15 - 19. கம்பை ... ... தன்மை
(இ-ள்.)
கம்பை நதி அயல் - கம்பை ஆற்றின் அருகே, காம நயனியாம் அம்பை - காமாட்சியாகிய
அம்மையார், அருச்சனை ஆற்றல் கண்டு - வழிபாடு செய்தல் பார்த்து, அவளை உள்ளங் கலங்க
- அவளை அவளது மனங் கலங்க, ஓங்கு நீர் அழைத்து - உயர்ந்த அக் கம்பாநதியில் வெள்ளத்தை
அழைத்து, கள்ளப் புணர்ச்சி கலந்து - வஞ்சகமாக அவளுடன் புணர்ச்சி செய்து, வடுப் பட்டு
- அவளது முலைத்தழும்பும், வளைத்தழும்பும் பொருந்தி, இன்னமும் மாறாது - இன்றும் நீங்காது,
ஏய்ந்த தன்மை - பொருந்திய தன்மையை,
20 - 24. என்னவென் ... ... பேசி
(இ-ள்.)
என்ன என்று உரைப்பன் - யாதென்று சொல்லுவேன், இதுவலாது - இதுவல்லாமல், ஒரு நாள்
- முன்னொரு நாள், தாரு வனஞ் செலீஇ - தாருகாவனத்திற்குச் சென்று, தாபதப் பன்னியர்
- முனிவர் மனைவிமார், தெரு மரல் உற்று - மனக் கவர்ச்சியடைந்து, பரு வரல் எய்த
- துன்பமடைய, கோவணம் நீத்து - ஆடை நீங்கி, தீ வண்ணம் பூத்து - சென்னிறமான மேனி
அழகு சிறந்து, அம் மின்னிடையாருடன் விருப்புறப் பேசி - அந்த மின்னல் போன்ற இடையுடைய
மகளிருடன் விருப்பமுறப் பேசி,
25 - 29. துன்னிய ... ... மயங்கேன்
(இ-ள்.)
துன்னிய தன்மை - பொருந்திய தன்மை, சொல்லுந் தகைத்தோ - சொல்லுந் தன்மையதோ,
வனிதையர் மயங்க (கூடலில்) - செட்டிப் பெண்கள் மயங்கும்படி, வளை கொணர்ந்து - வளைகளைக்
கொண்டுவந்து விற்று, அன்று மதுரையில் - அக்காலையில் மதுரையில், வந்த வசையே சாலும்
- வந்த பழியே போதும், சாலும் பாண! சாலும் பாண! - போதும் பாண! போதும் பாண!,
யாதும் கேளேன் - நீ கூறும் எதனையும் கேட்க மாட்டேன், இனி யான் மயங்கேன்! - இனிமேல்
நான் மயங்க மாட்டேன்!
30 - 34. போகென ... ... வெகுளுவர்
(இ-ள்.)
போக என உரைத்தும் - போகக்கடவாய் என்று சொல்லியும், போகாய் - போகமாட்டாய்,
அந்தோ - ஐயோ, அன்னை அறியாது - (என்) தாய் அறியாமல், அவனை அணைந்தேன் - அத்
தலைவனைச் சேர்ந்தேன், பின்னை - பிறகு, உற்றிடும் பீழை - அடைந்திடும் துன்பத்தை,
நினைத்திலன் - நினைத்தேன் இல்லை, அகலுதி பாணா - (ஆதலால், இவ்விடத்து நின்றும்)
அகலுவாய் பாணனே, அன்னை அறிவளேல் - தாய் அறிவாளாயின், தகரும் நின் சிரம் - நின்
தலை பொடிப் பொடியாக உடையும், தமரும் வெகுளுவர் - உறவினரும் சினம் கொள்வர்,
35 - 40. நெஞ்சில் ... ... தொண்டே
(இ-ள்.)
நெஞ்சில் இட்ட - என் மனத்தில் (அவ் வஞ்சகன்) வைத்த, நெருப்பின் வெப்பினை -
நெருப்பின் வெப்பத்தை, வஞ்சகன் அறிய - அவனறிய, வழுத்துவை பாணா - பாணனே சொல்லுவாயாக,
மன்னனைப் புணர்ந்து - தலைவரைக் கூடி, அன்னையை மறந்தேன் - தாயை மறந்துவிட்டேன்,
சிறந்தனம் என்றே - சிறந்தோம் என்றே, திகைத்தேன் - மயங்கினேன், இத்துணைப்
பட்டது சாலும் - இவ்வளவு அடைந்தது போதும், பாணனே - பாணனே, மடவார்க்கு - பெண்களுக்கு,
இட்டதுதானே - (ஊழால்) அமைந்ததுதானே, இயலும் - பொருந்தும், பரமனை - கடவுளை, வெறுத்தலும்
- வெறுப்பதிலும், வீணே - வீணான செயலே, விழைவு பொறுத்தலும் இலன் - விருப்பம் கொள்ளுதலும்
இலன், இனி நல் தொண்டே புரிவன் - இனி நல்ல சிவத்தொண்டினையே செய்வேன்.
இல்லம் - (வீடு) இலம் எனத் தொகுத்தலாயிற்று. சிலை
வேட்கு அளித்த - குன்றுதோறும் ஆடுபவனாகிய முருகனுக்கு அருள் செய்த எனினுமாம். (சிலை
- மலை).
மங்களை - மணமுடைய அழியாச் செல்வியினள்; உமா தேவி.
பழைய கள்வன்: ஓருடம்பிலேயே ஒருகூறாக இருக்கும் உமையையும்
விட்டுப் பிரிந்து, மற்றொரு பெண்ணை (கங்கையை)க் கூடியிருக்கும் கள்வன்.
இங்கிதம்: உள்ளத்தின் கருத்தினை வெளிப்படுத்திக்
குறிப்பினால் நிகழும் உறுப்பின் தொழில். கூடிய கொற்றவன் - சேர்ந்த தலைவன்.
மலைப்பெண் ஆகிய அந்தரியை (பார்வதியை).
அலைப் பெண்ணை என்பது அலைப் பெணை எனத் தொகுத்தலாயிற்று.
அம்பா என்பது, மாலா மாலை என்பதுபோல அம்பை என ஆகார
ஈறு ஐகார ஈறாயிற்று.
செலீஇ - சொல்லிசை அளபெடை.
தெருமரல் - தெருமா பகுதி. “அலமரல் தெருமரல் ஆயிரண்டும்
சுழற்சி” (தொல்காப்பியம், உரியியல்).
தீ வண்ணம் என்பது, தீ வணம் எனத் தொகுத்தலாயிற்று.
அன்னை என்பது அனை எனத் தொகுத்தலாயிற்று.
வஞ்சகன் - அவன் எனச் சுட்டாய் நின்றது.
“ஒன்றென்றிரு தெய்வம்
உண்டென்றிரு
... ... நமக்கு இட்டபடி என்றென்றிரு”
- பட்டினத்தார். |
விருப்பு வெறுப்பு அற்றுத் தொண்டு செய்வது பெரும் பயனைத்
தருமென்பதுணர்ந்த தலைவி ‘செய்வனற் றொண்டே’ என்று தொண்டுபூண் டொழுகுதலில் தலைப்படலாயினாள்
என்க.
|