நெஞ்சொடு கிளத்தல்

கட்டளைக் கலித்துறை

போற்றப்பல் பாவுண்டு கேட்கச் செவியுண்டு பூப்பறித்துத்
தூற்றக் கரமுண்டு தாழச் சிரமுண்டு தோத்திரங்கள்
ஆற்றச்செந் நாவுண்டு தென்கச்சி வாணருண் டல்லலெலா
மாற்ற அருளுண்டு நெஞ்சே! துயரெவன் மற்றெனக்கே.          (85)

(இ - ள்.) போற்றப் பல் பாவுண்டு-துதிக்கப் பல பாக்களும் பாவினங்களும் உண்டு, கேட்கச் செவியுண்டு - அவற்றைக் கேட்கக் காதுண்டு, பூப் பறித்து - பூக்களைக் கொய்து, தூற்ற - தூவ, கர முண்டு - கை யுண்டு, தாழச் சிரமுண்டு - (அவரை) வணங்கத் தலையுண்டு, தோத்திரங்கள் ஆற்றச் செந் நாவுண்டு - தோத்திரங்கள் செய்யச் சிவந்த நாவுண்டு, (இவற்றை ஏற்றுக்கொள்ள), தென் கச்சி வாண ருண்டு - தெற்குத் திசையிலுள்ள காஞ்சியம் பதியில் கோயில்கொண்டு வாழ்வாராகிய ஏகாம்பரநாதருண்டு, அல்லல் எல்லாம் மாற்ற அருளுண்டு - நமக்கு உண்டான துன்பங்களை எல்லாம் ஒழிக்க அவரது கருணையுண்டு, நெஞ்சே - (ஆதலால்) மனமே!,எனக்கு-, துய ரெவன் - துக்கம் ஏது?

இக்கருத்துப்பற்றியே,

“நாவுண்டு நெஞ்சுண்டு நற்றமி ழுண்டு நயந்தசில
 பாவுண் டினங்கள் பலவுமுண் டேபங்கிற் கொண்டிருந்தோர்
 தேவுண் டுவக்குங் கடம்பா டவிப்பசுந் தேனின்பைந்தாட்
 பூவுண்டு நாரொன் றிலையாந் தொடுத்துப் புனைவதற்கே.”

இது நெஞ்சொடு கிளத்தல்.

‘வாணர்’ என்பது, ‘வாழ்நர்’ என்பதன் மரூஉ.

எவன் என் வினா ஈண்டு இன்மை குறித்துநின்றது.