கட்டளைக்
கலித்துறை
இசையா
ரணத்தின் முடியார் திருக்கச்சி யீசரன்பிற்
பசையா
ரணங்கொரு பங்குடை யாரரி பங்கயத்தன்
மிசையா
ரணங்கொழித் தோருள மேவிய மெய்யருத்தி
நசையா
ரணங்குறு நானவர் நற்பத நாடுவதே. (26)
|
(இ-ள்.)
இசை ஆரணத்தின் முடியார் - இசையுடன் ஓதப்பெறும் வேதத்தின் உச்சியில் விளங்குபவர்,
திருக் கச்சி ஈசர் - அழகிய காஞ்சிபுரத்தில் எழுந்தருளிய ஏகாம்பரநாதர், அன்பின்
பசையார் - அன்பு என்னும் செல்வத்தை உடையார், அணங்கு ஒரு பங்குடையார் - உமாதேவியை
ஒரு பாகத்தில் உடையவர், அரி பங்கயத்தன் மிசையார் - திருமால், பிரமன் ஆகிய இருவருக்கும்
மேற்பட்டவர், அணங்கு ஒழித்தோர் உளம் - உலக ஆசையை ஒழித்தோரது உள்ளத்தில்,
மேவிய - பொருந்திய, மெய் அருத்தி - உண்மையான அன்பில், நசையார் - விருப்பங்கொண்டவர்,
அணங்கு உறு நான் - துன்பத்தையுற்ற யான், அவர் நற் பதம் - அக்கச்சி ஈசர்தம் திருவடியை,
நாடுவதே - நாடுதலே யாகும்.
(வி. உ.)
பசை - பற்று. உளம் மேவிய மெய்யருத்தி நசையார் - உள்ளத்தில் பொருந்திய பொருளமைந்த
நடனத்தில் விருப்பங் கொண்டவர்.
அருத்தி - கூத்து: மன்றுளாட்டு (உள்ளத்தில் உணர்வொடு
மறை ஓதுங்காலை நிகழும் நடனம்) எனினும் அமையும். |