் தலைஇ யாங்கும்,
20
ஈத்த நின் புகழ் ஏத்தி, தொக்க என்,
பசி தினத் திரங்கிய, ஒக்கலும் உவப்ப
உயர்ந்து ஏந்து மருப்பின் கொல்களிறு பெறினும்,
தவிர்ந்து விடு பரிசில் கொள்ளலென்; உவந்து, நீ
இன்புற விடுதிஆயின், சிறிது
25
குன்றியும் கொள்வல், கூர் வேல் குமண!
அதற்பட அருளல் வேண்டுவல் விறல் புகழ்
வசை இல் விழுத் திணைப் பிறந்த
இசை மேந் தோன்றல்! நிற் பாடிய யானே.

திணை அது; துறை பரிசில் கடா நிலை.
அவனை அவர் பாடியது.

160
'உரு கெழு ஞாயிற்று ஒண் கதிர் மிசைந்த
முளி புல் கானம் குழைப்ப, கல்லென
அதிர் குரல் ஏறொடு துளி சொரிந்தாங்கு,
பசி தினத் திரங்கிய கசிவுடை யாக்கை
5
அவிழ் புகுவு அறியாதுஆகலின், வாடிய
நெறி கொள் வரிக் குடர் குளிப்பத் தண்ணென,
குய் கொள் கொழுந் துவை நெய்யுடை அடிசில்,
மதி சேர் நாள்மீன் போல, நவின்ற
சிறு பொன் நன் கலம் சுற்ற இரீஇ,
10
"கேடு இன்றாக, பாடுநர் கடும்பு" என,
அரிது பெறு பொலங் கலம் எளிதினின் வீசி,
நட்டோர் நட்ட நல் இசைக் குமணன்,
மட்டு ஆர் மறுகின், முதிரத்தோனே;
செல்குவைஆயின், நல்குவன், பெரிது' என,
15
பல் புகழ் நுவலுநர் கூற, வல் விரைந்து,
உள்ளம் துரப்ப வந்தனென்; எள்ளுற்று,
இல் உணாத் துறத்தலின், இல் மறந்து உறையும்
புல் உளைக் குடுமிப் புதல்வன் பல் மாண்
பால் இல் வறு முலை சுவைத்தனன் பெறாஅன்,
20
கூழும் சோறும் கடைஇ, ஊழின்
உள் இல் வறுங் கலம் திறந்து, அழக் கண்டு,
மறப் புலி உரைத்தும், மதியம் காட்டியும்,
நொந்தனளாகி, 'நுந்தையை உள்ளி,
பொடிந்த நின் செவ்வி காட்டு' எனப் பலவும்
25
வினவல் ஆனாளாகி, நனவின்
அல்லல் உழப்போள் மல்லல் சிறப்ப,
செல்லாச் செல்வம் மிகுத்தனை, வல்லே
விடுதல் வேண்டுவல் அத்தை; படு திரை
நீர் சூழ் நிலவரை உயர, நின்
30
சீர் கெழு விழுப் புகழ் ஏத்துகம் பலவே.

திணையும் துறையும் அவை.
அவனை அவர் பாடியது.

161
நீண்டு ஒலி அழுவம் குறைபட முகந்துகொண்டு,
ஈண்டு செலல் கொண்மூ வேண்டுவயின் குழீஇ,
பெரு மலை அன்ன தோன்றல, சூல் முதிர்பு,
உரும் உரறு கருவியொடு, பெயல் கடன் இறுத்து,

5
வள மழை மாறிய என்றூழ்க் காலை,
மன்பதை எல்லாம் சென்று உண, கங்கைக்
கரை பொரு மலி நீர் நிறைந்து தோன்றியாங்கு,
எமக்கும் பிறர்க்கும் செம்மலைஆகலின்,
'அன்பு இல் ஆடவர் கொன்று, ஆறு கவர,
10
சென்று தலைவருந அல்ல, அன்பு இன்று,
வன் கலை தெவிட்டும், அருஞ் சுரம் இறந்தோர்க்கு,
இற்றை நாளொடும் யாண்டு தலைப்பெயர' எனக்
கண் பொறி போகிய கசிவொடு உரன் அழிந்து,
அருந் துயர் உழக்கும் என் பெருந் துன்புறுவி நின்
15
தாள் படு செல்வம் காண்தொறும் மருள,
பனை மருள் தடக் கையொடு முத்துப் பட முற்றிய
உயர் மருப்பு ஏந்திய வரை மருள் நோன் பகடு,
ஒளி திகழ் ஓடை பொலிய, மருங்கில்
படு மணி இரட்ட, ஏறிச் செம்மாந்து,
20
செலல் நசைஇ உற்றனென் விறல் மிகு குருசில்!
இன்மை துரப்ப, இசைதர வந்து, நின்
வண்மையின் தொடுத்த என் நயந்தனை கேண்மதி!
வல்லினும், வல்லேன்ஆயினும், வல்லே,
என் அளந்து அறிந்தனை நோக்காது, சிறந்த
25
நின் அளந்து அறிமதி, பெரும! என்றும்
வேந்தர் நாணப் பெயர்வேன்; சாந்து அருந்திப்
பல் பொறிக் கொண்ட ஏந்து எழில் அகலம்
மாண் இழை மகளிர் புல்லுதொறும் புகல,
நாள் முரசு இரங்கும் இடனுடை வரைப்பில் நின்
30
தாள் நிழல் வாழ்நர் நன் கலம் மிகுப்ப,
வாள் அமர் உழந்த நின் தானையும்,
சீர் மிகு செல்வமும், ஏத்துகம் பலவே.

திணை அது; துறை பரிசில் துறை.
அவனை அவர் பாடிப் பகடு பெற்றது.

162
இரவலர் புரவலை நீயும் அல்லை;
புரவலர் இரவலர்க்கு இல்லையும் அல்லர்;
இரவலர் உண்மையும் காண், இனி; இரவலர்க்கு
ஈவோர் உண்மையும் காண், இனி; நின் ஊர்க்
5
கடிமரம் வருந்தத் தந்து யாம் பிணித்த
நெடு நல் யானை எம் பரிசில்;
கடுமான் தோன்றல்! செல்வல் யானே.

திணை அது; துறை பரிசில் விடை.
அவர் வெளிமானுழைச் சென்றார்க்கு வெளிமான் துஞ்சுவான் தம்பியைப் 'பரிசில் கொடு' என, அவன் சிறிது கொடுப்பக் கொள்ளாது போய், குமணனைப் பாடி,குமணன் பகடு கொடுப்பக் கொணர்ந்து நின்று, வெளிமான் ஊர்க் கடிமரத்து யாத்துச் சென்று,

163
நின் நயந்து உறைநர்க்கும், நீ நயந்து உறைநர்க்கும்,
பல் மாண் கற்பின் நின் கிளை முதலோர்க்கும்,
கடும்பின் கடும் பசி தீர யாழ நின்
நெடுங் குறியெதிர்ப்பை நல்கியோர்க்கும்,
5
இன்னோர்க்கு என்னாது, என்னொடும் சூழாது,
வல்லாங்கு வாழ்தும் என்னாது, நீயும்
எல்லோர்க்கும் கொடுமதி மனை கிழவோயே!
பழம் தூங்கு முதிரத்துக் கிழவன்
திருந்து வேல் குமணன் நல்கிய வளனே.

திணை அது; துறை பரிசில்
பெருஞ் சித்திரனார் குமணனைப் பாடிப் பரிசில் கொணர்ந்து மனையோட்குச் சொல்லியது.

164
ஆடு நனி மறந்த கோடு உயர் அடுப்பின்
ஆம்பி பூப்ப, தேம்பு பசி உழவா,
பாஅல் இன்மையின் தோலொடு திரங்கி,
இல்லி தூர்ந்த பொல்லா வறு முலை
5
சுவைத்தொறு அழூஉம் தன் மகத்து முகம் நோக்கி,
நீரொடு நிறைந்த ஈர் இதழ் மழைக்கண் என்
மனையோள் எவ்வம் நோக்கி, நினைஇ,
நிற் படர்ந்திசினே நல் போர்க் குமண!
என் நிலை அறிந்தனைஆயின், இந் நிலைத்
10
தொடுத்தும் கொள்ளாது அமையலென் அடுக்கிய
பண் அமை நரம்பின் பச்சை நல் யாழ்,
மண் அமை முழவின், வயிரியர்
இன்மை தீர்க்கும் குடிப் பிறந்தோயே.

திணை அது; துறை பரிசில் கடாநிலை.
தம்பியால் நாடு கொள்ளப்பட்டுக் காடு பற்றியிருந்த குமணனைப் பெருந்தலைச் சாத்தனார் பாடியது.

165
மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்
தம் புகழ் நிறீஇத் தாம் மாய்ந்தனரே;
துன் அருஞ் சிறப்பின் உயர்ந்த செல்வர்,
இன்மையின் இரப்போர்க்கு ஈஇயாமையின்,
5
தொன்மை மாக்களின் தொடர்பு அறியலரே;
தாள் தாழ் படு மணி இரட்டும், பூ நுதல்,
ஆடு இயல் யானை பாடுநர்க்கு அருகாக்
கேடு இல் நல் இசை வய மான் தோன்றலைப்
பாடி நின்றனெனாக, 'கொன்னே
10
பாடு பெறு பரிசிலன் வாடினன் பெயர்தல் என
நாடு இழந்ததனினும் நனி இன்னாது' என,
வாள் தந்தனனே, தலை எனக்கு ஈய,
தன்னின் சிறந்தது பிறிது ஒன்று இன்மையின்;
ஆடு மலி உவகையொடு வருவல்,
15
ஓடாப் பூட்கை நின் கிழமையோற் கண்டே.

திணை அது; துறை பரிசில் விடை.
தம்பியால் நாடு கொள்ளப்பட்டுக் காடு பற்றியிருந்த குமணனைக் கண்டு, அவன் தன் வாள் கொடுப்பக் கொண்டு வந்து, இளங் குமணற்குக் காட்டி, பெருந்தலைச் சாத்தனார் பாடியது.

168
அருவி ஆர்க்கும் கழை பயில் நனந் தலைக்
கறி வளர் அடுக்கத்து மலர்ந்த காந்தள்
கொழுங் கிழங்கு மிளிரக் கிண்டி, கிளையொடு,
கடுங் கண் கேழல் உழுத பூழி,
5
நல் நாள் வரு பதம் நோக்கி, குறவர்
உழாஅது வித்திய பரூஉக் குரல் சிறு தினை
முந்து விளை யாணர் நாள் புதிது உண்மார்
மரை ஆன் கறந்த நுரை கொள் தீம் பால்,
மான் தடி புழுக்கிய புலவு நாறு குழிசி
10
வான் கேழ் இரும் புடை கழாஅது, ஏற்றி,
சாந்த விறகின் உவித்த புன்கம்
கூதளம் கவினிய குளவி முன்றில்,
செழுங் கோள் வாழை அகல் இலைப் பகுக்கும்
ஊராக் குதிரைக் கிழவ! கூர்வேல்,
15
நறை நார்த் தொடுத்த வேங்கை அம் கண்ணி,
வடி நவில் அம்பின் வில்லோர் பெரும!
கை வள் ஈகைக் கடு மான் கொற்ற!
வையக வரைப்பில் தமிழகம் கேட்ப,
பொய்யாச் செந் நா நெளிய ஏத்திப்
20
பாடுப என்ப பரிசிலர், நாளும்
ஈயா மன்னர் நாண,
வீயாது பரந்த நின் வசை இல் வான் புகழே.

திணை பாடாண் திணை; துறை பரிசில் துறை; இயன்மொழியும், அரச வாகையும் ஆம்.
பிட்டங் கொற்றனைக் கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார் பாடியது.

169
நும் படை செல்லும்காலை, அவர் படை
எடுத்து எறி தானை முன்னரை எனாஅ,
அவர் படை வரூஉம்காலை, நும் படைக்
கூழை தாங்கிய, அகல் யாற்றுக்
5
குன்று விலங்கு சிறையின் நின்றனை எனாஅ,
அரிதால், பெரும! நின் செவ்வி என்றும்;
பெரிதால் அத்தை, என் கடும்பினது இடும்பை;
இன்னே விடுமதி பரிசில்! வென் வேல்
இளம் பல் கோசர் விளங்கு படை கன்மார்,
10
இகலினர் எறிந்த அகல் இலை முருக்கின்
பெரு மரக் கம்பம் போல,
பொருநர்க்கு உலையா நின் வலன் வாழியவே!

திணை அது; துறை பரிசில் கடா நிலை.
அவனைக் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியது.

171
இன்று செலினும் தருமே; சிறு வரை
நின்று செலினும் தருமே; பின்னும்,
'முன்னே தந்தனென்' என்னாது, துன்னி
வைகலும் செலினும், பொய்யலன் ஆகி,
5
யாம் வேண்டியாங்கு எம் வறுங் கலம் நிறைப்போன்;
தான் வேண்டியாங்குத் தன் இறை உவப்ப
அருந் தொழில் முடியரோ, திருந்து வேல் கொற்றன்;
இனம் மலி கதச் சேக் களனொடு வேண்டினும்,
களம் மலி நெல்லின் குப்பை வேண்டினும்,
10
அருங் கலம் களிற்றொடு வேண்டினும், பெருந்தகை
பிறர்க்கும் அன்ன அறத் தகையன்னே.
அன்னன் ஆகலின், எந்தை உள் அடி
முள்ளும் நோவ உறாற்கதில்ல!
ஈவோர் அரிய இவ் உலகத்து,
15
வாழ்வோர் வாழ, அவன் தாள் வாழியவே!

திணை பாடாண் திணை; துறை இயன்மொழி.
அவனைக் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக் கண்ணனார் பாடியது.

172
ஏற்றுக உலையே; ஆக்குக சோறே;
கள்ளும் குறைபடல் ஓம்புக; ஒள் இழைப்
பாடு வல் விறலியர் கோதையும் புனைக;
அன்னவை பிறவும் செய்க; என்னதூஉம்
5
பரியல் வேண்டா; வரு பதம் நாடி,
ஐவனம் காவலர் பெய் தீ நந்தின்,
ஒளி திகழ் திருந்து மணி நளிஇருள் அகற்றும்
வன் புல நாடன், வய மான் பிட்டன்:
ஆர் அமர் கடக்கும் வேலும், அவன் இறை
10
மா வள் ஈகைக் கோதையும்,
மாறுகொள் மன்னரும், வாழியர் நெடிதே!

திணையும் துறையும் அவை.
அவனை வடம வண்ணக்கன் தாமோதரனார் பாடியது.

173
யான் வாழும் நாளும் பண்ணன் வாழிய!
பாணர்! காண்க, இவன் கடும்பினது இடும்பை;
யாணர்ப் பழு மரம் புள் இமிழ்ந்தன்ன
ஊண் ஒலி அரவம்தானும் கேட்கும்;
5
பொய்யா எழிலி பெய்விடம் நோக்கி,
முட்டை கொண்டு வன் புலம் சேரும்
சிறு நுண் எறும்பின் சில் ஒழுக்கு ஏய்ப்ப,
சோறுடைக் கையர் வீறு வீறு இயங்கும்
இருங் கிளைச் சிறாஅர்க் காண்டும்; கண்டும்,
10
மற்றும் மற்றும் வினவுதும், தெற்றென;
பசிப்பிணி மருத்துவன் இல்லம்
அணித்தோ? சேய்த்தோ? கூறுமின், எமக்கே.

திணையும் துறையும் அவை.
சிறுகுடி கிழான் பண்ணனைச் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன் பாடியது.

175
எந்தை! வாழி; ஆதனுங்க! என்
நெஞ்சம் திறப்போர் நிற் காண்குவரே;
நின் யான் மறப்பின், மறக்கும் காலை,
என் உயிர் யாக்கையின் பிரியும் பொழுதும்,
5
என்னியான் மறப்பின், மறக்குவென் வென் வேல்
விண் பொரு நெடுங் குடைக் கொடித் தேர் மோரியர்
திண் கதிர்த் திகிரி திரிதரக் குறைத்த
உலக இடைகழி அறை வாய் நிலைஇய
மலர் வாய் மண்டிலத்து அன்ன, நாளும்
10
பலர் புரவு எதிர்ந்த அறத் துறை நின்னே.

திணை பாடாண் திணை; துறை இயன்மொழி.
ஆதனுங்கனைக் கள்ளில் ஆத்திரையனார் பாடியது.

176
ஓரை ஆயத்து ஒண் தொடி மகளிர்
கேழல் உழுத இருஞ் சேறு கிளைப்பின்,
யாமை ஈன்ற புலவு நாறு முட்டையைத்
தேன் நாறு ஆம்பல் கிழங்கொடு பெறூஉம்,
5
இழுமென ஒலிக்கும் புனல் அம் புதவின்,
பெரு மாவிலங்கைத் தலைவன், சீறியாழ்
இல்லோர் சொல் மலை நல்லியக்கோடனை
உடையை வாழி, எற் புணர்ந்த பாலே!
பாரி பறம்பின் பனிச் சுனைத் தெண் நீர்
10
ஓர் ஊர் உண்மையின் இகழ்ந்தோர் போல,
காணாது கழிந்த வைகல், காணா
வழி நாட்கு இரங்கும், என் நெஞ்சம் அவன்
கழி மென் சாயல் காண்தொறும் நினைந்தே.

திணையும் துறையும் அவை.
ஓய்மான் நல்லியக் கோடனைப் புறத்திணை நன்னாகனார் பாடியது.

177
ஒளிறு வாள் மன்னர் ஒண் சுடர் நெடு நகர்,
வெளிறு கண் போகப் பல் நாள் திரங்கி,
பாடிப் பெற்ற பொன் அணி யானை,
தமர்எனின், யாவரும் புகுப; அமர் எனின்,
5
திங்களும் நுழையா எந்திரப் படு புழை,
கள் மாறு நீட்ட நணி நணி இருந்த
குறும் பல் குறும்பின் ததும்ப வைகி,
புளிச் சுவை வேட்ட செங் கண் ஆடவர்
தீம் புளிக் களாவொடு துடரி முனையின்,
10
மட்டு அறல் நல் யாற்று எக்கர் ஏறி,
கருங் கனி நாவல் இருந்து கொய்து உண்ணும்,
பெரும் பெயர் ஆதி, பிணங்குஅரில் குட நாட்டு,
எயினர் தந்த எய்ம் மான் எறி தசைப்
பைஞ் ஞிணம் பெருத்த பசு வெள் அமலை,
15
வருநர்க்கு வரையாது தருவனர் சொரிய,
இரும் பனங் குடையின் மிசையும்
பெரும் புலர் வைகறைச் சீர் சாலாதே.

திணையும் துறையும் அவை.
மல்லிகிழான் காரியாதியை ஆவூர் மூலங்கிழார் பாடியது.

184
காய் நெல் அறுத்துக் கவளம் கொளினே,
மா நிறைவு இல்லதும், பல் நாட்கு ஆகும்;
நூறு செறு ஆயினும், தமித்துப் புக்கு உணினே,
வாய் புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும்;
5
அறிவுடை வேந்தன் நெறி அறிந்து கொளினே,
கோடி யாத்து, நாடு பெரிது நந்தும்;
மெல்லியன் கிழவன் ஆகி, வைகலும்
வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு,
பரிவு தப எடுக்கும் பிண்டம் நச்சின்,
10
யானை புக்க புலம் போல,
தானும் உண்ணான், உலகமும் கெடுமே.

திணை பாடாண் திணை; துறை செவியறிவுறூஉ.
பாண்டியன் அறிவுடை நம்பியுழைச் சென்ற பிசிராந்தையார் பாடியது.

196
ஒல்லுவது ஒல்லும் என்றலும், யாவர்க்கும்
ஒல்லாது இல் என மறுத்தலும், இரண்டும்,
ஆள்வினை மருங்கின் கேண்மைப் பாலே;
ஒல்லாது ஒல்லும் என்றலும், ஒல்லுவது
5
இல் என மறுத்தலும், இரண்டும், வல்லே
இரப்போர் வாட்டல் அன்றியும், புரப்போர்
புகழ் குறைபடூஉம் வாயில்அத்தை;
அனைத்து ஆகியர், இனி; இதுவே எனைத்தும்
சேய்த்துக் காணாது கண்டனம்; அதனால்,
10
நோய் இலராக நின் புதல்வர்; யானும்,
வெயில் என முனியேன், பனி என மடியேன்,
கல் குயின்றன்ன என் நல்கூர் வளி மறை,
நாண் அலது இல்லாக் கற்பின் வாள் நுதல்
மெல் இயல் குறு மகள் உள்ளிச்
15
செல்வல் அத்தை; சிறக்க, நின் நாளே!

திணை பாடாண் திணை; துறை பரிசில் கடா நிலை.
பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் பரிசில் நீட்டித்தானை ஆவூர் மூலங் கிழார் பாடியது.

197
வளி நடந்தன்ன வாச் செலல் இவுளியொடு
கொடி நுடங்கு மிசைய தேரினர் எனாஅ,
கடல் கண்டன்ன ஒண் படைத் தானையொடு
மலை மாறு மலைக்கும் களிற்றினர் எனாஅ,
5
உரும் உரற்றன்ன உட்குவரு முரசமொடு
செரு மேம்படூஉம் வென்றியர் எனாஅ,
மண் கெழு தானை, ஒண் பூண், வேந்தர்
வெண் குடைச் செல்வம் வியத்தலோ இலமே;
எம்மால் வியக்கப்படூஉமோரே,
10
இடு முள் படப்பை மறி மேய்ந்து ஒழிந்த
குறு நறு முஞ்ஞைக் கொழுங் கண் குற்றடகு,
புன் புல வரகின் சொன்றியொடு, பெறூஉம்,
சீறூர் மன்னர் ஆயினும், எம் வயின்
பாடு அறிந்து ஒழுகும் பண்பினாரே;
15
மிகப் பேர் எவ்வம் உறினும், எனைத்தும்
உணர்ச்சி இல்லோர் உடைமை உள்ளேம்;
நல் அறிவு உடையோர் நல்குரவு
உள்ளுதும், பெரும! யாம், உவந்து, நனி பெரிதே.

திணையும் துறையும் அவை.
சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன் பரிசில் நீட்டித்தானைக் கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் பாடியது.

198
'அருவி தாழ்ந்த பெரு வரை போல
ஆரமொடு பொலிந்த மார்பில் தண்டா,
கடவுள் சான்ற கற்பின், சேயிழை
மடவோள் பயந்த மணி மருள் அவ் வாய்க்
5
கிண்கிணிப் புதல்வர் பொலிக!' என்று ஏத்தி,
திண் தேர் அண்ணல் நிற் பாராட்டி,
காதல் பெருமையின் கனவினும் அரற்றும் என்
காமர் நெஞ்சம் ஏமாந்து உவப்ப,
ஆல் அமர் கடவுள் அன்ன நின் செல்வம்,
10
வேல் கெழு குருசில்! கண்டேன்; ஆதலின்,
விடுத்தனென்; வாழ்க, நின் கண்ணி! தொடுத்த
தண் தமிழ் வரைப்பகம் கொண்டி ஆக,
பனித்துக் கூட்டு உண்ணும் தணிப்பு அருங் கடுந் திறல்
நின் ஓரன்ன நின் புதல்வர், என்றும்,
15
ஒன்னார் வாட அருங் கலம் தந்து, நும்
பொன்னுடை நெடு நகர் நிறைய வைத்த நின்
முன்னோர் போல்க, இவர் பெருங் கண்ணோட்டம்!
யாண்டும் நாளும் பெருகி, ஈண்டு திரைப்
பெருங் கடல் நீரினும், அக் கடல் மணலினும்,
20
நீண்டு உயர் வானத்து உறையினும், நன்றும்,
இவர் பெறும் புதல்வர்க் காண்தொறும், நீயும்,
புகன்ற செல்வமொடு புகழ் இனிது விளங்கி,
நீடு வாழிய! நெடுந்தகை! யானும்
கேள் இல் சேஎய் நாட்டின், எந்நாளும்,
25
துளி நசைப் புள்ளின் நின் அளி நசைக்கு இரங்கி, நின்
அடி நிழல் பழகிய அடியுறை;
கடுமான் மாற! மறவாதீமே.

திணையும் துறையும் அவை.
பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனை வடம வண்ணக்கன் பேரி சாத்தனார் பாடியது.

199
கடவுள் ஆலத்துத் தடவுச் சினைப் பல் பழம்
நெருநல் உண்டனம் என்னாது, பின்னும்
செலவு ஆனாவே, கலி கொள் புள்ளினம்;
அனையர் வாழியோ இரவலர்; அவரைப்
5
புரவு எதிர்கொள்ளும் பெருஞ் செய் ஆடவர்
உடைமை ஆகும், அவர் உடைமை;
அவர் இன்மை ஆகும், அவர் இன்மையே.

திணையும் துறையும் அவை.
பெரும்பதுமனார் பாட்டு.

200
பனி வரை நிவந்த பாசிலைப் பலவின்
கனி கவர்ந்து உண்ட கரு விரல் கடுவன்
செம் முக மந்தியொடு சிறந்து, சேண் விளங்கி,
மழை மிசை அறியா மால் வரை அடுக்கத்து,
5
கழை மிசைத் துஞ்சும் கல்லக வெற்ப!
நிணம் தின்று செருக்கிய நெருப்புத் தலை நெடு வேல்,
களம் கொண்டு கனலும் கடுங்கண் யானை,
விளங்கு மணிக் கொடும் பூண், விச்சிக்கோவே!
இவரே, பூத் தலை அறாஅப் புனை கொடி முல்லை
10
நாத் தழும்பு இருப்பப் பாடாதுஆயினும்,
'கறங்கு மணி நெடுந் தேர் கொள்க!' எனக் கொடுத்த
பரந்து ஓங்கு சிறப்பின் பாரி மகளிர்;
யானே, பரிசிலன், மன்னும் அந்தணன்; நீயே,
வரிசையில் வணக்கும் வாள் மேம்படுநன்;
15
நினக்கு யான் கொடுப்பக் கொண்மதி சினப் போர்
அடங்கா மன்னரை அடக்கும்
மடங்கா விளையுள் நாடு கிழவோயே!

திணை அது; துறை பரிசில் துறை.
பாரி மகளிரை விச்சிக் கோனுழைக் கொண்டு சென்ற கபிலர் பாடியது.

201
'இவர் யார்?' என்குவைஆயின், இவரே,
ஊருடன் இரவலர்க்கு அருளி, தேருடன்
முல்லைக்கு ஈத்த செல்லா நல் இசை,
படு மணி யானை, பறம்பின் கோமான்
5
நெடு மாப் பாரி மகளிர்; யானே
தந்தை தோழன்; இவர் என் மகளிர்;
அந்தணன், புலவன், கொண்டு வந்தனனே.
நீயே, வடபால் முனிவன் தடவினுள் தோன்றி,
செம்பு புனைந்து இயற்றிய சேண் நெடும் புரிசை,
10
உவரா ஈகை, துவரை ஆண்டு,
நாற்பத்தொன்பது வழிமுறை வந்த
வேளிருள் வேளே! விறல் போர் அண்ணல்!
தார் அணி யானைச் சேட்டு இருங் கோவே!
ஆண் கடன் உடைமையின், பாண் கடன் ஆற்றிய
15
ஒலியற் கண்ணிப் புலிகடி மாஅல்!
யான் தர, இவரைக் கொண்மதி! வான் கவித்து
இருங் கடல் உடுத்த இவ் வையகத்து, அருந் திறல்
பொன் படு மால் வரைக் கிழவ! வென் வேல்
உடலுநர் உட்கும் தானை,
20
கெடல் அருங்குரைய நாடு கிழவோயே!

திணையும் துறையும் அவை.
பாரி மகளிரை இருங்கோவேளுழைக் கொண்டு சென்ற கபிலர் பாடியது.

202
வெட்சிக் கானத்து வேட்டுவர் ஆட்ட,
கட்சி காணாக் கடமா நல் ஏறு
கடறு மணி கிளர, சிதறு பொன் மிளிர,
கடிய கதழும் நெடு வரைப் படப்பை
5
வென்றி நிலைஇய விழுப் புகழ் ஒன்றி,
இரு பால் பெயரிய உரு கெழு மூதூர்,
கோடி பல அடுக்கிய பொருள் நுமக்கு உதவிய
நீடு நிலை அரையத்துக் கேடும் கேள், இனி:
நுந்தை தாயம் நிறைவுற எய்திய
10
ஒலியல் கண்ணிப் புலிகடி மாஅல்!
நும் போல் அறிவின் நுமருள் ஒருவன்
புகழ்ந்த செய்யுள் கழாஅத்தலையை
இகழ்ந்ததன் பயனே; இயல் தேர் அண்ணல்!
எவ்வி தொல் குடிப் படீஇயர், மற்று, 'இவர்
15
கை வண் பாரி மகளிர்' என்ற என்
தேற்றாப் புன்சொல் நோற்றிசின்; பெரும!
விடுத்தனென்; வெலீஇயர், நின் வேலே! அடுக்கத்து,
அரும்பு அற மலர்ந்த கருங் கால் வேங்கை
மாத் தகட்டு ஒள் வீ தாய துறுகல்
20
இரும் புலி வரிப் புறம் கடுக்கும்
பெருங் கல் வைப்பின் நாடு கிழவோயே!

திணையும் துறையும் அவை.
இருங்கோவேள் பாரிமகளிரைக் கொள்ளானாக, கபிலர் பாடியது.

203
'கழிந்தது பொழிந்து' என வான் கண்மாறினும்,
'தொல்லது விளைந்து' என நிலம் வளம் கரப்பினும்,
எல்லா உயிர்க்கும் இல்லால், வாழ்க்கை;
'இன்னும் தம்' என எம்மனோர் இரப்பின்,
5
'முன்னும் கொண்டிர்' என, நும்மனோர் மறுத்தல்
இன்னாது அம்ம; இயல் தேர் அண்ணல்!
இல்லது நிரப்பல் ஆற்றாதோரினும்,
உள்ளி வருநர் நசை இழப்போரே;
அனையையும் அல்லை, நீயே; ஒன்னார்
10
ஆர் எயில் அவர்கட்டாகவும், 'நுமது' எனப்
பாண் கடன் இறுக்கும் வள்ளியோய்!
பூண் கடன், எந்தை! நீ இரவலர்ப் புரவே.

திணையும் துறையும் அவை.
சேரமான் பாமுளூர் எறிந்த நெய்தலங்கானல் இளஞ் சேட்சென்னியை ஊன் பொதி பசுங்குடையார் பாடியது.

204
'ஈ' என இரத்தல் இழிந்தன்று; அதன் எதிர்,
'ஈயேன்' என்றல் அதனினும் இழிந்தன்று;
'கொள்' எனக் கொடுத்தல் உயர்ந்தன்று; அதன் எதிர்,
'கொள்ளேன்' என்றல் அதனினும் உயர்ந்தன்று;
5
தெண் நீர்ப் பரப்பின் இமிழ் திரைப் பெருங் கடல்
உண்ணார் ஆகுப, நீர் வேட்டோரே;
ஆவும் மாவும் சென்று உண, கலங்கி,
சேற்றொடு பட்ட சிறுமைத்துஆயினும்,
உண்நீர் மருங்கின் அதர் பல ஆகும்;
10
புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை,
உள்ளிச் சென்றோர்ப் பழியலர்; அதனால்
புலவேன் வாழியர், ஓரி! விசும்பில்
கருவி வானம் போல
வரையாது சுரக்கும் வள்ளியோய்! நின்னே.

திணையும் துறையும் அவை.
வல்வில் ஓரியைக் கழைதின்யானையார் பாடியது.

205
முற்றிய திருவின் மூவர் ஆயினும்,
பெட்பின்று ஈதல் யாம் வேண்டலமே;
விறல் சினம் தணிந்த விரை பரிப் புரவி
உறுவர் செல் சார்வு ஆகி, செறுவர்
5
தாள் உளம் தபுத்த வாள் மிகு தானை,
வெள் வீ வேலிக் கோடைப் பொருந!
சிறியவும் பெரியவும் புழை கெட விலங்கிய
மான் கணம் தொலைச்சிய கடு விசைக் கத நாய்,
நோன் சிலை, வேட்டுவ! நோய் இலையாகுக!
10
ஆர் கலி யாணர்த் தரீஇய, கால் வீழ்த்து,
கடல்வயின் குழீஇய அண்ணல் அம் கொண்மூ
நீர் இன்று பெயராவாங்கு, தேரொடு
ஒளிறு மருப்பு ஏந்திய செம்மல்
களிறு இன்று பெயரல, பரிசிலர் கடும்பே.

திணையும் துறையும் அவை.
கடிய நெடுவேட்டுவன் பரிசில் நீட்டித்தானைப் பெருந்தலைச் சாத்தனார் பாடியது.

206
வாயிலோயே! வாயிலோயே!
வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வித்தி, தாம்
உள்ளியது முடிக்கும் உரனுடை உள்ளத்து
வரிசைக்கு வருந்தும் இப் பரிசில் வாழ்க்கைப்
5
பரிசிலர்க்கு அடையா வாயிலோயே!
கடுமான் தோன்றல் நெடுமான் அஞ்சி
தன் அறியலன்கொல்? என் அறியலன்கொல்?
அறிவும் புகழும் உடையோர் மாய்ந்தென,
வறுந் தலை உலகமும் அன்றே; அதனால்,
10
காவினெம் கலனே; சுருக்கினெம் கலப்பை;
மரம் கொல் தச்சன் கை வல் சிறாஅர்
மழுவுடைக் காட்டகத்து அற்றே
எத் திசைச் செலினும், அத் திசைச் சோறே.

திணையும் துறையும் அவை.
அதியமான் நெடுமான் அஞ்சி பரிசில் நீட்டித்தானை ஒளவையார் பாடியது.

207
எழு இனி, நெஞ்சம்! செல்கம்; யாரோ,
பருகு அன்ன வேட்கை இல்வழி,
அருகில் கண்டும் அறியார் போல,
அகம் நக வாரா முகன் அழி பரிசில்
5
தாள் இலாளர் வேளார் அல்லர்?
'வருக' என வேண்டும் வரிசையோர்க்கே
பெரிதே உலகம்; பேணுநர் பலரே;
மீளி முன்பின் ஆளி போல,
உள்ளம் உள் அவிந்து அடங்காது, வெள்ளென
10
நோவாதோன்வயின் திரங்கி,
வாயா வன் கனிக்கு உலமருவோரே.

திணையும் துறையும் அவை.
வெளிமான் துஞ்சிய பின், அவன் தம்பி இள வெளிமானை, 'பரிசில் கொடு' என, அவன் சிறிது கொடுப்பக் கொள்ளாது, பெருஞ்சித்திரனார் பாடியது.

208
'குன்றும் மலையும் பல பின் ஒழிய,
வந்தனென், பரிசில் கொண்டனென் செலற்கு' என
நின்ற என் நயந்து அருளி, 'ஈது கொண்டு,
ஈங்கனம் செல்க, தான்' என, என்னை
5
யாங்கு அறிந்தனனோ, தாங்கு அருங் காவலன்?
காணாது ஈத்த இப் பொருட்கு யான் ஓர்
வாணிகப் பரிசிலன் அல்லென்; பேணி,
தினை அனைத்துஆயினும், இனிது அவர்
துணை அளவு அறிந்து, நல்கினர் விடினே.

திணையும் துறையும் அவை.
அதியமான் நெடுமான் அஞ்சியுழைச் சென்ற பெருஞ்சித்திரனாரைக் காணாது,'இது கொண்டு செல்க!' என்று அவன் பரிசில் கொடுப்பக் கொள்ளாது, அவர் சொல்லியது.

209
பொய்கை நாரை போர்வில் சேக்கும்
நெய்தல் அம் கழனி, நெல் அரி தொழுவர்
கூம்பு விடு மெண் பிணி அவிழ்ந்த ஆம்பல்
அகல் அடை அரியல் மாந்தி, தெண் கடல்
5
படு திரை இன் சீர்ப் பாணி தூங்கும்
மென் புல வைப்பின் நல் நாட்டுப் பொருந!
பல் கனி நசைஇ, அல்கு விசும்பு உகந்து,
பெரு மலை விடரகம் சிலம்ப முன்னி,
பழனுடைப் பெரு மரம் தீர்ந்தென, கையற்று,
10
பெறாது பெயரும் புள்ளினம் போல, நின்
நசை தர வந்து, நின் இசை நுவல் பரிசிலென்
வறுவியேன் பெயர்கோ? வாள் மேம்படுந!
ஈயாய் ஆயினும், இரங்குவென்அல்லேன்;
நோய் இலை ஆகுமதி; பெரும! நம்முள்
15
குறு நணி காண்குவதாக நாளும்,
நறும் பல் ஒலிவரும் கதுப்பின், தே மொழி,
தெரிஇழை மகளிர் பாணி பார்க்கும்
பெரு வரை அன்ன மார்பின்,
செரு வெஞ் சேஎய்! நின் மகிழ் இருக்கையே!

திணை அது; துறை பரிசில் கடா நிலை.
மூவன் பரிசில் நீட்டித்தானைப் பெருந்தலைச் சாத்தனார் பாடியது.

210
உள்ளாது இருத்தலோ அரிதே; அதனால்,
மன்பதை காக்கும் நின் புரைமை நோக்காது,
அன்பு கண் மாறிய அறன் இல் காட்சியொடு,
நும்மனோரும் மற்று இனையர் ஆயின்,
எம்மனோர் இவண் பிறவலர் மாதோ;
5
செயிர் தீர் கொள்கை எம் வெங் காதலி
உயிர் சிறிது உடையள்ஆயின், எம்வயின்
'அறன் இல் கூற்றம் திறன் இன்று துணியப்
பிறன் ஆயினன்கொல்? இறீஇயர், என் உயிர்!' என
10
நுவல்வுறு சிறுமையள் பல புலந்து உறையும்
இடுக்கண் மனையோள் தீரிய, இந் நிலை
விடுத்தேன்; வாழியர், குருசில்! உதுக் காண்:
அவல நெஞ்சமொடு செல்வல் நிற் கறுத்தோர்
அருங் கடி முனை அரண் போலப்
15
பெருங் கையற்ற என் புலம்பு முந்துறுத்தே.

திணையும் துறையும் அவை.
சேரமான் குடக்கோச் சேரல் இரும்பொறை பரிசில் நீட்டித்தானைப் பெருங் குன்றூர் கிழார் பாடியது.

211
அஞ்சுவரு மரபின் வெஞ் சினப் புயலேறு
அணங்குடை அரவின் அருந் தலை துமிய,
நின்று காண்பன்ன நீள் மலை மிளிர,
குன்று தூவ எறியும் அரவம் போல,
5
முரசு எழுந்து இரங்கும் தானையொடு தலைச்சென்று,
அரைசு படக் கடக்கும் உரைசால் தோன்றல்! நின்
உள்ளி வந்த ஓங்கு நிலைப் பரிசிலென்,
'வள்ளியை ஆதலின் வணங்குவன் இவன்' என,
கொள்ளா மாந்தர் கொடுமை கூற, நின்
10
உள்ளியது முடித்தோய் மன்ற; முன் நாள்
கை உள்ளது போல் காட்டி, வழி நாள்
பொய்யொடு நின்ற புறநிலை வருத்தம்
நாணாய் ஆயினும், நாணக் கூறி, என்
நுணங்கு செந் நா அணங்க ஏத்தி,
15
பாடப் பாடப் பாடுபுகழ் கொண்ட நின்
ஆடு கொள் வியன் மார்பு தொழுதனென் பழிச்சிச்
செல்வல் அத்தை, யானே வைகலும்,
வல்சி இன்மையின் வயின்வயின் மாறி,
இல் எலி மடிந்த தொல் சுவர் வரைப்பின்,
20
பாஅல் இன்மையின் பல் பாடு சுவைத்து,
முலைக்கோள் மறந்த புதல்வனொடு,
மனைத் தொலைந்திருந்த என் வாள்நுதல் படர்ந்தே.

திணையும் துறையும் அவை.
அவனை அவர் பாடியது.

212
'நும் கோ யார்?' என வினவின், எம் கோக்
களமர்க்கு அரித்த விளையல் வெங் கள்
யாமைப் புழுக்கின் காமம் வீட ஆரா,
ஆரல் கொழுஞ் சூடு அம் கவுள் அடாஅ,
5
வைகு தொழில் மடியும் மடியா விழவின்
யாணர் நல் நாட்டுள்ளும், பாணர்
பைதல் சுற்றத்துப் பசிப் பகை ஆகி,
கோழியோனே, கோப்பெருஞ்சோழன்
பொத்து இல் நண்பின் பொத்தியொடு கெழீஇ,
10
வாய் ஆர் பெரு நகை வைகலும் நக்கே.

திணை அது; துறை இயன்மொழி.
கோப்பெருஞ்சோழனைப் பிசிராந்தையார் பாடியது.

215
கவைக் கதிர் வரகின் அவைப்புறு வாக்கல்
தாது எரு மறுகின் போதொடு பொதுளிய
வேளை வெண் பூ வெண் தயிர்க் கொளீஇ,
ஆய்மகள் அட்ட அம் புளி மிதவை
5
அவரை கொய்யுநர் ஆர மாந்தும்
தென்னம் பொருப்பன் நல் நாட்டுள்ளும்
பிசிரோன் என்ப, என் உயிர் ஓம்புநனே;
செல்வக் காலை நிற்பினும்,
அல்லற் காலை நில்லலன்மன்னே.

திணை பாடாண் திணை; துறை இயன்மொழி.
கோப்பெருஞ்சோழன், 'பிசிராந்தையார் வாரார்' என்ற சான்றோர்க்கு, 'அவர் வருவார்' என்று சொல்லியது.

216
'கேட்டல் மாத்திரை அல்லது, யாவதும்
காண்டல் இல்லாது யாண்டு பல கழிய,
வழு இன்று பழகிய கிழமையர் ஆயினும்,
அரிதே, தோன்றல்! அதற்பட ஒழுகல்' என்று,
5
ஐயம் கொள்ளன்மின், ஆர் அறிவாளீர்!
இகழ்விலன்; இனியன்; யாத்த நண்பினன்;
புகழ் கெட வரூஉம் பொய் வேண்டலனே;
தன் பெயர் கிளக்கும்காலை, 'என் பெயர்
பேதைச் சோழன்' என்னும், சிறந்த
10
காதற் கிழமையும் உடையன்; அதன்தலை,
இன்னது ஓர் காலை நில்லலன்;
இன்னே வருகுவன்; ஒழிக்க, அவற்கு இடமே!

திணையும் துறையும் அவை.
அவன் வடக்கிருந்தான், 'பிசிராந்தையார்க்கு இடன் ஒழிக்க!' என்றது.

266
பயம் கெழு மா மழை பெய்யாது மாறி,
கயம் களி முளியும் கோடைஆயினும்,
புழல்கால் ஆம்பல் அகல் அடை நீழல்,
கதிர்க் கோட்டு நந்தின் சுரி முக ஏற்றை
5
நாகு இள வளையொடு பகல் மணம் புகூஉம்
நீர் திகழ் கழனி நாடு கெழு பெரு விறல்!
வான் தோய் நீள் குடை, வய மான் சென்னி!
சான்றோர் இருந்த அவையத்து உற்றோன்,
'ஆசு ஆகு' என்னும் பூசல் போல,
10
வல்லே களைமதிஅத்தை உள்ளிய
விருந்து கண்டு ஒளிக்கும் திருந்தா வாழ்க்கை,
பொறிப் புணர் உடம்பில் தோன்றி என்
அறிவு கெட நின்ற நல்கூர்மையே!

திணை பாடாண் திணை; துறை பரிசில் கடாநிலை.
சோழன் உருவப் பல் தேர் இளஞ் சேட்சென்னியைப் பெருங்குன்றூர் கிழார் பாடியது.

367
நாகத்து அன்ன பாகு ஆர் மண்டிலம்
தமவேஆயினும் தம்மொடு செல்லா;
வேற்றோர்ஆயினும் நோற்றோர்க்கு ஒழியும்;
ஏற்ற பார்ப்பார்க்கு ஈர்ங் கை நிறையப்
5
பூவும் பொன்னும் புனல் படச் சொரிந்து,
பாசிழை மகளிர் பொலங் கலத்து ஏந்திய
நார் அரி தேறல் மாந்தி, மகிழ் சிறந்து,
இரவலர்க்கு அருங் கலம் அருகாது வீசி,
வாழ்தல் வேண்டும், இவண் வரைந்த வைகல்;
10
வாழச் செய்த நல்வினை அல்லது
ஆழுங் காலைப் புணை பிறிது இல்லை;
ஒன்று புரிந்து அடங்கிய இருபிறப்பாளர்
முத்தீப் புரையக் காண்தக இருந்த
கொற்ற வெண் குடைக் கொடித் தேர் வேந்திர்!
15
யான் அறி அளவையோ இதுவே: வானத்து
வயங்கித் தோன்றும் மீனினும், இம்மெனப்
பரந்து இயங்கு மா மழை உறையினும்,
உயர்ந்து மேந் தோன்றிப் பொலிக, நும் நாளே!

திணை பாடாண் திணை; துறை வாழ்த்தியல்.
சேரமான் மாரிவெண்கோவும், பாண்டியன் கானப்பேர் தந்த உக்கிரப் பெருவழுதியும், சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியும், ஒருங்கு இருந்தாரை ஒளவையார் பாடியது.

374
கானல் மேய்ந்து வியன் புலத்து அல்கும்
புல்வாய் இரலை நெற்றி அன்ன,
பொலம் இலங்கு சென்னிய பாறு மயிர் அவியத்
தண் பனி உறைக்கும் புலரா ஞாங்கர்,
5
மன்றப் பலவின் மால் வரை பொருந்தி, என்
தெண் கண் மாக் கிணை தெளிர்ப்ப ஒற்றி,
இருங் கலை ஓர்ப்ப இசைஇ, காண்வர,
கருங் கோல் குறிஞ்சி அடுக்கம் பாட,
புலிப் பல் தாலிப் புன் தலைச் சிறாஅர்
10
மான் கண் மகளிர், கான் தேர் அகன்று உவா
சிலைப்பாற் பட்ட முளவுமான் கொழுங் குறை,
விடர் முகை அடுக்கத்துச் சினை முதிர் சாந்தம்,
புகர் முக வேழத்து மருப்பொடு, மூன்றும்,
இருங் கேழ் வயப் புலி வரி அதள் குவைஇ,
15
விருந்து இறை நல்கும் நாடன், எம் கோன்,
கழல் தொடி ஆஅய் அண்டிரன் போல,
வண்மையும் உடையையோ? ஞாயிறு!
கொன் விளங்குதியால் விசும்பினானே!

திணை பாடாண் திணை; துறை பூவை நிலை.
ஆய் அண்டிரனை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடியது.

375
அலங்கு கதிர் சுமந்த கலங்கற் சூழி,
நிலைதளர்வு தொலைந்த ஒல்கு நிலைப் பல் காற்
பொதியில் ஒரு சிறை பள்ளி ஆக,
முழாஅரைப் போந்தை அர வாய் மா மடல்
5
நாரும் போழும் கிணையொடு சுருக்கி,
ஏரின் வாழ்நர் குடிமுறை புகாஅ,
'ஊழ் இரந்து உண்ணும் உயவல் வாழ்வைப்
புரவு எதிர்ந்து கொள்ளும் சான்றோர் யார்?' எனப்
பிரசம் தூங்கும் அறாஅ யாணர்,
10
வரை அணி படப்பை, நல் நாட்டுப் பொருந!
பொய்யா ஈகைக் கழல் தொடி ஆஅய்!
யாவரும் இன்மையின் கிணைப்ப, தாவது,
பெரு மழை கடல் பரந்தாஅங்கு, யானும்
ஒரு நின் உள்ளி வந்தனென்; அதனால்
15
புலவர் புக்கில் ஆகி, நிலவரை
நிலீஇயர் அத்தை, நீயே! ஒன்றே
நின் இன்று வறுவிது ஆகிய உலகத்து,
நிலவன்மாரோ, புரவலர்! துன்னி,
பெரிய ஓதினும் சிறிய உணராப்
20
பீடு இன்று பெருகிய திருவின்,
பாடு இல், மன்னரைப் பாடன்மார், எமரே!

திணை பாடாண் திணை; துறை வாழ்த்தியல்.
அவனை அவர் பாடியது.

376
விசும்பு நீத்தம் இறந்த ஞாயிற்றுப்
பசுங் கதிர் மழுகிய சிவந்து வாங்கு அந்தி
சிறு நனி பிறந்த பின்றை, செறி பிணிச்
சிதாஅர் வள்பின் என் தெடாரி தழீஇ,
5
பாணர் ஆரும்அளவை, யான் தன்
யாணர் நல் மனைக் கூட்டுமுதல் நின்றனென்;
இமைத்தோர் விழித்த மாத்திரை, ஞெரேரென,
குணக்கு எழு திங்கள் கனை இருள் அகற்ற,
10
தொன்று படு துளையொடு பரு இழை போகி,
நைந்து கரை பறைந்த என் உடையும், நோக்கி,
'விருந்தினன் அளியன், இவன்' என, பெருந்தகை
நின்ற முரற்கை நீக்கி, நன்றும்
அரவு வெகுண்டன்ன தேறலொடு, சூடு தருபு,
15
நிரயத்து அன்ன என் வறன் களைந்து, அன்றே,
இரவினானே, ஈத்தோன் எந்தை;
அன்றை ஞான்றினொடு இன்றின் ஊங்கும்,
இரப்பச் சிந்தியேன், நிரப்பு அடு புணையின்;
உளத்தின் அளக்கும் மிளிர்ந்த தகையேன்;
20
நிறைக் குளப் புதவின் மகிழ்ந்தனென் ஆகி,
ஒரு நாள், இரவலர் வரையா வள்ளியோர் கடைத்தலை,
ஞாங்கர் நெடுமொழி பயிற்றி,
தோன்றல் செல்லாது, என் சிறு கிணைக் குரலே.

திணை அது; துறை இயன்மொழி.
ஒய்மான் நல்லியாதனைப் புறத்திணை நன்னாகனார் பாடியது.

377
பனி பழுநிய பல் யாமத்துப்
பாறு தலை மயிர் நனைய,
இனிது துஞ்சும் திரு நகர் வரைப்பின்,
இனையல் அகற்ற, என் கிணை தொடாக் குறுகி,
5
'அவி உணவினோர் புறங்காப்ப,
அற நெஞ்சத்தோன் வாழ, நாள்' என்று,
அதற் கொண்டு வரல் ஏத்தி,
'''கரவு இல்லாக் கவி வண் கையான்,
வாழ்க!'' எனப் பெயர் பெற்றோர்
10
பிறர்க்கு உவமம் தான் அல்லது,
தனக்கு உவமம் பிறர் இல்' என,
அது நினைந்து, மதி மழுகி,
ஆங்கு நின்ற எற் காணூஉச்
'சேய் நாட்டுச் செல் கிணைஞனை!
15
நீ புரவலை, எமக்கு' என்ன,
மலை பயந்த மணியும், கடறு பயந்த பொன்னும்,
கடல் பயந்த கதிர் முத்தமும்,
வேறு பட்ட உடையும், சேறுபட்ட தசும்பும்,
கனவில் கண்டாங்கு, வருந்தாது நிற்ப,
20
நனவின் நல்கியோன், நசைசால் தோன்றல்;
நாடு என மொழிவோர், 'அவன் நாடு' என மொழிவோர்;
வேந்து என மொழிவோர், 'அவன் வேந்து' என மொழிவோர்;
.........................பொற் கோட்டு யானையர்,
கவர் பரிக் கச்சை நல் மான்,
25
வடி மணி, வாங்கு உருள,
.....................,..........நல் தேர்க் குழுவினர்,
கதழ் இசை வன்கணினர்,
வாளின் வாழ்நர், ஆர்வமொடு ஈண்டி,
கடல் ஒலி கொண்ட தானை
30
அடல் வெங் குருசில்! மன்னிய நெடிதே!

திணை அது; துறை வாழ்த்தியல்.
சோழன் இராசசூயம் வேட்ட பெரு நற்கிள்ளியை உலோச்சனார் பாடியது.

378
தென் பரதவர் மிடல் சாய,
வட வடுகர் வாள் ஓட்டிய,
தொடை அமை கண்ணி, திருந்து வேல் தடக் கை,
கடு மா கடைஇய விடு பரி வடிம்பின்,
5
நல் தார், கள்ளின், சோழன் கோயில்,
புதுப் பிறை அன்ன சுதை சேய் மாடத்து,
பனிக் கயத்து அன்ன நீள் நகர் நின்று, என்
அரிக் கூடு மாக் கிணை இரிய ஒற்றி,
எஞ்சா மரபின் வஞ்சி பாட,
10
எமக்கு என வகுத்த அல்ல, மிகப் பல,
மேம்படு சிறப்பின் அருங் கல வெறுக்கை
தாங்காது பொழிதந்தோனே; அது கண்டு,
இலம்பாடு உழந்த என் இரும் பேர் ஒக்கல்,
விரல் செறி மரபின செவித் தொடக்குநரும்,
15
செவித் தொடர் மரபின விரல் செறிக்குநரும்,
அரைக்கு அமை மரபின மிடற்று யாக்குநரும்,
மிடற்று அமை மரபின அரைக்கு யாக்குநரும்,
கடுந் தெறல் இராமனுடன் புணர் சீதையை
வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை,
20
நிலம் சேர் மதர் அணி கண்ட குரங்கின்
செம் முகப் பெருங் கிளை இழைப் பொலிந்தாஅங்கு,
அறாஅ அரு நகை இனிது பெற்றிகுமே
இருங் கிளைத் தலைமை எய்தி,
அரும்படர் எவ்வம் உழந்ததன்தலையே.

திணை அது; துறை இயன்மொழி.
சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னியை ஊன்பொதி பசுங் குடையார் பாடியது.

379
யானே பெறுக, அவன் தாள் நிழல் வாழ்க்கை;
அவனே பெறுக, என் நா இசை நுவறல்;
நெல் அரி தொழுவர் கூர் வாள் மழுங்கின்,
பின்னை மறத்தோடு அரிய, கல் செத்து,
5
அள்ளல் யாமைக் கூன் புறத்து உரிஞ்சும்
நெல் அமல் புரவின் இலங்கை கிழவோன்
வில்லியாதன் கிணையேம்; பெரும!
'குறுந் தாள் ஏற்றைக் கொழுங் கண் அவ் விளர்
நறு நெய் உருக்கி, நாட் சோறு ஈயா,
10
வல்லன், எந்தை, பசி தீர்த்தல்' என,
கொன் வரல் வாழ்க்கை நின் கிணைவன் கூற,
கேட்டதற்கொண்டும் வேட்கை தண்டாது,
விண் தோய் தலைய குன்றம் பின்பட,
......................................ர வந்தனென், யானே
15
தாய் இல் தூவாக் குழவி போல, ஆங்கு அத்
திருவுடைத் திரு மனை, ஐது தோன்று கமழ் புகை
வரு மழை மங்குலின் மறுகுடன் மறைக்கும்
குறும்பு அடு குண்டு அகழ் நீள் மதில் ஊரே.

திணை அது; துறை பரிசில் துறை.
ஓய்மான் வில்லியாதனைப் புறத்திணை நன்னாகனார் பாடியது.

380
தென் பவ்வத்து முத்துப் பூண்டு,
வட குன்றத்துச் சாந்தம் உரீஇ,
........................................ங் கடல் தானை,
இன் இசைய விறல் வென்றி,
5
தென்னவர் வய மறவன்;
மிசைப் பெய்த நீர் கடல் பரந்து முத்து ஆகுந்து,
நாறு இதழ்க் குளவியொடு கூதளம் குழைய,
வேறுபெ.....................................................................த்துந்து,
தீம் சுளைப் பலவின் நாஞ்சில் பொருநன்;
10
துப்பு எதிர்ந்தோர்க்கே உள்ளாச் சேய்மையன்;
நட்பு எதிர்ந்தோர்க்கே அங்கை நண்மையன்;
வல் வேல் கந்தன் நல் இசை அல்ல,
.....................த்தார்ப் பிள்ளை அம் சிறாஅர்;
அன்னன் ஆகன்மாறே, இந் நிலம்
15
இலம்படு காலை ஆயினும்,
புலம்பல் போயின்று, பூத்த என் கடும்பே.

திணை அது; துறை இயன்மொழி.
நாஞ்சில் வள்ளுவனைக் கருவூர்க் கதப்பிள்ளை பாடியது.

381
ஊனும் ஊணும் முனையின், இனிது என,
பாலின் பெய்தவும், பாகின் கொண்டவும்,
அளவுபு கலந்து, மெல்லிது பருகி,
விருந்துறுத்து, ஆற்றி இருந்தனெமாக,
5
'சென்மோ, பெரும! எம் விழவுடை நாட்டு?' என,
யாம் தன் அறியுநமாக, தான் பெரிது
அன்பு உடைமையின், எம் பிரிவு அஞ்சி,
துணரியது கொளாஅவாகி, பழம் ஊழ்த்து,
பயம் பகர்வு அறியா மயங்கு அரில் முது பாழ்,
10
பெயல் பெய்தன்ன, செல்வத்து ஆங்கண்,
ஈயா மன்னர் புறங்கடைத் தோன்றி,
சிதாஅர் வள்பின் சிதர்ப் புறத் தடாரி
ஊன் சுகிர் வலந்த தெண் கண் ஒற்றி,
விரல் விசை தவிர்க்கும் அரலை இல் பாணியின்,
15
இலம்பாடு அகற்றல் யாவது? புலம்பொடு
தெருமரல் உயக்கமும் தீர்க்குவெம்; அதனால்,
இரு நிலம் கூலம் பாற, கோடை
வரு மழை முழக்கு இசைக்கு ஓடிய பின்றை,
சேயைஆயினும், இவணைஆயினும்,
20
இதற்கொண்டு அறிநை; வாழியோ, கிணைவ!
சிறு நனி, ஒரு வழிப் படர்க என்றோனே எந்தை,
ஒலி வெள் அருவி வேங்கட நாடன்,
உறுவரும் சிறுவரும் ஊழ் மாறு உய்க்கும்
அறத்துறை அம்பியின் மான, மறப்பு இன்று,
25
இருங் கோள் ஈராப் பூட்கை,
கரும்பனூரன் காதல் மகனே.

திணையும் துறையும் அவை.
கரும்பனூர் கிழானை நன்னாகனார் பாடியது.

382
கடல்படை அடல் கொண்டி,
மண்டுற்ற மலிர் நோன் தாள்,
தண் சோழ நாட்டுப் பொருநன்,
அலங்கு உளை அணி இவுளி
5
நலங்கிள்ளி நசைப் பொருநரேம்;
பிறர்ப் பாடிப் பெறல் வேண்டேம்;
அவற் பாடுதும், 'அவன் தாள் வாழிய!' என;
நெய் குய்ய ஊன் நவின்ற
பல் சோற்றான், இன் சுவைய
10
நல்குரவின் பசித் துன்பின் நின்
முன்னநாள் விட்ட மூது அறி சிறாஅரும்,
யானும், ஏழ் மணி, அம் கேழ், அணி உத்தி,
கண் கேள்வி, கவை நாவின்,
நிறன் உற்ற, அராஅப் போலும்
15
வறன் ஒரீஇ வழங்கு வாய்ப்ப,
விடுமதி அத்தை, கடு மான் தோன்றல்!
நினதே, முந்நீர் உடுத்த இவ் வியன் உலகு, அறிய;
எனதே, கிடைக் காழ் அன்ன தெண் கண் மாக் கிணை
கண் அகத்து யாத்த நுண் அரிச் சிறு கோல்
20
ஏறிதொறும் நுடங்கியாங்கு, நின் பகைஞர்
கேட்டொறும் நடுங்க, ஏத்துவென்,
வென்ற தேர், பிறர் வேத்தவையானே.

திணை அது; துறை கடைநிலை.
சோழன் நலங்கிள்ளியைக் கோவூர் கிழார் பாடியது.

383
ஒண்பொறிச் சேவல் எடுப்ப, ஏற்றெழுந்து,
தண் பனி உறைக்கும் புலரா ஞாங்கர்,
நுண் கோல் சிறு கிணை சிலம்ப ஒற்றி,
நெடுங் கடை நின்று, பகடு பல வாழ்த்தி,
5
தன் புகழ் ஏத்தினெனாக, ஊன் புலந்து,
அருங் கடி வியல் நகர்க் குறுகல் வேண்டி,
கூம்பு விடு மென் பிணி அவிழ்த்த ஆம்பல்
தேம் பாய் உள்ள தம் கமழ் மடர் உள,
பாம்பு உரி அன்ன வடிவின, காம்பின்
10
கழை படு சொலியின் இழை அணி வாரா,
ஒண் பூங் கலிங்கம் உடீஇ, நுண் பூண்
வசிந்து வாங்கு நுசுப்பின், அவ் வாங்கு உந்தி,
கற்புடை மடந்தை தன் புறம் புல்ல,
எற் பெயர்ந்த நோக்கி.....................................
15
.................................................கல் கொண்டு,
அழித்துப் பிறந்தனெனாகி, அவ் வழி,
பிறர், பாடு புகழ் பாடிப் படர்பு அறியேனே;
குறு முலைக்கு அலமரும் பால் ஆர் வெண் மறி,
நரை முக ஊகமொடு, உகளும், சென................
20
.......................கன்று பல கெழீஇய
கான் கெழு நாடன், கடுந் தேர் அவியன், என
ஒருவனை உடையேன்மன்னே, யானே;
அறான்; எவன் பரிகோ, வெள்ளியது நிலையே?

திணையும் துறையும் அவை.
...........................மாறோக்கத்து நப்பசலையார் (அவியனைப்) பாடியது.

384
மென்பாலான் உடன் அணைஇ,
வஞ்சிக் கோட்டு உறங்கு நாரை
அறைக் கரும்பின் பூ அருந்தும்;
வன்பாலான் கருங் கால் வரகின்
5
......................................................................................
அம் கண் குறு முயல வெருவ, அயல
கருங் கோட்டு இருப்பைப் பூ உறைக்குந்து;
விழவு இன்றாயினும், உழவர் மண்டை
இருங் கெடிற்று மிசையொடு பூங் கள் வைகுந்து;
10
................................................கிணையேம், பெரும!
நெல் என்னா, பொன் என்னா,
கனற்றக் கொண்ட நறவு என்னா,
.....................மனை என்னா, அவை பலவும்
யான் தண்டவும், தான் தண்டான்,
15
நிணம் பெருத்த கொழுஞ் சோற்றிடை,
மண் நாணப் புகழ் வேட்டு,
நீர் நாண நெய் வழங்கி,
புரந்தோன்; எந்தை; யாமலந்தொலை.....
அன்னோனை உடையேம் என்ப;....... வறட்கு
20
யாண்டு நிற்க வெள்ளி, மாண்ட
உண்ட நன் கலம் பெய்து நுடக்கவும்,
தின்ற நண் பல் ஊன் தோண்டவும்,
வந்த வைகல் அல்லது,
சென்ற எல்லைச் செலவு அறியேனே.

திணையும் துறையும் அவை.
கரும்பனூர் கிழானைப் புறத்திணை நன்னாகனார் பாடியது.

385
வெள்ளி தோன்ற, புள்ளுக் குரல் இயம்ப,
புலரி விடியல் பகடு பல வாழ்த்தி,
தன் கடைத் தோன்றினும் இலனே; பிறன் கடை,
அகன்கண் தடாரிப் பாடு கேட்டருளி,
5
வறன் யான் நீங்கல் வேண்டி, என் அரை
நீல் நிறச் சிதாஅர் களைந்து,
வெளியது உடீஇ, என் பசி களைந்தோனே;
காவிரி அணையும் தாழ் நீர்ப் படப்பை
நெல் விளை கழனி அம்பர் கிழவோன்,
10
நல் அருவந்தை, வாழியர்! புல்லிய
வேங்கட விறல் வரைப் பட்ட
ஓங்கல் வானத்து உறையினும் பலவே!

திணை அது; துறை வாழ்த்தியல்.
அம்பர் கிழான் அருவந்தையைக் கல்லாடனார் பாடியது.

386
நெடு நீர நிறை கயத்துப்
படு மாரித் துளி போல,
நெய் துள்ளிய வறை முகக்கவும்,
சூடு கிழித்து வாடுஊன் மிசையவும்,
5
ஊன் கொண்ட வெண் மண்டை
ஆன் பயத்தான் முற்று அழிப்பவும்,
வெய்து உண்ட வியர்ப்பு அல்லது,
செய் தொழிலான் வியர்ப்பு அறியாமை
ஈத்தோன், எந்தை, இசை தனது ஆக;
10
வயலே, நெல்லின் வேலி நீடிய கரும்பின்
பாத்திப் பன் மலர்ப் பூத் ததும்பின;
புறவே, புல் அருந்து பல் ஆயத்தான்,
வில் இருந்த வெங் குறும்பின்று;
கடலே, கால் தந்த கலன் எண்ணுவோர்
15
கானல் புன்னைச் சினை நிலைக்குந்து;
கழியே, சிறு வெள் உப்பின் கொள்ளை சாற்றி,
பெருங் கல் நல் நாட்டு உமண் ஒலிக்குந்து;
அன்ன நல் நாட்டுப் பொருநம், யாமே;
பொராஅப் பொருநரேம்;
20
குண திசை நின்று குடமுதல் செலினும்,
குட திசை நின்று குணமுதல் செலினும்,
வட திசை நின்று தென்வயின் செலினும்,
தென் திசை நின்று குறுகாது நீடினும்,
யாண்டும் நிற்க, வெள்ளி; யாம்
25
வேண்டியது உணர்ந்தோன் தாள் வாழியவே!

திணையும் துறையும் அவை.
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனைக் கோவூர் கிழார் பாடியது.

387
வள் உகிர வயல் ஆமை
வெள் அகடு கண்டன்ன,
வீங்கு விசிப் புதுப் போர்வைத்
தெண் கண் மாக் கிணை இயக்கி, 'என்றும்
5
மாறு கொண்டோர் மதில் இடறி,
நீறு ஆடிய நறுங் கவுள,
பூம் பொறிப் பணை எருத்தின,
வேறு வேறு பரந்து இயங்கி,
வேந்துடை மிளை அயல் பரக்கும்
10
ஏந்து கோட்டு இரும் பிணர்த் தடக் கை,
திருந்து தொழில் பல பகடு
பகைப் புல மன்னர் பணிதிறை தந்து, நின்
நகைப் புலவாணர் நல்குரவு அகற்றி,
மிகப் பொலியர், தன் சேவடி அத்தை!' என்று,
15
யான் இசைப்பின், நனி நன்று எனா,
பல பிற வாழ்த்த இருந்தோர் என்கோ?.........
மருவ இன் நகர் அகன்.................................
திருந்து கழல் சேவடி குறுகல் வேண்டி,
வென்று இரங்கும் விறல் முரசினோன்,
20
என் சிறுமையின், இழித்து நோக்கான்,
தன் பெருமையின் தகவு நோக்கி,
குன்று உறழ்ந்த களிறு என்கோ?
கொய் உளைய மா என்கோ?
மன்று நிறையும் நிரை என்கோ?
25
மனைக் களமரொடு களம் என்கோ?
ஆங்கு அவை, கனவு என மருள, வல்லே, நனவின்
நல்கியோனே, நசைசால் தோன்றல்,
ஊழி வாழி, பூழியர் பெரு மகன்!
பிணர் மருப்பு யானைச் செரு மிகு நோன் தாள்
30
செல்வக் கடுங்கோ வாழியாதன்
ஒன்னாத் தெவ்வர் உயர்குடை பணித்து, இவண்
விடுவர் மாதோ நெடிதே நி
புல் இலை வஞ்சிப் புற மதில் அலைக்கும்
கல்லென் பொருநை மணலினும், ஆங்கண்
35
பல் ஊர் சுற்றிய கழனி
எல்லாம் விளையும் நெல்லினும் பலவே.

திணையும் துறையும் அவை.
சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக்கடுங்கோ வாழியாதனைக் குண்டுகட் பாலியாதன் பாடியது.

388
வெள்ளி தென் புலத்து உறைய, விளை வயல்,
பள்ளம், வாடிய பயன் இல் காலை,
இரும் பறைக் கிணைமகன் சென்றவன், பெரும் பெயர்
................................................................................பொருந்தி,
5
தன் நிலை அறியுநனாக, அந் நிலை,
இடுக்கண் இரியல் போக, உடைய
கொடுத்தோன் எந்தை, கொடை மேந் தோன்றல்,
.......................................................................னாமருப்பாக,
வெல்லும் வாய்மொழிப் புல்லுடை வி
10
பெயர்க்கும் பண்ணற் கேட்டிரோ, மககிரென,
வினைப் பகடு ஏற்ற மேழி கிணைத் தொடா,
நாள்தொறும் பாடேன்ஆயின், ஆனா
மணி கிளர் முன்றில் தென்னவன் மருகன்,
பிணி முரசு இரங்கும் பீடு கெழு தானை
15
அண்ணல் யானை வழுதி,
கண்மாறிலியர் என் பெருங் கிளைப் புரவே!

திணை அது; துறை இயன்மொழி.
சிறுகுடி கிழான் பண்ணனை மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் பாடியது.

389
என்று ஈத்தனனே, இசைசால் நெடுந்தகை;
'நீர் நுங்கின் கண் வலிப்ப,
கான வேம்பின் காய் திரங்க,
கயம் களியும் கோடை ஆயினும்,
ஏலா வெண்பொன் போருறு காலை,
5
எம்மும் உள்ளுமோ பிள்ளைஅம் பொருநன்!'
இன்று சென்று எய்தும் வழியனும் அல்லன்;
செலினே, காணா வழியனும் அல்லன்;
புன் தலை மடப் பிடி இனைய, கன்று தந்து,
10
குன்றக நல் ஊர் மன்றத்துப் பிணிக்கும்
கல் இழி அருவி வேங்கடம் கிழவோன்,
செல்வுழி எழாஅ நல் ஏர் முதியன்!
ஆதனுங்கன் போல, நீயும்
பசித்த ஒக்கல் பழங்கண் வீட,
15
வீறுசால் நன் கலம் நல்குமதி, பெரும!
ஐது அகல் அல்குல் மகளிர்
நெய்தல் கேளன்மார், நெடுங் கடையானே!

திணையும் துறையும் அவை.
ஆதனுங்கனைக் கள்ளில் ஆத்திரையனார் பாடியது.

390
அறவை நெஞ்சத்து ஆயர், வளரும்
மறவை நெஞ்சத்து ஆயிவாளர்,
அரும்பு அலர் செருந்தி நெடுங் கால் மலர் கமழ்,
.........................................................மன்ன முற்றத்து,
5
ஆர்வலர் குறுகின் அல்லது, காவலர்
கனவினும் குறுகாக் கடியுடை வியல் நகர்,
மலைக் கணத்து அன்ன மாடம் சிலம்ப, என்
அரிக் குரல் தடாரி இரிய ஒற்றிப்
பாடி நின்ற பல் நாள் அன்றியும்,
10
சென்ற ஞான்றைச் சென்று படர் இரவின்
வந்ததற் கொண்டு, 'நெடுங் கடை நின்ற
புன் தலைப் பொருநன் அளியன்தான்' என,
தன்னுழைக் குறுகல் வேண்டி, என் அரை
முது நீர்ப் பாசி அன்ன உடை களைந்து,
15
திரு மலர் அன்ன புது மடிக் கொளீஇ,
மகிழ் தரல் மரபின் மட்டே அன்றியும்,
அமிழ்து அன மரபின் ஊன் துவை அடிசில்
வெள்ளி வெண் கலத்து ஊட்டல் அன்றி,
முன் ஊர்ப் பொதியில் சேர்ந்த மென் நடை
20
இரும் பேர் ஒக்கல் பெரும் புலம்பு அகற்ற,
அகடு நனை வேங்கை வீ கண்டன்ன
பகடு தரு செந்நெல் போரொடு நல்கி,
'கொண்டி பெறுக!' என்றோனே உண் துறை
மலை அலர் அணியும் தலை நீர் நாடன்;
25
கண்டாற் கொண்டும் அவன் திருந்து அடி வாழ்த்தி,
.............................................................................................................................
வான் அறியல என் பாடு பசி போக்கல்;
அண்ணல் யானை வேந்தர்
உண்மையோ, அறியல்? காண்பு அறியலரே!

திணையும் துறையும் அவை.
அதியமான் நெடுமான் அஞ்சியை ஒளவையார் பாடியது.

391
தண் துளி பல பொழிந்து எழிலி இசைக்கும்
விண்டு அனைய விண் தோய் பிறங்கல்
முகடுற உயர்ந்த நெல்லின் மகிழ் வரப்
பகடு தரு பெரு வளம் வாழ்த்தி, பெற்ற
5
திருந்தா மூரி பரந்து படக் கெண்டி,
அரியல் ஆர்கையர் உண்டு இனிது உவக்கும்
வேங்கட வரைப்பின் வட புலம் பசித்தென,
ஈங்கு வந்து இறுத்த என் இரும் பேர் ஒக்கல்
தீர்கை விடுக்கும் பண்பு இல முதுகுடி
10
நன...............................................வினவலின்,
'முன்னும் வந்தோன் மருங்கிலன், இன்னும்
அளியன் ஆகலின், பொருநன் இவன்' என,
நின் உணர்ந்து அறியுநர் என் உணர்ந்து கூற,
காண்கு வந்திசின், பெரும!...........................
15
..........பெருங் கழி நுழைமீன் அருந்தும்
துதைந்த தூவி அம் புதாஅம் சேக்கும்
ததைந்த புனல் நின் செழு நகர் வரைப்பின்,
நெஞ்சு அமர் காதல் நின் வெய்யோளொடு,
இன் துயி........................... ஞ்சால்
20
துளி பதன் அறிந்து பொழிய,
வேலி ஆயிரம் விளைக, நின் வயலே!

திணை அது; துறை கடைநிலை.
பொறையாற்று கிழானைக் கல்லாடனார் பாடியது.

392
மதி ஏர் வெண் குடை அதியர் கோமான்,
கொடும் பூண் எழினி, நெடுங் கடை நின்று, யான்
பசலை நிலவின் பனி படு விடியல்,
பொரு களிற்று அடி வழி அன்ன, என் கை
5
ஒரு கண் மாக் கிணை ஒற்றுபு கொடாஅ,
'உரு கெழு மன்னர் ஆர் எயில் கடந்து,
நிணம் படு குருதிப் பெரும் பாட்டு ஈரத்து
அணங்குடை மரபின் இருங் களந்தோறும்,
வெள் வாய்க் கழுதைப் புல் இனம் பூட்டி,
10
வெள்ளை வரகும் கொள்ளும் வித்தும்
வைகல் உழவ! வாழிய பெரிது!' எனச்
சென்று யான் நின்றனெனாக, அன்றே,
ஊர் உண் கேணிப் பகட்டு இலைப் பாசி
வேர் புரை சிதாஅர் நீக்கி, நேர் கரை
15
நுண் நூல் கலிங்கம் உடீஇ, 'உண்' எனத்
தேள் கடுப்பு அன்ன நாட்படு தேறல்
கோள்மீன் அன்ன பொலங் கலத்து அளைஇ,
ஊண் முறை ஈத்தல் அன்றியும், கோள் முறை
விருந்து இறை நல்கியோனே அந்தரத்து
20
அரும் பெறல் அமிழ்தம் அன்ன
கரும்பு இவண் தந்தோன் பெரும் பிறங்கடையே.

திணையும் துறையும் அவை.
அதியமான் நெடுமான் அஞ்சி மகன் பொகுட்டெழினியை ஒளவையார் பாடியது.

393
பதிமுதல் பழகாப் பழங்கண் வாழ்க்கைக்
குறு நெடுந் துணையொடு கூமை வீதலின்,
குடி முறை பாடி, ஒய்யென வருந்தி,
அடல் நசை மறந்த எம் குழிசி மலர்க்கும்
5
கடன் அறியாளர் பிற நாட்டு இன்மையின்,
'வள்ளன்மையின் எம் வரைவோர் யார்?' என,
உள்ளிய உள்ளமொடு உலை நசை துணையா,
.................... கவகம் எல்லாம் ஒருபால் பட்டென,
மலர் தார் அண்ணல் நின் நல் இசை உள்ளி,
10
ஈர்ங்கை மறந்த என் இரும் பேர் ஒக்கல்
கூர்ந்த எவ்வம் விட, கொழு நிணம் கிழிப்ப,
கோடைப் பருத்தி வீடு நிறை பெய்த
மூடைப் பண்டம் மிடை நிறைந்தன்ன,
வெண் நிண மூரி அருள, நாள் உற
15
ஈன்ற அரவின் நா உருக் கடுக்கும் என்
தொன்று படு சிதாஅர் துவர நீக்கி,
போது விரி பகன்றைப் புது மலர் அன்ன,
அகன்று மடி கலிங்கம் உடீஇ, செல்வமும்,
கேடு இன்று நல்குமதி, பெரும! மாசு இல்
20
மதி புரை மாக் கிணை தெளிர்ப்ப ஒற்றி,
ஆடுமகள் அல்குல் ஒப்ப வாடி,
'கோடை ஆயினும், கோடி...............................
காவிரி புரக்கும் நல் நாட்டுப் பொருந!
வாய் வாள் வளவன்! வாழ்க! எனப்
25
பீடு கெழு நோன் தாள் பாடுகம் பலவே.

திணையும் துறையும் அவை.
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை நல்லிறையனார் பாடியது.

394
சிலை உலாய் நிமிர்ந்த சாந்து படு மார்பின்,
ஒலி கதிர்க் கழனி வெண்குடைக் கிழவோன்,
வலி துஞ்சு தடக் கை வாய் வாள் குட்டுவன்,
வள்ளியன் ஆதல் வையகம் புகழினும்,
5
உள்ளல் ஓம்புமின், உயர் மொழிப் புலவீர்!
யானும் இருள் நிலாக் கழிந்த பகல் செய் வைகறை,
ஒரு கண் மாக் கிணை தெளிர்ப்ப ஒற்றி,
பாடு இமிழ் முரசின் இயல் தேர்த் தந்தை
வாடா வஞ்சி பாடினேனாக,
10
அகம் மலி உவகையொடு அணுகல் வேண்டி,
கொன்று சினம் தணியாப் புலவு நாறு மருப்பின்
வெஞ் சின வேழம் நல்கினன்; அஞ்சி
யான் அது பெயர்த்தனெனாக, தான் அது
சிறிது என உணர்ந்தமை நாணி, பிறிதும் ஓர்
15
பெருங் களிறு நல்கியோனே; அதற்கொண்டு,
இரும் பேர் ஒக்கல் பெரும் புலம்புறினும்,
'துன் அரும் பரிசில் தரும்' என,
என்றும் செல்லேன், அவன் குன்று கெழு நாட்டே.
திணையும் துறையும் அவை.

கடைநிலை ஆயின எல்லாம் பாடாண் திணை.
சோழிய ஏனாதி திருக்குட்டுவனைக் கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் பாடியது.

395
மென் புலத்து வயல் உழவர்
வன் புலத்துப் பகடு விட்டு,
குறு முயலின் குழைச் சூட்டொடு
நெடு வாளைப் பல் உவியல்,
5
பழஞ் சோற்றுப் புகவு அருந்தி,
புதல் தளவின் பூச் சூடி,
................................................................
...........................அரியலாருந்து;
மனைக் கோழிப் பைம் பயிரின்னே,
10
கானக் கோழிக் கவர் குரலொடு
நீர்க் கோழிக் கூய்ப் பெயர்க்குந்து;
வேய் அன்ன மென் தோளால்,
மயில் அன்ன மென் சாயலார்,
கிளி கடியின்னே,
15
அகல் அள்ளல் புள் இரீஇயுந்து;
ஆங்கு அப் பல நல்ல புலன் அணியும்
சீர் சான்ற விழுச் சிறப்பின்,
சிறு கண் யானைப் பெறல் அருந் தித்தன்
செல்லா நல் இசை உறந்தைக் குணாது,
20
நெடுங் கை வேண்மான் அருங் கடிப் பிடவூர்
அறப் பெயர்ச் சாத்தன் கிளையேம், பெரும!
முன் நாள் நண்பகல் சுரன் உழந்து வருந்தி,
கதிர் நனி செ ...................................... மாலை,
தன் கடைத் தோன்றி, என் உறவு இசைத்தலின்,
25
தீம் குரல்......... கின் அரிக் குரல் தடாரியொடு,
ஆங்கு நின்ற எற்கண்டு,
சிறிதும் நில்லான், பெரிதும் கூறான்,
அருங் கலம் வரவே அருளினன் வேண்டி,
...........யென உரைத்தன்றி நல்கி, தன் மனைப்
30
பொன் போல் மடந்தையைக் காட்டி, 'இவனை
என் போல் போற்று' என்றோனே; அதற்கொண்டு,
அவன் மறவலேனே; பிறர் உள்ளலேனே;
அகன் ஞாலம் பெரிது வெம்பினும்,
மிக வானுள் எரி தோன்றினும்,
35
குள மீனொடும் தாள் புகையினும்,
பெருஞ் செய் நெல்லின் கொக்கு உகிர் நிமிரல்
பசுங் கண் கருனைச் சூட்டொடு மாந்தி,
'விளைவு ஒன்றோ வெள்ளம் கொள்க!' என,
உள்ளதும் இல்லதும் அறியாது,
40
ஆங்கு அமைந்தன்றால்; வாழ்க, அவன் தாளே!

திணையும் துறையும் அவை.
சோழநாட்டுப் பிடவூர் கிழார் மகன் பெருஞ்சாத்தனை மதுரை நக்கீரர் பாடியது.

396
கீழ் நீரான் மீன் வழங்குந்து;
மீ நீரான், கண் அன்ன, மலர் பூக்குந்து;
கழி சுற்றிய விளை கழனி,
அரிப் பறையான் புள் ஓப்புந்து;
5
நெடுநீர் கூஉம் மணல் தண் கான்
மென் பறையான் புள் இரியுந்து;
நனைக் கள்ளின் மனைக் கோசர்
தீம் தேறல் நறவு மகிழ்ந்து,
தீம் குரவைக் கொளைத் தாங்குந்து;
10
உள் இலோர்க்கு வலி ஆகுவன்,
கேள் இலோர்க்குக் கேள் ஆகுவன்,
கழுமிய வென் வேல் வேளே,
வள நீர் வாட்டாற்று எழினியாதன்;
கிணையேம், பெரும!
15
கொழுந் தடிய சூடு என்கோ?
வள நனையின் மட்டு என்கோ?
குறு முயலின் நிணம் பெய்தந்த
நறு நெய்ய சோறு என்கோ?
திறந்து மறந்த கூட்டுமுதல்
20
முகந்து கொள்ளும் உணவு என்கோ?
அன்னவை பல பல
...................................................ருநதய
இரும் பேர் ஒக்கல் அருந்து எஞ்சிய
அளித்து உவப்ப, ஈத்தோன் எந்தை;
25
எம்மோர் ஆக்கக் கங்குண்டே;
மாரி வானத்து மீன் நாப்பண்,
விரி கதிர வெண் திங்களின்,
விளங்கித் தோன்றுக, அவன் கலங்கா நல் இசை!
யாமும் பிறரும் வாழ்த்த, நாளும்
30
நிரைசால் நன் கலன் நல்கி,
உரை செலச் சிறக்க, அவன் பாடல்சால் வளனே!

திணையும் துறையும் அவை.
வாட்டாற்று எழினியாதனை மாங்குடி கிழார் பாடியது.

397
வெள்ளியும் இரு விசும்பு ஏர்தரும்; புள்ளும்
உயர் சினைக் குடம்பைக் குரல் தோற்றினவே;
பொய்கையும் போது கண் விழித்தன; பைபயச்
சுடரும் சுருங்கின்று, ஒளியே; பாடு எழுந்து
5
இரங்குரல் முரசமொடு வலம்புரி ஆர்ப்ப,
இரவுப் புறங்கண்ட காலைத் தோன்றி,
எஃகு இருள் அகற்றும் ஏமப் பாசறை,
வைகறை அரவம் கேளியர்! 'பல கோள்
செய் தார் மார்ப! எழுமதி துயில்' என,
10
தெண் கண் மாக் கிணை தெளிர்ப்ப ஒற்றி,
நெடுங் கடைத் தோன்றியேனே; அது நயந்து,
'உள்ளி வந்த பரிசிலன் இவன்' என,
நெய்யுறப் பொரித்த குய்யுடை நெடுஞ் சூடு,
மணிக் கலன் நிறைந்த மணம் நாறு தேறல்,
15
பாம்பு உரித்தன்ன வான் பூங் கலிங்கமொடு,
மாரி அன்ன வண்மையின் சொரிந்து,
வேனில் அன்ன என் வெப்பு நீங்க,
அருங் கலம் நல்கியோனே; என்றும்,
செறுவில் பூத்த சேயிதழ்த் தாமரை,
20
அறு தொழில் அந்தணர் அறம் புரிந்து எடுத்த
தீயொடு விளங்கும் நாடன், வாய் வாள்
வலம் படு தீவின் பொலம் பூண் வளவன்;
எறி திரைப் பெருங் கடல் இறுதிக்கண் செலினும்,
தெறு கதிர்க் கனலி தென் திசைத் தோன்றினும்,
25
'என்?' என்று அஞ்சலம், யாமே; வென் வேல்
அருஞ் சமம் கடக்கும் ஆற்றல் அவன்
திருந்து கழல் நோன் தாள் தண் நிழலேமே.

திணை அது; துறை பரிசில்விடை; கடைநிலை விடையும் ஆம்.
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார் பாடியது.

398
மதி நிலாக் கரப்ப, வெள்ளி ஏர்தர,
வகை மாண் நல் இல்........................
பொறி மயிர் வாரணம் பொழுது அறிந்து இயம்ப,
பொய்கைப் பூ முகை மலர, பாணர்
5
கை வல் சீறியாழ் கடன் அறிந்து இயக்க,
இரவுப் புறம் பெற்ற ஏம வைகறை,
பரிசிலர் விசையெ
வரிசையின் இறுத்த வாய்மொழி வஞ்சன்,
நகைவர் குறுகின் அல்லது, பகைவர்க்குப்
10
புலியினம் மடிந்த கல் அளை போல,
துன்னல் போகிய பெரும் பெயர் மூதூர்,
மதியத்து அன்ன என் அரிக் குரல் தடாரி,
இரவுரை நெடுவார் அரிப்ப வட்டித்து,
உள்ளி வருநர் கொள்கலம் நிறைப்போய்!
15
'தள்ளா நிலையை ஆகியர் எமக்கு' என
என் வரவு அறீஇ,
சிறிதிற்குப் பெரிது உவந்து,
விரும்பிய முகத்தன் ஆகி, என் அரைத்
துரும்பு படு சிதாஅர் நீக்கி, தன் அரைப்
20
புகை விரிந்தன்ன பொங்கு துகில் உடீஇ,
அழல் கான்றன்ன அரும் பெறல் மண்டை,
நிழல் காண் தேறல் நிறைய வாக்கி,
யான் உண அருளல் அன்றியும், தான் உண்
மண்டைய கண்ட மான் வறைக் கருனை,
25
கொக்கு உகிர் நிமிரல் ஒக்கல் ஆர,
வரை உறழ் மார்பின், வையகம் விளக்கும்,
விரவு மணி ஒளிர்வரும், அரவு உறழ் ஆரமொடு,
புரையோன் மேனிப் பூத்தசல.......................
முரைசெல அருளியோனே
30
........................யருவிப் பாயல் கோவே.

திணை பாடாண் திணை; துறை கடைநிலை.
சேரமான் வஞ்சனைத் திருத்தாமனார் பாடியது.

399
அடு மகள் முகந்த அளவா வெண்ணெல்
தொடி மாண் உலக்கைப் பரூஉக் குற்று அரிசி
காடி வெள் உலைக் கொளீஇ, நீழல்
ஓங்கு சினை மாவின் தீம் கனி நறும் புளி,
5
மோட்டு இரு வராஅல் கோட்டு மீன் கொழுங் குறை,
செறுவின் வள்ளை, சிறு கொடிப் பாகல்,
பாதிரி ஊழ் முகை அவிழ் விடுத்தன்ன
மெய் களைந்து, இனனொடு விரைஇ,
மூழ்ப்பப் பெய்த முழு அவிழ்ப் புழுக்கல்,
10
அழிகளின் படுநர் களி அட வைகின்,
பழஞ்சோறு அயிலும் முழங்கு நீர்ப் படப்பைக்
காவிரிக் கிழவன், மாயா நல் இசைக்
கிள்ளிவளவன் உள்ளி, அவற் படர்தும்;
செல்லேன் செல்லேன், பிறர் முகம் நோக்கேன்;
15
நெடுங் கழைத் தூண்டில் விடு மீன் நொடுத்து,
கிணைமகள் அட்ட பாவல் புளிங்கூழ்
பொழுது மறுத்து உண்ணும் உண்டியேன், அழிவு கொண்டு,
ஒரு சிறை இருந்தேன்; என்னே! 'இனியே,
அறவர் அறவன், மறவர் மறவன்,
20
மள்ளர் மள்ளன், தொல்லோர் மருகன்,
இசையின் கொண்டான், நசை அமுது உண்க' என,
மீப் படர்ந்து இறந்து, வன் கோல் மண்ணி,
வள் பரிந்து கிடந்த.......................மணக்க
விசிப்புறுத்து அமைந்த புதுக் காழ்ப் போர்வை,
25
அலகின் மாலை ஆர்ப்ப வட்டித்து,
கடியும் உணவு என்னக் கடவுட்கும் தொடேன்,
'கடுந் தேர் அள்ளற்கு அசாவா நோன் சுவல்
பகடே அத்தை யான் வேண்டி வந்தது' என,
ஒன்று யான் பெட்டாஅளவை, அன்றே
30
ஆன்று விட்டனன் அத்தை, விசும்பின்
மீன் பூத்தன்ன உருவப் பல் நிரை
ஊர்தியொடு நல்கியோனே; சீர் கொள
இழுமென இழிதரும் அருவி,
வான் தோய் உயர் சிமைத் தோன்றிக் கோவே.

திணை அது; துறை பரிசில் விடை.
தாமான் தோன்றிக் கோனை ஐயூர் முடவனார் பாடியது.

400
மாக விசும்பின் வெண் திங்கள்
மூ ஐந்தான் முறை முற்ற,
கடல் நடுவண் கண்டன்ன என்
இயம் இசையா, மரபு ஏத்தி,
5
கடைத் தோன்றிய கடைக் கங்குலான்
பலர் துஞ்சவும் தான் துஞ்சான்,
உலகு காக்கும் உயர் ெ..........க்
கேட்டோன், எந்தை, என் தெண் கிணைக் குரலே;
10
தொன்று படு சிதாஅர் மருங்கு நீக்கி,
மிகப் பெருஞ் சிறப்பின் வீறு.......
...........................................................லவான
கலிங்கம் அளித்திட்டு என் அரை நோக்கி,
நார் அரி நறவின் நாள் மகிழ் தூங்குந்து;
15
போது அறியேன், பதிப் பழகவும்,
தன் பகை கடிதல் அன்றியும், சேர்ந்தோர்
பசிப் பகை கடிதலும் வல்லன் மாதோ;
மறவர் மலிந்த த.............................................
கேள்வி மலிந்த வேள்வித் தூணத்து,
20
இருங் கழி இழிதரு........ கலி வங்கம்
தேறு நீர்ப் பரப்பின் யாறு சீத்து உய்த்து,
துறைதொறும் பிணிக்கும் நல் ஊர்,
உறைவு இன் யாணர்,........ கிழவோனே!
திணை அது; துறை இயன்மொழி.