(பொ-ரை.) மக்களுக்கு வேண்டியவற்றையும் வேண்டாத வற்றையும் அறிஞரும் எடுத்துச் சொல்லுமாறு, திருவள்ளுவர் இயற்றிய திருக்குறட் கூற்றுக்களையே, ஒழுக்கத்தில் உயர்ந்தோர் கடைப்பிடிப்பர்.
செயலூர்க் கொடுஞ்செங்கண்ணனார்
42.வேதப் பொருளை விரகால் விரித்துலகோ
ரோதத் தமிழா லுரைசெய்தா - ராதலா
லுள்ளுந ருள்ளும் பொருளெல்லா முண்டென்ப
வள்ளுவர் வாய்மொழி மாட்டு.
(பொ-ரை.) திருவள்ளுவர் ஆரிய வேதப்பொருளைத் தமிழுலகம் அறிதற்பொருட்டுத் தமிழில் விரித்துரைத்தார். ஆதலால், திருக்குறளில் மக்கள் கருதும்பொருள்களெல்லாம் உள்ளன.
வண்ணக்கஞ் சாத்தனார்
43.ஆரியமுஞ் செந்தமிழு மாராய்ந் திதனினிது
சீரிய தென்றொன்றைச் செப்பரிதா- லாரியம்
வேத முடைத்து தமிழ்திரு வள்ளுவனா
ரோது குறட்பா வுடைத்து.
(பொ-ரை.) வடமொழியையும் தென்மொழியையும் ஒப்பு நோக்கி இது சிறந்தது என்று ஒன்றைச் சொல்ல முடியாது. வடமொழியில் வேதமுள்ளது; தென்மொழியில் திருக்குறள் உள்ளது. ஆதலால், இரண்டும் சமமே.
களத்தூர்கிழார்
44.ஒருவ ரிருகுறளே முப்பாலி னோதுந்
தரும முதனான்குஞ் சாலு - மருமறைக
ளைந்துஞ் சமயநூ லாறுநம் வள்ளுவனார்
புந்தி மொழிந்த பொருள்.
(பொ-ரை.) இருக்குமுதல் பாரதம் ஈறான வேதங்கள் ஐந்தும் வேதவழிப்பட்ட சாத்திரங்கள் ஆறும், திருவள்ளுவர் நூலிலடங்கும்; ஆதலால் ஒருவர் உய்வதற்கு, ஓரெதுகையும் ஈரெதுகையுமாகிய இருவகைக் குறளாலு மமைந்த முப்பாலிற் சொல்லப்பட்ட நாற்பொருளையும் அறிந்தாற் போதும்.
|