வலைச்சியார்

ஆசிரிய விருத்தம்.

(பன்னிரு சீர்கொண்டது)

      வாளைக் கயலை நிகர்த்தவெங்கண்
              வலைச்சி யீர்! நும் வனப்பெவரான்
           மதிக்க அமையும்; அரன்கச்சி
              வந்தீர்; அளவா மயறந்தீர்;
      தோளைத் தழுவிற் சுகம்பெறலாம்;
              ஊடல் ஒழிவீர்; நீர்க்குமிழி
           சுழிதேம் புளினந் தோன்றிடுமால்;
              துயரம் உறுவேன் நடைகிழங்கான்
      நாளைக் கழியா திறாலிதழின்
              நறவைப் பருக நச்சுறக்கொள்
           நானக் கருப்பஞ் சிலைவேளை
              நாணச் செய்வேன் மலங்குறேன்
      கோளைப் போக்கற் குறவைமட
              வைப்பாம் அகத்தைக் குழைத்தென்மேற்
           கொள்வீர் இரதத் தென்காலான்
              கொடிய பகழிக் குடையேனே.             (10)

(இ-ள்.) வாளைக் கயலை நிகர்த்த - கூர்மையாகிய வாட்படையையும் சேல்மீனையும் ஒத்த, வெங் கண் வலைச்சியீர் - விரும்பத்தக்க கண்களையுடைய வலைச்சியாரே, நும் வனப்பு - உம் அழகு, எவரான் - யாரால், மதிக்க அமையும் - மதிப்பிட முடியும், (ஒருவரானும் மதிப்பிடமுடியாது) அரன் கச்சி வந்தீர் - சிவபெருமான் எழுந்தருளியுள்ள காஞ்சிபுரத்தில் வந்தீர், அளவா - அளவில்லாத, மயல் தந்தீர் - (எனக்கு) மயக்கத்தைக் கொடுத்தீர்.

தோளைத் தழுவின் - உமது தோளைத் தழுவினால், சுகம் பெறலாம் - இன்பத்தைத் துய்க்கலாம், ஊடல் ஒழிவீர் - என்னிடத்துக் கொண்ட பிணக்கை ஒழிப்பீர், நீர்க்குமிழி - நீர்க்குமிழியும், சுழி - நீர்ச்சுழியும், தேம் புளினம் - இனிய மணல் மேடும், தோன்றிடும் - உம்மிடத்தே காணப்படும், ஆல் - ஆதலால், துயரம் உறுவேன் - துன்பம் அடைவேன், நடை கிழம் கால் - நடை கிழவன் கால் போன்றது. (தளர்ச்சி அடைந்தது)

நாளைக் கழியாது - நாளைப் போக்காது, இறால் இதழின் நறவைப் பருக - நும் வாய் இதழ்களின் தேன் இறாலிலிருந்துப் பெறுவதை ஒத்த இனிய தேனை உண்ண (இறால் மீன்போல் குவிந்துள்ள வாயிதழ் எனினுமாம்) நச்சு உறக்கொள் - விரும்புதலை மிகக்கொண்டுள்ள, நான் - யான், (நீர் என் விருப்பத்தை நிறைவேற்றின்) அக் கருப்பஞ் சிலைவேளை - அந்தக் கரும்பு வில்லையுடைய மன்மதனை, நாணச் செய்வேன் - (என்னை வெற்றி கொள்ளாமல்) நாணும்படி செய்வேன், மலங்குறேன் - (மனம்) கலங்கமாட்டேன், கோளைப் போக்கற்கு - மன்மதன் வலிமையைப் போக்குவதற்கு, மடம் - அறியாமைக்கு, வைப்பாம் - இருப்பிடமாகும், அகத்தை - நெஞ்சினை, குழைத்து - நெகிழச்செய்து, என்மேல் உறவைக்கொள்வீர் - என்மீது உரிமை கொள்வீர் (உரிமை - நட்பு). (கொள்வீராயின்) இரதத் தென்காலான் - தென்றற் காற்றினைத் தேராக உடைய மன்மதன், கொடிய பகழிக்கு - (செலுத்தும்) கொடிய அம்புக்கு, உடையேன் - நெஞ்சம் நிலைகெடேன்.

நடை கிழங்கான் - விரைவாக ஓடும் கிழங்கான் மீன். நாளைக்கு அழியாது - நாளைக்குள் கெடாது. இறால் - இறால் மீன். நச்சுற - நல்ல சுறாமீன். சுறா - சுற, சுறவு (புறா, புற, புறவு): குறியதன்கீழ் ஆகார ஈறு இவ்வாறு திரிவதை முன்னும் காட்டினாம். கருப்பஞ்சிலை - சினையைக் கொண்ட பஞ்சிலை மீன் (பஞ்சிலை - ஒரு மீன்) மலங்கு - விலாங்கு என்னும் மீன். மடவை, குறவை - மீன்களின் பெயர். காலான் - ஒருவகை மீன்.

நீர் குமிழி - மூக்கு நீர்மையையுடைய (அழகுடைய) குமிழ்ந்து தோன்றும் மூக்கு. (நீரில் முட்டை முட்டையாகத் தோன்றுவது). சுழி - நீர்ச்சுழி (நீரில் சுழியாகத் தோன்றுவது); உந்தி.  புளினம் - மணற்குன்று - முலை: இவற்றைக் கண்டு மயக்கம் அடைவேன், ஊடல் - புலவி (பிணக்கு).

நாளைப் போக்காது, இதழில் ஊறுகின்ற இனிய நீர் பருக விருப்பத்தைக் கொண்ட நான் நீர் இயையின் மன்மதனை நாணச் செய்வேன் என்க.

இரதத் தென்காலான் - தென்கால் இரதத்தான் என விகுதி பிரித்துக் கூட்டுக.