| 
 தரவு 
 கொச்சகக் கலிப்பா  
  
 
 | மழைகொண்ட வுச்சியினார் வளங்கொண்ட 
 கச்சியினார்உழைகொண்ட கரத்தொழிலும் உமைகொண்ட விடத் தெழிலும்
 கழைகொண்ட மதனழியுங் கனல்கொண்ட நுதல்விழியும்
 இழைகொண்ட உரத்தழகும் எமக்கினிய அமுதாமே.       (81)
 |  (இ - ள்.)  
 மழை கொண்ட உச்சியினார் - மேகங்களைத் தம் சடையில் ஒடுக்கிக்கொண்ட முடியை உடையாரும், 
 வளங்கொண்ட கச்சியினார் - மூவளங்களையும் கொண்ட கச்சியம்பதியில் எழுந்தருளியவரும் 
 ஆய ஏகாம்பரநாதனாரது, உழை கொண்ட கரத் தொழிலும் - மானை யேந்திய கையின் தொழிலும், 
 உமை கொண்ட இடத் தெழிலும், உமாதேவியைக்கொண்ட இடப் பாகத்தின் அழகும், கழை கொண்ட 
 மதன் - கரும்பு வில்லைக் கொண்ட மன்மதன், அழியுங் கனல் கொண்ட நுதல் விழியும் 
 - அழியத்தக்க நெருப்பைக்கொண்ட நெற்றி விழியும், இழை கொண்ட உரத் தழகும் - பூணூலைக் 
 கொண்ட மார்பினழகும் (ஆகிய இவையெல்லாம்), எமக்கு இனிய அமுதாமே - அமுதம்போல எமக்கு 
 இன்பம் தருவனவாம். இழை - பூணூல். வளம் - நீர்வளம், நிலவளம், குடிவளம். ‘உமை கொண்ட விடத் தெழிலும்’ என்பதற்கு, உமாதேவி 
 செய்த விரகினால் மிடற்றில் நஞ்சு தங்க, ஏற்பட்ட அந் நஞ்சின் (விடத்தின்) அழகும் 
 எனவும் பொருள் கொள்ளலாம். இழை - அணிகலமும் ஆம். மழை - மேகத்திற்குக் காரியவாகு பெயர். |