3. தமிழிலக்கியப் பல்வேறு பொருட்பாகுபாடு

தமிழிலக்கியத்தின் இயல்பை அறியாத ஆரியவழியினரும் ஆராய்ச்சி யில்லாரும், பொருளிலக்கணப் பாகுபாடொன்றையே தமிழர் பொருட்பாகுபாடென்று கொண்டு, அறம் பொருளின்பம் வீடென்னும் அறநூற் பாகுபாட்டை ஆரியரதென்றும் தமிழர் அதைத் தழுவினரென்றும், முறையே துணிந்தும் மயங்கியும் கூறுவாராயினர். பொருட்பாகுபாடு பெரும்பாலும் நூல்தொறும் வேறுபடுவதாகும்.

பொருள், குணம், கருமம், பொது, சிறப்பு, ஒற்றுமை, இன்மை எனப்பொருள் ஏழென்பது ஏரண(தருக்க) நூல்.

"பொருள் குணங் கருமம் பொதுச்சிறப் பொற்றுமை
இன்மை யுடன்பொரு ளேழென மொழிப." 

என்பது அகத்தியத் தருக்க நூற்பா. 

இறை(பதி), உயிர்(பசு), தளை(பாசம்) எனப்பொருள் மூன் றென்பது சிவனியக் கொண்முடிபு (சைவசித்தாந்த) நூல்.

அறம், பொருள், இன்பம், வீடு எனப்பொருள் நான்கென்பது அறநூல்.

இலக்கண நூலில் அதிகாரந்தொறும் பொருட்பாகுபாடு வேறு படும்.

உயிர், மெய், உயிர்மெய், (பிராணி) எனப் பொருள்களை மூன்றாகப் பகுப்பது எழுத்ததிகாரம், பொருள் இடம் காலம் சினை குணம் தொழில் என ஆறாகவும், உயர்திணை அஃறிணை என இரண்டாகவும் பகுப்பது சொல்லதிகாரம்; அகம் புறம் என இரண்டாகப் பகுப்பது பொருளதிகாரம்.

"அன்பே அறனே இன்பம் நாணொடு" (பொருள். 21)
"அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்" (கற். 51)
"ஒன்றாப் பொருள்வயின் ஊக்கிய பாலினும்"(அகத். 41)
"பொருளென மொழிதலும் வரைநிலை யின்றே"(பொருள். 20)
"எல்லா வுயிர்க்கும் இன்பம் என்பது" (பொருள். 29)

என அறம் பொருளின்பங்கள் தனித்தனியாகவும், "மூன்றன் பகுதியும்"(அகத். 41) எனத் தொகுத்தும், அகப்பொருளிலக்கணத்திற் கூறப்பட்டிருப்பதால், எல்லார்க்கும் பொதுவான இருவகை வாழ்க்கைக்குமுரிய அறநூற் பாகுபாடும் புலவரே செய்யும் இலக்கண