தூது (வண்டு)

நேரிசை வெண்பா

      ஓர்காற் செலினறுகால் உற்றனையென் பார்வளமை
      ஆர்காஞ்சி மேய அமலர்திரு - மார்பாருந்
      தாராய கொன்றை தரச்சேறி வண்டே! யான்
      பேராத இன்பம் பெற.               (52)

(இ-ள்.) வண்டே! ஓர்கால் செலின் - (நீ) ஒரு தடவை தூது சென்றால், அறு கால் உற்றனை என்பார் - கண்டோர்கள் ஆறு தடவை தூது சென்றாய் என்பார்கள், (ஆதலால்) வளமை ஆர் காஞ்சி மேய - வளம்பொருந்திய காஞ்சி நகரத்தில் எழுந்தருளிய, அமலர் திரு மார்பு ஆரும் - தூயவரான ஏகாம்பரநாதரது அழகிய மார்பில் பொருந்திய, தாராய கொன்றை தர - மாலையாக உள்ள கொன்றையைத் தரவும், யான் பேராத இன்பம் பெற - நான் நீங்காத இன்பத்தை அடையவும், சேறி - செல்லுவாய்.

‘அறு கால் உற்றனை என்பார்’ என்பதற்கு, ஆறு கால்களை அடைந்தனை என்பதே நேர் பொருள்.

ஆறு கால்களை உடையது வண்டு (அறுகாற் சிறு பறவை).

ஒரு தடவை தூது சென்றால், கண்டோர்கள், நீ ஆறு தடவை தூது சென்றாய் என்பார்கள் என்பது போக்குரை, வண்டே! யான் பேராத இன்பம் பெற, கொன்றை தரச் சேறி எனவுமாம்.

சேறி - செல்லுதி (போவாய்). பெற - காரியப்பொருட்டு.