வெளி விருத்தம்

      மாக்கைக் குருகின் தழும்புற் றாரு மாவாரே
      ஆக்கைக் கயனை அமைத்திட் டாரு மாவாரே
      காக்கைக் கரியைக் கனிவித் தாரு மாவாரே
      போக்கைக் கனலைப் பொலிவித் தாரு மாவாரே.          (29)


(இ-ள்.)  மாக் கை - தம் பெரிய தோளில், குருகின் தழும்பு - கைகளில் அமைந்த வளையல்களின் தழும்பு, உற்றாரும் - ஏற்றவரும், ஆவார் - சிவபெருமானாகிய தாமே ஆவார், மாவார் - மாமரத்தின் அடியில் இருப்பவராகிய சிவபெருமானார், ஆக்கைக்கு - உலகத்தையும் உயிர்களையும் படைத்தற்றொழிலுக்கு, அயனை அமைத்திட்டவரும் ஆவார் - பிரமனைப் படைத்து அப்படைப்புத் தொழில் தந்து அமைத்திட்டவரும் ஆவார், காக்கைக்கு - அவ்வுலகையும் உயிர்களையும் காத்தற்றொழிலுக்கு, அரியை - திருமாலைப் படைத்து, கனிவித்தாரும் ஆவார் - அத்தொழில் செய்வதற்குப் பதப்படுத்தினவரும் ஆவார், போக்கைக்கு - அவ்வுலகையும் உயிர்களையும் அழித்தற்றொழிலுக்கு, அனலை - நெருப்பினை, பொலிவித்தாரும் ஆவார் - தம் கரத்தே பொலியச் செய்தவரும் ஆவார்.  தழும்புற்றாரும் ஆவார், அமைத்திட்டாரும் ஆவார், கனிவித்தாரும் ஆவார், பொலிவித்தாரும் ஆவார் ‘என்றும், தழும்புற்றாரும் மாவார் என்றும், அமைத்திட்டாரும் மாவார் என்றும், கனிவித்தாரும் மாவார் என்றும், பொலிவித்தாரும் மாவார் என்றும் இயைத்துப் பொருள் காண்க.  படைத்தல் காத்தல் அழித்தல் ஆய முத்தொழிலிற்கும் சிவபெருமானாரே உரிமையுடையார் என்பதும், அவ்வுரிமையைத் தாமே பிறர்க்கு அளிக்கும் அருளாளர் என்பதும், அங்ஙனம் அவர் அளித்தற்குரிய எளியராதலை அன்புகொண்டு தழுவிய உமாதேவியின் வளையல்களின் தழும்பை ஏற்குமாறு தாம் குழைந்தமையே காட்டும் என்பதும் இப்பாடலால் உணரலாம்.