தருமையாதீனம்
ஸ்ரீலஸ்ரீ கயிலை சுப்பிரமணிய தேசிக
ஞானசம்பந்த
பரமாசாரிய சுவாமிகள்

ஆசியுரை

  "ஞாலம் நின்புக ழேமிக வேண்டும்தென்
ஆல வாயில் உறையுமெம் ஆதியே"
 
"எண்ணரிய பிறவிகளில் மானுடப் பிறவியே யாதினும் அரிது" எனக் கூறப்படுவது, அதற்கு இயற்கையில் அமைகின்ற சிறப்பறிவு பற்றியேயாம். இனி, அச்சிறப்பறிவினால் உண்டாகும் பயன், ‘அன்பு’ என்னும் சிறந்த பண்பேயாகும். அந்த அன்பு என்னும் பண்பே உயிருக்கு உறுதியாய ஆன்ம லாபத்துக்கு வழியாகின்றது. அதுபற்றியே திருவள்ளுவர் தமது நூலின் முற்பகுதியிலே அன்புடைமையை வலியுறுத்திப் பேசுகின்றார்.
  "அன்பொ டியைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்பொ டியைந்த தொடர்பு"

"அன்பின் வழியது உயிர்நிலை; அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு"
என்னும் குறள்களால் "மானுடப் பிறவி எடுத்ததே அன்பு என்னும் பண்பினை அடைதற்பொருட்டுதான்" என்று அவர் கூறுகின்றார். இன்னும்,
  "என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்"

என்பதனால், அன்பில்லாத உயிர் இறைவனது முனிவிற்கு ஆனாதலை அவர் விளக்கினார். எங்கள் ஆதிபரமாசாரியாரும்,

  "அன்புமிக உண்டாய், அதிலே விவேகம் உண்டாய்த் 
துன்ப வினையைத் துடைப்பதுண்டாய்"

என்று, "அன்போடு கூடிய அறிவே உயிர்க்குத் துன்பத்தை நீக்கி இன்பத்தைத் தருவதாகும்", என்று அருளிச் செய்தார்.

அன்பு தொடங்குவது உடலோடு தொடர்புடைய சுற்றத்தாரிடத்திலாம். இந்த அன்பு இம்மை மறுமைப் பிறப்புகளில் உடல் நலத்தையே தரும். இப்படித் தொடங்கிய அன்பு, பின்பு உயிர்க்குயிராய்