என்று கருத்துச் சுவை நிரம்பப் பாடும் கவிஞர் காதற் சுவையைப் பாடுவதிலும்
விஞ்சியே நிற்கிறார்.

‘கதீசா கனவு கண்ட படலத்தில்’, அன்னை கதீசா அண்ணல் நபியைக்
கனவில் கண்ட பிறகு அடைந்த நிலையை எவ்வளவு அழகாகப் பாடுகிறார்
பாருங்கள்.

“உண்ணவும் மறுத்தார் கட்டில் ... கிளர்நகை இழந்த தாலே!”

(ப: 99 பாடல் :117)

இப்படிச் சுவையான பாடல்கள் இக்காப்பியம் முழுவதும் நிறைந்துள்ளன.
பெருமானாரின் மனவுறுதியைப் பாடும்போது,

“ஈச்சிறகா மலை அசைக்கும்? எறும்பதுவா கடல் ... உளமசைக்கும்?”

என்று புதிய உவமைகளோடு நயமாகப் பாடுகிறார். இபுலீசு மனம் கொதித்த
நிலையைக் கூறும்போது

“தாயை வெறுத்தான் தரைமீதில் ... தமிழர் போல்”

(ப: 10 பாடல் :36)

என்பது, துரை.மாலிறையனின் தூய தமிழுணர்வைக் காட்டும் அருமையான
உவமை.

மொத்தத்தில் இக்காப்பியம் இஸ்லாமியத் தமிழ் இலக்கியத்துக்கு மட்டுமல்ல,
தமிழ்கூறும் நல்லுலகத்திற்கே கிடைத்திருக்கும் நல்வரவு! இவர்தம் மற்ற
காப்பியங்களைப் போல் இந்நூலும் இவருக்குத் தக்க பரிசுகளும் பாராட்டுக்களும்
தேடித் தரும் என்பது திண்ணம்.

‘நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்கு உழைத்தல்’ என்றான் மகாகவி பாரதி.
அவர் வழியில் வந்த இவரோ, ‘நமக்குத் தொழில் கவிதை மத நல்லிணக்கம்
காத்தல்’ என்ற கொள்கையோடு பல்வேறு சமயக் காப்பியங்களைப் படைத்து
வருகின்றார். இவரைப் போன்ற கவிஞர்களின் சேவையே இன்றைய நமது
நாட்டுக்குத் தேவை.

மதம் வளர்க்க நினைக்காமல் மனிதம் வளர்க்கத் துடிக்கும் என்
மதிப்புக்குரிய நண்பர் துரை.மாலிறையன் அவர்களை “மத நல்லிணக்க மகாகவி”
என்று மனங்கனிந்து பாராட்டுகிறேன். எதிர்கால இலக்கியவுலகம் அவரை
அப்படியே போற்றும் என்பது என் எதிர்பார்ப்பு.

நண்பரின் சமுதாய இலக்கியப் பணிகளுக்கு உற்ற துணையாய் உதவி வரும்
சகோதரியார் சூரியவிசயகுமாரி அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்.

தோழர் துரை. மாலிறையனின் தூய தமிழ்ப்பணி மேன்மேலும் தழைக்க
வல்ல இறைவனிடம் இருகரமேந்தி இறைஞ்சுகிறேன்.

அன்பில் இன்புறும்,
மு. சாயபுமரைக்காயர்