|   கொற்றியார் அறுசீர் 
 ஆசிரிய விருத்தம்  
  
 
 | ஆமைமீன் 
 கோலமுறு மங்கமரீஇ அரவிடையால்அகடு மேவி
 மாமையுரு வோடுவளை சக்கரமேந் தித்திகழும்
 வகையாற் குல்லைத்
 தாமனையொப் பீரைந்து சரஞ்செய்துயர் 
 நீக்கியருள்
 தந்து காப்பீர்
 கோமளைவா ழிடத்தர்கச்சி மறுகுலவு 
 துளவமணக்
 கொற்றி யாரே.                         
 (82)
 |  (இ - ள்.) 
 கோமளை வாழ் - அழகிய உமாதேவி தங்கிய, இடத்தர் - இடப்பாகத்தை உடையவராகிய ஏகாம்பரநாதர் 
 வாழ்கின்ற, கச்சி மறுகு உலவு - காஞ்சிபுரத்தின் வீதியில் உலவுகின்ற, துளவம் மணம் 
 கொற்றியாரே - துளசி மாலையின் நறுமணம் வீசுகின்ற தாசிரிச்சியாரே, ஆமை மீன் கோலம் 
 உறும் அங்கமரீஇ - ஆமைபோலும் புறவடியும் வரால் மீன்போலும் கணைக்காலும் அழகுறும் உறுப்புக்கள் 
 கொண்டு, அரவு இடை ஆல் அகடு மேவி - பாம்புபோலும் துவளும் இடையும் ஆலிலை போலும் வயிறும் 
 அமையப்பெற்று, மாமை யுருவோடு - மாவின் தளிர்நிறம் போலும் நிறத்தோடு, வளை சக்கு 
 அரம் ஏந்தி - சங்கு வளையல்களும் அரம்போலும் கண்ணும் ஏந்திக்கொண்டு, திகழும் வகையால் 
 - விளங்கும் காரணத்தால், ஆமை மீன் கோலம் உறும் அங்கம் மரீஇ - எங்கள் சிவபெருமானார் 
 அருளால் கூர்மம் மீன் பன்றி இவற்றின் வடிவம் உற்ற அருள் தோற்றத்தைப் பொருந்தி, 
 அரவு இடை - பாம்பணையில், ஆல் அகடு மேவி - ஆலிலையின் மேலே பள்ளிகொண்டு, மாமை 
 உருவோடு - கரு நிறத்தோடு, வளை சக்கரம் ஏந்தி-சங்குச் சக்கரம் ஏந்திக்கொண்டு, 
 திகழும் - விளங்கும், குல்லைத் தாமனை ஒப்பீர் - துளசிமாலையை அணிந்த திருமாலினை 
 ஒப்பீர், ஐந்து சரம் செய் துயர் - மன்மத னது ஐந்து பகழிகள் செய்கின்ற துன்பத்தை, நீக்கி - ஒழித்து, 
 அருள்தந்து - அருள்செய்து, காப்பீர் - என்னைக் காக்கக் கடவீர். சக்கரம் - சக்கு அரம்; அரம் சக்கு - அரம் போன்ற 
 கண்.   கொற்றியார் - தாசிரிச்சி. ஆமை - புறந்தாளுக்கு உவமை (புறந்தாள் - பாதத்தின் 
 மேற்பாகம்.) மீன் -வரால் மீன் (கணைக்காலுக்கு உவமை.) கோலம் - அழகு. திருமால் - ஆமை, கூர்மம். மீன் - மச்சம்; கோலம் - பன்றி (வராகம்) அவதாரங்கள். அரவு இடை - பாம்பினை ஒத்த இடையையும்; ஆல் இடை மேவி 
 - ஆலிலைபோன்ற வயிற்றையும் பொருந்தி. திருமால்: அரவிடை - பாம்பினிடத்திலும், அரவணை ஆல் 
 அகடு மேவி - ஆலிலை நடுவிலும் தூங்கி. கொற்றியார்: மாமை யுருவோடு வளை சக்கர மேந்தி - 
 மாமை நிறம் (பொன் நிறம்) பொருந்திய உடம்போடு வளையலையும், (சக்கு அரம் - அரம் 
 போன்ற கண்ணையும் தாங்கி) (கங்கையும் சக்கரத்தையும்) கையிற்கொண்டு. திருமால்:  மா - கரிய, மை உருவுடன் - மேகம்போன்ற 
 மேனியுடன்-பாஞ்சசன்னியம் என்னும் சங்கினையும், சுதரிசனம் என்னும் சக்கரத்தையும் 
 ஏந்தி. ‘காப்பீர்’ என்றது, திருமாலை நீர் ஒப்பவராதலின், 
 எம்மைக் காத்தற்றொழில் உமக்கு எளிதாகும். |