உள்ளன. ஆடிசன்பேட்டை முத்தீசர் சந்நிதியில் இருக்கும் முத்திமண்டபம்
ஒன்று, சருவதீர்த்தத்தின் மேலைக் கரையில் உள்ள முத்திமண்டபம் ஒன்று;
திருவேகம்பர் திருக்கோயிலுக்கு வெளியில் பதினாறுகால் மண்டபத்தினை
அடுத்து, ‘இராமேச்சுரம்’ என்னும் தலத்தில் இராமன் திருமுன்பு பரமானந்த
மண்டபம் ஒன்று. இம் மூன்று மண்டபங்களையும் விடியற் காலையில் எழுந்து
அன்போடு நினைப்பவர் பல தளையினின்றும் விடுபட்டு முத்தியை அடைவர்.
மகாலிதானம்: ஓர் ஊழிமுடிவில் துயிலெழுந்த பிரமன் உலகைப்
படைக்க எண்ணுகையில் வெள்ளத்தில் பாம்பணைமேல் துயிலும் தன்
தந்தையாகிய திருமாலை மயக்க உணர்வினால் ‘நீயாரென’ வினவினான்.
திருமால் ‘உலகிற்கு முதல்வன் யான்’ எனக் கூறக்கேட்ட பிரமன் நகைத்து
‘உலகிற்கு முதல்வன் நீயுமில்லை; பிறரும் அல்லர்; யானே முதல்வன்’
என்றனன். இவ்வாறு இருவரும் சொற்போர் புரிந்து முதிர்ந்து விற்போரால்
தேவப் படைகளை வீசிப் பதினாயிரம் வருடம் போர் செய்தனர். பிரமன்
விடுத்த பாசுபதமும் திருமால் விடுத்த உருத்திரக்கணையும் நிகழ்த்திய
போரிடையே சிவபிரானார் தீப்பொறி சிதறச் சோதிலிங்க வடிவமாய்த்
தோன்ற அவ்விரு படையும் இவ்விலிங்கத்துள் மறைந்தன.
திருமால் பன்றியாய் அச்சோதிலிங்கத்தின் அடியையும், பிரமன்
அன்னமாய் அதன் முடியையும் காண்பான் முறையே பூமியை இடந்தும்,
விசும்பிற் பறந்தும் ஆயிரம் வருடம் தேடியும் வெற்றிகாணாமையால்
மயங்கினர். அப்பொழுது நாதம் ஒலிவடிவமாய் ஓம் உம என இருபகுப்பாகி
ஒன்று கலந்து இருக்கு, யசுர், சாமம் என்னும் மூன்று வேதமாய் விரிந்து
இறைவன் இயல்பை விளக்கி அவனது அருட்குறியாகும் இது’ எனக் கூறின.
மயக்கம் நீங்கி உண்மையை உணர்ந்த இருவரும் இறைவனைப் போற்றி
செய்தனர். வெளி நின்ற சிவபிரானாரை இத்தகைய மயக்கம்
அணுகாமையையும் பெருமான்பால் அன்புடைமையையும் திருமால் பிரமர்
வேண்டிப் பெற்றனர். பின்பு சிருட்டித் தொழில் தனக்கு நிலைபெறத்
தன்னிடத்துப் பெருமான் தோன்ற வேண்டுமெனப் பிரமன் வேண்டினன்.
அதனை அவனுக்கு வழங்கிய இறைவன் மேலும் சில அருள் செய்தனர்.
‘நீவிர் இருவரும் காஞ்சியை அணுகி இதுபோலும் ஓர் சிவலிங்கம்
தாபித்துப் பூசித்துப் படைத்தல் காத்தலுக்குரிய உரிமையைப் பெறுவீர்களாக.
மானிடர் தேவர் யாவரும் சிவலிங்க பூசனையை மேற்கொள்வார்களாக.
அவ்வாறு பூசனை புரிவார்க்கு மயக்கம், வறுமை, பயம், மனக்கவலை, பசி,
நோய் முதலிய தோன்றி வருத்தும் பிறவி ஒழிவதாக. ஓர்கால் பிறப்பினும்
வருத்தமின்றி மகிழ்ச்சி எய்தி அவர் வாழ்வாராக. இயமன் ஒருகாலும்
அவர் தம்மை அணுகாதொழிக. பூசனை புரியாதார் தமக்கொரு களைகண்
இல்லாதவ ராவார். அவர்களுடன் வார்த்தையாடுதலும் இழிஞரிலும் இழிஞர்
ஆதற்கு ஏதுவாகும். வேள்வி, தானம், விரதம், முதலானவை தரும்பயன்
பூசனையால் வருபயனுக்கு கோடியில் ஒரு பங்கிற்கும் நிகராகா. உலகம்
உய்யுமாறு
|