27 சமயக்கணக்கர்தம் திறம் கேட்ட காதை
[ வஞ்சிமாநகர்ப்புறத்துச் சமயக்கணக்கர்  
தம்திறம்கேட்ட பாட்டு ]
நவைஅறு நன்பொருள் உரைமி னோஎனச்
சமயக் கணக்கர் தம்திறம் சார்ந்து
வைதிக மார்க்கத்து அளவை வாதியை
எய்தினள் எய்திநின் கடைப்பிடி இயம்புஎன,
5 வேத வியாதனும் கிருத கோடியும்
   
ஏதம்இல் சைமினி எனும்இவ் ஆசிரியர்
பத்தும் எட்டும் ஆறும் பண்புஉறத்
தத்தம் வகையால் தாம்பகர்ந் திட்டனர்
காண்டல் கருதல் உவமம் ஆகமம்
10 ஆண்டைய அருத்தா பத்தியோடு இயல்பு
ஐதிகம் அபாவம் மீட்சி ஒழிவறிவு
எய்திஉண் டாம்நெறி என்றுஇவை தம்மால்
பொருளின் உண்மை புலம்கொளல் வேண்டும்
மருள்இல் காட்சி ஐவகை ஆகும்
15 கண்ணால் வண்ணமும் செவியால் ஓசையும்
நண்ணிய மூக்கால் நாற்றமும் நாவால்
சுவையும் மெய்யால் ஊறும்எனச் சொன்ன
இவைஇவை கண்டுகேட்டு உயிர்த்துஉண்டு உற்றுத்
துக்கமும் சுகமும் எனத்துயக்கு அறஅறிந்து
20 உயிரும் வாயிலும் மனமும்ஊறு இன்றிப்
பயில்ஒளி யொடுபொருள் இடம்பழுது இன்றிச்
சுட்டல் திரிதல் கவர்கோடல் தோன்றாது
கிட்டிய தேச நாமம் சாதி
குணம்கிரி யையின் அறிவது ஆகும்.
25 கருத்துஅள வாவது
குறிக்கொள் அனுமா னத்துஅனு மேயத்
தகைமை உணரும் தன்மையது ஆகும்.
மூவகை உற்றுஅது பொதுஎச்சம் முதல்ஆம்
பொதுஎனப் படுவது சாதன சாத்தியம்
30 இவைஅந் நுவயம் இன்றாய் இருந்தும்
கடம்திகழ் யானைக் கானவொலி கேட்டோன்
உடங்குஎழில் யானைஅங்கு உண்டுஎன உணர்தல்
எச்சம் என்பது வெள்ளஏ துவினால்
நிச்சயித்து அத்தலை மழைநிகழ்வு உரைத்தல்
35 முதல்என மொழிவது கருக்கொள் முகில்கண்டு
இதுமழை பெய்யும் எனஇயம் பிடுதல்
என்னும் ஏதுவின் ஒன்றுமுக் காலம்
தன்னில் ஒன்றில் சார்ந்துஉளது ஆகி
மாண்ட உயிர்முதல் மாசுஇன்று ஆகிக்
40 காண்டல் பொருளால் கண்டிலது உணர்தல்;
உவமம் ஆவது ஒப்புமை அளவை
கவய மாஆப் போலும்எனக் கருதல்;
ஆகம அளவை அறிவன் நூலால்
போக புவனம் உண்டுஎனப் புலம்கொளல்;
45 அருத்தா பத்தி ஆய்க்குடி கங்கை
இருக்கும் என்றால் கரையில்என்று எண்ணல்
இயல்பு யானைமேல் இருந்தோன் தோட்டிக்கு
அயல்ஒன்று ஈயாது அதுவே கொடுத்தல்
ஐதிகம் என்பது உலகுஉரை இம்மரத்து
50 எய்தியது ஓர்பேய் உண்டுஎனத் தெளிதல்
அபாவம் என்பது இன்மைஓர் பொருளைத்
தவாதுஅவ் விடத்துத் தானிலை என்றல்
மீட்சி என்பது இராமன்வென் றான்என
மாட்சிஇல் இராவணன் தோற்றமை மதித்தல்
55 உள்ளநெறி என்பது நாராசத் திரிவில்
கொள்ளத் தகுவது காந்தம்எனக் கூறல்
எட்டுஉள பிரமா ணாபா சங்கள்
சுட்டுணர் வொடுதிரி யக்கோடல் ஐயம்
தேராது தெளிதல் கண்டுண ராமை
60 எய்தும் இல்வழக்கு உணர்ந்ததை உணர்தல்
நினைப்புஎன நிகழ்வசுட்டு உணர்வெனப் படுவது
எனைப்பொருள் உண்மை மாத்திரை காண்டல்
திரியக் கோடல் ஒன்றைஒன்று என்றல்
விரிகதிர் இப்பியை வெள்ளிஎன்று உணர்தல்
65 ஐயம் என்பது ஒன்றை நிச்சயியா
மையல் தறியோ மகனோ என்றல்
தேராது தெளிதல் செண்டு வெளியில்
ஓராது தறியை மகன்என உணர்தல்
கண்டுண ராமை கடுமாப் புலிஒன்று
70 அண்டலை முதலிய கண்டும்அறி யாமை
இல்வழக்கு என்பது முயல்கோடு ஒப்பன
சொல்லின்மாத் திரத்தால் கருத்தில் தோன்றல்
உணர்ந்ததை உணர்தல் உறுபனிக் குத்தீப்
புணர்ந்திடல் மருந்துஎனப் புலம்கொள நினைத்தல்
75 நினைப்புஎனப் படுவது காரணம் நிகழாது
நினக்குஇவர் தாயும் தந்தையும் என்று
பிறர்சொலக் கருதல்இப் பெற்றிய அளவைகள்.
பாங்குறும் உலோகா யதமே பௌத்தம்
சாங்கியம் நையா யிகம்வை சேடிகம்
80 மீமாஞ் சகமாம் சமயஆ சிரியர்
தாம்பிரு கற்பதி சினனே கபிலன்
அக்க பாதன் கணாதன் சைமினி
மெய்ப்பிரத் தியஅனு மானம் சாத்தம்
உவமானம் அருத்தா பத்தி அபாவம்
85 இவையே இப்போது இயன்றுள அளவைகள்
என்றவன் தன்னைவிட்டு, இறைவன் ஈசன்என
நின்ற சைவ வாதிநேர் படுதலும்
பரசுநின் தெய்வம் எப்படித்து என்ன
இருசுட ரோடுஇய மானன்ஐம் பூதம்என்று
90 எட்டு வகையும் உயிரும்யாக் கையுமாய்க்
கட்டிநிற் போனும் கலைஉருவி னோனும்
படைத்துவிளை யாடும் பண்பி னோனும்
துடைத்துத் துயர்தீர் தோற்றத் தோனும்
தன்னில் வேறு தான்ஒன்று இலோனும்
95 அன்னோன் இறைவன் ஆகும்என்று உரைத்தனன்
பேர்உலகு எல்லாம் பிரம வாதிஓர்
தேவன் இட்ட முட்டை என்றனன்.
காதல் கொண்டு கடல்வணன் புராணம்
ஓதினன் நரணன் காப்புஎன்று உரைத்தனன்.
100 கற்பம் கைசந் தம்கால் எண்கண்
தெற்றென் நிருத்தம் செவிசிக் கைமூக்கு
உற்ற வியாகர ணமுகம் பெற்றுச்
சார்பின் தோன்றா ஆரண வேதக்கு
ஆதி அந்தம் இல்லைஅது நெறிஎனும்
105 வேதியன் உரையின் விதியும் கேட்டு
மெய்த்திறம் வழக்குஎன விளம்புகின்ற
எத்திறத் தினும்இசை யாதுஇவர் உரைஎன
ஆசீ வகநூல் அறிந்த புராணனைப்
பேசும்நின் இறையார் நூல்பொருள் யாதுஎன,
110 எல்லைஇல் பொருள்களில் எங்கும்எப் பொழுதும்
புல்லிக் கிடந்து புலப்படு கின்ற
வரம்புஇல் அறிவன் இறைநூல் பொருள்கள்ஐந்து
உரம்தரும் உயிரோடு ஒருநால் வகைஅணு
அவ்வணு உற்றும் கண்டும் உணர்ந்திடப்
115 பெய்வகை கூடிப் பிரிவதும் செய்யும்
நிலம்நீர் தீகாற்று எனநால் வகையின
மலைமரம் உடம்புஎனத் திரள்வதும் செய்யும்
வெவ்வேறு ஆகி விரிவதும் செய்யும்
அவ்வகை அறிவது உயிரெனப் படுமே.
120 வற்பம் ஆகி உறுநிலம் தாழ்ந்து
சொல்படு சீதத் தொடுசுவை உடைத்தாய்
இழின்என நிலம்சேர்ந்து ஆழ்வது நீர்தீத்
தெறுதலும் மேல்சேர் இயல்பும் உடைத்தாம்
காற்று விலங்கி அசைத்தல் கடன்இவை
125 வேற்றுஇயல்பு எய்தும் விபரீ தத்தால்
ஆதி இல்லாப் பரமா ணுக்கள்
தீதுஉற்று யாவதும் சிதைவது செய்யா
புதிதாய்ப் பிறந்துஒன்று ஒன்றில் புகுதா
முதுநீர் அணுநில அணுவாய்த் திரியா
130 ஒன்றிரண் டாகிப் பிளப்பதும் செய்யா
அன்றியும் அவல்போல் பரப்பதும் செய்யா
உலாவும் தாழும் உயர்வதும் செய்யும்
குலாமலை பிறவாக் கூடும் பலவும்
பின்னையும் பிரிந்துதம் தன்மைய ஆகும்
135 மன்னிய வயிரமாய்ச் செறிந்துவற் பமும்ஆம்
வேயாய்த் துளைபடும் பொருளா முளைக்கும்
தேயா மதிபோல் செழுநில வரைப்பாம்
நிறைந்தஇவ் அணுக்கள் பூதமாய் நிகழின்
குறைந்தும் ஒத்தும் கூடா வரிசையின்
140 ஒன்று முக்கால் அரைகா லாய்உறும்
துன்றும்மிக் கதனால் பெயர்சொலப் படுமே
இக்குணத்து அடைந்தால் அல்லது நிலனாய்ச்
சிக்கென் பதுவும் நீராய் இழிவதும்
தீயாய்ச் சுடுவதும் காற்றாய் வீசலும்
145 ஆய தொழிலை அடைந்திட மாட்டா
ஓர்அணுத் தெய்வக் கண்ணோர் உணர்குவர்
தேரார் பூதத் திரட்சியுள் ஏனோர்
மாலைப் போதில் ஒருமயிர் அறியார்
சாலத் திரள்மயிர் தோற்றுதல் சாலும்
150 கரும்ம் பிறப்பும் கருநீலப் பிறப்பும்
பசும்ம் பிறப்பும் செம்ம் பிறப்பும்
பொன்ன் பிறப்பும் வெண்ண் பிறப்பும்
எனறுஇவ் வாறு பிறப்பினும் மேவிப்
பண்புஉறு வரிசையிற் பால்பட்டுப் பிறந்தோர்
155 கழிவெண் பிறப்பில் கலந்துவீடு அணைகுவர்
அழியல் வேண்டார் அதுஉறற் பாலார்
இதுசெம் போக்கின் இயல்புஇது தப்பும்
அதுமண் டலம்என்று அறியல் வேண்டும்
பெறுதலும் இழத்தலும் இடையூறு உறுதலும்
160 உறும்இடத்து எய்தலும் துக்கசுகம் உறுதலும்
பெரிதவை நீங்கலும் பிறத்தலும் சாதலும்
கருவில் பட்ட பொழுதே கலக்கும்
இன்பமும் துன்பமும் இவையும்அணு எனத்தகும்
முன்உள ஊழே பின்னும்உறு விப்பது
165 மற்கலி நூலின் வகைஇது என்ன,
சொல்தடு மாற்றத் தொடர்ச்சியை விட்டு
நிகண்ட வாதியை நீஉரை நின்னால்
புகழும் தலைவன்யார் நூல்பொருள் யாவை
அப்பொருள் நிகழ்வும் கட்டும் வீடும்
170 மெய்ப்பட விளம்புஎன, விளம்பல் உறுவோன்
இந்திரர் தொழப்படும் இறைவன்எம் இறைவன்
தந்த நூல்பொருள் தன்மாத்தி காயமும்
அதன்மாத்தி காயமும் காலா காயமும்
தீதுஇல் சீவனும் பரமா ணுக்களும்
175 நல்வினை யும்தீ வினையும்அவ் வினையால்
செய்வுறு பந்தமும் வீடும்இத் திறத்த
ஆன்ற பொருள்தன் தன்மைய தாயும்
தோன்றுசார்வு ஒன்றின் தன்மைய தாயும்
அநித்தமும் நித்தமும் ஆகி நின்று
180 நுனித்த குணத்துஓர் கணத்தின் கண்ணே
தோற்றமும் நிலையும் கேடும் என்னும்
மாற்றுஅரு மூன்றும் ஆக்கலும் உரித்தாம்
நிம்பம் முளைத்து நிகழ்தல் அநித்தியம்
நிம்பத்து அப்பொருள் அன்மை அநித்தியம்
185 பயற்றுத் தன்மை கெடாதுகும் மாயம்
இயற்றி அப்பயறு அழிதலும் ஏதுத்
தருமாத்தி காயம் தான்எங்கும் உளதாய்ப்
பொருள்களை நடத்தும் பொருந்த நித்தியமா
அப்படித் தாகிய தன்மாத்தி காயமும்
190 எப்பொருள் களையும் நிறுத்தல் இயற்றும்
காலம் கணிகம் எனும்குறு நிகழ்ச்சியும்
ஏலும் கற்பத் தின்நெடு நிகழ்ச்சியும்
ஆக்கும்ஆ காயம் எல்லாப் பொருட்கும்
பூக்கும்இடம் கொடுக்கும் புரிவிற்று ஆகும்
195 சீவன் உடம்போடு ஒத்துக் கூடித்
தாஇல்சுவை முதலிய புலன்களை நுகரும்
ஓர்அணு புற்கலம் புறவுரு வாகும்
சீர்சால் நல்வினை தீவினை அவைசெயும்
வருவழி இரண்டையும் மாற்றி முன்செய்
200 அருவினைப் பயன்அனு பவித்துஅறுத் திடுதல்
அதுவீடு ஆகும் என்றனன், அவன்பின்
இதுசாங் கியமதம் என்றுஎடுத்து உரைப்போன்
தனைஅறிவு அரிதாய்த் தான்முக் குணமாய்
மனநிகழ்வு இன்றி மாண்புஅமை பொதுவாய்
205 எல்லாப் பொருளும் தோன்றுதற்கு இடம்எனச்
சொல்லுதல் மூலப் பகுதிசித் தத்து
மான்என்று உரைத்த புத்தி வெளிப்பட்டு
அதன்கண்ஆ காயம் வெளிப்பட் டதன்கண்
வாயு வெளிப்பட்டு அதன்கண் அங்கி
210 யானது வெளிப்பட்டு அதன்கண் அப்பின்
தன்மை வெளிப்பட்டு அதில்மண் வெளிப்பட்டு
அவற்றின் கூட்டத் தின்மனம் வெளிப்பட்டு
ஆர்ப்புஉறு மனத்துஆங் கார விகாரமும்
ஆகா யத்தில் செவிஒலி விகாரமும்
215 வாயுவில் தொக்கும் ஊறுஎனும் விகாரமும்
அங்கியில் கண்ணும் ஒளியுமாம் விகாரமும்
தங்கிய அப்பில்வாய் சுவைஎனும் விகாரமும்
நிலக்கண் மூக்கு நாற்ற விகாரமும்
சொலப்பட்டு இவற்றின் தொக்கு விகாரமாய்
220 வாக்குப் பாணிபாத பாயுருஉபத் தம்என
ஆக்கிய இவைவெளிப் பட்டுஇங்கு அறைந்த
பூத விகாரத் தால்மலை மரம்முதல்
ஓதிய வெளிப்பட்டு உலகாய் நிகழ்ந்து
வந்த வழியே இவைசென்று அடங்கி
225 அந்தம்இல் பிரளய மாய்இறும் அளவும்
ஒன்றாய் எங்கும் பரந்துநித் தியம்ஆம்
அறிதற்கு எளிதாய் முக்குணம் அன்றிப்
பொறிஉணர் விக்கும் பொதுவும் அன்றிப்
எப்பொரு ளும்தோன் றுதற்குஇடம் அன்றி
230 அப்பொருள் எல்லாம் அறிந்திடற்கு உணர்வாய்
ஒன்றாய் எங்கும் பரந்துநித் தியமாய்
நின்றுஉள உணர்வாய் நிகழ்தரும் புருடன்
புலம்ஆர் பொருள்கள் இருபத் தைந்துஉள
நிலநீர் தீவளி ஆகா யம்மே
235 மெய்வாய் கண்மூக் குச்செவி தாமே
உறுசுவை ஒளிஊறு ஓசைநாற் றம்மே
வாக்குப் பாணி பாதபாயு ருபத்தம்
ஆக்கும் மனோபுத்தி ஆங்கார சித்தம்
உயிர்எனும் ஆன்மா ஒன்றொடும் ஆம்எனச்
240 செயிர்அறச் செப்பிய திறமும் கேட்டு,
வைசே டிகநின் வழக்குஉரை என்னப்
பொய்தீர் பொருளும் குணமும் கருமமும்
சாமா னியமும் விசேடமும் கூட்டமும்
ஆம்ஆறு கூறும் அதில்பொருள் என்பது
245 குணமும் தொழிலும் உடைத்தாய் எத்தொகைப்
பொருளுக்கும் ஏதுவாம் அப்பொருள் ஒன்பான்
ஞாலம்நீர் தீவளி ஆகா யம்திசை
காலம் ஆன்மா மனம்இவற் றுள்நிலம்
ஒலிஊறு நிறம்சுவை நாற்றமொடு ஐந்தும்
250 பயில்குணம் உடைத்து நின்ற நான்கும்
சுவைமுதல் ஒரோகுணம் அவைகுறைவு உடைய
ஓசை ஊறு நிறம்நாற் றம்சுவை
மாசுஇல் பெருமை சிறுமை வன்மை
மென்மை சீர்மை நொய்ம்மை வடிவம்
255 என்னும் நீர்மை பக்கம்முதல் அனேகம்
கண்ணிய பொருளின் குணங்கள் ஆகும்.
பொருளும் குணமும் கருமம் இயற்றற்கு
உரிய உண்மை தரும்முதல் போதுத்தான்
போதலும் நிற்றலும் பொதுக்குணம் ஆதலின்
260 சாதலும் நிகழ்தலும் அப்பொருள் தன்மை
ஒன்றுஅணு கூட்டம் குணமும் குணியும்என்று
ஒன்றிய வாதியும் உரைத்தனன், உடனே
பூத வாதியைப் புகல்நீ என்னத்
தாதகிப் பூவும் கட்டியும் இட்டு
265 மற்றும் கூட்ட மதுக்களி பிறந்துஆங்கு
உற்றிடும் பூதத்து உணர்வு தோன்றிடும்
அவ்வுணர்வு அவ்வப் பூதத்து அழிவுகளின்
வெவ்வேறு பிரியும் பறைஓ சையில்கெடும்
உயிரொடும் கூட்டிய உணர்வுடைப் பூதமும்
270 உயிர்இல் லாத உணர்வுஇல் பூதமும்
அவ்வப் பூத வழிஅவை பிறக்கும்
மெய்வகை இதுவே வேறுஉரை விகற்பமும்
உண்மைப் பொருளும் உலோகாயதன் உணர்வே
கண்கூடு அல்லது கருத்தளவு அழியும்
275 இம்மையும் இம்மைப் பயனும்இப் பிறப்பே
பொய்ம்மை மறுமைஉண் டாய்வினை துய்த்தல்
என்றலும் எல்லா மார்க்கமும் கேட்டு
நன்றுஅல ஆயினும் நான்மாறு உரைக்கிலேன்
பிறந்தமுற் பிறப்பை எய்தப் பெறுதலின்
280 அறிந்தோர் உண்டோ என்றுநக் கிடுதலும்
தெய்வ மயக்கினும் கனாஉறு திறத்தினும்
மையல் உறுவோர் மனம்வே றாம்வகை
ஐய அன்றி இல்லையென் றலும்நின்
தந்தைதா யரைஅனு மானத் தால்அலது
285 இந்த ஞாலத்து எவ்வகை அறிவாய்
மெய்உணர்வு இன்றிமெய்ப் பொருள்உணர்வு அரிய
ஐயம் அல்லதுஇது சொல்லப் பெறாய்என
உள்வரிக் கோலமோடு உன்னிய பொருள்உரைத்து
ஐவகைச் சமயமும் அறிந்தனள் ஆங்குஎன்.
சமயக்கணக்கர்தம் திறம் கேட்ட காதை முற்றிற்று.

மேல்