தூது (மேகம்)

நேரிசை வெண்பா

      கடுக்கைத் தொடைநயந்தேன் காதலுடை யார்யான்
      நடுக்கை யுறுமா நயந்தார் - கொடுக்கைக்குச்
      செல்லே! சிறந்தாய் திருக்கச்சி வாணர்பால்
      வல்லே தொடையிரந்து வா.                            (42)


(இ-ள்.)  கொடுக்கைக்கு - கொடைத் தொழிலுக்கு, செல்லே - மேகமே, சிறந்தாய் - நீ சிறப்புற்றாய், ஆதலால், திருக்கச்சி வாணர்பால் - அழகிய காஞ்சிபுரத்தில் எழுந்தருளிய ஏகாம்பரநாதரிடத்துச் சென்று, தொடை யிரந்து - மேலே கூறிய கொன்றைமாலையை வேண்டிப் பெற்று, வல்லே வா - விரைந்து வா.

நடுக்கை - நடுங்குதல். நடுக்கமுறும் விதம்: கொன்றை மாலையைப் பெறாததால் துன்பம் உண்டாகும் விதம்.

கொடைத் தொழிலுக்கு உரிய மேகம்தான் கொடுத்தற்குரிய நீரைக் கடலிலிருந்துகொள்ளுந் தொழிலிலும் வல்லமையையுடையதாதல் கண்டு, இறைவன்பால் கொன்றைத் தொடையல் பெற்றுக்கொண்டுவருமாறு ஏவின நயம் பாராட்டற்குரியது.