| அறுசீர் 
 ஆசிரிய விருத்தம் 
       
 தொண்டர்க் குறவே யானாரைத்தூய 
 மறைமா நிழலாரை
 அண்டர்க் 
 கிறையா மடலாரை
 அக்கும் 
 எலும்பும் அணிவாரைக்
 கொண்டல் 
 வண்ணன் எண்கண்ணன்
 கூறற் 
 கருஞ்சீர் கொண்டாரைக்
 கண்டத் துறையு  
 மாறுகடற்
 கடுவுண் 
 டாரைத் துதிப்பாமே.                      (41)
 
 (இ-ள்.) 
 தொண்டர்க்கு - அடியவர்க்கு, உறவே ஆனாரை - உறவாக ஆனவரை, தூய - மறுவற்ற, மறைமா 
 நிழலாரை - வேதமாகிய மாமரத்தின் நிழலில் எழுந்தருளியவரை, அண்டர்க்கு - வானவர்க்கு, 
 இறை ஆம் - தலைவராகிய, அடலாரை - வல்லமை உடையாரை, அக்கும் எலும்பும் அணிவாரை - 
 சங்கு மணியையும் எலும்பையும் அணிபவரை, கொண்டல் வண்ணன் - முகில் போன்ற கருநிறமுடைய 
 திருமாலும், எண் கண்ணன் - எட்டுக் கண்களையுடைய நான்முகனும், கூறற்கு - இத்தன்மையன் 
 என்று சொல்லுதற்கு, அருஞ் சீர் கொண்டாரை - அரிய சிறப்புக் கொண்டவரை, கண்டத்து 
 உறையுமாறு - கழுத்தில் தங்கும்படி, கடல் கடு உண்டாரை - கடலின்கண் தோன்றிய நஞ்சை 
 உண்டவரை, துதிப்பாமே - யாம் துதிப்போம், ஏ நெஞ்சே நீயும் வருவாயாக. துதிப்பாம் - தன்மைப்பன்மை. எலும்பு அணிவார்: “கங்காளம் ஆமாகேள் காலாந் தரத்திருவர் 
 தங்காலஞ் செய்யத் தரித்தனன்காண் சாழலோ” என்பதனாலும் அறியலாம். |