வஞ்சித்துறை


மாநீழல் நல்லார்
ஆனேறு தொல்லார்
தேனேறு சொல்லார்
வானேறு கல்லார்.                          (46)

(இ-ள்.) மா நீழல் நல்லார் - மாமரத்தின் நிழலின்கண் எழுந்தருளிய நற்குண நற்செய்கையை உடையாரே, ஆன் ஏறு தொல்லார் - காளையை ஊர்தியாகக்கொண்டு ஏறுகின்ற பழைமையானவரும், தேனேறு சொல்லார் - தேன்போலும் இனிமை பொருந்திய சொற்களை உடையவரும், வானேறு கல்லார் - வானளவும் ஓங்கிய (வெள்ளி) மலையை உடையவரும் ஆவர்.

கச்சியம்பதியில் மாமரத்தின் நிழலில் கோயில்கொண்டு எழுந்தருளியவரே, காளையை ஊர்தியாகக்கொண்டு இன்சொல் கூறி அடியாரை மகிழ்விக்கும் கயிலையெம்பெருமான் ஆவார் என்பது கருத்து.