இந்நூல் மிக அருமையான பழைய பொழிப்புரை யொன்றனையும், பாக்களின் கருத்தினை விளக்கும் துறை விளக்கத் தொடர்களையும் கொண்டுள்ளது. இவற்றைக் கண்டார் யாரெனக் காணுமாறுங் கிட்டிலது. முதற் செய்யுட்குரிய பழைய வுரையின் முற்பகுதியும், நாலாவது செய்யுளின் பழையவுரை நாப்பண் ஒரு தொடரும், எட்டாவது செய்யுள் துறைவிளக்கத் தொடரின் முற்பெரும் பகுதியும் ஏடுகளின் சிதைவாற் காணப்பெறாவாய்ப் புதியனவாகச் சேர்க்கப்பட்டன.

இதனைக் கண்ணுறும் பெரியோர்கள் அறியாமையான் மேற் கொண்ட பிழைகளை எடுத்துகாட்டி, மன்னிக்க வேண்டுகின்றனன். தோன்றாத் துணையாக முன்னின்று இதனை முடிப்பித்த எல்லாம் வல்ல இறைவற்கு எனது வணக்கம் உரியதாகுக! இதனை வெளியிட்டுதவிய தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்க்கு யான் என்றும் நன்றி பாராட்டுங்கடப்பாடுடையேன்.

திருச்சி,  } இங்ஙனம்,
15-6-’36 அ. நடராச பிள்ளை.