யானை (களிறு, பிடி, வேழம், பகடு, கைமா,கைமான்)
3
உவவு மதி உருவின் ஓங்கல் வெண் குடை
நிலவுக் கடல் வரைப்பின் மண்ணகம் நிழற்ற,
ஏம முரசம் இழுமென முழங்க,
நேமி உய்த்த நேஎ நெஞ்சின்,
5
தவிரா ஈகை, கவுரியர் மருக!
செயிர் தீர் கற்பின் சேயிழை கணவ!
பொன் ஓடைப் புகர் அணி நுதல்,
துன் அருந் திறல், கமழ் கடாஅத்து,
எயிறு படையாக எயிற் கதவு இடாஅ,
10
கயிறு பிணிக்கொண்ட கவிழ் மணி மருங்கின்,
பெருங் கை, யானை இரும் பிடர்த் தலை இருந்து,
மருந்து இல் கூற்றத்து அருந் தொழில் சாயாக்
கருங் கை ஒள் வாட் பெரும்பெயர் வழுதி!
நிலம் பெயரினும், நின் சொல் பெயரல்;
15
பொலங் கழற் கால், புலர் சாந்தின்
விலங்கு அகன்ற வியல் மார்ப!
ஊர் இல்ல, உயவு அரிய,
நீர் இல்ல, நீள் இடைய,
பார்வல் இருக்கை, கவி கண் நோக்கின்,
20
செந் தொடை பிழையா வன்கண் ஆடவர்
அம்பு விட, வீழ்ந்தோர் வம்பப் பதுக்கை,
திருந்து சிறை வளை வாய்ப் பருந்து இருந்து உயவும்
உன்ன மரத்த துன் அருங் கவலை,
நின் நசை வேட்கையின் இரவலர் வருவர் அது
25
முன்னம் முகத்தின் உணர்ந்து, அவர்
இன்மை தீர்த்தல் வன்மையானே.
திணையும் துறையும் அவை.
பாண்டியன் கருங் கை ஒள்வாட் பெரும்பெயர் வழுதியை இரும்பிடர்த்தலையார்பாடியது.

5
எருமை அன்ன கருங் கல் இடை தோறு,
ஆனின் பரக்கும் யானைய, முன்பின்,
கானக நாடனை! நீயோ, பெரும!
நீ ஓர் ஆகலின், நின் ஒன்று மொழிவல்:
5
அருளும் அன்பும் நீக்கி, நீங்கா
நிரயம் கொள்பவரொடு ஒன்றாது, காவல்,
குழவி கொள்பவரின், ஓம்புமதி!
அளிதோ தானே; அது பெறல் அருங் குரைத்தே.

திணை பாடாண்திணை; துறை செவியறிவுறூஉ; பொருண்மொழிக் காஞ்சியும் ஆம்.
சேரமான் கருவூர் ஏறிய ஒள் வாட் கோப் பெருஞ்சேரல் இரும்பொறையைக் கண்ட ஞான்று, நின் உடம்பு பெறுவாயாக!' என, அவனைச் சென்று கண்டு, தம் உடம்பு பெற்று நின்ற நரிவெரூஉத்தலையார் பாடியது.

6
வடாஅது பனி படு நெடு வரை வடக்கும்,
தெனாஅது உரு கெழு குமரியின் தெற்கும்,
குணாஅது கரை பொரு தொடு கடற் குணக்கும்,
குடாஅது தொன்று முதிர் பௌவத்தின் குடக்கும்,
5
கீழது முப் புணர் அடுக்கிய முறை முதற் கட்டின்
நீர் நிலை நிவப்பின் கீழும், மேலது
ஆனிலை உலகத்தானும், ஆனாது,
உருவும் புகழும் ஆகி, விரி சீர்த்
தெரி கோல் ஞமன் போல, ஒரு திறம்
10
பற்றல் இலியரோ! நின் திறம் சிறக்க!
செய் வினைக்கு எதிர்ந்த தெவ்வர் தேஎத்து,
கடல் படை குளிப்ப மண்டி, அடர் புகர்ச்
சிறு கண் யானை செவ்விதின் ஏவி,
பாசவல் படப்பை ஆர் எயில் பல தந்து,
15
அவ் எயில் கொண்ட செய்வுறு நன் கலம்
பரிசில் மாக்கட்கு வரிசையின் நல்கி,
பணியியர் அத்தை, நின் குடையே முனிவர்
முக் கட் செல்வர் நகர் வலம் செயற்கே!
இறைஞ்சுக, பெரும! நின் சென்னி சிறந்த
20
நான்மறை முனிவர் ஏந்து கை எதிரே!
வாடுக, இறைவ! நின் கண்ணி ஒன்னார்
நாடு சுடு கமழ் புகை எறித்தலானே!
செலியர் அத்தை, நின் வெகுளி வால் இழை
மங்கையர் துனித்த வாள் முகத்து எதிரே!
25
ஆங்க, வென்றி எல்லாம் வென்று அகத்து அடக்கிய
தண்டா ஈகைத் தகை மாண் குடுமி!
தண் கதிர் மதியம் போலவும், தெறு சுடர்
ஒண் கதிர் ஞாயிறு போலவும்,
மன்னிய, பெரும! நீ நிலமிசையானே!

திணையும் துறையும் அவை; துறை வாழ்த்தியலும் ஆம்.
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைக் காரி கிழார் பாடியது.

7
களிறு கடைஇய தாள்,
கழல் உரீஇய திருந்து அடி,
கணை பொருது கவி வண் கையால்,
கண் ஒளிர்வரூஉம் கவின் சாபத்து,
5
மா மறுத்த மலர் மார்பின்,
தோல் பெயரிய எறுழ் முன்பின்,
எல்லையும் இரவும் எண்ணாய், பகைவர்
ஊர் சுடு விளக்கத்து அழு விளிக் கம்பலைக்
கொள்ளை மேவலை; ஆகலின், நல்ல
10
இல்ல ஆகுபவால் இயல் தேர் வளவ!
தண் புனல் பரந்த பூசல் மண் மறுத்து
மீனின் செறுக்கும் யாணர்ப்
பயன் திகழ் வைப்பின் பிறர் அகன் தலை நாடே.

திணை வஞ்சி; துறை கொற்றவள்ளை; மழபுல வஞ்சியும் ஆம்.
சோழன் கரிகாற் பெருவளத்தானைக் கருங்குழலாதனார் பாடியது.

9
'ஆவும், ஆன் இயற் பார்ப்பன மாக்களும்,
பெண்டிரும், பிணியுடையீரும், பேணித்
தென் புல வாழ்நர்க்கு அருங் கடன் இறுக்கும்
பொன் போல் புதல்வர்ப் பெறாஅதீரும்,
5
எம் அம்பு கடி விடுதும், நும் அரண் சேர்மின்' என,
அறத்து ஆறு நுவலும் பூட்கை, மறத்தின்
கொல் களிற்று மீமிசைக் கொடி விசும்பு நிழற்றும்
எம் கோ, வாழிய, குடுமி தம் கோச்
செந் நீர்ப் பசும் பொன் வயிரியர்க்கு ஈத்த,
10
முந்நீர் விழவின், நெடியோன்
நல் நீர்ப் பஃறுளி மணலினும் பலவே!

திணையும் துறையும் அவை.
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் பாடியது.

12
பாணர் தாமரை மலையவும், புலவர்
பூ நுதல் யானையொடு புனை தேர் பண்ணவும்,
அறனோ மற்று இது விறல் மாண் குடுமி!
இன்னா ஆகப் பிறர் மண் கொண்டு,
5
இனிய செய்தி, நின் ஆர்வலர் முகத்தே?

திணை அது; துறை இயன்மொழி.
பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் பாடியது.

13
'இவன் யார்?' என்குவை ஆயின், இவனே
புலி நிறக் கவசம் பூம் பொறி சிதைய,
எய் கணை கிழித்த பகட்டு எழில் மார்பின்,
மறலி அன்ன களிற்று மிசையோனே;
5
களிறே, முந்நீர் வழங்கு நாவாய் போலவும்,
பல் மீன் நாப்பண் திங்கள் போலவும்,
சுறவினத்து அன்ன வாளோர் மொய்ப்ப,
மரீஇயோர் அறியாது, மைந்து பட்டன்றே;
நோய் இலன் ஆகிப் பெயர்கதில் அம்ம!
10
பழன மஞ்ஞை உகுத்த பீலி
கழனி உழவர் சூட்டொடு தொகுக்கும்,
கொழு மீன், விளைந்த கள்ளின்,
விழு நீர் வேலி நாடு கிழவோனே.

திணை பாடாண் திணை; துறை வாழ்த்தியல்.
சோழன் முடித் தலைக் கோப் பெருநற்கிள்ளி கருவூரிடம் செல்வானைக் கண்டு,சேரமான் அந்துவஞ் சேரல் இரும்பொறையோடு வேண்மாடத்து மேல் இருந்து,உறையூர் ஏணிச்சேரி முட மோசியார் பாடியது.

14
கடுங் கண்ண கொல் களிற்றால்
காப்பு உடைய எழு முருக்கி,
பொன் இயல் புனை தோட்டியால்
முன்பு துரந்து, சமம் தாங்கவும்;
5
பார் உடைத்த குண்டு அகழி
நீர் அழுவ நிவப்புக் குறித்து,
நிமிர் பரிய மா தாங்கவும்;
ஆவம் சேர்ந்த புறத்தை தேர் மிசைச்
சாப நோன் ஞாண் வடுக் கொள வழங்கவும்;
10
பரிசிலர்க்கு அருங் கலம் நல்கவும்; குரிசில்!
வலிய ஆகும், நின் தாள் தோய் தடக் கை.
புலவு நாற்றத்த பைந் தடி
பூ நாற்றத்த புகை கொளீஇ, ஊன் துவை
கறி சோறு உண்டு வருந்து தொழில் அல்லது,
15
பிறிது தொழில் அறியா ஆகலின், நன்றும்
மெல்லிய பெரும! தாமே. நல்லவர்க்கு
ஆர் அணங்கு ஆகிய மார்பின், பொருநர்க்கு
இரு நிலத்து அன்ன நோன்மை,
செரு மிகு சேஎய்! நிற் பாடுநர் கையே.

திணை அது; துறை இயன்மொழி.
சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதன் கபிலர் கைப் பற்றி, 'மெல்லியவாமால் நூம்கை' என, கபிலர் பாடியது.

15
கடுந் தேர் குழித்த ஞெள்ளல் ஆங்கண்,
வெள் வாய்க் கழுதைப் புல் இனம் பூட்டி,
பாழ் செய்தனை, அவர் நனந் தலை நல் எயில்;
புள்ளினம் இமிழும் புகழ்சால் விளை வயல்,
5
வெள் உளைக் கலி மான் கவி குளம்பு உகளத்
தேர் வழங்கினை, நின் தெவ்வர் தேஎத்து;
துளங்கு இயலான், பணை எருத்தின்,
பாவு அடியான், செறல் நோக்கின்,
ஒளிறு மருப்பின் களிறு அவர
10
காப்பு உடைய கயம் படியினை;
அன்ன சீற்றத்து அனையை; ஆகலின்,
விளங்கு பொன் எறிந்த நலம் கிளர் பலகையொடு
நிழல் படு நெடு வேல் ஏந்தி, ஒன்னார்
ஒண் படைக் கடுந் தார் முன்பு தலைக் கொண்மார்,
15
நசை தர வந்தோர் நசை பிறக்கு ஒழிய,
வசை பட வாழ்ந்தோர் பலர்கொல்? புரை இல்
நல் பனுவல், நால் வேதத்து,
அருஞ் சீர்த்திப் பெருங் கண்ணுறை
நெய்ம் மலி ஆவுதி பொங்க, பல் மாண்
20
வீயாச் சிறப்பின் வேள்வி முற்றி,
யூபம் நட்ட வியன் களம் பலகொல்?
யா பலகொல்லோ? பெரும! வார் உற்று
விசி பிணிக்கொண்ட மண் கனை முழவின்
பாடினி பாடும் வஞ்சிக்கு
25
நாடல் சான்ற மைந்தினோய்! நினக்கே.

திணையும் துறையும் அவை.
பாண்டியன் பல் யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெட்டிமையார் பாடியது.

16
வினை மாட்சிய விரை புரவியொடு,
மழை உருவின தோல் பரப்பி,
முனை முருங்கத் தலைச் சென்று, அவர்
விளை வயல் கவர்பூட்டி,
5
மனை மரம் விறகு ஆகக்
கடி துறை நீர்க் களிறு படீஇ,
எல்லுப் பட இட்ட சுடு தீ விளக்கம்
செல் சுடர் ஞாயிற்றுச் செக்கரின் தோன்ற,
புலம் கெட இறுக்கும் வரம்பு இல் தானை,
10
துணை வேண்டாச் செரு வென்றி,
புலவு வாள், புலர் சாந்தின்,
முருகற் சீற்றத்து, உரு கெழு குருசில்!
மயங்கு வள்ளை, மலர் ஆம்பல்,
பனிப் பகன்றை, கனிப் பாகல்,
15
கரும்பு அல்லது காடு அறியாப்
பெருந் தண் பணை பாழ் ஆக,
ஏம நல் நாடு ஒள் எரி ஊட்டினை,
நாம நல் அமர் செய்ய,
ஓராங்கு மலைந்தன, பெரும! நின் களிறே.

திணை வஞ்சி; துறை மழபுலவஞ்சி.
சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியைப் பாண்டரங் கண்ணனார் பாடியது.

17
தென் குமரி, வட பெருங்கல்,
குண குட கடலா எல்லை,
குன்று, மலை, காடு, நாடு,
ஒன்று பட்டு வழிமொழிய,
5
கொடிது கடிந்து, கோல் திருத்தி,
படுவது உண்டு, பகல் ஆற்றி,
இனிது உருண்ட சுடர் நேமி
முழுது ஆண்டோர் வழி காவல!
குலை இறைஞ்சிய கோள் தாழை
10
அகல் வயல், மலை வேலி,
நிலவு மணல் வியன் கானல்,
தெண் கழிமிசைத் தீப் பூவின்,
தண் தொண்டியோர் அடு பொருந!
மாப் பயம்பின் பொறை போற்றாது,
15
நீடு குழி அகப்பட்ட
பீடு உடைய எறுழ் முன்பின்,
கோடு முற்றிய கொல் களிறு
நிலை கலங்கக் குழி கொன்று,
கிளை புகலத் தலைக்கூடியாங்கு
20
நீ பட்ட அரு முன்பின்
பெருந் தளர்ச்சி, பலர் உவப்ப,
பிறிது சென்று, மலர் தாயத்துப்
பலர் நாப்பண் மீக்கூறலின்,
'உண்டாகிய உயர் மண்ணும்,
25
சென்று பட்ட விழுக் கலனும்,
பெறல் கூடும், இவன் நெஞ்சு உறப் பெறின்' எனவும்,
'ஏந்து கொடி இறைப்புரிசை,
வீங்கு சிறை, வியல்அருப்பம்,
இழந்து வைகுதும், இனி நாம் இவன்
30
உடன்று நோக்கினன், பெரிது' எனவும்,
வேற்று அரசு பணி தொடங்கு நின்
ஆற்றலொடு புகழ் ஏத்தி,
காண்கு வந்திசின், பெரும! ஈண்டிய
மழை என மருளும் பல் தோல், மலை எனத்
35
தேன் இறை கொள்ளும் இரும் பல் யானை,
உடலுநர் உட்க வீங்கி, கடல் என
வான் நீர்க்கு ஊக்கும் தானை, ஆனாது
கடு ஒடுங்கு எயிற்ற அரவுத் தலை பனிப்ப,
இடி என முழங்கும் முரசின்,
40
வரையா ஈகைக் குடவர் கோவே!

திணை வாகை; துறை அரச வாகை; இயன்மொழியும் ஆம்.
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனால் பிணியிருந்த யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை வலிதின் போய்க் கட்டில் எய்தினானைக் குறுங்கோழியூர் கிழார் பாடியது.

19
இமிழ் கடல் வளைஇய ஈண்டு அகன் கிடக்கை,
தமிழ் தலைமயங்கிய தலையாலங்கானத்து,
மன் உயிர்ப் பன்மையும், கூற்றத்து ஒருமையும்,
நின்னொடு தூக்கிய வென் வேல் செழிய!
5
'இரும் புலி வேட்டுவன் பொறி அறிந்து மாட்டிய
பெருங் கல் அடாரும் போன்ம்' என விரும்பி,
முயங்கினேன் அல்லனோ, யானே மயங்கிக்
குன்றத்து இறுத்த குரீஇ இனம் போல,
அம்பு சென்று இறுத்த அரும் புண் யானைத்
10
தூம்புடைத் தடக் கை வாயொடு துமிந்து,
நாஞ்சில் ஒப்ப, நிலம் மிசைப் புரள,
எறிந்து களம் படுத்த ஏந்து வாள் வலத்தர்
எந்தையொடு கிடந்தோர், எம் புன் தலைப் புதல்வர்;
'இன்ன விறலும் உளகொல், நமக்கு?' என,
15
மூதில் பெண்டிர் கசிந்து அழ, நாணி,
கூற்றுக் கண்ணோடிய வெருவரு பறந்தலை,
எழுவர் நல் வலம் கடந்தோய்! நின்
கழூஉ விளங்கு ஆரம் கவைஇய மார்பே?

திணை வாகை; துறை அரச வாகை.
அவனை அவர் பாடியது.

22
தூங்கு கையான் ஓங்கு நடைய,
உறழ் மணியான் உயர் மருப்பின,
பிறை நுதலான் செறல் நோக்கின,
பா அடியான் பணை எருத்தின,
5
தேன் சிதைந்த வரை போல,
மிஞிறு ஆர்க்கும் கமழ் கடாத்து,
அயறு சோரும் இருஞ் சென்னிய,
மைந்து மலிந்த மழ களிறு
கந்து சேர்பு நிலைஇ வழங்க;
10
பாஅல் நின்று கதிர் சோரும்
வான் உறையும் மதி போலும்
மாலை வெண் குடை நீழலான்,
வாள் மருங்கு இலோர் காப்பு உறங்க;
அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த
15
ஆய் கரும்பின் கொடிக் கூரை,
சாறு கொண்ட களம் போல,
வேறு வேறு பொலிவு தோன்ற;
குற்று ஆனா உலக்கையான்
கலிச் சும்மை வியல் ஆங்கண்,
20
பொலந் தோட்டுப் பைந் தும்பை
மிசை அலங்கு உளைய பனைப் போழ் செரீஇ,
சின மாந்தர் வெறிக் குரவை
ஓத நீரின் பெயர்பு பொங்க;
வாய் காவாது பரந்து பட்ட
25
வியன் பாசறைக் காப்பாள!
வேந்து தந்த பணி திறையான்
சேர்ந்தவர்தம் கடும்பு ஆர்த்தும்,
ஓங்கு கொல்லியோர், அடு பொருந!
வேழ நோக்கின் விறல் வெஞ் சேஎய்!
30
வாழிய, பெரும! நின் வரம்பு இல் படைப்பே,
நிற் பாடிய வயங்கு செந் நாப்
பின் பிறர் இசை நுவலாமை,
ஓம்பாது ஈயும் ஆற்றல் எம் கோ!
'மாந்தரஞ்சேரல் இரும்பொறை ஓம்பிய நாடே
35
புத்தேள் உலகத்து அற்று' எனக் கேட்டு வந்து,
இனிது கண்டிசின்; பெரும! முனிவு இலை,
வேறு புலத்து இறுக்கும் தானையொடு,
சோறு பட நடத்தி நீ துஞ்சாய்மாறே!

திணையும் துறையும் அவை; துறை இயன்மொழியும் ஆம்.
சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையைக் குறுங் கோழியூர் கிழார் பாடியது.

23
'வெளிறு இல் நோன் காழ்ப் பணை நிலை முனைஇ,
களிறு படிந்து உண்டென, கலங்கிய துறையும்;
கார் நறுங் கடம்பின் பாசிலைத் தெரியல்,
சூர் நவை, முருகன் சுற்றத்து அன்ன, நின்
5
கூர் நல் அம்பின் கொடு வில் கூளியர்
கொள்வது கொண்டு, கொள்ளா மிச்சில்
கொள் பதம் ஒழிய வீசிய புலனும்;
வடி நவில் நவியம் பாய்தலின், ஊர்தொறும்
கடி மரம் துளங்கிய காவும்; நெடு நகர்
10
வினை புனை நல் இல் வெவ் எரி நைப்ப,
கனை எரி உரறிய மருங்கும்; நோக்கி,
நண்ணார் நாண, நாள்தொறும் தலைச் சென்று,
இன்னும் இன்ன பல செய்குவன், யாவரும்
துன்னல் போகிய துணிவினோன்' என,
15
ஞாலம் நெளிய ஈண்டிய வியன் படை
ஆலங்கானத்து அமர் கடந்து அட்ட
கால முன்ப! நின் கண்டனென் வருவல்
அறு மருப்பு எழில் கலை புலிப்பால் பட்டென,
சிறு மறி தழீஇய தெறிநடை மடப் பிணை
20
பூளை நீடிய வெருவரு பறந்தலை
வேளை வெண் பூக் கறிக்கும்
ஆள் இல் அத்தம் ஆகிய காடே.

திணையும் துறையும் அவை; துறை நல்லிசை வஞ்சியும் ஆம்.
பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனைக் கல்லாடனார் பாடியது.

24
நெல் அரியும் இருந் தொழுவர்
செஞ் ஞாயிற்று வெயில் முனையின்,
தெண் கடல் திரை மிசைப் பாயுந்து;
திண் திமில் வன் பரதவர்
5
வெப்பு உடைய மட்டு உண்டு,
தண் குரவைச் சீர் தூங்குந்து;
தூவல் கலித்த தேம் பாய் புன்னை
மெல் இணர்க் கண்ணி மிலைந்த மைந்தர்
எல் வளை மகளிர்த் தலைக் கை தரூஉந்து;
10
வண்டு பட மலர்ந்த தண் நறுங் கானல்
முண்டகக் கோதை ஒண் தொடி மகளிர்
இரும் பனையின் குரும்பை நீரும்,
பூங் கரும்பின் தீம் சாறும்,
ஓங்கு மணல் குவவுத் தாழைத்
15
தீம் நீரொடு உடன் விராஅய்,
முந் நீர் உண்டு முந்நீர்ப் பாயும்;
தாங்கா உறையுள் நல் ஊர் கெழீஇய
ஓம்பா ஈகை மா வேள் எவ்வி
புனல் அம் புதவின் மிழலையொடு கழனிக்
20
கயல் ஆர் நாரை போர்வில் சேக்கும்,
பொன் அணி யானைத் தொல் முதிர் வேளிர்,
குப்பை நெல்லின், முத்தூறு தந்த
கொற்ற நீள் குடை, கொடித் தேர்ச் செழிய!
நின்று நிலைஇயர் நின் நாள்மீன்; நில்லாது
25
படாஅச் செலீஇயர், நின் பகைவர் மீனே
நின்னொடு, தொன்று மூத்த உயிரினும், உயிரொடு
நின்று மூத்த யாக்கை அன்ன, நின்
ஆடு குடி மூத்த விழுத் திணைச் சிறந்த
வாளின் வாழ்நர் தாள் வலம் வாழ்த்த,
30
இரவல் மாக்கள் ஈகை நுவல,
ஒண் தொடி மகளிர் பொலங்கலத்து ஏந்திய
தண் கமழ் தேறல் மடுப்ப, மகிழ் சிறந்து,
ஆங்கு இனிது ஒழுகுமதி, பெரும! 'ஆங்கு அது
வல்லுநர் வாழ்ந்தோர்' என்ப தொல் இசை,
35
மலர் தலை உலகத்துத் தோன்றி,
பலர், செலச் செல்லாது, நின்று விளிந்தோரே.

திணை பொதுவியல்; துறை பொருண்மொழிக் காஞ்சி.
அவனை மாங்குடி கிழார் பாடியது.

26
நளி கடல் இருங் குட்டத்து
வளி புடைத்த கலம் போல,
களிறு சென்று களன் அகற்றவும்,
களன் அகற்றிய வியல் ஆங்கண்
5
ஒளிறு இலைய எஃகு ஏந்தி,
அரைசு பட அமர் உழக்கி,
உரை செல முரசு வௌவி,
முடித் தலை அடுப்பு ஆக,
புனல் குருதி உலைக் கொளீஇ,
10
தொடித் தோள் துடுப்பின் துழந்த வல்சியின்,
அடுகளம் வேட்ட அடு போர்ச் செழிய!
ஆன்ற கேள்வி, அடங்கிய கொள்கை,
நான் மறை முதல்வர் சுற்றம் ஆக,
மன்னர் ஏவல் செய்ய, மன்னிய
15
வேள்வி முற்றிய வாய் வாள் வேந்தே!
நோற்றோர் மன்ற நின் பகைவர், நின்னொடு
மாற்றார் என்னும் பெயர் பெற்று,
ஆற்றார் ஆயினும், ஆண்டு வாழ்வோரே.

திணையும் துறையும் அவை.
அவனை மாங்குடி கிழார் பாடியது.

30
செஞ் ஞாயிற்றுச் செலவும்,
அஞ் ஞாயிற்றுப் பரிப்பும்,
பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்,
வளி திரிதரு திசையும்,
5
வறிது நிலைஇய காயமும், என்று இவை
சென்று அளந்து அறிந்தோர் போல, என்றும்
இனைத்து என்போரும் உளரே; அனைத்தும்
அறி அறிவு ஆகாச் செறிவினை ஆகி,
களிறு கவுள் அடுத்த எறிகல் போல
10
ஒளித்த துப்பினைஆதலின், வெளிப்பட
யாங்ஙனம் பாடுவர், புலவர்? கூம்பொடு
மீப் பாய் களையாது மிசைப் பரம் தோண்டாது
புகாஅர்ப் புகுந்த பெருங் கலம் தகாஅர்
இடைப் புலப் பெரு வழிச் சொரியும்
15
கடல் பல் தாரத்த நாடு கிழவோயே!

திணை பாடாண் திணை; துறை இயன்மொழி
அவனை அவர் பாடியது.

31
சிறப்புடை மரபின் பொருளும் இன்பமும்
அறத்து வழிப்படூஉம் தோற்றம் போல,
இரு குடை பின்பட ஓங்கிய ஒரு குடை,
உரு கெழு மதியின், நிவந்து, சேண் விளங்க,
5
நல் இசை வேட்டம் வேண்டி, வெல் போர்ப்
பாசறை அல்லது நீ ஒல்லாயே;
நுதிமுகம் மழுங்க மண்டி, ஒன்னார்
கடி மதில் பாயும் நின் களிறு அடங்கலவே;
'போர்' எனின், புகலும் புனை கழல் மறவர்,
10
'காடு இடைக் கிடந்த நாடு நனி சேஎய;
செல்வேம் அல்லேம்' என்னார்; 'கல்லென்
விழவுடை ஆங்கண் வேற்றுப் புலத்து இறுத்து,
குண கடல் பின்னது ஆக, குட கடல்
வெண் தலைப் புணரி நின் மான் குளம்பு அலைப்ப,
15
வல முறை வருதலும் உண்டு' என்று அலமந்து,
நெஞ்சு நடுங்கு அவலம் பாய,
துஞ்சாக் கண்ண, வட புலத்து அரசே.

திணை வாகை; துறை அரச வாகை; மழபுலவஞ்சியும் ஆம்.
அவனைக் கோவூர் கிழார் பாடியது.

35
நளி இரு முந்நீர் ஏணி ஆக,
வளி இடை வழங்கா வானம் சூடிய
மண் திணி கிடக்கைத் தண் தமிழ்க் கிழவர்,
முரசு முழங்கு தானை மூவருள்ளும்,
5
அரசு எனப்படுவது நினதே, பெரும!
அலங்குகதிர்க் கனலி நால்வயின் தோன்றினும்,
இலங்குகதிர் வெள்ளி தென் புலம் படரினும்,
அம் தண் காவிரி வந்து கவர்பு ஊட்ட,
தோடு கொள் வேலின் தோற்றம் போல,
10
ஆடு கண் கரும்பின் வெண் பூ நுடங்கும்
நாடு எனப்படுவது நினதே அத்தை; ஆங்க
நாடு கெழு செல்வத்துப் பீடு கெழு வேந்தே!
நினவ கூறுவல்; எனவ கேண்மதி!
அறம் புரிந்தன்ன செங்கோல் நாட்டத்து
15
முறை வேண்டு பொழுதில் பதன் எளியோர் ஈண்டு
உறை வேண்டு பொழுதில் பெயல் பெற்றோரே;
ஞாயிறு சுமந்த கோடு திரள் கொண்மூ
மாக விசும்பின் நடுவு நின்றாங்கு,
கண் பொர விளங்கு நின் விண் பொரு வியன்குடை
20
வெயில் மறைக் கொண்டன்றோ? அன்றே; வருந்திய
குடி மறைப்பதுவே; கூர்வேல் வளவ!
வெளிற்றுப் பனந் துணியின் வீற்றுவீற்றுக் கிடப்ப,
களிற்றுக் கணம் பொருத கண் அகன் பறந்தலை,
வருபடை தாங்கி, பெயர் புறத்து ஆர்த்து,
25
பொருபடை தரூஉம் கொற்றமும் உழுபடை
ஊன்று சால் மருங்கின் ஈன்றதன் பயனே;
மாரி பொய்ப்பினும், வாரி குன்றினும்,
இயற்கை அல்லன செயற்கையில் தோன்றினும்,
காவலர்ப் பழிக்கும், இக் கண் அகல் ஞாலம்;
30
அது நற்கு அறிந்தனைஆயின், நீயும்
நொதுமலாளர் பொதுமொழி கொள்ளாது,
பகடு புறந்தருநர் பாரம் ஓம்பி,
குடி புறந்தருகுவை ஆயின், நின்
அடி புறந்தருகுவர், அடங்காதோரே.

திணை அது; துறை செவியறிவுறூஉ.
அவனை வெள்ளைக்குடி நாகனார் பாடி, பழஞ் செய்க்கடன் வீடுகொண்டது.

37
நஞ்சுடை வால் எயிற்று, ஐந் தலை சுமந்த,
வேக வெந் திறல், நாகம் புக்கென,
விசும்பு தீப் பிறப்பத் திருகி, பசுங் கொடிப்
பெரு மலை விடரகத்து உரும் எறிந்தாங்கு,
5
புள் உறு புன்கண் தீர்த்த, வெள் வேல்,
சினம் கெழு தானை, செம்பியன் மருக!
கராஅம் கலித்த குண்டு கண் அகழி,
இடம் கருங் குட்டத்து உடன் தொக்கு ஓடி,
யாமம் கொள்பவர் சுடர் நிழல் கதூஉம்
10
கடு முரண் முதலைய நெடு நீர் இலஞ்சி,
செம்பு உறழ் புரிசை, செம்மல் மூதூர்,
வம்பு அணி யானை வேந்து அகத்து உண்மையின்,
'நல்ல' என்னாது, சிதைத்தல்
வல்லையால், நெடுந்தகை! செருவத்தானே.

திணை வாகை; துறை அரசவாகை; முதல் வஞ்சியும் ஆம்.
அவனை மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.

38
வரை புரையும் மழ களிற்றின் மிசை,
வான் துடைக்கும் வகைய போல,
விரவு உருவின கொடி நுடங்கும்
வியன் தானை விறல் வேந்தே!
5
நீ, உடன்று நோக்கும்வாய் எரி தவழ,
நீ, நயந்து நோக்கும்வாய் பொன் பூப்ப,
செஞ் ஞாயிற்று நிலவு வேண்டினும்,
வெண் திங்களுள் வெயில் வேண்டினும்,
வேண்டியது விளைக்கும் ஆற்றலைஆகலின்,
10
நின் நிழல் பிறந்து, நின் நிழல் வளர்ந்த,
எம் அளவு எவனோ மற்றே? 'இன் நிலைப்
பொலம் பூங் காவின் நல் நாட்டோரும்
செய் வினை மருங்கின் எய்தல் அல்லதை,
உடையோர் ஈதலும் இல்லோர் இரத்தலும்
15
கடவது அன்மையின், கையறவு உடைத்து' என,
ஆண்டுச் செய் நுகர்ச்சி ஈண்டும் கூடலின்,
நின் நாடு உள்ளுவர், பரிசிலர்
ஒன்னார் தேஎத்தும், நின்னுடைத்து எனவே.

திணை பாடாண் திணை; துறை இயன்மொழி.
அவன், 'எம் உள்ளீர்? எம் நாட்டீர்?' என்றாற்கு ஆவூர் மூலங்கிழார் பாடியது.

39
புறவின் அல்லல் சொல்லிய, கறை அடி
யானை வால் மருப்பு எறிந்த வெண் கடைக்
கோல் நிறை துலாஅம் புக்கோன் மருக!
ஈதல் நின் புகழும் அன்றே; சார்தல்
5
ஒன்னார் உட்கும் துன் அருங் கடுந் திறல்
தூங்கு எயில் எறிந்த நின் ஊங்கணோர் நினைப்பின்,
அடுதல் நின் புகழும் அன்றே; கெடு இன்று,
மறம் கெழு சோழர் உறந்தை அவையத்து,
அறம் நின்று நிலையிற்று ஆகலின், அதனால்
10
முறைமை நின் புகழும் அன்றே; மறம் மிக்கு
எழு சமம் கடந்த எழு உறழ் திணி தோள்,
கண் ஆர் கண்ணி, கலி மான், வளவ!
யாங்கனம் மொழிகோ யானே ஓங்கிய
வரை அளந்து அறியாப் பொன் படு நெடுங் கோட்டு
15
இமயம் சூட்டிய ஏம விற்பொறி,
மாண் வினை நெடுந் தேர், வானவன் தொலைய,
வாடா வஞ்சி வாட்டும் நின்
பீடு கெழு நோன் தாள் பாடுங்காலே?

திணையும் துறையும் அவை.
அவனை மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.

40
நீயே, பிறர் ஓம்புறு மற மன் எயில்
ஓம்பாது கடந்து அட்டு, அவர்
முடி புனைந்த பசும் பொன் நின்
அடி பொலியக் கழல் தைஇய
5
வல்லாளனை; வய வேந்தே!
யாமே, நின், இகழ் பாடுவோர் எருத்து அடங்க,
புகழ் பாடுவோர் பொலிவு தோன்ற,
இன்று கண்டாங்குக் காண்குவம் என்றும்
இன்சொல் எண் பதத்தை ஆகுமதி பெரும!
10
ஒரு பிடி படியும் சீறிடம்
எழு களிறு புரக்கும் நாடு கிழவோயே!

திணை அது; துறை செவியறிவுறூஉ.
அவனை ஆவூர் முலங்கிழார் பாடியது.

41
காலனும் காலம் பார்க்கும்; பாராது,
வேல் ஈண்டு தானை விழுமியோர் தொலைய,
வேண்டு இடத்து அடூஉம் வெல் போர் வேந்தே!
திசை இரு நான்கும் உற்கம் உற்கவும்,
5
பெரு மரத்து, இலை இல் நெடுங் கோடு வற்றல் பற்றவும்,
வெங் கதிர்க் கனலி துற்றவும், பிறவும்,
அஞ்சுவரத் தகுந புள்ளுக் குரல் இயம்பவும்,
எயிறு நிலத்து வீழவும், எண்ணெய் ஆடவும்,
களிறு மேல் கொள்ளவும், காழகம் நீப்பவும்,
10
வெள்ளி நோன் படை கட்டிலொடு கவிழவும்,
கனவின் அரியன காணா, நனவில்
செருச் செய் முன்ப! நின் வரு திறன் நோக்கி,
மையல் கொண்ட ஏமம் இல் இருக்கையர்,
புதல்வர் பூங் கண் முத்தி, மனையோட்கு
15
எவ்வம் கரக்கும் பைதல் மாக்களொடு
பெருங் கலக்குற்றன்றால் தானே காற்றோடு
எரி நிகழ்ந்தன்ன செலவின்
செரு மிகு வளவ! நின் சினைஇயோர் நாடே.

திணை வஞ்சி; துறை கொற்றவள்ளை.
அவனைக் கோவூர் கிழார் பாடியது.

42
ஆனா ஈகை, அடு போர், அண்ணல்! நின்
யானையும் மலையின் தோன்றும்; பெரும! நின்
தானையும் கடல் என முழங்கும்; கூர் நுனை
வேலும் மின்னின் விளங்கும்; உலகத்து
5
அரைசு தலை பனிக்கும் ஆற்றலைஆதலின்,
புரை தீர்ந்தன்று; அது புதுவதோ அன்றே;
தண் புனல் பூசல் அல்லது, நொந்து,
'களைக, வாழி, வளவ!' என்று, நின்
முனைதரு பூசல் கனவினும் அறியாது,
10
புலி புறங்காக்கும் குருளை போல,
மெலிவு இல் செங்கோல் நீ புறங்காப்ப,
பெரு விறல் யாணர்த்து ஆகி, அரிநர்
கீழ் மடைக் கொண்ட வாளையும், உழவர்
படை மிளிர்ந்திட்ட யாமையும், அறைநர்
15
கரும்பில் கொண்ட தேனும், பெருந் துறை
நீர் தரு மகளிர் குற்ற குவளையும்,
வன் புலக் கேளிர்க்கு வரு விருந்து அயரும்
மென் புல வைப்பின் நல் நாட்டுப் பொருந!
மலையின் இழிந்து, மாக் கடல் நோக்கி,
20
நில வரை இழிதரும் பல் யாறு போல,
புலவர் எல்லாம் நின் நோக்கினரே;
நீயே, மருந்து இல் கணிச்சி வருந்த வட்டித்துக்
கூற்று வெகுண்டன்ன முன்பொடு,
மாற்று இரு வேந்தர் மண் நோக்கினையே.

திணை வாகை; துறை அரசவாகை.
அவனை இடைக்காடனார் பாடியது.

44
இரும் பிடித் தொழுதியொடு பெருங் கயம் படியா,
நெல்லுடைக் கவளமொடு நெய்ம் மிதி பெறாஅ,
திருந்து அரை நோன் வெளில் வருந்த ஒற்றி,
நிலமிசைப் புரளும் கைய, வெய்து உயிர்த்து,
5
அலமரல் யானை உரும் என முழங்கவும்,
பால் இல் குழவி அலறவும், மகளிர்
பூ இல் வறுந் தலை முடிப்பவும், நீர் இல்
வினை புனை நல் இல் இனைகூஉக் கேட்பவும்,
இன்னாது அம்ம, ஈங்கு இனிது இருத்தல்;
10
துன் அருந் துப்பின் வய மான் தோன்றல்!
அறவை ஆயின்,' நினது' எனத் திறத்தல்;
மறவை ஆயின், போரொடு திறத்தல்;
அறவையும் மறவையும் அல்லையாக,
திறவாது அடைத்த திண் நிலைக் கதவின்
15
நீள் மதில் ஒரு சிறை ஒடுங்குதல்
நாணுத்தகவு உடைத்து, இது காணுங்காலே.

திணையும் துறையும் அவை.
அவன் ஆவூர் முற்றியிருந்த காலத்து அடைத்து இருந்த நெடுங்கிள்ளியைக் கோவூர் கிழார் பாடியது.

46
நீயே, புறவின் அல்லல் அன்றியும், பிறவும்
இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை,
இவரே, புலன் உழுது உண்மார் புன்கண் அஞ்சி,
தமது பகுத்து உண்ணும் தண் நிழல் வாழ்நர்;
5
களிறு கண்டு அழூஉம் அழாஅல் மறந்த
புன் தலைச் சிறாஅர்; மன்று மருண்டு நோக்கி,
விருந்தின் புன்கண் நோவுடையர்;
கேட்டனைஆயின், நீ வேட்டது செய்ம்மே!

திணையும் துறையும் அவை.
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் மலையமான் மக்களை யானைக்கு இடுவுழி, கோவூர் கிழார் பாடி, உய்யக் கொண்டது.

53
முதிர் வார் இப்பி முத்த வார் மணல்,
கதிர் விடு மணியின் கண் பொரு மாடத்து,
இலங்கு வளை மகளிர் தெற்றி ஆடும்
விளங்கு சீர் விளங்கில் விழுமம் கொன்ற
5
களம் கொள் யானை, கடு மான், பொறைய!
விரிப்பின் அகலும்; தொகுப்பின் எஞ்சும்;
மம்மர் நெஞ்சத்து எம்மனோர்க்கு ஒருதலை
கைம்முற்றல, நின் புகழே, என்றும்;
ஒளியோர் பிறந்த இம் மலர் தலை உலகத்து
10
வாழேம் என்றலும் அரிதே 'தாழாது
செறுத்த செய்யுள் செய் செந் நாவின்,
வெறுத்த கேள்வி, விளங்கு புகழ்க் கபிலன்
இன்று உளன் ஆயின், நன்றுமன்' என்ற நின்
ஆடு கொள் வரிசைக்கு ஒப்ப,
15
பாடுவல் மன்னால், பகைவரைக் கடப்பே.

திணையும் துறையும் அவை.
சேரன் மாந்தரஞ் சேரல் இரும்பொறையைப் பொருந்தில் இளங்கீரனார் பாடியது.

55
ஓங்கு மலைப் பெரு வில் பாம்பு ஞாண் கொளீஇ,
ஒரு கணை கொண்டு மூஎயில் உடற்றி,
பெரு விறல் அமரர்க்கு வென்றி தந்த
கறை மிடற்று அண்ணல் காமர் சென்னிப்
5
பிறை நுதல் விளங்கும் ஒரு கண் போல,
வேந்து மேம்பட்ட பூந் தார் மாற!
கடுஞ் சினத்த கொல் களிறும்; கதழ் பரிய கலி மாவும்,
நெடுங் கொடிய நிமிர் தேரும், நெஞ்சு உடைய புகல் மறவரும், என
நான்குடன் மாண்டதுஆயினும், மாண்ட
10
அற நெறி முதற்றே, அரசின் கொற்றம்;
அதனால், 'நமர்' எனக் கோல் கோடாது,
'பிறர்' எனக் குணம் கொல்லாது,
ஞாயிற்று அன்ன வெந் திறல் ஆண்மையும்,
திங்கள் அன்ன தண் பெருஞ் சாயலும்,
15
வானத்து அன்ன வண்மையும், மூன்றும்,
உடையை ஆகி, இல்லோர் கையற,
நீ நீடு வாழிய நெடுந்தகை! தாழ் நீர்
வெண் தலைப் புணரி அலைக்கும் செந்தில்
நெடு வேள் நிலைஇய காமர் வியன் துறை,
20
கடு வளி தொகுப்ப ஈண்டிய
வடு ஆழ் எக்கர் மணலினும் பலவே!

திணை பாடாண் திணை; துறை செவியறிவுறூஉ.
பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனை மதுரை மருதன் இளநாகனார் பாடியது.

57
வல்லார் ஆயினும், வல்லுநர் ஆயினும்,
புகழ்தல் உற்றோர்க்கு மாயோன் அன்ன,
உரைசால் சிறப்பின் புகழ்சால் மாற!
நின் ஒன்று கூறுவது உடையேன்: என் எனின்,
5
நீயே, பிறர் நாடு கொள்ளும்காலை, அவர் நாட்டு
இறங்கு கதிர்க் கழனி நின் இளையரும் கவர்க;
நனந் தலைப் பேர் ஊர் எரியும் நைக்க;
மின்னு நிமிர்ந்தன்ன நின் ஒளிறு இலங்கு நெடு வேல்
ஒன்னார்ச் செகுப்பினும் செகுக்க; என்னதூஉம்
10
கடிமரம் தடிதல் ஓம்பு நின்
நெடு நல் யானைக்குக் கந்து ஆற்றாவே.

திணை வஞ்சி; துறை துணை வஞ்சி.
அவனைக் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார் பாடியது.

63
எனைப் பல் யானையும் அம்பொடு துளங்கி,
விளைக்கும் வினை இன்றிப் படை ஒழிந்தனவே;
விறல் புகழ் மாண்ட புரவி எல்லாம்
மறத் தகை மைந்தரொடு ஆண்டுப் பட்டனவே;
5
தேர் தர வந்த சான்றோர் எல்லாம்,
தோல் கண் மறைப்ப, ஒருங்கு மாய்ந்தனரே;
விசித்து வினை மாண்ட மயிர்க் கண் முரசம்,
பொறுக்குநர் இன்மையின், இருந்து விளிந்தனவே;
சாந்து அமை மார்பில் நெடு வேல் பாய்ந்தென,
10
வேந்தரும் பொருது, களத்து ஒழிந்தனர்; இனியே,
என் ஆவதுகொல்தானே கழனி
ஆம்பல் வள்ளித் தொடிக் கை மகளிர்
பாசவல் முக்கி, தண் புனல் பாயும்,
யாணர் அறாஅ வைப்பின்
15
காமர் கிடக்கை அவர் அகன் தலை நாடே?

திணையும் துறையும் அவை.
அவரை அக் களத்தில் பரணர் பாடியது.

64
நல் யாழ், ஆகுளி, பதலையொடு சுருக்கி,
செல்லாமோதில் சில் வளை விறலி!
களிற்றுக் கணம் பொருத கண் அகன் பறந்தலை,
விசும்பு ஆடு எருவை பசுந் தடி தடுப்ப,
5
பகைப் புலம் மரீஇய தகைப் பெருஞ் சிறப்பின்
குடுமிக் கோமாற் கண்டு,
நெடு நீர்ப் புற்கை நீத்தனம் வரற்கே?

திணை பாடாண் திணை; துறை விறலியாற்றுப்படை.
பாண்டியன் பல் யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியை நெடும்பல்லியத்தனார் பாடியது.

66
நளி இரு முந்நீர் நாவாய் ஓட்டி,
வளி தொழில் ஆண்ட உரவோன் மருக!
களி இயல் யானைக் கரிகால்வளவ!
சென்று, அமர்க் கடந்த நின் ஆற்றல் தோன்ற
5
வென்றோய்! நின்னினும் நல்லன் அன்றே
கலி கொள் யாணர் வெண்ணிப் பறந்தலை,
மிகப் புகழ் உலகம் எய்தி,
புறப் புண் நாணி, வடக்கிருந்தோனே?

திணை வாகை; துறை அரச வாகை.
சோழன் கரிகாற் பெருவளத்தானை வெண்ணிக் குயத்தியார் பாடியது.

68
உடும்பு உரித்தன்ன என்பு எழு மருங்கின்
கடும்பின் கடும் பசி களையுநர்க் காணாது,
சில் செவித்து ஆகிய கேள்வி நொந்து நொந்து,
ஈங்கு எவன் செய்தியோ? பாண! 'பூண் சுமந்து,
5
அம் பகட்டு எழிலிய செம் பொறி ஆகத்து
மென்மையின் மகளிர்க்கு வணங்கி, வன்மையின்
ஆடவர்ப் பிணிக்கும் பீடு கெழு நெடுந் தகை,
புனிறு தீர் குழவிக்கு இலிற்று முலை போலச்
சுரந்த காவிரி மரம் கொல் மலி நீர்
10
மன்பதை புரக்கும் நல் நாட்டுப் பொருநன்,
உட்பகை ஒரு திறம் பட்டென, புட் பகைக்கு
ஏவான் ஆகலின், சாவேம் யாம்' என,
நீங்கா மறவர் வீங்கு தோள் புடைப்ப,
தணி பறை அறையும் அணி கொள் தேர் வழி,
15
கடுங் கள் பருகுநர் நடுங்கு கை உகுத்த
நறுஞ் சேறு ஆடிய வறுந் தலை யானை
நெடு நகர் வரைப்பில் படு முழா ஓர்க்கும்
உறந்தையோனே குருசில்;
பிறன் கடை மறப்ப, நல்குவன், செலினே.

திணை அது; துறை பாணாற்றுப்படை.
சோழன் நலங்கிள்ளியைக் கோவூர் கிழார் பாடியது.

69
கையது, கடன் நிறை யாழே; மெய்யது,
புரவலர் இன்மையின் பசியே; அரையது,
வேற்று இழை நுழைந்த வேர் நனை சிதாஅர்
ஓம்பி உடுத்த உயவல் பாண!
5
பூட்கை இல்லோன் யாக்கை போலப்
பெரும் புல்லென்ற இரும் பேர் ஒக்கலை;
வையகம் முழுதுடன் வளைஇ, பையென
என்னை வினவுதி ஆயின், மன்னர்
அடு களிறு உயவும் கொடி கொள் பாசறை,
10
குருதிப் பரப்பின் கோட்டு மா தொலைச்சி,
புலாக் களம் செய்த கலாஅத் தானையன்
பிறங்கு நிலை மாடத்து உறந்தையோனே;
பொருநர்க்கு ஓக்கிய வேலன், ஒரு நிலைப்
பகைப் புலம் படர்தலும் உரியன்; தகைத் தார்
15
ஒள் எரி புரையும் உரு கெழு பசும் பூண்
கிள்ளி வளவற் படர்குவை ஆயின்,
நெடுங் கடை நிற்றலும் இலையே; கடும் பகல்
தேர் வீசு இருக்கை ஆர நோக்கி,
நீ அவற் கண்ட பின்றை, பூவின்
20
ஆடு வண்டு இமிராத் தாமரை
சூடாயாதல் அதனினும் இலையே.

திணையும் துறையும் அவை.
சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை ஆலத்தூர் கிழார் பாடியது.

72
'நகுதக்கனரே, நாடு மீக்கூறுநர்;
இளையன் இவன்' என உளையக் கூறி,
'படு மணி இரட்டும் பா அடிப் பணைத் தாள்
நெடு நல் யானையும், தேரும், மாவும்,
5
படை அமை மறவரும், உடையம் யாம்' என்று
உறு துப்பு அஞ்சாது, உடல் சினம் செருக்கி,
சிறு சொல் சொல்லிய சினம் கெழு வேந்தரை
அருஞ் சமம் சிதையத் தாக்கி, முரசமொடு
ஒருங்கு அகப்படேஎன் ஆயின் பொருந்திய
10
என் நிழல் வாழ்நர் செல் நிழல் காணாது,
'கொடியன் எம் இறை' எனக் கண்ணீர் பரப்பி,
குடி பழி தூற்றும் கோலேன் ஆகுக;
ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி
மாங்குடி மருதன் தலைவன் ஆக,
15
உலகமொடு நிலைஇய பலர் புகழ் சிறப்பின்
புலவர் பாடாது வரைக, என் நிலவரை;
புரப்போர் புன்கண் கூர,
இரப்போர்க்கு ஈயா இன்மை யான் உறவே.

திணையும் துறையும் அவை.
பாண்டியன் தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியன் பாட்டு.

73
மெல்ல வந்து, என் நல் அடி பொருந்தி,
'ஈ' என இரக்குவர் ஆயின், சீருடை
முரசு கெழு தாயத்து அரசோ தஞ்சம்;
இன் உயிர் ஆயினும் கொடுக்குவென், இந் நிலத்து;
5
ஆற்றல் உடையோர் ஆற்றல் போற்றாது, என்
உள்ளம் எள்ளிய மடவோன், தெள்ளிதின்
துஞ்சு புலி இடறிய சிதடன் போல,
உய்ந்தனன் பெயர்தலோ அரிதே; மைந்துடைக்
கழை தின் யானைக் கால் அகப்பட்ட
10
வன் திணி நீள் முளை போல, சென்று, அவண்
வருந்தப் பொரேஎன்ஆயின், பொருந்திய
தீது இல் நெஞ்சத்துக் காதல் கொள்ளாப்
பல் இருங் கூந்தல் மகளிர்
ஒல்லா முயக்கிடைக் குழைக, என் தாரே!

திணையும் துறையும் அவை.
சோழன் நலங்கிள்ளி பாட்டு.

79
மூதூர் வாயில் பனிக் கயம் மண்ணி,
மன்ற வேம்பின் ஒண் குழை மலைந்து,
தெண் கிணை முன்னர்க் களிற்றின் இயலி,
வெம் போர்ச் செழியனும் வந்தனன்; எதிர்ந்த
5
வம்ப மள்ளரோ பலரே;
எஞ்சுவர் கொல்லோ, பகல் தவச் சிறிதே?

திணையும் துறையும் அவை.
அவனை அவர் பாடியது.

80
இன் கடுங் கள்ளின் ஆமூர் ஆங்கண்,
மைந்துடை மல்லன் மத வலி முருக்கி,
ஒரு கால் மார்பு ஒதுங்கின்றே; ஒரு கால்
வரு தார் தாங்கிப் பின் ஒதுங்கின்றே
5
நல்கினும் நல்கான் ஆயினும், வெல் போர்ப்
பொரல் அருந் தித்தன் காண்கதில் அம்ம
பசித்துப் பணை முயலும் யானை போல,
இரு தலை ஒசிய எற்றி,
களம் புகு மல்லற் கடந்து அடு நிலையே.

திணை தும்பை; துறை எருமை மறம்.
சோழன் போர்வைக்கோப் பெருநற்கிள்ளி முக்காவனாட்டு ஆமூர் மல்லனைப் பொருது அட்டு நின்றானைச் சாத்தந்தையார் பாடியது.

81
ஆர்ப்பு எழு கடலினும் பெரிது; அவன் களிறே
கார்ப் பெயல் உருமின் முழங்கல் ஆனாவே;
யார்கொல் அளியர்தாமே ஆர் நார்ச்
செறியத் தொடுத்த கண்ணிக்
5
கவி கை மள்ளன் கைப்பட்டோரே?

திணை வாகை; துறை அரச வாகை.
அவனை அவர் பாடியது.

93
திண் பிணி முரசம் இழுமென முழங்கச்
சென்று, அமர் கடத்தல் யாவது? வந்தோர்
தார் தாங்குதலும் ஆற்றார், வெடிபட்டு,
ஓடல் மரீஇய பீடு இல் மன்னர்
5
நோய்ப்பால் விளிந்த யாக்கை தழீஇ,
காதல் மறந்து, அவர் தீது மருங்கு அறுமார்,
அறம் புரி கொள்கை நான்மறை முதல்வர்
திறம் புரி பசும் புல் பரப்பினர் கிடப்பி,
'மறம் கந்தாக நல் அமர் வீழ்ந்த
10
நீள் கழல் மறவர் செல்வுழிச் செல்க!' என
வாள் போழ்ந்து அடக்கலும் உய்ந்தனர் மாதோ
வரி ஞிமிறு ஆர்க்கும் வாய் புகு கடாஅத்து
அண்ணல் யானை அடு களத்து ஒழிய,
அருஞ் சமம் ததைய நூறி, நீ,
15
பெருந் தகை! விழுப் புண் பட்ட மாறே.

திணை வாகை; துறை அரச வாகை.
அவன் பொருது புண்பட்டு நின்றோனை அவர் பாடியது.

94
ஊர்க் குறுமாக்கள் வெண் கோடு கழாஅலின்,
நீர்த் துறை படியும் பெருங் களிறு போல
இனியை, பெரும! எமக்கே; மற்று அதன்
துன் அருங் கடாஅம் போல
5
இன்னாய், பெரும! நின் ஒன்னாதோர்க்கே.

திணையும் துறையும் அவை.
அவனை அவர் பாடியது.

96
அலர் பூந் தும்பை அம் பகட்டு மார்பின்,
திரண்டு நீடு தடக்கை, என்னை இளையோற்கு
இரண்டு எழுந்தனவால், பகையே: ஒன்றே,
பூப் போல் உண்கண் பசந்து, தோள் நுணுகி,
5
நோக்கிய மகளிர்ப் பிணித்தன்று; ஒன்றே,
'விழவின்றுஆயினும், படு பதம் பிழையாது,
மை ஊன் மொசித்த ஒக்கலொடு, துறை நீர்க்
கைமான் கொள்ளுமோ?' என,
உறையுள் முனியும், அவன் செல்லும் ஊரே.

திணை அது; துறை இயன்மொழி.
அவன் மகன் பொகுட்டெழினியை அவர் பாடியது.

97
போர்க்கு உரைஇப் புகன்று கழித்த வாள்,
உடன்றவர் காப்புடை மதில் அழித்தலின்,
ஊன் உற மூழ்கி, உரு இழந்தனவே;
வேலே, குறும்பு அடைந்த அரண் கடந்து, அவர்
5
நறுங் கள்ளின் நாடு நைத்தலின்,
சுரை தழீஇய இருங் காழொடு
மடை கலங்கி நிலை திரிந்தனவே;
களிறே, எழூஉத் தாங்கிய கதவம் மலைத்து, அவர்
குழூஉக் களிற்றுக் குறும்பு உடைத்தலின்,
10
பரூஉப் பிணிய தொடி கழிந்தனவே;
மாவே, பரந்து ஒருங்கு மலைந்த மறவர்
பொலம் பைந் தார் கெடப் பரிதலின்,
களன் உழந்து அசைஇய மறுக் குளம்பினவே;
அவன் தானும், நிலம் திரைக்கும் கடல் தானைப்
15
பொலந் தும்பைக் கழல் பாண்டில்
கணை பொருத துளைத் தோலன்னே.
ஆயிடை, உடன்றோர் உய்தல் யாவது? 'தடந் தாள்,
பிணிக் கதிர், நெல்லின் செம்மல் மூதூர்
நுமக்கு உரித்தாகல் வேண்டின், சென்று அவற்கு
20
இறுக்கல் வேண்டும், திறையே; மறுப்பின்,
ஒல்வான் அல்லன், வெல்போரான்' எனச்
சொல்லவும் தேறீராயின், மெல் இயல்,
கழல் கனி வகுத்த துணைச் சில் ஓதி,
குறுந் தொடி மகளிர் தோள் விடல்
25
இறும்பூது அன்று; அஃது அறிந்து ஆடுமினே.

திணையும் துறையும் அவை.
அதியமான் நெடுமான் அஞ்சியை அவர் பாடியது.

98
முனைத் தெவ்வர் முரண் அவியப்
பொரக் குறுகிய நுதி மருப்பின் நின்
இனக் களிறு செலக் கண்டவர்
மதில் கதவம் எழுச் செல்லவும்,
5
பிணன் அழுங்கக் களன் உழக்கிச்
செலவு அசைஇய மறுக் குளம்பின் நின்
இன நல் மாச் செலக் கண்டவர்
கவை முள்ளின் புழை அடைப்பவும்,
மார்புறச் சேர்ந்து ஒல்காத்
10
தோல் செறிப்பு இல் நின் வேல் கண்டவர்
தோல் கழியொடு பிடி செறிப்பவும்,
வாள் வாய்த்த வடுப் பரந்த நின்
மற மைந்தர் மைந்து கண்டவர்
புண் படு குருதி அம்பு ஒடுக்கவும்,
15
நீயே, ஐயவி புகைப்பவும் தாங்காது, ஒய்யென,
உறுமுறை மரபின் புறம் நின்று உய்க்கும்
கூற்றத்து அனையை; ஆகலின், போற்றார்
இரங்க விளிவதுகொல்லோ வரம்பு அணைந்து
இறங்குகதிர் அலம்வரு கழனி,
20
பெரும் புனல் படப்பை, அவர் அகன் தலை நாடே!

திணை வாகை; துறை அரச வாகை; திணை வஞ்சியும், துறை கொற்ற வள்ளையும் ஆம்.
அவனை அவர் பாடியது.

100
கையது வேலே; காலன புனை கழல்;
மெய்யது வியரே; மிடற்றது பசும் புண்;
வட்கர் போகிய வளர் இளம் போந்தை
உச்சிக் கொண்ட ஊசி வெண் தோட்டு,
5
வெட்சி மா மலர், வேங்கையொடு விரைஇ,
சுரி இரும் பித்தை பொலியச் சூடி,
வரிவயம் பொருத வயக் களிறு போல,
இன்னும் மாறாது சினனே; அன்னோ!
உய்ந்தனர் அல்லர், இவன் உடற்றியோரே;
10
செறுவர் நோக்கிய கண், தன்
சிறுவனை நோக்கியும், சிவப்பு ஆனாவே.

திணையும் துறையும் அவை; திணை வஞ்சியும், துறை கொற்றவள்ளையும் ஆம்.
அதியமான் தவமகன் பிறந்தவனைக் கண்டானை அவர் பாடியது.

101
ஒரு நாள் செல்லலம்; இரு நாள் செல்லலம்;
பல நாள் பயின்று, பலரொடு செல்லினும்,
தலை நாள் போன்ற விருப்பினன்மாதோ
இழை அணி யானை இயல் தேர் அஞ்சி
5
அதியமான்; பரிசில் பெறூஉம் காலம்
நீட்டினும், நீட்டாதுஆயினும், களிறு தன்
கோட்டு இடை வைத்த கவளம் போலக்
கையகத்தது; அது பொய் ஆகாதே;
அருந்த ஏமாந்த நெஞ்சம்!
10
வருந்த வேண்டா; வாழ்க, அவன் தாளே!

திணை பாடாண் திணை; துறை பரிசில் கடாநிலை.
அவனை அவர் பாடியது.

103
ஒரு தலைப் பதலை தூங்க, ஒரு தலைத்
தூம்பு அகச் சிறு முழாத் தூங்கத் தூக்கி,
'கவிழ்ந்த மண்டை மலர்க்குநர் யார்?' எனச்
சுரன்முதல் இருந்த சில் வளை விறலி!
5
செல்வைஆயின், சேணோன் அல்லன்;
முனை சுட எழுந்த மங்குல் மாப் புகை
மலை சூழ் மஞ்சின், மழ களிறு அணியும்
பகைப் புலத்தோனே, பல் வேல் அஞ்சி;
பொழுது இடைப்படாஅப் புலரா மண்டை
10
மெழுகு மெல் அடையின் கொழு நிணம் பெருப்ப,
அலத்தற் காலை ஆயினும்,
புரத்தல் வல்லன்; வாழ்க, அவன் தாளே!

திணை அது; துறை விறலியாற்றுப்படை.
அதியமான் நெடுமான் அஞ்சியை அவர் பாடியது.

104
போற்றுமின், மறவீர்! சாற்றுதும், நும்மை:
ஊர்க் குறுமாக்கள் ஆடக் கலங்கும்
தாள் படு சில் நீர்க் களிறு அட்டு வீழ்க்கும்
ஈர்ப்புடைக் கராஅத்து அன்ன என்னை
5
நுண் பல் கருமம் நினையாது,
'இளையன்' என்று இகழின், பெறல் அரிது, ஆடே.

திணை வாகை; துறை அரச வாகை.
அவனை அவர் பாடியது.

109
அளிதோதானே, பாரியது பறம்பே!
நளி கொள் முரசின் மூவிரும் முற்றினும்,
உழவர் உழாதன நான்கு பயன் உடைத்தே:
ஒன்றே, சிறியிலை வெதிரின் நெல் விளையும்மே;
5
இரண்டே, தீம் சுளைப் பலவின் பழம் ஊழ்க்கும்மே;
மூன்றே, கொழுங் கொடி வள்ளிக் கிழங்கு வீழ்க்கும்மே;
நான்கே, அணி நிற ஓரி பாய்தலின், மீது அழிந்து,
திணி நெடுங் குன்றம் தேன் சொரியும்மே.
வான் கண் அற்று, அவன் மலையே; வானத்து,
10
மீன் கண் அற்று, அதன் சுனையே; ஆங்கு,
மரம்தொறும் பிணித்த களிற்றினிர் ஆயினும்,
புலம்தொறும் பரப்பிய தேரினிர் ஆயினும்,
தாளின் கொள்ளலிர்; வாளின் தாரலன்;
யான் அறிகுவென், அது கொள்ளும் ஆறே:
15
சுகிர் புரி நரம்பின் சீறியாழ் பண்ணி,
விரை ஒலி கூந்தல் நும் விறலியர் பின் வர,
ஆடினிர் பாடினிர் செலினே,
நாடும் குன்றும் ஒருங்கு ஈயும்மே.

திணை நொச்சி; துறை மகள் மறுத்தல்.
அவனை அவர் பாடியது.

114
ஈண்டு நின்றோர்க்கும் தோன்றும்; சிறு வரை
சென்று நின்றோர்க்கும் தோன்றும், மன்ற
களிறு மென்று இட்ட கவளம் போல,
நறவுப் பிழிந்து இட்ட கோதுடைச் சிதறல்
5
வார் அசும்பு ஒழுகும் முன்றில்,
தேர் வீசு இருக்கை, நெடியோன் குன்றே.

திணையும் துறையும் அவை.
அவன் மகளிரைக் கொண்டுபோம் கபிலர் பறம்பு நோக்கி நின்று சொல்லியது.

115
பாணர் மண்டை நிறையப் பெய்ம்மார்,
வாக்க உக்க தேக் கள் தேறல்
கல் அலைத்து ஒழுகும்மன்னே! பல் வேல்,
5
அண்ணல் யானை, வேந்தர்க்கு
இன்னான் ஆகிய இனியோன் குன்றே.

திணையும் துறையும் அவை.
அவனை அவர் பாடியது.

119
கார்ப் பெயல் தலைஇய காண்பு இன் காலை,
களிற்று முக வரியின் தெறுழ் வீ பூப்ப,
செம் புற்று ஈயலின் இன் அளைப் புளித்து;
மென் தினை யாணர்த்து; நந்தும் கொல்லோ
5
நிழல் இல் நீள் இடைத் தனி மரம் போல,
பணை கெழு வேந்தரை இறந்தும்
இரவலர்க்கு ஈயும் வள்ளியோன் நாடே!

திணையும் துறையும் அவை.
அவனை அவர் பாடியது.

125
பருத்திப் பெண்டின் பனுவல் அன்ன,
நெருப்புச் சினம் தணிந்த நிணம் தயங்கு கொழுங் குறை,
பரூஉக் கள் மண்டையொடு, ஊழ் மாறு பெயர
உண்கும், எந்தை! நிற் காண்கு வந்திசினே,
5
நள்ளாதார் மிடல் சாய்த்த
வல்லாள! நின் மகிழ் இருக்கையே.
உழுத நோன் பகடு அழி தின்றாங்கு
நல் அமிழ்து ஆக, நீ நயந்து உண்ணும் நறவே;
குன்றத்து அன்ன களிறு பெயர,
10
கடந்து அட்டு வென்றோனும், நிற் கூறும்மே;
'வெலீஇயோன் இவன்' என,
'கழல் அணிப் பொலிந்த சேவடி நிலம் கவர்பு
விரைந்து வந்து, சமம் தாங்கிய,
வல் வேல் மலையன் அல்லன் ஆயின்,
15
நல் அமர் கடத்தல் எளிதுமன், நமக்கு' எனத்
தோற்றோன்தானும், நிற் கூறும்மே,
'தொலைஇயோன் இவன்' என,
ஒரு நீ ஆயினை பெரும! பெரு மழைக்கு
இருக்கை சான்ற உயர் மலைத்
20
திருத் தகு சேஎய்! நிற் பெற்றிசினோர்க்கே.

திணை வாகை; துறை அரச வாகை.
சேரமான் மாந்தரஞ்சேரல் இரும்பொறையும் சோழன் இராச சூயம் வேட்ட பெருநற்கிள்ளியும் பொருதவழி, சோழற்குத் துப்பாகிய தேர்வண்மலையனை வடம வண்ணக்கன் பெருஞ்சாத்தனார் பாடியது.

126
ஒன்னார் யானை ஓடைப் பொன் கொண்டு,
பாணர் சென்னி பொலியத் தைஇ,
வாடாத் தாமரை சூட்டிய விழுச் சீர்
ஓடாப் பூட்கை உரவோன் மருக!
5
வல்லேம் அல்லேம் ஆயினும், வல்லே
நின்வயின் கிளக்குவமாயின், கங்குல்
துயில் மடிந்தன்ன தூங்கு இருள் இறும்பின்,
பறை இசை அருவி, முள்ளூர்ப் பொருந!
தெறல் அரு மரபின் நின் கிளையொடும் பொலிய,
10
நிலமிசைப் பரந்த மக்கட்கு எல்லாம்
புலன் அழுக்கு அற்ற அந்தணாளன்,
இரந்து செல் மாக்கட்கு இனி இடன் இன்றி,
பரந்து இசை நிற்கப் பாடினன்; அதற்கொண்டு
சினம் மிகு தானை வானவன் குட கடல்,
15
பொலம் தரு நாவாய் ஓட்டிய அவ் வழி,
பிற கலம் செல்கலாது அனையேம் அத்தை,
இன்மை துரப்ப, இசை தர வந்து, நின்
வண்மையின் தொடுத்தனம், யாமே முள் எயிற்று
அரவு எறி உருமின் முரசு எழுந்து இயம்ப,
20
அண்ணல் யானையொடு வேந்து களத்து ஒழிய,
அருஞ் சமம் ததையத் தாக்கி, நன்றும்
நண்ணாத் தெவ்வர்த் தாங்கும்
பெண்ணை அம் படப்பை நாடு கிழவோயே!

திணை பாடாண் திணை; துறை பரிசில் துறை.
மலையமான் திருமுடிக் காரியை மாறோக்கத்து நப்பசலையார் பாடியது.

127
'களங்கனி அன்ன கருங் கோட்டுச் சீறியாழ்ப்
பாடு இன் பனுவல் பாணர் உய்த்தென,
களிறு இலவாகிய புல் அரை நெடு வெளில்,
கான மஞ்ஞை கணனொடு சேப்ப,
5
ஈகை அரிய இழை அணி மகளிரொடு
சாயின்று' என்ப, ஆஅய் கோயில்;
சுவைக்கு இனிது ஆகிய குய்யுடை அடிசில்
பிறர்க்கு ஈவு இன்றித் தம் வயிறு அருத்தி,
உரைசால் ஓங்கு புகழ் ஒரீஇய
10
முரைசு கெழு செல்வர் நகர் போலாதே.

திணை அது; துறை கடைநிலை.
ஆயை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடியது.

129
குறி இறைக் குரம்பைக் குறவர் மாக்கள்
வாங்கு அமைப் பழுனிய தேறல் மகிழ்ந்து,
வேங்கை முன்றில் குரவை அயரும்,
தீம் சுளைப் பலவின், மா மலைக் கிழவன்
5
ஆஅய் அண்டிரன், அடு போர் அண்ணல்
இரவலர்க்கு ஈத்த யானையின், கரவு இன்று,
வானம் மீன் பல பூப்பின், ஆனாது
ஒரு வழிக் கரு வழி இன்றிப்
பெரு வெள்ளென்னின், பிழையாது மன்னே.

திணை அது; துறை இயன்மொழி.
அவனை அவர் பாடியது.

130
விளங்கு மணிக் கொடும் பூண் ஆஅய்! நின் நாட்டு
இளம் பிடி ஒரு சூல் பத்து ஈனும்மோ?
நின்னும் நின்மலையும் பாடி வருநர்க்கு,
இன் முகம் கரவாது, உவந்து நீ அளித்த
5
அண்ணல் யானை எண்ணின், கொங்கர்க்
குட கடல் ஓட்டிய ஞான்றைத்
தலைப்பெயர்த்திட்ட வேலினும் பலவே!

திணையும் துறையும் அவை.
அவனை அவர் பாடியது.

131
மழைக் கணம் சேக்கும் மா மலைக் கிழவன்,
வழைப் பூங் கண்ணி வாய் வாள் அண்டிரன்,
குன்றம் பாடினகொல்லோ
களிறு மிக உடைய இக் கவின் பெறு காடே?

திணையும் துறையும் அவை.
அவனை அவர் பாடியது.

135
கொடுவரி வழங்கும் கோடு உயர் நெடு வரை,
அரு விடர்ச் சிறு நெறி ஏறலின், வருந்தி,
தடவரல் கொண்ட தகை மெல் ஒதுக்கின்,
வளைக் கை விறலி என் பின்னள் ஆக,
5
பொன் வார்ந்தன்ன புரி அடங்கு நரம்பின்
வரி நவில் பனுவல் புலம் பெயர்ந்து இசைப்ப,
படுமலை நின்ற பயம் கெழு சீறியாழ்
ஒல்கல் உள்ளமொடு ஒரு புடைத் தழீஇ,
புகழ்சால் சிறப்பின் நின் நல் இசை உள்ளி,
10
வந்தனென் எந்தை! யானே: என்றும்,
மன்று படு பரிசிலர்க் காணின், கன்றொடு
கறை அடி யானை இரியல் போக்கும்
மலை கெழு நாடன்! மா வேள் ஆஅய்!
களிறும் அன்றே; மாவும் அன்றே;
15
ஒளிறு படைப் புரவிய தேரும் அன்றே;
பாணர், பாடுநர், பரிசிலர், ஆங்கு அவர்,
தமது எனத் தொடுக்குவராயின், 'எமது' எனப்
பற்றல் தேற்றாப் பயங் கெழு தாயமொடு,
அன்ன ஆக, நின் ஊழி; நின்னைக்
20
காண்டல் வேண்டிய அளவை வேண்டார்
உறு முரண் கடந்த ஆற்றல்
பொது மீக்கூற்றத்து நாடு கிழவோயே!

திணை அது; துறை பரிசில் துறை.
அவனை அவர் பாடியது.

137
இரங்கு முரசின், இனம்சால் யானை,
முந்நீர் ஏணி விறல் கெழு மூவரை
இன்னும் ஓர் யான் அவா அறியேனே;
நீயே, முன் யான் அறியுமோனே துவன்றிய
5
கயத்து இட்ட வித்து வறத்தின் சாவாது,
கழைக் கரும்பின் ஒலிக்குந்து,
கொண்டல் கொண்ட நீர் கோடை காயினும்,
கண் அன்ன மலர் பூக்குந்து,
கருங் கால் வேங்கை மலரின், நாளும்
10
பொன் அன்ன வீ சுமந்து,
மணி அன்ன நீர் கடல் படரும்;
செவ் வரைப் படப்பை நாஞ்சில் பொருந!
சிறு வெள் அருவிப் பெருங் கல் நாடனை!
நீ வாழியர்! நின் தந்தை
15
தாய் வாழியர், நிற் பயந்திசினோரே!

திணை அது; துறை இயன்மொழி; பரிசில் துறையும் ஆம்.
நாஞ்சில் வள்ளுவனை ஒரு சிறைப் பெரியனார் பாடியது.

140
தடவு நிலைப் பலவின் நாஞ்சில் பொருநன்
மடவன், மன்ற; செந் நாப் புலவீர்!
வளைக் கை விறலியர் படப்பைக் கொய்த
அடகின் கண்ணுறைஆக யாம் சில
5
அரிசி வேண்டினேமாக, தான் பிற
வரிசை அறிதலின், தன்னும் தூக்கி,
இருங் கடறு வளைஇய குன்றத்து அன்னது ஓர்
பெருங் களிறு நல்கியோனே; அன்னது ஓர்
தேற்றா ஈகையும் உளதுகொல்?
10
போற்றார் அம்ம, பெரியோர் தம் கடனே?

திணை அது; துறை பரிசில் விடை.
அவனை ஒளவையார் பாடியது.

141
'பாணன் சூடிய பசும் பொன் தாமரை
மாண் இழை விறலி மாலையொடு விளங்க,
கடும் பரி நெடுந் தேர் பூட்டு விட்டு அசைஇ,
ஊரீர் போலச் சுரத்திடை இருந்தனிர்!
5
யாரீரோ?' என, வினவல் ஆனா,
காரென் ஒக்கல், கடும் பசி, இரவல!
வென் வேல் அண்ணல் காணா ஊங்கே,
நின்னினும் புல்லியேம் மன்னே; இனியே,
இன்னேம் ஆயினேம் மன்னே; என்றும்
10
உடாஅ, போரா ஆகுதல் அறிந்தும்,
படாஅம் மஞ்ஞைக்கு ஈத்த எம் கோ,
கடாஅ யானைக் கலி மான் பேகன்,
'எத் துணை ஆயினும் ஈத்தல் நன்று' என,
மறுமை நோக்கின்றோ அன்றே,
15
பிறர், வறுமை நோக்கின்று, அவன் கை வண்மையே.

திணை அது; துறை பாணாற்றுப்படை; புலவராற்றுப்படையும் ஆம்.
வையாவிக் கோப்பெரும் பேகனைப் பரணர் பாடியது.

142
அறு குளத்து உகுத்தும், அகல் வயல் பொழிந்தும்,
உறும் இடத்து உதவாது உவர் நிலம் ஊட்டியும்,
வரையா மரபின் மாரிபோல,
கடாஅ யானைக் கழல் கால் பேகன்
5
கொடைமடம் படுதல் அல்லது,
படைமடம் படான், பிறர் படை மயக்குறினே.

திணை அது; துறை இயன்மொழி.
அவனை அவர் பாடியது.

145
'மடத் தகை மா மயில் பனிக்கும்' என்று அருளி,
படாஅம் ஈத்த கெடாஅ நல் இசை,
கடாஅ யானைக் கலி மான் பேக!
பசித்தும் வாரேம்; பாரமும் இலமே;
5
களங்கனி அன்ன கருங் கோட்டுச் சீறியாழ்
நயம் புரிந்து உறையுநர் நடுங்கப் பண்ணி,
'அறம் செய்தீமோ, அருள் வெய்யோய்!' என,
இஃது யாம் இரந்த பரிசில்: அஃது இருளின்,
இன மணி நெடுந் தேர் ஏறி,
10
இன்னாது உறைவி அரும் படர் களைமே!

திணையும் துறையும் அவை.
அவனை அவள் காரணமாக அவர் பாடியது.

148
கறங்கு மிசை அருவிய பிறங்கு மலை நள்ளி! நின்
அசைவு இல் நோன் தாள் நசை வளன் ஏத்தி,
நாள்தொறும் நன் கலம் களிற்றொடு கொணர்ந்து,
கூடு விளங்கு வியல் நகர், பரிசில் முற்று அளிப்ப;
5
பீடு இல் மன்னர்ப் புகழ்ச்சி வேண்டி,
செய்யா கூறிக் கிளத்தல்
எய்யாதாகின்று, எம் சிறு செந் நாவே.

திணை பாடாண் திணை; துறை பரிசில் துறை.
கண்டீரக் கோப் பெருநள்ளியை வன்பரணர் பாடியது.

151
பண்டும் பண்டும் பாடுநர் உவப்ப,
விண் தோய் சிமைய விறல் வரைக் கவாஅன்,
கிழவன் சேட் புலம் படரின், இழை அணிந்து,
புன் தலை மடப் பிடி பரிசிலாக,
5
பெண்டிரும் தம் பதம் கொடுக்கும் வண் புகழ்க்
கண்டீரக்கோன்ஆகலின், நன்றும்
முயங்கல் ஆன்றிசின், யானே; பொலந் தேர்
நன்னன் மருகன் அன்றியும், நீயும்
முயங்கற்கு ஒத்தனை மன்னே; வயங்கு மொழிப்
10
பாடுநர்க்கு அடைத்த கதவின், ஆடு மழை
அணங்கு சால் அடுக்கம் பொழியும் நும்
மணம் கமழ் மால் வரை வரைந்தனர், எமரே.

திணையும் துறையும் அவை.
இளங் கண்டீரக்கோவும் இள விச்சிக்கோவும் ஒருங்கு இருந்தவழி, சென்ற பெருந்தலைச் சாத்தனார் இளங் கண்டீரக்கோவைப் புல்லி, இள விச்சிக்கோவைப் புல்லாராக 'என்னை என் செயப் புல்லீராயினீர்?' என, அவர் பாடியது.

152
'வேழம் வீழ்த்த விழுத் தொடைப் பகழி
பேழ் வாய் உழுவையைப் பெரும்பிறிது உறீஇ,
புழல் தலைப் புகர்க் கலை உருட்டி, உரல் தலைக்
கேழற் பன்றி வீழ, அயலது
5
ஆழல் புற்றத்து உடும்பில் செற்றும்,
வல் வில் வேட்டம் வலம் படுத்து இருந்தோன்,
புகழ்சால் சிறப்பின் அம்பு மிகத் திளைக்கும்
கொலைவன் யார்கொலோ? கொலைவன் மற்று இவன்
விலைவன் போலான்; வெறுக்கை நன்கு உடையன்;
10
ஆரம் தாழ்ந்த அம் பகட்டு மார்பின்,
சாரல் அருவிப் பய மலைக் கிழவன்,
ஓரி கொலோ? அல்லன்கொல்லோ?
பாடுவல், விறலி! ஓர் வண்ணம்; நீரும்
மண் முழா அமைமின்; பண் யாழ் நிறுமின்;
15
கண் விடு தூம்பின் களிற்று உயிர் தொடுமின்;
எல்லரி தொடுமின்; ஆகுளி தொடுமின்;
பதலை ஒரு கண் பையென இயக்குமின்;
மதலை மாக் கோல் கைவலம் தமின்' என்று,
இறைவன் ஆகலின், சொல்லுபு குறுகி,
20
மூ ஏழ் துறையும் முறையுளிக் கழிப்பி,
'கோ' எனப் பெயரிய காலை, ஆங்கு அது
தன் பெயர் ஆகலின் நாணி, மற்று, 'யாம்
நாட்டிடன் நாட்டிடன் வருதும்; ஈங்கு ஓர்
வேட்டுவர் இல்லை, நின் ஒப்போர்' என,
25
வேட்டது மொழியவும் விடாஅன், வேட்டத்தில்
தான் உயிர் செகுத்த மான் நிணப் புழுக்கோடு,
ஆன் உருக்கு அன்ன வேரியை நல்கி,
தன் மலைப் பிறந்த தா இல் நன் பொன்,
பல் மணிக் குவையொடும் விரைஇ, 'கொண்ம்' என,
30
சுரத்திடை நல்கியோனே விடர்ச் சிமை
ஓங்கு இருங் கொல்லிப் பொருநன்,
ஓம்பா ஈகை விறல் வெய்யோனே!

திணை அது; துறை பரிசில் விடை.
வல் வில் ஓரியை வன்பரணர் பாடியது.

153
மழை அணி குன்றத்துக் கிழவன், நாளும்,
இழை அணி யானை இரப்போர்க்கு ஈயும்,
சுடர் விடு பசும் பூண், சூர்ப்பு அமை முன் கை,
அடு போர் ஆனா, ஆதன் ஓரி
5
மாரி வண் கொடை காணிய, நன்றும்
சென்றதுமன், எம் கண்ணுளங் கடும்பே;
பனி நீர்ப் பூவா மணி மிடை குவளை
வால் நார்த் தொடுத்த கண்ணியும், கலனும்,
யானை இனத்தொடு பெற்றனர், நீங்கி,
10
பசியாராகல் மாறுகொல் விசி பிணிக்
கூடு கொள் இன் இயம் கறங்க,
ஆடலும் ஒல்லார், தம் பாடலும் மறந்தே?

திணை அது; துறை இயன்மொழி.
அவனை அவர் பாடியது.

159
'வாழும் நாளோடு யாண்டு பல உண்மையின்,
தீர்தல் செல்லாது, என் உயிர்' எனப் பல புலந்து,
கோல் காலாகக் குறும் பல ஒதுங்கி,
நூல் விரித்தன்ன கதுப்பினள், கண் துயின்று,
5
முன்றில் போகா முதிர்வினள் யாயும்;
பசந்த மேனியொடு படர் அட வருந்தி,
மருங்கில் கொண்ட பல் குறுமாக்கள்
பிசைந்து தின, வாடிய முலையள், பெரிது அழிந்து,
குப்பைக் கீரை கொய்கண் அகைத்த
10
முற்றா இளந் தளிர் கொய்துகொண்டு, உப்பு இன்று,
நீர் உலைஆக ஏற்றி, மோர் இன்று,
அவிழ்ப் பதம் மறந்து, பாசடகு மிசைந்து,
மாசொடு குறைந்த உடுக்கையள், அறம் பழியா,
துவ்வாளாகிய என் வெய்யோளும்;
15
என்றாங்கு, இருவர் நெஞ்சமும் உவப்ப கானவர்
கரி புனம் மயக்கிய அகன்கண் கொல்லை,
ஐவனம் வித்தி, மையுறக் கவினி,
ஈனல்செல்லா ஏனற்கு இழுமெனக்
கருவி வானம் தலைஇ யாங்கும்,
20
ஈத்த நின் புகழ் ஏத்தி, தொக்க என்,
பசி தினத் திரங்கிய, ஒக்கலும் உவப்ப
உயர்ந்து ஏந்து மருப்பின் கொல்களிறு பெறினும்,
தவிர்ந்து விடு பரிசில் கொள்ளலென்; உவந்து, நீ
இன்புற விடுதிஆயின், சிறிது
25
குன்றியும் கொள்வல், கூர் வேல் குமண!
அதற்பட அருளல் வேண்டுவல் விறல் புகழ்
வசை இல் விழுத் திணைப் பிறந்த
இசை மேந் தோன்றல்! நிற் பாடிய யானே.

திணை அது; துறை பரிசில் கடா நிலை.
அவனை அவர் பாடியது.

161
நீண்டு ஒலி அழுவம் குறைபட முகந்துகொண்டு,
ஈண்டு செலல் கொண்மூ வேண்டுவயின் குழீஇ,
பெரு மலை அன்ன தோன்றல, சூல் முதிர்பு,
உரும் உரறு கருவியொடு, பெயல் கடன் இறுத்து,
5
வள மழை மாறிய என்றூழ்க் காலை,
மன்பதை எல்லாம் சென்று உண, கங்கைக்
கரை பொரு மலி நீர் நிறைந்து தோன்றியாங்கு,
எமக்கும் பிறர்க்கும் செம்மலைஆகலின்,
'அன்பு இல் ஆடவர் கொன்று, ஆறு கவர,
10
சென்று தலைவருந அல்ல, அன்பு இன்று,
வன் கலை தெவிட்டும், அருஞ் சுரம் இறந்தோர்க்கு,
இற்றை நாளொடும் யாண்டு தலைப்பெயர' எனக்
கண் பொறி போகிய கசிவொடு உரன் அழிந்து,
அருந் துயர் உழக்கும் என் பெருந் துன்புறுவி நின்
15
தாள் படு செல்வம் காண்தொறும் மருள,
பனை மருள் தடக் கையொடு முத்துப் பட முற்றிய
உயர் மருப்பு ஏந்திய வரை மருள் நோன் பகடு,
ஒளி திகழ் ஓடை பொலிய, மருங்கில்
படு மணி இரட்ட, ஏறிச் செம்மாந்து,
20
செலல் நசைஇ உற்றனென் விறல் மிகு குருசில்!
இன்மை துரப்ப, இசைதர வந்து, நின்
வண்மையின் தொடுத்த என் நயந்தனை கேண்மதி!
வல்லினும், வல்லேன்ஆயினும், வல்லே,
என் அளந்து அறிந்தனை நோக்காது, சிறந்த
25
நின் அளந்து அறிமதி, பெரும! என்றும்
வேந்தர் நாணப் பெயர்வேன்; சாந்து அருந்திப்
பல் பொறிக் கொண்ட ஏந்து எழில் அகலம்
மாண் இழை மகளிர் புல்லுதொறும் புகல,
நாள் முரசு இரங்கும் இடனுடை வரைப்பில் நின்
30
தாள் நிழல் வாழ்நர் நன் கலம் மிகுப்ப,
வாள் அமர் உழந்த நின் தானையும்,
சீர் மிகு செல்வமும், ஏத்துகம் பலவே.

திணை அது; துறை பரிசில் துறை.
அவனை அவர் பாடிப் பகடு பெற்றது.

162
இரவலர் புரவலை நீயும் அல்லை;
புரவலர் இரவலர்க்கு இல்லையும் அல்லர்;
இரவலர் உண்மையும் காண், இனி; இரவலர்க்கு
ஈவோர் உண்மையும் காண், இனி; நின் ஊர்க்
5
கடிமரம் வருந்தத் தந்து யாம் பிணித்த
நெடு நல் யானை எம் பரிசில்;
கடுமான் தோன்றல்! செல்வல் யானே.

திணை அது; துறை பரிசில் விடை.
அவர் வெளிமானுழைச் சென்றார்க்கு வெளிமான் துஞ்சுவான் தம்பியைப் 'பரிசில் கொடு' என, அவன் சிறிது கொடுப்பக் கொள்ளாது போய், குமணனைப் பாடி,குமணன் பகடு கொடுப்பக் கொணர்ந்து நின்று, வெளிமான் ஊர்க் கடிமரத்து யாத்துச் சென்று,

165
மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்
தம் புகழ் நிறீஇத் தாம் மாய்ந்தனரே;
துன் அருஞ் சிறப்பின் உயர்ந்த செல்வர்,
இன்மையின் இரப்போர்க்கு ஈஇயாமையின்,
5
தொன்மை மாக்களின் தொடர்பு அறியலரே;
தாள் தாழ் படு மணி இரட்டும், பூ நுதல்,
ஆடு இயல் யானை பாடுநர்க்கு அருகாக்
கேடு இல் நல் இசை வய மான் தோன்றலைப்
பாடி நின்றனெனாக, 'கொன்னே
10
பாடு பெறு பரிசிலன் வாடினன் பெயர்தல் என
நாடு இழந்ததனினும் நனி இன்னாது' என,
வாள் தந்தனனே, தலை எனக்கு ஈய,
தன்னின் சிறந்தது பிறிது ஒன்று இன்மையின்;
ஆடு மலி உவகையொடு வருவல்,
15
ஓடாப் பூட்கை நின் கிழமையோற் கண்டே.

திணை அது; துறை பரிசில் விடை.
தம்பியால் நாடு கொள்ளப்பட்டுக் காடு பற்றியிருந்த குமணனைக் கண்டு, அவன் தன் வாள் கொடுப்பக் கொண்டு வந்து, இளங் குமணற்குக் காட்டி, பெருந்தலைச் சாத்தனார் பாடியது.

170
மரை பிரித்து உண்ட நெல்லி வேலி,
பரலுடை முன்றில், அம் குடிச் சீறூர்,
எல் அடிப்படுத்த கல்லாக் காட்சி
வில் உழுது உண்மார் நாப்பண், ஒல்லென,
5
இழி பிறப்பாளன் கருங் கை சிவப்ப,
வலி துரந்து சிலைக்கும் வன் கண் கடுந் துடி
புலி துஞ்சு நெடு வரைக் குடிஞையோடு இரட்டும்
மலை கெழு நாடன், கூர்வேல் பிட்டன்,
குறுகல் ஓம்புமின், தெவ்விர்! அவனே
10
சிறு கண் யானை வெண் கோடு பயந்த
ஒளி திகழ் முத்தம் விறலியர்க்கு ஈத்து,
நார் பிழிக் கொண்ட வெங் கள் தேறல்
பண் அமை நல் யாழ்ப் பாண் கடும்பு அருத்தி,
நசைவர்க்கு மென்மை அல்லது, பகைவர்க்கு
15
இரும்பு பயன் படுக்கும் கருங் கைக் கொல்லன்
விசைத்து எறி கூடமொடு பொரூஉம்
உலைக் கல் அன்ன, வல்லாளன்னே.

திணை வாகை; துறை வல்லாண் முல்லை; தானைமறமும் ஆம்.
அவனை உறையூர் மருத்துவன் தாமோதரனார் பாடியது.

171
இன்று செலினும் தருமே; சிறு வரை
நின்று செலினும் தருமே; பின்னும்,
'முன்னே தந்தனென்' என்னாது, துன்னி
வைகலும் செலினும், பொய்யலன் ஆகி,
5
யாம் வேண்டியாங்கு எம் வறுங் கலம் நிறைப்போன்;
தான் வேண்டியாங்குத் தன் இறை உவப்ப
அருந் தொழில் முடியரோ, திருந்து வேல் கொற்றன்;
இனம் மலி கதச் சேக் களனொடு வேண்டினும்,
களம் மலி நெல்லின் குப்பை வேண்டினும்,
10
அருங் கலம் களிற்றொடு வேண்டினும், பெருந்தகை
பிறர்க்கும் அன்ன அறத் தகையன்னே.
அன்னன் ஆகலின், எந்தை உள் அடி
முள்ளும் நோவ உறாற்கதில்ல!
ஈவோர் அரிய இவ் உலகத்து,
15
வாழ்வோர் வாழ, அவன் தாள் வாழியவே!

திணை பாடாண் திணை; துறை இயன்மொழி.
அவனைக் காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக் கண்ணனார் பாடியது.

177
ஒளிறு வாள் மன்னர் ஒண் சுடர் நெடு நகர்,
வெளிறு கண் போகப் பல் நாள் திரங்கி,
பாடிப் பெற்ற பொன் அணி யானை,
தமர்எனின், யாவரும் புகுப; அமர் எனின்,
5
திங்களும் நுழையா எந்திரப் படு புழை,
கள் மாறு நீட்ட நணி நணி இருந்த
குறும் பல் குறும்பின் ததும்ப வைகி,
புளிச் சுவை வேட்ட செங் கண் ஆடவர்
தீம் புளிக் களாவொடு துடரி முனையின்,
10
மட்டு அறல் நல் யாற்று எக்கர் ஏறி,
கருங் கனி நாவல் இருந்து கொய்து உண்ணும்,
பெரும் பெயர் ஆதி, பிணங்குஅரில் குட நாட்டு,
எயினர் தந்த எய்ம் மான் எறி தசைப்
பைஞ் ஞிணம் பெருத்த பசு வெள் அமலை,
15
வருநர்க்கு வரையாது தருவனர் சொரிய,
இரும் பனங் குடையின் மிசையும்
பெரும் புலர் வைகறைச் சீர் சாலாதே.

திணையும் துறையும் அவை.
மல்லிகிழான் காரியாதியை ஆவூர் மூலங்கிழார் பாடியது.

178
கந்து முனிந்து உயிர்க்கும் யானையொடு, பணை முனிந்து
கால் இயல் புரவி ஆலும் ஆங்கண்,
மணல் மலி முற்றம் புக்க சான்றோர்
உண்ணார் ஆயினும், தன்னொடு சூளுற்று,
5
'உண்ம்' என இரக்கும் பெரும் பெயர்ச் சாத்தன்
ஈண்டோ இன் சாயலனே; வேண்டார்
எறி படை மயங்கிய வெருவரு ஞாட்பின்,
கள்ளுடைக் கலத்தர் உள்ளூர்க் கூறிய
நெடுமொழி மறந்த சிறு பேராளர்
10
அஞ்சி நீங்கும்காலை,
ஏமமாகத் தான் முந்துறுமே.

திணை வாகை; துறை வல்லாண் முல்லை.
பாண்டியன் கீரஞ்சாத்தனை அவர் பாடியது.

181
மன்ற விளவின் மனை வீழ் வெள்ளில்,
கருங் கண் எயிற்றி காதல் மகனொடு,
கான இரும் பிடிக் கன்று தலைக் கொள்ளும்
பெருங் குறும்பு உடுத்த வன் புல இருக்கை,
5
புலாஅ அம்பின், போர் அருங் கடி மிளை,
வலாஅரோனே, வாய் வாள் பண்ணன்;
உண்ணா வறுங் கடும்பு உய்தல் வேண்டின்,
இன்னே சென்மதி, நீயே சென்று, அவன்
பகைப் புலம் படராஅளவை, நின்
10
பசிப் பகைப் பரிசில் காட்டினை கொளற்கே.

திணையும் துறையும் அவை.
வல்லார் கிழான் பண்ணனைச் சோணாட்டு முகையலூர்ச் சிறு கருந்தும்பியார் பாடியது.

184
காய் நெல் அறுத்துக் கவளம் கொளினே,
மா நிறைவு இல்லதும், பல் நாட்கு ஆகும்;
நூறு செறு ஆயினும், தமித்துப் புக்கு உணினே,
வாய் புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும்;
5
அறிவுடை வேந்தன் நெறி அறிந்து கொளினே,
கோடி யாத்து, நாடு பெரிது நந்தும்;
மெல்லியன் கிழவன் ஆகி, வைகலும்
வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு,
பரிவு தப எடுக்கும் பிண்டம் நச்சின்,
10
யானை புக்க புலம் போல,
தானும் உண்ணான், உலகமும் கெடுமே.

திணை பாடாண் திணை; துறை செவியறிவுறூஉ.
பாண்டியன் அறிவுடை நம்பியுழைச் சென்ற பிசிராந்தையார் பாடியது.

190
விளை பதச் சீறிடம் நோக்கி, வளை கதிர்
வல்சி கொண்டு, அளை மல்க வைக்கும்
எலி முயன்றனையர் ஆகி, உள்ள தம்
வளன் வலியுறுக்கும் உளம் இலாளரொடு
5
இயைந்த கேண்மை இல்லாகியரோ!
கடுங் கண் கேழல் இடம் பட வீழ்ந்தென,
அன்று அவண் உண்ணாதாகி, வழி நாள்,
பெரு மலை விடரகம் புலம்ப, வேட்டு எழுந்து,
இருங் களிற்று ஒருத்தல் நல் வலம் படுக்கும்
10
புலி பசித்தன்ன மெலிவு இல் உள்ளத்து
உரனுடையாளர் கேண்மையொடு
இயைந்த வைகல் உள ஆகியரோ!

திணையும் துறையும் அவை.
சோழன் நல்லுருத்திரன் பாட்டு.

197
வளி நடந்தன்ன வாச் செலல் இவுளியொடு
கொடி நுடங்கு மிசைய தேரினர் எனாஅ,
கடல் கண்டன்ன ஒண் படைத் தானையொடு
மலை மாறு மலைக்கும் களிற்றினர் எனாஅ,
5
உரும் உரற்றன்ன உட்குவரு முரசமொடு
செரு மேம்படூஉம் வென்றியர் எனாஅ,
மண் கெழு தானை, ஒண் பூண், வேந்தர்
வெண் குடைச் செல்வம் வியத்தலோ இலமே;
எம்மால் வியக்கப்படூஉமோரே,
10
இடு முள் படப்பை மறி மேய்ந்து ஒழிந்த
குறு நறு முஞ்ஞைக் கொழுங் கண் குற்றடகு,
புன் புல வரகின் சொன்றியொடு, பெறூஉம்,
சீறூர் மன்னர் ஆயினும், எம் வயின்
பாடு அறிந்து ஒழுகும் பண்பினாரே;
15
மிகப் பேர் எவ்வம் உறினும், எனைத்தும்
உணர்ச்சி இல்லோர் உடைமை உள்ளேம்;
நல் அறிவு உடையோர் நல்குரவு
உள்ளுதும், பெரும! யாம், உவந்து, நனி பெரிதே.

திணையும் துறையும் அவை.
சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன் பரிசில் நீட்டித்தானைக் கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் பாடியது.

200
பனி வரை நிவந்த பாசிலைப் பலவின்
கனி கவர்ந்து உண்ட கரு விரல் கடுவன்
செம் முக மந்தியொடு சிறந்து, சேண் விளங்கி,
மழை மிசை அறியா மால் வரை அடுக்கத்து,
5
கழை மிசைத் துஞ்சும் கல்லக வெற்ப!
நிணம் தின்று செருக்கிய நெருப்புத் தலை நெடு வேல்,
களம் கொண்டு கனலும் கடுங்கண் யானை,
விளங்கு மணிக் கொடும் பூண், விச்சிக்கோவே!
இவரே, பூத் தலை அறாஅப் புனை கொடி முல்லை
10
நாத் தழும்பு இருப்பப் பாடாதுஆயினும்,
'கறங்கு மணி நெடுந் தேர் கொள்க!' எனக் கொடுத்த
பரந்து ஓங்கு சிறப்பின் பாரி மகளிர்;
யானே, பரிசிலன், மன்னும் அந்தணன்; நீயே,
வரிசையில் வணக்கும் வாள் மேம்படுநன்;
15
நினக்கு யான் கொடுப்பக் கொண்மதி சினப் போர்
அடங்கா மன்னரை அடக்கும்
மடங்கா விளையுள் நாடு கிழவோயே!

திணை அது; துறை பரிசில் துறை.
பாரி மகளிரை விச்சிக் கோனுழைக் கொண்டு சென்ற கபிலர் பாடியது.

201
'இவர் யார்?' என்குவைஆயின், இவரே,
ஊருடன் இரவலர்க்கு அருளி, தேருடன்
முல்லைக்கு ஈத்த செல்லா நல் இசை,
படு மணி யானை, பறம்பின் கோமான்
5
நெடு மாப் பாரி மகளிர்; யானே
தந்தை தோழன்; இவர் என் மகளிர்;
அந்தணன், புலவன், கொண்டு வந்தனனே.
நீயே, வடபால் முனிவன் தடவினுள் தோன்றி,
செம்பு புனைந்து இயற்றிய சேண் நெடும் புரிசை,
10
உவரா ஈகை, துவரை ஆண்டு,
நாற்பத்தொன்பது வழிமுறை வந்த
வேளிருள் வேளே! விறல் போர் அண்ணல்!
தார் அணி யானைச் சேட்டு இருங் கோவே!
ஆண் கடன் உடைமையின், பாண் கடன் ஆற்றிய
15
ஒலியற் கண்ணிப் புலிகடி மாஅல்!
யான் தர, இவரைக் கொண்மதி! வான் கவித்து
இருங் கடல் உடுத்த இவ் வையகத்து, அருந் திறல்
பொன் படு மால் வரைக் கிழவ! வென் வேல்
உடலுநர் உட்கும் தானை,
20
கெடல் அருங்குரைய நாடு கிழவோயே!

திணையும் துறையும் அவை.
பாரி மகளிரை இருங்கோவேளுழைக் கொண்டு சென்ற கபிலர் பாடியது.

205
முற்றிய திருவின் மூவர் ஆயினும்,
பெட்பின்று ஈதல் யாம் வேண்டலமே;
விறல் சினம் தணிந்த விரை பரிப் புரவி
உறுவர் செல் சார்வு ஆகி, செறுவர்
5
தாள் உளம் தபுத்த வாள் மிகு தானை,
வெள் வீ வேலிக் கோடைப் பொருந!
சிறியவும் பெரியவும் புழை கெட விலங்கிய
மான் கணம் தொலைச்சிய கடு விசைக் கத நாய்,
நோன் சிலை, வேட்டுவ! நோய் இலையாகுக!
10
ஆர் கலி யாணர்த் தரீஇய, கால் வீழ்த்து,
கடல்வயின் குழீஇய அண்ணல் அம் கொண்மூ
நீர் இன்று பெயராவாங்கு, தேரொடு
ஒளிறு மருப்பு ஏந்திய செம்மல்
களிறு இன்று பெயரல, பரிசிலர் கடும்பே.

திணையும் துறையும் அவை.
கடிய நெடுவேட்டுவன் பரிசில் நீட்டித்தானைப் பெருந்தலைச் சாத்தனார் பாடியது.

214
'செய்குவம்கொல்லோ, நல்வினை?' எனவே
ஐயம் அறாஅர், கசடு ஈண்டு காட்சி
நீங்கா நெஞ்சத்துத் துணிவு இல்லோரே;
யானை வேட்டுவன் யானையும் பெறுமே;
5
குறும்பூழ் வேட்டுவன் வறுங் கையும் வருமே:
அதனால், உயர்ந்த வேட்டத்து உயர்ந்திசினோர்க்கு,
செய்வினை மருங்கின் எய்தல் உண்டு எனின்,
தொய்யா உலகத்து நுகர்ச்சியும் கூடும்;
தொய்யா உலகத்து நுகர்ச்சி இல் எனின்,
10
மாறிப் பிறப்பின் இன்மையும் கூடும்;
மாறிப் பிறவார் ஆயினும், இமயத்துக்
கோடு உயர்ந்தன்ன தம் இசை நட்டு,
தீது இல் யாக்கையொடு மாய்தல் தவத் தலையே.

திணை பொதுவியல்; துறை பொருண்மொழிக் காஞ்சி.
அவன் வடக்கிருந்தான் சொற்றது.

220
பெருஞ் சோறு பயந்து, பல் யாண்டு புரந்த
பெருங் களிறு இழந்த பைதல் பாகன்
அது சேர்ந்து அல்கிய அழுங்கல் ஆலை,
வெளில் பாழாகக் கண்டு கலுழ்ந்தாங்கு,
5
கலங்கினென் அல்லனோ, யானே பொலந் தார்த்
தேர் வண் கிள்ளி போகிய
பேர் இசை மூதூர் மன்றம் கண்டே?

திணையும் துறையும் அவை.
அவன் வடக்கிருந்தானுழைச் சென்று மீண்டு வந்து உறையூர் கண்ட பொத்தியார் அழுது பாடியது.

227
நனி பேதையே, நயன் இல் கூற்றம்!
விரகு இன்மையின் வித்து அட்டு உண்டனை;
இன்னும் காண்குவை, நன் வாய் ஆகுதல்;
ஒளிறு வாள் மறவரும், களிறும், மாவும்,
5
குருதி அம் குரூஉப் புனல் பொரு களத்து ஒழிய,
நாளும் ஆனான் கடந்து அட்டு, என்றும் நின்
வாடு பசி அருத்திய வசை தீர் ஆற்றல்
நின் ஓர் அன்ன பொன் இயல் பெரும் பூண்
வளவன் என்னும் வண்டு மூசு கண்ணி
10
இனையோற் கொண்டனைஆயின்,
இனி யார், மற்று நின் பசி தீர்ப்போரே?

திணையும் துறையும் அவை.
அவனை ஆடுதுறை மாசாத்தனார் பாடியது.

228
கலம் செய் கோவே! கலம் செய் கோவே!
இருள் திணிந்தன்ன குரூஉத் திரள் பரூஉப் புகை
அகல் இரு விசும்பின் ஊன்றும் சூளை,
நனந் தலை மூதூர்க் கலம் செய் கோவே!
5
அளியை நீயே; யாங்கு ஆகுவைகொல்?
நிலவரை சூட்டிய நீள் நெடுந் தானைப்
புலவர் புகழ்ந்த பொய்யா நல் இசை,
விரி கதிர் ஞாயிறு விசும்பு இவர்ந்தன்ன
சேண் விளங்கு சிறப்பின், செம்பியர் மருகன்
10
கொடி நுடங்கு யானை நெடுமா வளவன்
தேவர் உலகம் எய்தினன்ஆதலின்,
அன்னோற் கவிக்கும் கண் அகன் தாழி
வனைதல் வேட்டனைஆயின், எனையதூஉம்
இரு நிலம் திகிரியா, பெரு மலை
15
மண்ணா, வனைதல் ஒல்லுமோ, நினக்கே?

திணை அது; துறை ஆனந்தப்பையுள்.
அவனை ஐயூர் முடவனார் பாடியது.

229
ஆடு இயல் அழல் குட்டத்து
ஆர் இருள் அரை இரவில்,
முடப் பனையத்து வேர் முதலாக்
கடைக் குளத்துக் கயம் காய,
5
பங்குனி உயர் அழுவத்து,
தலை நாள்மீன் நிலை திரிய,
நிலை நாள்மீன் அதன் எதிர் ஏர்தர,
தொல் நாள்மீன் துறை படிய,
பாசிச் செல்லாது, ஊசித் துன்னாது,
10
அளக்கர்த் திணை விளக்காகக்
கனை எரி பரப்ப, கால் எதிர்பு பொங்கி,
ஒரு மீன் வீழ்ந்தன்றால், விசும்பினானே;
அது கண்டு, யாமும் பிறரும் பல் வேறு இரவலர்,
'பறை இசை அருவி நல் நாட்டுப் பொருநன்
15
நோய் இலனாயின் நன்றுமன் தில்' என
அழிந்த நெஞ்சம் மடிஉளம் பரப்ப,
அஞ்சினம்; எழு நாள் வந்தன்று, இன்றே;
மைந்துடை யானை கை வைத்து உறங்கவும்,
திண் பிணி முரசம் கண் கிழிந்து உருளவும்,
20
காவல் வெண்குடை கால் பரிந்து உலறவும்,
கால் இயல் கலி மாக் கதி இல வைகவும்,
மேலோர் உலகம் எய்தினன்; ஆகலின்,
ஒண் தொடி மகளிர்க்கு உறு துணை ஆகி,
தன் துணை ஆயம் மறந்தனன்கொல்லோ
25
பகைவர்ப் பிணிக்கும் ஆற்றல், நசைவர்க்கு
அளந்து கொடை அறியா ஈகை,
மணி வரை அன்ன மாஅயோனே?

திணையும் துறையும் அவை.
கோச் சேரமான் யானைக்கட்சேஎய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை இன்ன நாளில் துஞ்சும் என அஞ்சி, அவன் துஞ்சிய இடத்து, கூடலூர் கிழார் பாடியது.

233
பொய்யாகியரோ! பொய்யாகியரோ!
பா அடி யானை பரிசிலர்க்கு அருகாச்
சீர் கெழு நோன் தாள் அகுதைகண் தோன்றிய
பொன் புனை திகிரியின் பொய்யாகியரோ!
5
'இரும் பாண் ஒக்கல் தலைவன், பெரும் பூண்,
போர் அடு தானை, எவ்வி மார்பின்
எஃகுறு விழுப்புண் பல' என
வைகுறு விடியல், இயம்பிய குரலே.

திணயும் துறையும் அவை.
வேள் எவ்வியை வெள்ளெருக்கிலையார் பாடியது.

234
நோகோ யானே? தேய்கமா காலை!
பிடி அடி அன்ன சிறு வழி மெழுகி,
தன் அமர் காதலி புல் மேல் வைத்த
இன் சிறு பிண்டம் யாங்கு உண்டனன்கொல்
5
உலகு புகத் திறந்த வாயில்
பலரோடு உண்டல் மரீஇயோனே?

திணையும் துறையும் அவை.
அவனை அவர் பாடியது.

237
'நீடு வாழ்க?' என்று, யான் நெடுங் கடை குறுகி,
பாடி நின்ற பசி நாட்கண்ணே,
'கோடைக் காலத்துக் கொழு நிழல் ஆகி,
பொய்த்தல் அறியா உரவோன் செவிமுதல்
5
வித்திய பனுவல் விளைந்தன்று நன்று' என
நச்சி இருந்த நசை பழுதாக,
அட்ட குழிசி அழல் பயந்தாஅங்கு,
'அளியர்தாமே ஆர்க' என்னா
அறன் இல் கூற்றம் திறன் இன்று துணிய,
10
ஊழின் உருப்ப எருக்கிய மகளிர்
வாழைப் பூவின் வளை முறி சிதற,
முது வாய் ஒக்கல் பரிசிலர் இரங்க,
கள்ளி போகிய களரிஅம் பறந்தலை,
வெள் வேல் விடலை சென்று மாய்ந்தனனே:
15
ஆங்கு அது நோய் இன்றாக; ஓங்கு வரைப்
புலி பார்த்து ஒற்றிய களிற்று இரை பிழைப்பின்,
எலி பார்த்து ஒற்றாதாகும்; மலி திரைக்
கடல் மண்டு புனலின் இழுமெனச் சென்று,
நனியுடைப் பரிசில் தருகம்,
20
எழுமதி, நெஞ்சே! துணிபு முந்துறுத்தே.

திணையும் துறையும் அவை.
வெளிமானுழைச் சென்றார்க்கு, அவன் துஞ்ச, இள வெளிமான் சிறிது கொடுப்ப, கொள்ளாது, பெருஞ்சித்திரனார் பாடியது.

239
தொடியுடைய தோள் மணந்தனன்;
கடி காவில் பூச் சூடினன்;
தண் கமழும் சாந்து நீவினன்;
செற்றோரை வழி தபுத்தனன்;
5
நட்டோரை உயர்பு கூறினன்;
'வலியர்' என, வழிமொழியலன்;
'மெலியர்' என, மீக்கூறலன்;
பிறரைத் தான் இரப்பு அறியலன்;
இரந்தோர்க்கு மறுப்பு அறியலன்;
10
வேந்துடை அவையத்து ஓங்கு புகழ் தோற்றினன்;
வருபடை எதிர் தாங்கினன்;
பெயர்படை புறங்கண்டனன்;
கடும் பரிய மாக் கடவினன்;
நெடுந் தெருவில் தேர் வழங்கினன்;
15
ஓங்கு இயல களிறு ஊர்ந்தனன்;
தீம் செறி தசும்பு தொலைச்சினன்;
பாண் உவப்ப பசி தீர்த்தனன்;
மயக்குடைய மொழி விடுத்தனன்; ஆங்குச்
செய்ப எல்லாம் செய்தனன் ஆகலின்
20
இடுக ஒன்றோ! சுடுக ஒன்றோ!
படு வழிப் படுக, இப் புகழ் வெய்யோன் தலையே!

திணையும் துறையும் அவை.
நம்பி நெடுஞ்செழியனைப் பேரெயின் முறுவலார் பாடியது.

240
ஆடு நடைப் புரவியும், களிறும், தேரும்,
வாடா யாணர் நாடும் ஊரும்,
பாடுநர்க்கு அருகா ஆஅய் அண்டிரன்
கோடு ஏந்து அல்குல், குறுந் தொடி மகளிரொடு,
5
காலன் என்னும் கண்ணிலி உய்ப்ப,
மேலோர் உலகம் எய்தினன் எனாஅ,
பொத்த அறையுள் போழ் வாய்க் கூகை,
'சுட்டுக் குவி' எனச் செத்தோர்ப் பயிரும்
கள்ளி அம் பறந்தலை ஒரு சிறை அல்கி,
10
ஒள் எரி நைப்ப உடம்பு மாய்ந்தது;
புல்லென் கண்ணர் புரவலர்க் காணாது,
கல்லென் சுற்றமொடு கையழிந்து, புலவர்
வாடிய பசியராகி, பிறர்
நாடு படு செலவினர் ஆயினர், இனியே.

திணையும் துறையும் அவை.
ஆயைக் குட்டுவன் கீரனார் பாடியது.

247
யானை தந்த முளி மர விறகின்
கானவர் பொத்திய ஞெலி தீ விளக்கத்து,
மட மான் பெரு நிரை வைகு துயில் எடுப்பி,
மந்தி சீக்கும் அணங்குடை முன்றிலில்,
5
நீர் வார் கூந்தல் இரும் புறம் தாழ,
பேர் அஞர்க் கண்ணள், பெருங் காடு நோக்கி,
தெருமரும் அம்ம தானே தன் கொழுநன்
முழவு கண் துயிலாக் கடியுடை வியல் நகர்ச்
சிறு நனி தமியள் ஆயினும்,
10
இன் உயிர் நடுங்கும் தன் இளமை புறங்கொடுத்தே!

திணையும் துறையும் அவை.
அவள் தீப் பாய்வாளைக் கண்டு மதுரைப் பேராலவாயார் சொல்லியது.

251
ஓவத்து அன்ன இடனுடை வரைப்பில்,
பாவை அன்ன குறுந் தொடி மகளிர்
இழை நிலை நெகிழ்த்த மள்ளன் கண்டிகும்
கழைக் கண் நெடு வரை அருவி ஆடி,
5
கான யானை தந்த விறகின்
கடுந் தெறல் செந் தீ வேட்டு,
புறம் தாழ் புரி சடை புலர்த்துவோனே!

திணை வாகை; துறை தாபத வாகை.
....................மாற்பித்தியார் பாடியது.

261
அந்தோ! எந்தை அடையாப் பேர் இல்!
வண்டு படு நறவின் தண்டா மண்டையொடு
வரையாப் பெருஞ் சோற்று முரி வாய் முற்றம்,
வெற்று யாற்று அம்பியின் எற்று? அற்று ஆகக்
5
கண்டனென், மன்ற; சோர்க, என் கண்ணே;
வையம் காவலர் வளம் கெழு திரு நகர்,
மையல் யானை அயாவுயிர்த்தன்ன
நெய் உலை சொரிந்த மை ஊன் ஓசை
புதுக்கண் மாக்கள் செதுக்கண் ஆரப்
10
பயந்தனை, மன்னால், முன்னே! இனியே
பல் ஆ தழீஇய கல்லா வல் வில்
உழைக் குரல் கூகை அழைப்ப ஆட்டி,
நாகு முலை அன்ன நறும் பூங் கரந்தை
விரகு அறியாளர் மரபின் சூட்ட,
15
நிரை இவண் தந்து, நடுகல் ஆகிய
வென் வேல் விடலை இன்மையின் புலம்பி,
கொய்ம் மழித் தலையொடு கைம்மையுறக் கலங்கிய
கழி கல மகடூஉப் போலப்
புல்லென்றனையால், பல் அணி இழந்தே.

திணையும் துறையும் அவை.
.....................ஆவூர் மூலங் கிழார் பாடியது.

263
பெருங் களிற்று அடியின் தோன்றும் ஒரு கண்
இரும் பறை இரவல! சேறிஆயின்,
தொழாதனை கழிதல் ஓம்புமதி; வழாது,
வண்டு மேம்படூஉம், இவ் வறநிலை ஆறே
5
பல் ஆத் திரள் நிரை பெயர்தரப் பெயர்தந்து,
கல்லா இளையர் நீங்க நீங்கான்,
வில் உமிழ் கடுங் கணை மூழ்க,
கொல் புனல் சிறையின் விலங்கியோன் கல்லே.

திணை கரந்தை; துறை கையறுநிலை.
......................................................................

265
ஊர் நனி இறந்த பார் முதிர் பறந்தலை,
ஓங்கு நிலை வேங்கை ஒள் இணர் நறு வீப்
போந்தை அம் தோட்டின் புனைந்தனர் தொடுத்து,
பல் ஆன் கோவலர் படலை சூட்ட,
5
கல் ஆயினையே கடு மான் தோன்றல்!
வான் ஏறு புரையும் நின் தாள் நிழல் வாழ்க்கைப்
பரிசிலர் செல்வம் அன்றியும், விரி தார்க்
கடும் பகட்டு யானை வேந்தர்
ஒடுங்கா வென்றியும், நின்னொடு செலவே.

திணையும் துறையும் அவை.
......................சோணாட்டு முகையலூர்ச் சிறு கருந் தும்பியார் பாடியது.

270
பல் மீன் இமைக்கும் மாக விசும்பின்
இரங்கு முரசின், இனம்சால் யானை,
நிலம் தவ உருட்டிய நேமியோரும்
சமங்கண் கூடித் தாம் வேட்பவ்வே
5
நறு விரை துறந்த நாறா நரைத் தலைச்
சிறுவர் தாயே! பேரில் பெண்டே!
நோகோ யானே; நோக்குமதி நீயே;
மறப் படை நுவலும் அரிக் குரல் தண்ணுமை
இன் இசை கேட்ட துன் அரு மறவர்
10
வென்றி தரு வேட்கையர், மன்றம் கொண்மார்,
பேர் அமர் உழந்த வெருவரு பறந்தலை,
விழு நவி பாய்ந்த மரத்தின்,
வாள் மிசைக் கிடந்த ஆண்மையோன் திறத்தே.
திணை கரந்தை; துறை கையறு நிலை.

(கண்டார் தாய்க்குச் சொல்லியது)
கழாத்தலையார் பாடியது.

274
நீலக் கச்சை, பூ ஆர் ஆடை,
பீலிக் கண்ணிப் பெருந்தகை மறவன்
மேல் வருங் களிற்றொடு வேல் துரந்து, இனியே,
தன்னும் துரக்குவன் போலும் ஒன்னலர்
5
எஃகுடை வலத்தர் மாவொடு பரத்தர,
கையின் வாங்கி, தழீஇ,
மொய்ம்பின் ஊக்கி, மெய்க் கொண்டனனே!

திணை அது; துறை எருமை மறம்.
உலோச்சனார் பாடியது.

275
கோட்டங் கண்ணியும், கொடுந்திரை ஆடையும்,
வேட்டது சொல்லி வேந்தனைத் தொடுத்தலும்,
ஒத்தன்று மாதோ, இவற்கே; செற்றிய
திணி நிலை அலறக் கூவை போழ்ந்து, தன்
5
வடி மாண் எஃகம் கடிமுகத்து ஏந்தி,
'ஓம்புமின், ஓம்புமின், இவண்!' என, ஓம்பாது,
தொடர் கொள் யானையின் குடர் கால் தட்ப,
கன்று அமர் கறவை மான,
முன் சமத்து எதிர்ந்த தன் தோழற்கு வருமே.

திணையும் துறையும் அவை.
ஒரூஉத்தனார் பாடியது.

277
'மீன் உண் கொக்கின் தூவி அன்ன
வால் நரைக் கூந்தல் முதியோள் சிறுவன்
களிறு எறிந்து பட்டனன்' என்னும் உவகை
ஈன்ற ஞான்றினும் பெரிதே; கண்ணீர்
5
நோன் கழை துயல்வரும் வெதிரத்து
வான் பெயத் தூங்கிய சிதரினும் பலவே.

திணை அது; துறை உவகைக் கலுழ்ச்சி.
பூங்கண் உத்திரையார் பாடியது.

279
கெடுக சிந்தை; கடிது இவள் துணிவே;
மூதில் மகளிர் ஆதல் தகுமே:
மேல்நாள் உற்ற செருவிற்கு இவள் தன்னை,
யானை எறிந்து, களத்து ஒழிந்தனனே;
5
நெருநல் உற்ற செருவிற்கு இவள் கொழுநன்,
பெரு நிரை விலங்கி, ஆண்டுப் பட்டனனே;
இன்றும், செருப் பறை கேட்டு, விருப்புற்று, மயங்கி,
வேல் கைக் கொடுத்து, வெளிது விரித்து உடீஇ,
பாறு மயிர்க் குடுமி எண்ணெய் நீவி,
10
ஒரு மகன் அல்லது இல்லோள்,
'செருமுகம் நோக்கிச் செல்க' என விடுமே!

திணை வாகை; துறை மூதில் முல்லை.
ஒக்கூர் மாசாத்தியார் பாடியது.

287
துடி எறியும் புலைய!
எறி கோல் கொள்ளும் இழிசின!
காலம் மாரியின் அம்பு தைப்பினும்,
வயல் கெண்டையின் வேல் பிறழினும்,
5
பொலம் புனை ஓடை அண்ணல் யானை
இலங்கு வால் மருப்பின் நுதி மடுத்து ஊன்றினும்,
ஓடல் செல்லாப் பீடுடையாளர்
நெடு நீர்ப் பொய்கைப் பிறழிய வாளை
நெல்லுடை நெடு நகர்க் கூட்டுமுதல் புரளும்,
10
தண்ணடை பெறுதல் யாவது? படினே,
மாசு இல் மகளிர் மன்றல் நன்றும்,
உயர் நிலை உலகத்து, நுகர்ப; அதனால்
வம்ப வேந்தன் தானை
இம்பர் நின்றும் காண்டிரோ, வரவே!

திணை கரந்தை; துறை நீண்மொழி.
சாத்தந்தையார் பாடியது.

290
இவற்கு ஈத்து உண்மதி, கள்ளே; சினப் போர்
இனக் களிற்று யானை, இயல் தேர்க் குருசில்!
நுந்தை தந்தைக்கு இவன் தந்தை தந்தை,
எடுத்து எறி ஞாட்பின் இமையான், தச்சன்
5
அடுத்து எறி குறட்டின், நின்று மாய்ந்தனனே;
மறப் புகழ் நிறைந்த மைந்தினோன் இவனும்,
உறைப்புழி ஓலை போல,
மறைக்குவன் பெரும! நிற் குறித்து வரு வேலே.

திணை கரந்தை; துறை குடிநிலை உரைத்தல்.
ஒளவையார் பாடியது.

293
நிறப் படைக்கு ஒல்கா யானை மேலோன்
குறும்பர்க்கு எறியும் ஏவல் தண்ணுமை
நாண் உடை மாக்கட்கு இரங்குமாயின்,
எம்மினும் பேர் எழில் இழந்து, வினை எனப்
5
பிறர் மனை புகுவள்கொல்லோ
அளியள் தானே, பூவிலைப் பெண்டே!

திணை காஞ்சி; துறை பூக்கோட் காஞ்சி.
நொச்சி நியமங் கிழார் பாடியது.

301
பல் சான்றீரே! பல் சான்றீரே!
குமரி மகளிர் கூந்தல் புரைய,
அமரின் இட்ட அரு முள் வேலிக்
கல்லென் பாசறைப் பல் சான்றீரே!
5
முரசு முழங்கு தானை நும் அரசும் ஓம்புமின்;
ஒளிறு ஏந்து மருப்பின் நும் களிறும் போற்றுமின்;
எனை நாள் தங்கும் நும் போரே, அனை நாள்
எறியார் எறிதல் யாவணது? எறிந்தோர்
எதிர் சென்று எறிதலும்செல்லான்; அதனால்
10
அறிந்தோர் யார், அவன் கண்ணிய பொருளே?
'பலம்' என்று இகழ்தல் ஓம்புமின்; உதுக் காண்
நிலன் அளப்பன்ன நில்லாக் குறு நெறி,
வண் பரிப் புரவிப் பண்பு பாராட்டி,
எல்லிடைப் படர்தந்தோனே; கல்லென
15
வேந்து ஊர் யானைக்கு அல்லது,
ஏந்துவன் போலான், தன் இலங்கு இலை வேலே.

திணையும் துறையும் அவை.
ஆவூர் மூலங் கிழார் பாடியது.

302
வெடி வேய் கொள்வது போல ஓடி,
தாவுபு உகளும், மாவே; பூவே,
விளங்குஇழை மகளிர் கூந்தல் கொண்ட;
நரந்தப் பல் காழ்க் கோதை சுற்றிய
5
ஐது அமை பாணி வணர் கோட்டுச் சீறியாழ்க்
கை வார் நரம்பின் பாணர்க்கு ஓக்கிய,
நிரம்பா இயல்பின் கரம்பைச் சீறூர்;
நோக்கினர்ச் செகுக்கும் காளை ஊக்கி,
வேலின் அட்ட களிறு பெயர்த்து எண்ணின்,
10
விண் இவர் விசும்பின் மீனும்,
தண் பெயல் உறையும், உறை ஆற்றாவே.

திணை அது; துறை குதிரை மறம்.
வெறி பாடிய காமக்கண்ணியார் பாடியது.

303
நிலம் பிறக்கிடுவது போலக் குளம்பு குடையூஉ,
உள்ளம் அழிக்கும் கொட்பின் மான்மேல்
எள்ளுநர்ச் செகுக்கும் காளை கூர்த்த
வெந் திறல் எஃகம் நெஞ்சு வடு விளைப்ப
5
ஆட்டிக் காணிய வருமே நெருநை,
உரைசால் சிறப்பின் வேந்தர் முன்னர்,
கரை பொரு முந்நீர்த் திமிலின் போழ்ந்து, அவர்
கயந்தலை மடப் பிடி புலம்ப,
இலங்கு மருப்பு யானை எறிந்த எற்கே.

திணையும் துறையும் அவை.
எருமை வெளியனார் பாடியது.

305
வயலைக் கொடியின் வாடிய மருங்குல்,
உயவல் ஊர்தி, பயலைப் பார்ப்பான்
எல்லி வந்து நில்லாது புக்கு,
சொல்லிய சொல்லோ சிலவே; அதற்கே
5
ஏணியும் சீப்பும் மாற்றி,
மாண் வினை யானையும் மணி களைந்தனவே.

திணை வாகை; துறை பார்ப்பன வாகை.
மதுரை வேளாசான் பாடியது.

306
களிறு பொரக் கலங்கு, கழல் முள் வேலி,
அரிது உண் கூவல், அம் குடிச் சீறூர்
ஒலி மென் கூந்தல் ஒள் நுதல் அரிவை
நடுகல் கை தொழுது பரவும், ஒடியாது;
5
விருந்து எதிர் பெறுகதில் யானே; என்னையும்
ஒ ... ... ... ... ... ... ...வேந்தனொடு
நாடுதரு விழுப் பகை எய்துக எனவே.

திணை அது; துறை மூதில் முல்லை.
அள்ளூர் நன்முல்லையார் பாடியது.

307
ஆசு ஆகு எந்தை யாண்டு உளன்கொல்லோ?
குன்றத்து அன்ன களிற்றொடு பட்டோன்;
வம்பலன் போலத் தோன்றும்; உதுக்காண்;
வேனல் வரி அணில் வாலத்து அன்ன,
5
கான ஊகின் கழன்று உகு முது வீ
அரியல் வான் குழல் சுரியல் தங்க,
நீரும் புல்லும் ஈயாது, உமணர்
யாரும் இல் ஒரு சிறை முடத்தொடு துறந்த
வாழா வான் பகடு ஏய்ப்ப, தெறுவர்
10
பேர் உயிர் கொள்ளும் மாதோ; அது கண்டு,
வெஞ் சின யானை வேந்தனும், 'இக் களத்து,
எஞ்சலின் சிறந்தது பிறிது ஒன்று இல்' என,
பண் கொளற்கு அருமை நோக்கி,
நெஞ்சு அற வீழ்ந்த புரைமையோனே.

திணை தும்பை; துறை களிற்றுடனிலை.
........................................................................

308
பொன் வார்ந்தன்ன புரி அடங்கு நரம்பின்,
மின் நேர் பச்சை, மிஞிற்றுக் குரல் சீறியாழ்
நன்மை நிறைந்த நய வரு பாண!
சீறூர் மன்னன் சிறியிலை எஃகம்
5
வேந்து ஊர் யானை ஏந்து முகத்ததுவே;
வேந்து உடன்று எறிந்த வேலே, என்னை
சாந்து ஆர் அகலம் உளம் கழிந்தன்றே;
உளம் கழி சுடர்ப் படை ஏந்தி, நம் பெருவிறல்
ஓச்சினன் துரந்த காலை, மற்றவன்
10
புன் தலை மடப் பிடி நாண,
குஞ்சரம் எல்லாம் புறக்கொடுத்தனவே.

திணை வாகை; துறை மூதில் முல்லை.
கோவூர் கிழார் பாடியது.

310
பால் கொண்டு மடுப்பவும் உண்ணான் ஆகலின்,
செறாஅது ஓச்சிய சிறு கோல் அஞ்சியொடு,
உயவொடு வருந்தும் மன்னே! இனியே
புகர் நிறம் கொண்ட களிறு அட்டு ஆனான்,
5
முன்நாள் வீழ்ந்த உரவோர் மகனே,
உன்னிலன் என்னும், புண் ஒன்று அம்பு
மான் உளை அன்ன குடுமித்
தோல் மிசைக் கிடந்த புல் அணலோனே.

திணையும் துறையும் அவை.
பொன்முடியார் பாடியது.

312
ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே;
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே;
வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே;
நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே,
5
ஒளிறு வாள் அருஞ் சமம் முருக்கி,
களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே.

திணை வாகை; துறை மூதில்முல்லை.
பொன்முடியார் பாடியது.

313
அத்தம் நண்ணிய நாடு கெழு பெருவிறல்
கைப் பொருள் யாதொன்றும் இலனே; நச்சிக்
காணிய சென்ற இரவல் மாக்கள்
களிறொடு நெடுந் தேர் வேண்டினும், கடவ;
5
உப்பு ஒய் சாகாட்டு உமணர் காட்ட
கழி முரி குன்றத்து அற்றே,
எள் அமைவு இன்று, அவன் உள்ளிய பொருளே.

திணை அது; துறை வல்லாண் முல்லை.
மாங்குடி கிழார் பாடியது.

316
கள்ளின் வாழ்த்தி, கள்ளின் வாழ்த்தி,
காட்டொடு மிடைந்த சீயா முன்றில்,
நாட் செருக்கு அனந்தர்த் துஞ்சுவோனே.
அவன் எம் இறைவன்; யாம் அவன் பாணர்;
5
நெருநை வந்த விருந்திற்கு மற்றுத் தன்
இரும் புடைப் பழ வாள் வைத்தனன்; இன்று இக்
கருங் கோட்டுச் சீறியாழ் பணையம்; இது கொண்டு
ஈவதிலாளன் என்னாது, நீயும்,
வள்ளி மருங்குல் வயங்கு இழை அணிய,
10
கள்ளுடைக் கலத்தேம் யாம் மகிழ் தூங்க,
சென்று வாய் சிவந்து மேல் வருக
சிறு கண் யானை வேந்து விழுமுறவே.

திணையும் துறையும் அவை.
மதுரைக் கள்ளிற் கடையத்தன் வெண்ணாகனார் பாடியது.

320
முன்றில் முஞ்ஞையொடு முசுண்டை பம்பி,
பந்தர் வேண்டாப் பலா தூங்கு நீழல்,
கைம்மான் வேட்டுவன் கனை துயில் மடிந்தென,
பார்வை மடப் பிணை தழீஇ, பிறிது ஓர்
5
தீர் தொழில் தனிக் கலை திளைத்து விளையாட,
இன்புறு புணர்நிலை கண்ட மனையோள்
கணவன் எழுதலும் அஞ்சி, கலையே
பிணைவயின் தீர்தலும் அஞ்சி, யாவதும்,
இல் வழங்காமையின், கல்லென ஒலித்து,
10
மான் அதள் பெய்த உணங்கு தினை வல்சி
கானக் கோழியோடு இதல் கவர்ந்து உண்டென,
ஆர நெருப்பின், ஆரல் நாற,
தடிவு ஆர்ந்திட்ட முழு வள்ளூரம்
இரும் பேர் ஒக்கலொடு ஒருங்கு இனிது அருந்தி,
15
தங்கினை சென்மோ, பாண! தங்காது,
வேந்து தரு விழுக் கூழ் பரிசிலர்க்கு என்றும்
அருகாது ஈயும் வண்மை
உரைசால் நெடுந் தகை ஓம்பும் ஊரே.

திணையும் துறையும் அவை.
வீரை வெளியனார் பாடியது.

323
புலிப்பாற் பட்ட ஆமான் குழவிக்குச்
சினம் கழி மூதாக் கன்று மடுத்து ஊட்டும்
கா ... ... ... ... ..... ..... ...... ...... ..... க்கு
உள்ளியது சுரக்கும் ஓம்பா ஈகை,
5
வெள் வேல் ஆவம்ஆயின், ஒள் வாள்
கறையடி யானைக்கு அல்லது
உறை கழிப்பு அறியா, வேலோன் ஊரே.

........................................................
................டார் கிழார் பாடியது.

325
களிறு நீறு ஆடிய விடு நில மருங்கின்,
வம்பப் பெரும் பெயல் வரைந்து சொரிந்து இறந்தென,
குழி கொள் சில் நீர் குராஅல் உண்டலின்,
சேறு கிளைத்திட்ட கலுழ் கண் ஊறல்
5
முறையின் உண்ணும் நிறையா வாழ்க்கை,
முளவு மாத் தொலைச்சிய முழுச்சொல் ஆடவர்
உடும்பு இழுது அறுத்த ஒடுங் காழ்ப் படலைச்
சீறில் முன்றில் கூறுசெய்திடுமார்,
கொள்ளி வைத்த கொழு நிண நாற்றம்
10
மறுகுடன் கமழும் மதுகை மன்றத்து,
அலந்தலை இரத்தி அலங்குபடு நீழல்,
கயந் தலைச் சிறாஅர் கணை விளையாடும்
அரு மிளை இருக்கையதுவே வென் வேல்
வேந்து தலைவரினும் தாங்கும்,
15
தாங்கா ஈகை, நெடுந்தகை ஊரே.

திணையும் துறையும் அவை.
உறையூர் முதுகண்ணன் சாத்தனார் பாடியது.

326
ஊர் முது வேலிப் பார் நடை வெருகின்
இருள் பகை வெரீஇய நாகு இளம் பேடை
உயிர் நடுக்குற்றுப் புலா விட்டு அரற்ற,
சிறையும் செற்றையும் புடையுநள் எழுந்த
5
பருத்திப் பெண்டின் சிறு தீ விளக்கத்து,
கவிர்ப் பூ நெற்றிச் சேவலின் தணியும்
அரு மிளை இருக்கையதுவே மனைவியும்,
வேட்டச் சிறாஅர் சேண் புலம் படராது,
படப்பைக் கொண்ட குறுந் தாள் உடும்பின்
10
விழுக்கு நிணம் பெய்த தயிர்க் கண் விதவை,
யாணர் நல்லவை பாணரொடு, ஒராங்கு
வரு விருந்து அயரும் விருப்பினள்; கிழவனும்,
அருஞ் சமம் ததையத் தாக்கி, பெருஞ் சமத்து
அண்ணல் யானை அணிந்த
15
பொன் செய் ஓடைப் பெரும் பரிசிலனே.

திணை வாகை; துறை மூதில் முல்லை.
தங்கால் பொற்கொல்லனார் பாடியது.

332
பிறர் வேல் போலாதாகி, இவ் ஊர்
மறவன் வேலோ பெருந் தகை உடைத்தே;
இரும் புறம் நீறும் ஆடி, கலந்து இடைக்
குரம்பைக் கூரைக் கிடக்கினும் கிடக்கும்;
5
மங்கல மகளிரொடு மாலை சூட்டி,
இன் குரல் இரும் பை யாழொடு ததும்ப,
தெண் நீர்ப் படுவினும் தெருவினும் திரிந்து,
மண் முழுது அழுங்கச் செல்லினும் செல்லும்; ஆங்கு,
இருங் கடல் தானை வேந்தர்
10
பெருங் களிற்று முகத்தினும் செலவு ஆனாதே.

திணையும் துறையும் அவை.
விரியூர் நக்கனார் பாடியது.

334
காமரு பழனக் கண்பின் அன்ன
தூ மயிர்க் குறுந் தாள் நெடுஞ் செவிக் குறு முயல்,
புன் தலைச் சிறாஅர் மன்றத்து ஆர்ப்பின்,
படப்பு ஒடுங்கும்மே ........... பின்பு
5
..................... ன் ஊரே மனையோள்
பாணர் ஆர்த்தவும், பரிசிலர் ஓம்பவும்,
ஊண் ஒலி அரவமொடு கைதூவாளே;
உயர் மருப்பு யானைப் புகர் முகத்து அணிந்த
பொலம் .............................. ப்
10
பரிசில் பரிசிலர்க்கு ஈய,
உரவு வேல் காளையும் கை தூவானே.

திணையும் துறையும் அவை.
மதுரைத் தமிழக் கூத்தனார் பாடியது.

335
அடல் அருந் துப்பின்....................
...................குருந்தே முல்லை என்று
இந் நான்கு அல்லது பூவும் இல்லை;
கருங் கால் வரகே, இருங் கதிர்த் தினையே,
5
சிறு கொடிக் கொள்ளே, பொறி கிளர் அவரையொடு,
இந் நான்கு அல்லது உணாவும் இல்லை;
துடியன், பாணன், பறையன், கடம்பன், என்று
இந் நான்கு அல்லது குடியும் இல்லை;
ஒன்னாத் தெவ்வர் முன் நின்று விலங்கி,
10
ஒளிறு ஏந்து மருப்பின் களிறு எறிந்து வீழ்ந்தென,
கல்லே பரவின் அல்லது,
நெல் உகுத்துப் பரவும் கடவுளும் இலவே.

திணையும் துறையும் அவை.
மாங்குடி கிழார் பாடியது.

336
வேட்ட வேந்தனும் வெஞ் சினத்தினனே;
கடவன கழிப்பு இவள் தந்தையும் செய்யான்;
ஒளிறு முகத்து ஏந்திய வீங்கு தொடி மருப்பின்
களிறும் கடிமரம் சேரா; சேர்ந்த
5
ஒளிறு வேல் மறவரும் வாய் மூழ்த்தனரே;
இயவரும் அறியாப் பல் இயம் கறங்க,
அன்னோ, பெரும் பேதுற்றன்று, இவ் அருங் கடி மூதூர்;
அறன் இலள் மன்ற தானே விறல் மலை
வேங்கை வெற்பின் விரிந்த கோங்கின்
10
முகை வனப்பு ஏந்திய முற்றா இளமுலைத்
தகை வளர்த்து எடுத்த நகையொடு,
பகை வளர்த்திருந்த இப் பண்பு இல் தாயே.

திணை காஞ்சி; துறை மகட்பாற் காஞ்சி.
பரணர் பாடியது.

337
ஆர்கலி யினனே, சோணாட்டு அண்ணல்;
கவி கை மண் ஆள் செல்வர் ஆயினும்,
வாள் வலத்து ஒழியப் பாடிச் சென்றாஅர்,
வரல்தோறு அகம் மலர,
5
ஈதல் ஆனா விலங்கு தொடித் தடக் கைப்
பாரி பறம்பின் பனிச் சுனை போல,
காண்டற்கு அரியள் ஆகி, மாண்ட
பெண்மை நிறைந்த பொலிவொடு, மண்ணிய
துகில் விரி கடுப்ப நுடங்கி, தண்ணென
10
அகில் ஆர் நறும் புகை ஐது சென்று அடங்கிய
கபில நெடு நகர்க் கமழும் நாற்றமொடு,
மனைச் செறிந்தனளே, வாணுதல்; இனியே,
அற்றன்றுஆகலின், தெற்றெனப் போற்றி,
காய் நெல் கவளம் தீற்றி, காவுதொறும்
15
கடுங்கண் யானை காப்பனர் அன்றி,
வருதல் ஆனார் வேந்தர்; தன்னையர்
பொரு சமம் கடந்த உரு கெழு நெடு வேல்
குருதி பற்றிய வெருவரு தலையர்;
மற்று இவர் மறனும் இற்றால்; தெற்றென
20
யார் ஆகுவர்கொல் தாமே நேரிழை
உருத்த பல சுணங்கு அணிந்த
மருப்பு இள வன முலை ஞெமுக்குவோரே?

திணையும் துறையும் அவை.
கபிலர் பாடியது.

339
வியன் புலம் படர்ந்த பல் ஆ நெடு ஏறு
மடலை மாண் நிழல் அசைவிட, கோவலர்
வீ ததை முல்லைப் பூப் பறிக்குந்து;
குறுங் கோல் எறிந்த நெடுஞ் செவிக் குறு முயல்
5
நெடு நீர்ப் பரப்பின் வாளையொடு உகளுந்து;
தொடலை அல்குல் தொடித் தோள் மகளிர்
கடல் ஆடிக் கயம் பாய்ந்து,
கழி நெய்தல் பூக்குறூஉந்து;
பைந் தழை துயல்வரும் செறு விறற..............
10
............................................................................லத்தி
வளர வேண்டும், அவளே, என்றும்
ஆர் அமர் உழப்பதும் அமரியளாகி,
முறம் செவி யானை வேந்தர்
மறம் கெழு நெஞ்சம் கொண்டு ஒளித்தோளே.

திணையும் துறையும் அவை.
..............................................................

340
அணித் தழை நுடங்க ஓடி, மணிப் பொறிக்
குரல் அம் குன்றி கொள்ளும் இளையோள்,
மா மகள்
....................... ல் என வினவுதி, கேள், நீ:
5
எடுப்பவெ...,..................................................
..........................மைந்தர் தந்தை
இரும் பனை அன்ன பெருங் கை யானை
கரந்தை அம் செறுவின் பெயர்க்கும்
பெருந் தகை மன்னர்க்கு வரைந்திருந்தனனே.

திணையும் துறையும் அவை.
அ............................... பாடியது.

341
வேந்து குறையுறவும் கொடாஅன், ஏந்து கோட்டு
அம் பூந் தொடலை அணித் தழை அல்குல்,
செம் பொறிச் சிலம்பின் இளையோள் தந்தை,
எழு விட்டு அமைத்த திண் நிலைக் கதவின்
5
அரை மண் இஞ்சி நாட் கொடி நுடங்கும்
..........................................................................................................
புலிக் கணத்து அன்ன கடுங் கண் சுற்றமொடு,
மாற்றம் மாறான், மறலிய சினத்தன்,
'பூக் கோள்' என ஏஎய், கயம் புக்கனனே;
10
விளங்குஇழைப் பொலிந்த வேளா மெல் இயல்,
சுணங்கு அணி வன முலை, அவளொடு நாளை
மணம் புகு வைகல் ஆகுதல் ஒன்றோ
ஆர் அமர் உழக்கிய மறம் கிளர் முன்பின்,
நீள் இலை எஃகம் மறுத்த உடம்பொடு
15
வாரா உலகம் புகுதல் ஒன்று எனப்
படை தொட்டனனே, குருசில்; ஆயிடைக்
களிறு பொரக் கலங்கிய தண் கயம் போல,
பெருங் கவின் இழப்பது கொல்லோ,
மென் புனல் வைப்பின் இத் தண் பணை ஊரே!

திணையும் துறையும் அவை.
பரணர் பாடியது.

342
'கானக் காக்கைக் கலிச் சிறகு ஏய்க்கும்
மயிலைக் கண்ணி, பெருந் தோள் குறுமகள்,
ஏனோர் மகள்கொல் இவள்?' என விதுப்புற்று,
என்னொடு வினவும் வென் வேல் நெடுந்தகை!
5
திரு நயத்தக்க பண்பின் இவள் நலனே
பொருநர்க்கு அல்லது, பிறர்க்கு ஆகாதே;
பைங் கால் கொக்கின் பகு வாய்ப் பிள்ளை
மென் சேற்று அடைகரை மேய்ந்து உண்டதற்பின்,
ஆரல் ஈன்ற ஐயவி முட்டை,
10
கூர் நல் இறவின் பிள்ளையொடு பெறூஉம்,
தண் பணைக் கிழவன் இவள் தந்தையும்; வேந்தரும்
பெறாஅமையின் பேர் அமர் செய்தலின்,
கழி பிணம் பிறங்கு போர்பு அழி களிறு எருதா,
வாள் தக வைகலும் உழக்கும்
15
மாட்சியவர், இவள் தன்னைமாரே.

திணையும் துறையும் அவை.
அரிசில் கிழார் பாடியது.

345
களிறு அணைப்பக் கலங்கின, காஅ,
தேர் ஓடத் துகள் கெழுமின, தெருவு;
மா மறுகலின் மயக்குற்றன, வழி;
கலம் கழாஅலின், துறை கலக்குற்றன;
5
தெறல் மறவர் இறை கூர்தலின்,
பொறை மலிந்து நிலன் நெளிய,
வந்தோர் பலரே, வம்ப வேந்தர்,
பிடி உயிர்ப்பு அன்ன கை கவர் இரும்பின்
ஓவு உறழ் இரும் புறம் காவல் கண்ணி,
10
கருங் கண் கொண்ட நெருங்கல் வெம் முலை,
மையல் நோக்கின், தையலை நயந்தோர்
அளியர் தாமே; இவள் தன்னைமாரே
செல்வம் வேண்டார், செருப் புகல் வேண்டி,
'நிரல் அல்லோர்க்குத் தரலோ இல்' என;
15
கழிப் பிணிப் பலகையர், கதுவாய் வாளர்,
குழாஅம் கொண்ட குருதிஅம் புலவொடு
கழாஅத் தலையர், கருங் கடை நெடு வேல்
இன்ன மறவர்த்துஆயினும் அன்னோ!
என் ஆவது கொல்தானே
20
பன்னல் வேலி இப் பணை நல் ஊரே!

திணையும் துறையும் அவை.
அவனை அவர் பாடியது.

347
உண்போன் தான் நறுங் கள்ளின் இடச் சில
நா இடைப் பல் தேர் கோலச் சிவந்த
ஒளிறு ஒள் வாடக் குழைந்த பைந் தும்பை,
எறிந்து இலை முறிந்த கதுவாய் வேலின்,
5
மணம் நாறு மார்பின், மறப் போர் அகுதை,
குண்டு நீர் வரைப்பின், கூடல் அன்ன
குவை இருங்கூந்தல் வரு முலை சேப்ப,
...........................................................................................................
என் ஆவதுகொல் தானே?.....................................
10
விளங்குறு பராரைய ஆயினும், வேந்தர்
வினை நவில் யானை பிணிப்ப,
வேர் துளங்கின, நம் ஊருள் மரனே.

திணையும் துறையும் அவை.
கபிலர் பாடியது.

348
வெண்ணெல் அரிஞர் தண்ணுமை வெரீஇ,
கண் மடல் கொண்ட தீம் தேன் இரிய,
கள் அரிக்கும் குயம், சிறு சில்
மீன் சீவும் பாண் சேரி,
5
வாய்மொழித் தழும்பன் ஊணூர் அன்ன,
குவளை உண்கண் இவளை, தாயே
ஈனாளாயினள்ஆயின், ஆனாது
நிழல்தொறும் நெடுந் தேர் நிற்ப, வயின்தொறும்,
செந் நுதல் யானை பிணிப்ப,
10
வருந்தலமன் எம் பெருந் துறை மரனே!

திணையும் துறையும் அவை.
பரணர் பாடியது.

351
படு மணி மருங்கின பணைத் தாள் யானையும்,
கொடி நுடங்கு மிசைய தேரும், மாவும்,
படை அமை மறவரொடு, துவன்றிக் கல்லென,
கடல் கண்டன்ன கண் அகன் தானை
5
வென்று எறி முரசின் வேந்தர், என்றும்,
வண் கை எயினன் வாகை அன்ன
இவள் நலம் தாராது அமைகுவர் அல்லர்;
என் ஆவதுகொல் தானே தெண் நீர்ப்
பொய்கை மேய்ந்த செவ் வரி நாரை
10
தேங் கொள் மருதின் பூஞ் சினை முனையின்,
காமரு காஞ்சித் துஞ்சும்
ஏமம்சால் சிறப்பின், இப் பணை நல் ஊரே?

திணையும் துறையும் அவை.
மதுரைப் படைமங்க மன்னியார் பாடியது.

359
பாறுபடப் பறைந்த பல் மாறு மருங்கின்,
வேறு படு குரல வெவ் வாய்க் கூகையொடு,
பிணம் தின் குறு நரி நிணம் திகழ் பல்ல,
பேஎய் மகளிர் பிணம் தழூஉப் பற்றி,
5
விளர் ஊன் தின்ற வெம் புலால் மெய்யர்,
களரி மருங்கின் கால் பெயர்த்து ஆடி,
ஈம விளக்கின் வெருவரப் பேரும்
காடு முன்னினரே, நாடு கொண்டோரும்;
நினக்கும் வருதல் வைகல் அற்றே;
10
வசையும் நிற்கும்; இசையும் நிற்கும்;
அதனால், வசை நீக்கி இசை வேண்டியும்,
நசை வேண்டாது நன்று மொழிந்தும்,
நிலவுக் கோட்டுப் பல களிற்றொடு,
பொலம் படைய மா மயங்கிட,
15
இழை கிளர் நெடுந் தேர் இரவலர்க்கு அருகாது,
'கொள்' என விடுவை ஆயின், வெள்ளென,
ஆண்டு நீ பெயர்ந்த பின்னும்,
ஈண்டு நீடு விளங்கும், நீ எய்திய புகழே.

திணை அது; துறை பெருங்காஞ்சி.
அந்துவன் கீரனைக் காவட்டனார் பாடியது.

361
கார் எதிர் உருமின் உரறி, கல்லென,
ஆர் உயிர்க்கு அலமரும் ஆராக் கூற்றம்!
நின் வரவு அஞ்சலன் மாதோ; நன் பல
கேள்வி முற்றிய வேள்வி அந்தணர்க்கு,
5
அருங் கலம் நீரொடு சிதறி, பெருந்தகைத்
தாயின் நன்று பலர்க்கு ஈத்து,
தெருள் நடை மா களிறொடு தன்
அருள் பாடுநர்க்கு நன்கு அருளியும்,
உருள் நடை ........................ான்றதன்
10
தாள் சேருநர்க்கு இனிது ஈத்தும்,
புரி மாலையர் பாடினிக்குப்
பொலந் தாமரைப் பூம் பாணரொடு
கலந்து அளைஇய நீள் இருக்கையால்
பொறையொ............ மான் நோக்கின்,
15
வில் என விலங்கிய புருவத்து, வல்லென
நல்கின் நா அஞ்சும் முள் எயிற்று, மகளிர்
அல்குல் தாங்கா அசைஇ, மெல்லென
............................................பொலங்கலத்து ஏந்தி,
அமிழ்து என மடுப்ப மாந்தி, இகழ்விலன்,
20
நில்லா உலகத்து............... மை நீ
சொல்ல வேண்டா................. முந்தறிந்த

....................................................................................
...............................................னார் பாடியது.

368
களிறு முகந்து பெயர்குவம் எனினே,
ஒளிறு மழை தவிர்க்கும் குன்றம் போல,
கைம்மா எல்லாம் கணை இடத் தொலைந்தன;
கொடுஞ்சி நெடுந் தேர் முகக்குவம் எனினே;
5
கடும் பரி நல் மான் வாங்குவயின் ஒல்கி,
நெடும் பீடு அழிந்து, நிலம் சேர்ந்தனவே;
கொய் சுவல் புரவி முகக்குவம் எனினே,
மெய் நிறைந்த வழுவொடு பெரும்பிறிதாகி,
வளி வழக்கு அறுத்த வங்கம் போல,
10
குருதி அம் பெரும் புனல் கூர்ந்தனவே; ஆங்க
முகவை இன்மையின் உகவை இன்றி,
இரப்போர் இரங்கும் இன்னா வியன் களத்து,
ஆள் அழிப்படுத்த வாள் ஏர் உழவ!
கடாஅ யானைக் கால்வழி அன்ன என்
15
தெடாரித் தெண் கண் தெளிர்ப்ப ஒற்றி,
பாடி வந்தது எல்லாம், கோடியர்
முழவு மருள் திரு மணி மிடைந்த நின்
அரவு உறழ் ஆரம் முகக்குவம் எனவே.

திணை வாகை; துறை மறக்களவழி.
சேரமான் குடக்கோ நெடுஞ் சேரலாதன் சோழன் வேற் பல் தடக் கைப் பெரு நற்கிள்ளியொடு போர்ப் புறத்துப் பொருது வீழ்ந்து, ஆரம் கழுத்தன்னதாக உயிர் போகாது கிடந்தானைக் கழாத்தலையார் பாடியது.

369
இருப்பு முகஞ் செறித்த ஏந்து எழில் மருப்பின்,
கருங் கை யானை கொண்மூ ஆக,
நீள்மொழி மறவர் எறிவனர் உயர்த்த
வாள் மின் ஆக, வயங்கு கடிப்பு அமைந்த
5
குருதிப் பலிய முரசு முழக்கு ஆக,
அரசு அராப் பனிக்கும் அணங்கு உறு பொழுதின்,
வெவ் விசைப் புரவி வீசு வளி ஆக,
விசைப்புறு வல் வில் வீங்கு நாண் உகைத்த
கணைத் துளி பொழிந்த கண் அகன் கிடக்கை.
10
ஈரச் செறுவயின் தேர் ஏர் ஆக,
விடியல் புக்கு, நெடிய நீட்டி, நின்
செருப் படை மிளிர்ந்த திருத்துறு பைஞ் சால்,
பிடித்து எறி வெள் வேல் கணையமொடு வித்தி,
விழுத் தலை சாய்த்த வெருவரு பைங் கூழ்,
15
பேய்மகள் பற்றிய பிணம் பிறங்கு பல் போர்பு,
கண நரியோடு கழுது களம் படுப்ப,
பூதம் காப்ப, பொலிகளம் தழீஇ,
பாடுநர்க்கு இருந்த பீடுடையாள!
தேய்வை வெண் காழ் புரையும் விசி பிணி
20
வேய்வை காணா விருந்தின் போர்வை
அரிக் குரல் தடாரி உருப்ப ஒற்றி,
பாடி வந்திசின்; பெரும! பாடு ஆன்று
எழிலி தோயும் இமிழ் இசை அருவி,
பொன்னுடை நெடுங் கோட்டு, இமையத்து அன்ன
25
ஓடை நுதல, ஒல்குதல் அறியா,
துடி அடிக் குழவிய பிடி இடை மிடைந்த
வேழ முகவை நல்குமதி
தாழா ஈகைத் தகை வெய்யோயே!

திணையும் துறையும் அவை; துறை ஏர்க்கள உருவகமும் ஆம்.
சேரமான் கடல் ஓட்டிய வெல் கெழு குட்டுவனைப் பரணர் பாடியது.

370
...............................................................................................................ளி,
நாரும் போழும் செய்து உண்டு, ஒராங்குப்
பசி தினத் திரங்கிய இரு பேர் ஒக்கற்கு
ஆர் பதம் கண்ணென மாதிரம் துழைஇ,
5
வேர் உழந்து உலறி, மருங்கு செத்து ஒழிய வந்து,
அத்தக் குடிஞைத் துடி மருள் தீம் குரல்,
உழுஞ்சில் அம் கவட்டிடை இருந்த பருந்தின்
பெடை பயிர் குரலோடு, இசைக்கும் ஆங்கண்,
கழை காய்ந்து உலறிய வறம் கூர் நீள் இடை,
10
வரி மரல் திரங்கிய கானம் பிற்பட,
பழுமரம் உள்ளிய பறவை போல,
ஒண் படை மாரி வீழ் கனி பெய்தென,
துவைத்து எழு குருதி நிலமிசைப் பரப்ப,
விளைந்த செழுங் குரல் அரிந்து, கால் குவித்து,
15
படு பிணப் பல் போர்பு அழிய வாங்கி,
எருது களிறு ஆக, வாள் மடல் ஓச்சி,
அதரி திரித்த ஆள் உகு கடாவின்,
அகன் கண் தடாரி தெளிர்ப்ப ஒற்றி,
'வெந் திறல் வியன் களம் பொலிக!' என்று ஏத்தி,
20
இருப்பு முகம் செறித்த ஏந்து மருப்பின்
வரை மருள் முகவைக்கு வந்தனென்; பெரும!
வடி நவில் எஃகம் பாய்ந்தென, கிடந்த
தொடியுடைத் தடக் கை ஓச்சி, வெருவார்
இனத் தடி விராய வரிக் குடர் அடைச்சி,
25
அழு குரல் பேய்மகள் அயர, கழுகொடு
செஞ் செவி எருவை திரிதரும்,
அஞ்சுவரு கிடக்கைய களம் கிழவோயே!

திணையும் துறையும் அவை.
சோழன் செருப்பாழி எறிந்த இளந்சேட்சென்னியை ஊன்பொதி பசுங்குடையார் பாடியது.

371
அகன் தலை வையத்துப் புரவலர்க் காணாது,
மரந்தலைச் சேர்ந்து, பட்டினி வைகி,
போது அவிழ் அலரி நாரின் தொடுத்து,
தயங்கு இரும் பித்தை பொலியச் சூடி,
5
பறையொடு தகைத்த கலப் பையென், முரவு வாய்
ஆடுறு குழிசி பாடு இன்று தூக்கி,
மன்ற வேம்பின் ஒண் பூ உறைப்ப,
குறை செயல் வேண்டா நசைய இருக்கையேன்,
அரிசி இன்மையின் ஆர் இடை நீந்தி,
10
கூர் வாய் இரும் படை நீரின் மிளிர்ப்ப,
வரு கணை வாளி....... அன்பு இன்று தலைஇ,
இரைமுரசு ஆர்க்கும் உரைசால் பாசறை,
வில் ஏர் உழவின் நின் நல் இசை உள்ளி,
குறைத் தலைப் படு பிணன் எதிர, போர்பு அழித்து,
15
யானை எருத்தின் வாள் மடல் ஓச்சி
அதரி திரித்த ஆள் உகு கடாவின்,
மதியத்து அன்ன என் விசி உறு தடாரி
அகன் கண் அதிர, ஆகுளி தொடாலின்,
பணை மருள் நெடுந் தாள், பல் பிணர்த் தடக் கை,
20
புகர்முக முகவைக்கு வந்திசின் பெரும!
களிற்றுக் கோட்டன்ன வால் எயிறு அழுத்தி,
விழுக்கொடு விரைஇய வெண் நிணச் சுவையினள்,
குடர்த் தலை மாலை சூடி, 'உணத் தின
ஆனாப் பெரு வளம் செய்தோன் வானத்து
25
வயங்கு பல் மீனினும் வாழியர், பல' என,
உரு கெழு பேய்மகள் அயர,
குருதித் துகள் ஆடிய களம் கிழவோயே!

திணையும் துறையும் அவை.
தலையாலங்கானத்துச் செரு வென்ற நெடுஞ்செழியனைக் கல்லாடனார் பாடியது.

373
உருமிசை முழக்கு என முரசம் இசைப்ப,
செரு நவில் வேழம் கொண்மூ ஆக,
தேர் மா அழி துளி தலைஇ, நாம் உறக்
கணைக் காற்று எடுத்த கண் அகன் பாசறை,
5
இழிதரு குருதியொடு ஏந்திய ஒள் வாள்
பிழிவது போலப் பிட்டை ஊறு உவப்ப,
மைந்தர் ஆடிய மயங்கு பெருந் தானை,
கொங்கு புறம்பெற்ற கொற்ற வேந்தே!
................................................தண்ட மாப் பொறி.
10
மடக் கண் மயில் இயல் மறலியாங்கு,
நெடுஞ் சுவர் நல் இல் புலம்ப, கடை கழிந்து,
மென் தோள் மகளிர் மன்றம் பேணார்,
புண்ணுவ
..........................அணியப் புரவி வாழ்க என,
15
சொல் நிழல் இன்மையின் நல் நிழல் சேர,
நுண் பூண் மார்பின் புன் தலைச் சிறாஅர்
அம்பு அழி பொழுதில் தமர் முகம் காணா,
........................................................ற் றொக்கான
வேந்து புறங்கொடுத்த வீய்ந்து உகு பறந்தலை,
20
மாடம் மயங்கு எரி மண்டி, கோடு இறுபு,
உரும் எறி மலையின், இரு நிலம் சேர,
சென்றோன் மன்ற, சொª
........................ ண்ணறிநர் கண்டு கண் அலைப்ப,
வஞ்சி முற்றம் வயக் களன் ஆக,
25
அஞ்சா மறவர் ஆட் போர்பு அழித்துக்
கொண்டனை, பெரும! குட புலத்து அதரி;
பொலிக அத்தை, நின் பணைதனற............ளம்!
விளங்கு திணை வேந்தர் களம்தொறும் சென்று,
''புகர்முக முகவை பொலிக!'' என்று ஏத்தி,
30
கொண்டனர்' என்ப, பெரியோர்; யானும்
அம் கண் மாக் கிணை அதிர ஒற்ற,
............... லென்ஆயினும், காதலின் ஏத்தி,
நின்னோர் அன்னோர் பிறர் இவண் இன்மையின்,
மன் எயில் முகவைக்கு வந்திசின், பெரும!
35
பகைவர் புகழ்ந்த ஆண்மை, நகைவர்க்குத்
தா இன்று உதவும் பண்பின், பேயொடு
கண நரி திரிதரூஉம் ஆங்கண், நிணன் அருந்து
செஞ் செவி எருவை குழீஇ,
அஞ்சுவரு கிடக்கைய களம் கிழவோயே!
40
திணை அது; துறை மறக்களவழி; ஏர்க்கள உருவகமும் ஆம்.

சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவன் கருவூர் எறிந்தானைக் கோவூர்
கிழார் பாடியது.

373
உருமிசை முழக்கு என முரசம் இசைப்ப,
செரு நவில் வேழம் கொண்மூ ஆக,
தேர் மா அழி துளி தலைஇ, நாம் உறக்
கணைக் காற்று எடுத்த கண் அகன் பாசறை,
5
இழிதரு குருதியொடு ஏந்திய ஒள் வாள்
பிழிவது போலப் பிட்டை ஊறு உவப்ப,
மைந்தர் ஆடிய மயங்கு பெருந் தானை,
கொங்கு புறம்பெற்ற கொற்ற வேந்தே!
................................................தண்ட மாப் பொறி.
10
மடக் கண் மயில் இயல் மறலியாங்கு,
நெடுஞ் சுவர் நல் இல் புலம்ப, கடை கழிந்து,
மென் தோள் மகளிர் மன்றம் பேணார்,
புண்ணுவ
..........................அணியப் புரவி வாழ்க என,
15
சொல் நிழல் இன்மையின் நல் நிழல் சேர,
நுண் பூண் மார்பின் புன் தலைச் சிறாஅர்
அம்பு அழி பொழுதில் தமர் முகம் காணா,
........................................................ற் றொக்கான
வேந்து புறங்கொடுத்த வீய்ந்து உகு பறந்தலை,
20
மாடம் மயங்கு எரி மண்டி, கோடு இறுபு,
உரும் எறி மலையின், இரு நிலம் சேர,
சென்றோன் மன்ற, சொெ
........................ ண்ணறிநர் கண்டு கண் அலைப்ப,
வஞ்சி முற்றம் வயக் களன் ஆக,
25
அஞ்சா மறவர் ஆட் போர்பு அழித்துக்
கொண்டனை, பெரும! குட புலத்து அதரி;
பொலிக அத்தை, நின் பணைதனற............ளம்!
விளங்கு திணை வேந்தர் களம்தொறும் சென்று,
''புகர்முக முகவை பொலிக!'' என்று ஏத்தி,
30
கொண்டனர்' என்ப, பெரியோர்; யானும்
அம் கண் மாக் கிணை அதிர ஒற்ற,
............... லென்ஆயினும், காதலின் ஏத்தி,
நின்னோர் அன்னோர் பிறர் இவண் இன்மையின்,
மன் எயில் முகவைக்கு வந்திசின், பெரும!
35
பகைவர் புகழ்ந்த ஆண்மை, நகைவர்க்குத்
தா இன்று உதவும் பண்பின், பேயொடு
கண நரி திரிதரூஉம் ஆங்கண், நிணன் அருந்து
செஞ் செவி எருவை குழீஇ,
அஞ்சுவரு கிடக்கைய களம் கிழவோயே!
40
திணை அது; துறை மறக்களவழி; ஏர்க்கள உருவகமும் ஆம்.

சோழன் குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவன் கருவூர் எறிந்தானைக் கோவூர்
கிழார் பாடியது.

374
கானல் மேய்ந்து வியன் புலத்து அல்கும்
புல்வாய் இரலை நெற்றி அன்ன,
பொலம் இலங்கு சென்னிய பாறு மயிர் அவியத்
தண் பனி உறைக்கும் புலரா ஞாங்கர்,
5
மன்றப் பலவின் மால் வரை பொருந்தி, என்
தெண் கண் மாக் கிணை தெளிர்ப்ப ஒற்றி,
இருங் கலை ஓர்ப்ப இசைஇ, காண்வர,
கருங் கோல் குறிஞ்சி அடுக்கம் பாட,
புலிப் பல் தாலிப் புன் தலைச் சிறாஅர்
10
மான் கண் மகளிர், கான் தேர் அகன்று உவா
சிலைப்பாற் பட்ட முளவுமான் கொழுங் குறை,
விடர் முகை அடுக்கத்துச் சினை முதிர் சாந்தம்,
புகர் முக வேழத்து மருப்பொடு, மூன்றும்,
இருங் கேழ் வயப் புலி வரி அதள் குவைஇ,
15
விருந்து இறை நல்கும் நாடன், எம் கோன்,
கழல் தொடி ஆஅய் அண்டிரன் போல,
வண்மையும் உடையையோ? ஞாயிறு!
கொன் விளங்குதியால் விசும்பினானே!

திணை பாடாண் திணை; துறை பூவை நிலை.
ஆய் அண்டிரனை உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பாடியது.

377
பனி பழுநிய பல் யாமத்துப்
பாறு தலை மயிர் நனைய,
இனிது துஞ்சும் திரு நகர் வரைப்பின்,
இனையல் அகற்ற, என் கிணை தொடாக் குறுகி,
5
'அவி உணவினோர் புறங்காப்ப,
அற நெஞ்சத்தோன் வாழ, நாள்' என்று,
அதற் கொண்டு வரல் ஏத்தி,
'''கரவு இல்லாக் கவி வண் கையான்,
வாழ்க!'' எனப் பெயர் பெற்றோர்
10
பிறர்க்கு உவமம் தான் அல்லது,
தனக்கு உவமம் பிறர் இல்' என,
அது நினைந்து, மதி மழுகி,
ஆங்கு நின்ற எற் காணூஉச்
'சேய் நாட்டுச் செல் கிணைஞனை!
15
நீ புரவலை, எமக்கு' என்ன,
மலை பயந்த மணியும், கடறு பயந்த பொன்னும்,
கடல் பயந்த கதிர் முத்தமும்,
வேறு பட்ட உடையும், சேறுபட்ட தசும்பும்,
கனவில் கண்டாங்கு, வருந்தாது நிற்ப,
20
நனவின் நல்கியோன், நசைசால் தோன்றல்;
நாடு என மொழிவோர், 'அவன் நாடு' என மொழிவோர்;
வேந்து என மொழிவோர், 'அவன் வேந்து' என மொழிவோர்;
.........................பொற் கோட்டு யானையர்,
கவர் பரிக் கச்சை நல் மான்,
25
வடி மணி, வாங்கு உருள,
.....................,..........நல் தேர்க் குழுவினர்,
கதழ் இசை வன்கணினர்,
வாளின் வாழ்நர், ஆர்வமொடு ஈண்டி,
கடல் ஒலி கொண்ட தானை
30
அடல் வெங் குருசில்! மன்னிய நெடிதே!

திணை அது; துறை வாழ்த்தியல்.
சோழன் இராசசூயம் வேட்ட பெரு நற்கிள்ளியை உலோச்சனார் பாடியது.

387
வள் உகிர வயல் ஆமை
வெள் அகடு கண்டன்ன,
வீங்கு விசிப் புதுப் போர்வைத்
தெண் கண் மாக் கிணை இயக்கி, 'என்றும்
5
மாறு கொண்டோர் மதில் இடறி,
நீறு ஆடிய நறுங் கவுள,
பூம் பொறிப் பணை எருத்தின,
வேறு வேறு பரந்து இயங்கி,
வேந்துடை மிளை அயல் பரக்கும்
10
ஏந்து கோட்டு இரும் பிணர்த் தடக் கை,
திருந்து தொழில் பல பகடு
பகைப் புல மன்னர் பணிதிறை தந்து, நின்
நகைப் புலவாணர் நல்குரவு அகற்றி,
மிகப் பொலியர், தன் சேவடி அத்தை!' என்று,
15
யான் இசைப்பின், நனி நன்று எனா,
பல பிற வாழ்த்த இருந்தோர் என்கோ?.........
மருவ இன் நகர் அகன்.................................
திருந்து கழல் சேவடி குறுகல் வேண்டி,
வென்று இரங்கும் விறல் முரசினோன்,
20
என் சிறுமையின், இழித்து நோக்கான்,
தன் பெருமையின் தகவு நோக்கி,
குன்று உறழ்ந்த களிறு என்கோ?
கொய் உளைய மா என்கோ?
மன்று நிறையும் நிரை என்கோ?
25
மனைக் களமரொடு களம் என்கோ?
ஆங்கு அவை, கனவு என மருள, வல்லே, நனவின்
நல்கியோனே, நசைசால் தோன்றல்,
ஊழி வாழி, பூழியர் பெரு மகன்!
பிணர் மருப்பு யானைச் செரு மிகு நோன் தாள்
30
செல்வக் கடுங்கோ வாழியாதன்
ஒன்னாத் தெவ்வர் உயர்குடை பணித்து, இவண்
விடுவர் மாதோ நெடிதே நி
புல் இலை வஞ்சிப் புற மதில் அலைக்கும்
கல்லென் பொருநை மணலினும், ஆங்கண்
35
பல் ஊர் சுற்றிய கழனி
எல்லாம் விளையும் நெல்லினும் பலவே.

திணையும் துறையும் அவை.
சேரமான் சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக்கடுங்கோ வாழியாதனைக் குண்டுகட் பாலியாதன் பாடியது.

388
வெள்ளி தென் புலத்து உறைய, விளை வயல்,
பள்ளம், வாடிய பயன் இல் காலை,
இரும் பறைக் கிணைமகன் சென்றவன், பெரும் பெயர்
................................................................................பொருந்தி,
5
தன் நிலை அறியுநனாக, அந் நிலை,
இடுக்கண் இரியல் போக, உடைய
கொடுத்தோன் எந்தை, கொடை மேந் தோன்றல்,
.......................................................................னாமருப்பாக,
வெல்லும் வாய்மொழிப் புல்லுடை வி
10
பெயர்க்கும் பண்ணற் கேட்டிரோ, மககிரென,
வினைப் பகடு ஏற்ற மேழி கிணைத் தொடா,
நாள்தொறும் பாடேன்ஆயின், ஆனா
மணி கிளர் முன்றில் தென்னவன் மருகன்,
பிணி முரசு இரங்கும் பீடு கெழு தானை
15
அண்ணல் யானை வழுதி,
கண்மாறிலியர் என் பெருங் கிளைப் புரவே!

திணை அது; துறை இயன்மொழி.
சிறுகுடி கிழான் பண்ணனை மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார் பாடியது.

389
'நீர் நுங்கின் கண் வலிப்ப,
கான வேம்பின் காய் திரங்க,
கயம் களியும் கோடை ஆயினும்,
ஏலா வெண்பொன் போருறு காலை,
5
எம்மும் உள்ளுமோ பிள்ளைஅம் பொருநன்!'
என்று ஈத்தனனே, இசைசால் நெடுந்தகை;
இன்று சென்று எய்தும் வழியனும் அல்லன்;
செலினே, காணா வழியனும் அல்லன்;
புன் தலை மடப் பிடி இனைய, கன்று தந்து,
10
குன்றக நல் ஊர் மன்றத்துப் பிணிக்கும்
கல் இழி அருவி வேங்கடம் கிழவோன்,
செல்வுழி எழாஅ நல் ஏர் முதியன்!
ஆதனுங்கன் போல, நீயும்
பசித்த ஒக்கல் பழங்கண் வீட,
15
வீறுசால் நன் கலம் நல்குமதி, பெரும!
ஐது அகல் அல்குல் மகளிர்
நெய்தல் கேளன்மார், நெடுங் கடையானே!

திணையும் துறையும் அவை.
ஆதனுங்கனைக் கள்ளில் ஆத்திரையனார் பாடியது.

390
அறவை நெஞ்சத்து ஆயர், வளரும்
மறவை நெஞ்சத்து ஆயிவாளர்,
அரும்பு அலர் செருந்தி நெடுங் கால் மலர் கமழ்,
.........................................................மன்ன முற்றத்து,
5
ஆர்வலர் குறுகின் அல்லது, காவலர்
கனவினும் குறுகாக் கடியுடை வியல் நகர்,
மலைக் கணத்து அன்ன மாடம் சிலம்ப, என்
அரிக் குரல் தடாரி இரிய ஒற்றிப்
பாடி நின்ற பல் நாள் அன்றியும்,
10
சென்ற ஞான்றைச் சென்று படர் இரவின்
வந்ததற் கொண்டு, 'நெடுங் கடை நின்ற
புன் தலைப் பொருநன் அளியன்தான்' என,
தன்னுழைக் குறுகல் வேண்டி, என் அரை
முது நீர்ப் பாசி அன்ன உடை களைந்து,
15
திரு மலர் அன்ன புது மடிக் கொளீஇ,
மகிழ் தரல் மரபின் மட்டே அன்றியும்,
அமிழ்து அன மரபின் ஊன் துவை அடிசில்
வெள்ளி வெண் கலத்து ஊட்டல் அன்றி,
முன் ஊர்ப் பொதியில் சேர்ந்த மென் நடை
20
இரும் பேர் ஒக்கல் பெரும் புலம்பு அகற்ற,
அகடு நனை வேங்கை வீ கண்டன்ன
பகடு தரு செந்நெல் போரொடு நல்கி,
'கொண்டி பெறுக!' என்றோனே உண் துறை
மலை அலர் அணியும் தலை நீர் நாடன்;
25
கண்டாற் கொண்டும் அவன் திருந்து அடி வாழ்த்தி,
.............................................................................................................................
வான் அறியல என் பாடு பசி போக்கல்;
அண்ணல் யானை வேந்தர்
உண்மையோ, அறியல்? காண்பு அறியலரே!

திணையும் துறையும் அவை.
அதியமான் நெடுமான் அஞ்சியை ஒளவையார் பாடியது.

392
மதி ஏர் வெண் குடை அதியர் கோமான்,
கொடும் பூண் எழினி, நெடுங் கடை நின்று, யான்
பசலை நிலவின் பனி படு விடியல்,
பொரு களிற்று அடி வழி அன்ன, என் கை
5
ஒரு கண் மாக் கிணை ஒற்றுபு கொடாஅ,
'உரு கெழு மன்னர் ஆர் எயில் கடந்து,
நிணம் படு குருதிப் பெரும் பாட்டு ஈரத்து
அணங்குடை மரபின் இருங் களந்தோறும்,
வெள் வாய்க் கழுதைப் புல் இனம் பூட்டி,
10
வெள்ளை வரகும் கொள்ளும் வித்தும்
வைகல் உழவ! வாழிய பெரிது!' எனச்
சென்று யான் நின்றனெனாக, அன்றே,
ஊர் உண் கேணிப் பகட்டு இலைப் பாசி
வேர் புரை சிதாஅர் நீக்கி, நேர் கரை
15
நுண் நூல் கலிங்கம் உடீஇ, 'உண்' எனத்
தேள் கடுப்பு அன்ன நாட்படு தேறல்
கோள்மீன் அன்ன பொலங் கலத்து அளைஇ,
ஊண் முறை ஈத்தல் அன்றியும், கோள் முறை
விருந்து இறை நல்கியோனே அந்தரத்து
20
அரும் பெறல் அமிழ்தம் அன்ன
கரும்பு இவண் தந்தோன் பெரும் பிறங்கடையே.

திணையும் துறையும் அவை.
அதியமான் நெடுமான் அஞ்சி மகன் பொகுட்டெழினியை ஒளவையார் பாடியது.

394
சிலை உலாய் நிமிர்ந்த சாந்து படு மார்பின்,
ஒலி கதிர்க் கழனி வெண்குடைக் கிழவோன்,
வலி துஞ்சு தடக் கை வாய் வாள் குட்டுவன்,
வள்ளியன் ஆதல் வையகம் புகழினும்,
5
உள்ளல் ஓம்புமின், உயர் மொழிப் புலவீர்!
யானும் இருள் நிலாக் கழிந்த பகல் செய் வைகறை,
ஒரு கண் மாக் கிணை தெளிர்ப்ப ஒற்றி,
பாடு இமிழ் முரசின் இயல் தேர்த் தந்தை
வாடா வஞ்சி பாடினேனாக,
10
அகம் மலி உவகையொடு அணுகல் வேண்டி,
கொன்று சினம் தணியாப் புலவு நாறு மருப்பின்
வெஞ் சின வேழம் நல்கினன்; அஞ்சி
யான் அது பெயர்த்தனெனாக, தான் அது
சிறிது என உணர்ந்தமை நாணி, பிறிதும் ஓர்
15
பெருங் களிறு நல்கியோனே; அதற்கொண்டு,
இரும் பேர் ஒக்கல் பெரும் புலம்புறினும்,
'துன் அரும் பரிசில் தரும்' என,
என்றும் செல்லேன், அவன் குன்று கெழு நாட்டே.
திணையும் துறையும் அவை.

கடைநிலை ஆயின எல்லாம் பாடாண் திணை.
சோழிய ஏனாதி திருக்குட்டுவனைக் கோனாட்டு எறிச்சிலூர் மாடலன் மதுரைக் குமரனார் பாடியது.

395
மென் புலத்து வயல் உழவர்
வன் புலத்துப் பகடு விட்டு,
குறு முயலின் குழைச் சூட்டொடு
நெடு வாளைப் பல் உவியல்,
5
பழஞ் சோற்றுப் புகவு அருந்தி,
புதல் தளவின் பூச் சூடி,
................................................................
...........................அரியலாருந்து;
மனைக் கோழிப் பைம் பயிரின்னே,
10
கானக் கோழிக் கவர் குரலொடு
நீர்க் கோழிக் கூய்ப் பெயர்க்குந்து;
வேய் அன்ன மென் தோளால்,
மயில் அன்ன மென் சாயலார்,
கிளி கடியின்னே,
15
அகல் அள்ளல் புள் இரீஇயுந்து;
ஆங்கு அப் பல நல்ல புலன் அணியும்
சீர் சான்ற விழுச் சிறப்பின்,
சிறு கண் யானைப் பெறல் அருந் தித்தன்
செல்லா நல் இசை உறந்தைக் குணாது,
20
நெடுங் கை வேண்மான் அருங் கடிப் பிடவூர்
அறப் பெயர்ச் சாத்தன் கிளையேம், பெரும!
முன் நாள் நண்பகல் சுரன் உழந்து வருந்தி,
கதிர் நனி செ ...................................... மாலை,
தன் கடைத் தோன்றி, என் உறவு இசைத்தலின்,
25
தீம் குரல்......... கின் அரிக் குரல் தடாரியொடு,
ஆங்கு நின்ற எற்கண்டு,
சிறிதும் நில்லான், பெரிதும் கூறான்,
அருங் கலம் வரவே அருளினன் வேண்டி,
...........யென உரைத்தன்றி நல்கி, தன் மனைப்
30
பொன் போல் மடந்தையைக் காட்டி, 'இவனை
என் போல் போற்று' என்றோனே; அதற்கொண்டு,
அவன் மறவலேனே; பிறர் உள்ளலேனே;
அகன் ஞாலம் பெரிது வெம்பினும்,
மிக வானுள் எரி தோன்றினும்,
35
குள மீனொடும் தாள் புகையினும்,
பெருஞ் செய் நெல்லின் கொக்கு உகிர் நிமிரல்
பசுங் கண் கருனைச் சூட்டொடு மாந்தி,
'விளைவு ஒன்றோ வெள்ளம் கொள்க!' என,
உள்ளதும் இல்லதும் அறியாது,
40
ஆங்கு அமைந்தன்றால்; வாழ்க, அவன் தாளே!

திணையும் துறையும் அவை.
சோழநாட்டுப் பிடவூர் கிழார் மகன் பெருஞ்சாத்தனை மதுரை நக்கீரர் பாடியது.