வழக்கி னாகிய உயர்சொற் கிளவி
இலக்கண மருங்கிற் சொல்லா றல்ல.  (510)

என்னுந் தொல்காப்பிய நெறியீடு, கடைக்கழகச் செய்யுளிற் போன்றே திருக்குறளிலும் கைக்கொள்ளப் பெறாதிருத்தல்.

எ - டு : "நெருநற்றுச் சென்றாரெங் காதலர் யாமு
மெழுநாளே மேனி பசந்து". (1278)

இவ்வுயர்வுப் பன்மையாட்சியே "மற்றையவர்கள்"(293) என்னும் இரட்டைப் பன்மையாட்சிக்
கும் இடந்தந்தது.

(4) "எஞ்சா மண்நசை வேந்தனை வேந்தன்
அஞ்சுதகத் தலைச்சென் றடல்குறித் தன்றே" ( 1002)

"வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பின்
நாற்பெய ரெல்லை யகத்தவர் வழங்கும்
யாப்பின் வழிய தென்மனார் புலவர் ( 1316)

என்று மூவேந்தரும் தலைமை குன்றாத தொல்காப்பியர் கால திலைமைக்கு மாறாக,

"பல்குழுவும் பாழ்செய்யு முட்பகையும் வேந்தலைக்குங்
கொல்குறும்பு மில்லது நாடு" ( 735)

என்று வேளிருங் கோசருமான குறும்பரால் மூவேந்தரும் அலைக்கப்பட்ட நிலையைத் திருக்குறள் குறிப்பாகக் கூறுதல்.

(5) "தினற்பொருட்டாற் கொல்லா துலகெனின் யாரும்
     விலைப்பொருட்டா லூன்றருவா ரில். (256)

என்று திருவள்ளுவர் புத்தமதக் கொள்கையைக் கண்டித்தல்.

புத்தர் கி.மு. ஆறாம் நூற்றாண்டினராயினும், புத்தமதம் அசோகனால் இந்தியாவிலும் வெளியிலும் பரப்பப்பட்ட காலம் கி. மு. 273-236 ஆகும். அசோகனின் மகனும் (அல்லது உடன் பிறந்தானும்) வேறு நால்வரும் இலங்கைக்கு வந்து புத்த மதத்தைப் பரப்பின காலம் கி. மு. 247-207. அதன் பின்னரே அம்மதம் அங்கிருந்து தமிழகத்திற்கு வந்திருத்தல் வேண்டும். ஆதலால், கி. மு. 2-ஆம் நூற்றாண்டிலேயே திருவள்ளுவர் அதைக் கண்டித்திருக்கக் கூடும்.

(6) திருவள்ளுவர் தம் நூலின் முதலதிகாரமாகிய முதற்பகவன் வழுத்தில், 'மலர்மிசை யேகினான்' (பூமேல் நடந்தான்). பொறிவாயி லைந்தவித்தான் என்னும் அருகன் பெயர்களைக் கடவுட்கு ஆண்டிருத்தல்.