நேரிசைச் சிந்தியல் வெண்பா

மாவுடையான் வெள்ளி மலையுடையான் எண்டிசையாம்
தூவுடையான் நால்வேதச் சொல்லுடையான் - தாவிலறச்
சேவுடையான் எங்கள் குலத் தே.                        (48)

 

(இ-ள்.) மா வுடையான் - மாமரத்தின் நிழலை இருப்பிடமாக உடையவன், வெள்ளி மலையுடையான் - கயிலைமலையை இருப்பிடமாக உடையவன், எண் திசையாம் - எட்டுத் திக்குகளாகிய, தூ உடையான் - தூய உடையை உடையவன், நால்வேதச் சொல்லுடையான் - நான்கு மறைகளாகிய சொற்களை உடையவன், தா இல் அறம் சேவுடையான் - கெடுதலில்லாத தரும விடையை உடையவன், (யாவனெனில்), எங்கள் குலம் தே - எங்கள் குலத் தெய்வம்.

தூய்மை உடை - தூ உடை; உடை - ஆடை.

மாவுடையான், மலையுடையான், தூவுடையான், சொல்லுடையான், சேவுடையான் என ஒரு பொருள்மேல் பல பெயர் வந்தடுக்கித் ‘தே’ என ஒரு பெயர்கொண்டு முடிந்தன.

“தாவே வருத்தமும் கேடும் ஆகும்” என்பது (தொல்காப்பியம், உரியியல்.)