கார் நாற்பது

முகவுரை

கார் நாற்பது என்பது கடைச்சங்கப் புலவர்களியற்றிய பதினெண் கீழ்க்கணக்கில் ஒன்று. கீழ்க்கணக்கு நூல் பதினெட்டென்பது,

‘வனப்பிய றானே வகுக்குங் காலைச்
சின்மென் மொழியாற் றாய பனுவலோடு
அம்மை தானே யடிநிமிர் பின்றே'

என்று தொல்காப்பியச் செய்யுளியற் சூத்திர வுரையிற் பேராசிரியரும், நச்சினார்க்கினியரும் உரைக்குமாற்றானறியலாவது. அவை அம்மையென்னும் வனப்புடையவாதலும் அவ்வுரையாற் றெளியப்படும். பழைய பனுவல்களை அளவு முதலியன பற்றி மேற்கணக்கெனவும் கீழ்க்கணக்கெனவும் பின்னுளோர் வகைப்படுத்துரைத்தனராவர்.

‘அடிநிமிர் பில்லாச் செய்யுட் டொகுதி
யறம்பொரு ளின்ப மடுக்கி யவ்வத்
திறம்பட வுரைப்பது கீழ்க்கணக் காகும்'

என்பது பன்னிரு பாட்டியல்.

கீழ்க்கணக்குகள் பதினெட்டாவன: நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பது, ஐந்திணை யைம்பது, திணைமொழி யைம்பது, ஐந்திணை யெழுபது, திணைமாலை நூற்றைம்பது, திருக்குறள், திரிகடுகம், ஆசாரக்கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக்காஞ்சி, ஏலாதி என்பன. இதனை,

‘நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப்
பால்கடுகங் கோவை பழமொழி மாமூலம்
இன்னிலைசொற் காஞ்சியோ டேலாதி யென்பவே
கைந்நிலையை வாங்கீழ்க் கணக்கு,'

என்னும் வெண்பாவா னறிக. இதில் ‘நால்' என்பதனை ‘ஐந்திணை' என்பதன் முன்னுங்கூட்டி நாலைந்திணை யெனக் கொள்ள வேண்டும். சிலர் கைந்நிலை யென்பது கூட்டி. இன்னிலையை விடுத்திடுவர். வேறு சிலர் ஐந்திணையை ஐந்து நூலெனக்கொண்டு இன்னிலை, கைந்நிலை இரண்டனையும் ஒழித்திடுவார். அவர், ‘திணைமாலை' என்பதொரு நூல் பழைய வுரைகளாற் கருதப்படுவதுண்டாகலின், அதுவே ஐந்திணையுட் பிறிதொன்றாதல் வேண்டுமென்பர். முன் குறித்த வெண்பாவில் ‘ஐந்தொகை', ‘இன்னிலைய,