முகப்பு | தொடக்கம் |
தாமரை |
27 |
சேற்று வளர் தாமரை பயந்த, ஒண் கேழ், |
|
நூற்று இதழ் அலரின் நிரை கண்டன்ன, |
|
வேற்றுமை இல்லா விழுத் திணைப் பிறந்து, |
|
வீற்றிருந்தோரை எண்ணும்காலை, |
|
5 |
உரையும் பாட்டும் உடையோர் சிலரே; |
மரை இலை போல மாய்ந்திசினோர் பலரே; |
|
'புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின் |
|
வலவன் ஏவா வான ஊர்தி |
|
எய்துப என்ப, தம் செய் வினை முடித்து' எனக் |
|
10 |
கேட்பல்; எந்தை! சேட்சென்னி! நலங்கிள்ளி! |
தேய்தல் உண்மையும், பெருகல் உண்மையும், |
|
மாய்தல் உண்மையும், பிறத்தல் உண்மையும், |
|
அறியாதோரையும் அறியக் காட்டி, |
|
திங்கள் புத்தேள் திரிதரும் உலகத்து, |
|
15 |
வல்லார் ஆயினும், வல்லுநர்ஆயினும், |
வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி, |
|
அருள, வல்லை ஆகுமதி; அருள் இலர் |
|
கொடாஅமை வல்லர் ஆகுக; |
|
கெடாஅத துப்பின் நின் பகை எதிர்ந்தோரே. |
|
திணை பொதுவியல்; துறை முதுமொழிக்காஞ்சி.
| |
சோழன் நலங்கிள்ளியை உறையூர் முதுகண்ணன் சாத்தனார் பாடியது.
|
28 |
'சிறப்பு இல் சிதடும், உறுப்பு இல் பிண்டமும், |
|
கூனும், குறளும், ஊமும், செவிடும், |
|
மாவும், மருளும், உளப்பட வாழ்நர்க்கு |
|
எண் பேர் எச்சம் என்று இவை எல்லாம் |
|
5 |
பேதைமை அல்லது ஊதியம் இல்' என, |
முன்னும், அறிந்தோர் கூறினர்; இன்னும், |
|
அதன் திறம் அத்தை யான் உரைக்க வந்தது |
|
வட்ட வரிய செம் பொறிச் சேவல் |
|
ஏனல் காப்போர் உணர்த்திய கூஉம் |
|
10 |
கானத்தோர், நின் தெவ்வர்; நீயே, |
புறஞ்சிறை மாக்கட்கு அறம் குறித்து, அகத்தோர் |
|
புய்த்து எறி கரும்பின் விடு கழை தாமரைப் |
|
பூம் போது சிதைய வீழ்ந்தென, கூத்தர் |
|
ஆடு களம் கடுக்கும் அக நாட்டையே; |
|
15 |
அதனால், அறனும் பொருளும் இன்பமும் மூன்றும் |
ஆற்றும், பெரும! நின் செல்வம்; |
|
ஆற்றாமை நிற் போற்றாமையே. |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
29 |
அழல் புரிந்த அடர் தாமரை |
|
ஐது அடர்ந்த நூல் பெய்து, |
|
புனை வினைப் பொலிந்த பொலன் நறுந் தெரியல் |
|
பாறு மயிர் இருந் தலை பொலியச் சூடி, |
|
5 |
பாண் முற்றுக, நின் நாள் மகிழ் இருக்கை! |
பாண் முற்று ஒழிந்த பின்றை, மகளிர் |
|
தோள் முற்றுக, நின் சாந்து புலர் அகலம்! ஆங்க |
|
முனிவு இல் முற்றத்து, இனிது முரசு இயம்ப, |
|
கொடியோர்த் தெறுதலும், செவ்வியோர்க்கு அளித்தலும், |
|
10 |
ஒடியா முறையின் மடிவு இலை ஆகி, |
'நல்லதன் நலனும் தீயதன் தீமையும் |
|
இல்லை' என்போர்க்கு இனன் ஆகிலியர்! |
|
நெல் விளை கழனிப் படு புள் ஓப்புநர் |
|
ஒழி மடல் விறகின் கழி மீன் சுட்டு, |
|
15 |
வெங் கள் தொலைச்சியும், அமையார், தெங்கின் |
இளநீர் உதிர்க்கும் வளம் மிகு நல் நாடு |
|
பெற்றனர் உவக்கும் நின் படை கொள் மாக்கள் |
|
பற்றா மாக்களின் பரிவு முந்துறுத்து, |
|
கூவை துற்ற நாற் கால் பந்தர்ச் |
|
20 |
சிறு மனை வாழ்க்கையின் ஒரீஇ, வருநர்க்கு |
உதவி ஆற்றும் நண்பின் பண்புடை |
|
ஊழிற்றாக, நின் செய்கை! விழவில் |
|
கோடியர் நீர்மை போல முறைமுறை |
|
ஆடுநர் கழியும் இவ் உலகத்து, கூடிய |
|
25 |
நகைப்புறன் ஆக, நின் சுற்றம்! |
இசைப்புறன் ஆக, நீ ஓம்பிய பொருளே! |
|
திணையும் துறையும் அவை.
| |
அவனை அவர் பாடியது.
|
246 |
பல் சான்றீரே! பல் சான்றீரே! |
|
'செல்க' எனச் சொல்லாது, 'ஒழிக' என விலக்கும், |
|
பொல்லாச் சூழ்ச்சிப் பல் சான்றீரே! |
|
அணில் வரிக் கொடுங் காய் வாள் போழ்ந்திட்ட |
|
5 |
காழ் போல் நல் விளர் நறு நெய் தீண்டாது, |
அடை இடைக் கிடந்த கை பிழி பிண்டம், |
|
வெள் எள் சாந்தொடு, புளிப் பெய்து அட்ட |
|
வேளை வெந்தை, வல்சி ஆக, |
|
பரல் பெய் பள்ளிப் பாய் இன்று வதியும் |
|
10 |
உயவல் பெண்டிரேம் அல்லேம் மாதோ; |
பெருங் காட்டுப் பண்ணிய கருங் கோட்டு ஈமம் |
|
நுமக்கு அரிதாகுக தில்ல; எமக்கு எம் |
|
பெருந் தோள் கணவன் மாய்ந்தென, அரும்பு அற |
|
வள் இதழ் அவிழ்ந்த தாமரை |
|
15 |
நள் இரும் பொய்கையும் தீயும் ஓரற்றே! |
திணை அது; துறை ஆனந்தப்பையுள்.
| |
பூத பாண்டியன் தேவி பெருங்கோப்பெண்டு தீப் பாய்வாள் சொல்லியது.
|
397 |
வெள்ளியும் இரு விசும்பு ஏர்தரும்; புள்ளும் |
|
உயர் சினைக் குடம்பைக் குரல் தோற்றினவே; |
|
பொய்கையும் போது கண் விழித்தன; பைபயச் |
|
சுடரும் சுருங்கின்று, ஒளியே; பாடு எழுந்து |
|
5 |
இரங்குரல் முரசமொடு வலம்புரி ஆர்ப்ப, |
இரவுப் புறங்கண்ட காலைத் தோன்றி, |
|
எஃகு இருள் அகற்றும் ஏமப் பாசறை, |
|
வைகறை அரவம் கேளியர்! 'பல கோள் |
|
செய் தார் மார்ப! எழுமதி துயில்' என, |
|
10 |
தெண் கண் மாக் கிணை தெளிர்ப்ப ஒற்றி, |
நெடுங் கடைத் தோன்றியேனே; அது நயந்து, |
|
'உள்ளி வந்த பரிசிலன் இவன்' என, |
|
நெய்யுறப் பொரித்த குய்யுடை நெடுஞ் சூடு, |
|
மணிக் கலன் நிறைந்த மணம் நாறு தேறல், |
|
15 |
பாம்பு உரித்தன்ன வான் பூங் கலிங்கமொடு, |
மாரி அன்ன வண்மையின் சொரிந்து, |
|
வேனில் அன்ன என் வெப்பு நீங்க, |
|
அருங் கலம் நல்கியோனே; என்றும், |
|
செறுவில் பூத்த சேயிதழ்த் தாமரை, |
|
20 |
அறு தொழில் அந்தணர் அறம் புரிந்து எடுத்த |
தீயொடு விளங்கும் நாடன், வாய் வாள் |
|
வலம் படு தீவின் பொலம் பூண் வளவன்; |
|
எறி திரைப் பெருங் கடல் இறுதிக்கண் செலினும், |
|
தெறு கதிர்க் கனலி தென் திசைத் தோன்றினும், |
|
25 |
'என்?' என்று அஞ்சலம், யாமே; வென் வேல் |
அருஞ் சமம் கடக்கும் ஆற்றல் அவன் |
|
திருந்து கழல் நோன் தாள் தண் நிழலேமே. |
|
திணை அது; துறை பரிசில்விடை; கடைநிலை விடையும் ஆம்.
| |
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை எருக்காட்டூர்த் தாயங்கண்ணனார் பாடியது.
|