| அறுசீர் ஆசிரிய விருத்தம்  
  
 
 |        மழுவேந்து வலக்கரத்தர், மழை யேந்துசடைச்சிரத்தர், வான்பு ரத்தர்,
 விழவாங்கு 
 பூதரத்தர், வேளெரித்த
 மாவுரத்தர், ஆத ரத்தர்,
 தொழவாழு 
 மாதிரத்தர், நடமாடும்
 எரிசுரத்தர், தூவ ரத்தர்,
 குழையாடு 
 செவியரத்தர் கச்சியெனு
 மாகரத்தர் குணக்குன் றாரே.                       (33)
 |  
 (இ-ள்.) 
 மழு ஏந்து - மழுப்படையை (எரியிருப்புப் படையை)த் தாங்கிய, வலம் கரத்தர் - வலக்கையை 
 உடையவர், (வல்லமை பொருந்திய கையை உடையவருமாம்) மழை ஏந்து சடை சிரத்தர் - மேகம் 
 தங்கிய சடையோடுகூடிய தலையை உடையவர் (கங்கையைத் தாங்கும் சடையோடுகூடிய தலையையுடையவருமாம்), 
 வான் புரத்தர் - ஆகாயத்தை இடமாகக் கொண்டவர் (சிதாகாச இடத்தர்), விழவாங்கு 
 பூதரத்தர் - தனக்கு அடங்க வளைத்த மேருமலையை உடையார், வேள் எரித்த - மன்மதனை 
 எரித்த, மா உரத்தர் - சிறந்த மன வலிமையை யுடையவர், ஆதரத்தர் - (எல்லா உயிர்களுக்கும்) 
 ஆதாரமாகக் கருணை பொருந்தி இருப்பவர், (எல்லா உயிர்களிடமும் அன்புடையவர்) தொழ 
 வாழும் - (எல்லா ஆன்மாக்களும்) தொழும்படி வாழும், மாதிரத்தர் - (கயிலாய மலையை 
 உடையவர், நடமாடும் எரிசுரத்தர் - கூத்தாடும் அனலை வீசுகின்ற காட்டை உடையவர், தூ 
 வரத்தர் - தூய்மை உள்ள வரத்தை அளிப்பவர், குழையாடு செவியர் அத்தர் - குழைகள் 
 அசைகின்ற செவியை உடையவராகிய தலைவர், கச்சியெனும் ஆகரத்தர் - காஞ்சி என்னும் 
 உறைவிடத்தை உடையார். (அவர் யாரெனில்), குணக்குன்றாரே - எண் குணங்களாகிய மலையாரான 
 ஏகாம்பரநாதரே. வான்புரத்தர் - தேவர்களைப் பாதுகாப்பவர் எனினுமாம். 
 வான் ஆகுபெயர். பூதரத்தர் என்புழி, பூதரம், மலை.  விழவாங்கு என்ற 
 குறிப்பால் மேருமலையை உணர்த்திற்று. ஆதரத்தர், ஊர் தோறும் இருப்பவர் எனினும் அமையும். 
 (ஆதரம் - ஊர்) மாதிரத்தர் - திக்குகளை உடையவர் எனினுமாம். எரிசுரம் - பேரூழிக் காலத்தில் நெருப்பு நெருங்கிப் 
 பிறங்க எரிகின்ற காடு. தூவரம் - தூய்மை வரும். அத்தர் - அர்த்த பாகத்தை உடையவர். அத்தம் - சிவப்பு; செந்நிறத்தை உடையவர். அத்தர் - தலைவர்; அடைக்கலம் அளிக்கும் கையை உடையவர். குணக்குன்று - உருவகமாம். எண்குணமாவன: தன் வயத்தனாதல், 
 தூயவுடம்பினனாதல், இயற்கை யுணர்வினனாதல் முற்று முணர்தல், இயல்பாகவே பாசங்களினீங்குதல், 
 பேரருளுடைமை, முடிவிலாற்றலுடைமை, வரம்பிலின்பமுடைமை என்பன. |