அறுசீர்
ஆசிரிய விருத்தம்
அதிக
மன்றெளி யேந்துயர் புரிந்திடும்
அறக்கடை ஆயுங்கால்
துதிகொள் ஏகம்ப வாணனார் தூயவர்
இதயவா லயத்தூடு
குதிகொள் இன்புரு வாயவர் மாதொரு
கூறுடைக் கோமானார்
நதிகொள் வேணியர் நாடுவோர்
தமக்கமை
நலத்தினைத் தெரிந்தாரே.
(92) |
(இ - ள்.)
துதி கொள் ஏகம்ப வாணனார் - அடியார்களது துதியைக்கொண்ட திருவேகம்பத்தில் வாழ்பவராய
ஏகாம்பரநாதர், தூயவர் - அழுக்கற்றவரது, இதய ஆலயத் தூடு - மனமாகிய கோயிலினிடத்து,
குதி கொள் இன்புருவாயவர் - பெருகுதல் கொண்ட இன்பமே வடிவமாய் உள்ளவர், மாதொரு
கூறு உடைக் கோமானார் - உமையைத் தம் இடப்பக்கத்தே உடைய பெருமானார், நதி கொள்
வேணியர் - கங்கையைத் தாங்கியிருக்குஞ் சடை முடியை உடையவர், நாடுவோர் தமக்கு -
தம்மை நாடுபவர்க்கு, அமை நலத்தினை - அளித்தற்கு ஏற்ற நலத்தினை, தெரிந்தார் -
தெரிந்தவராதலால், எளியேம்-அவரை நாடுகின்ற எளியேம், புரிந்திடும் அறக் கடை -
செய்யும் தீவினைத் தொழிலை, ஆயுங்கால் - ஆராயுமிடத்து, துயர் அதிக மன்று - (அவர்
தெரிந்து தர யாம்) நுகரும் துயர் அதிகம் அன்று.
எளியேம் என்பதால், ஆசிரியர் தம்மொடு முன்னிலையாரையும்
படர்க்கையாரையும் கூட்டிக்கொண்டு கூறுகிறார் என்க.
இனி, ‘எளியேன்’ என ஒருமையிற் பன்மை வந்த மயக்கம்
என்பாரு முளர். குதி கொளல் - குடி கொள்ளல்.
தூயவரும் இன்புரு வாயவரும் கோமானாரும் வேணியரும் ஆகிய
ஏகம்பவாணனார் தம்மை நாடுபவருக்கு ஏற்ற நலத்தினைத் தெரிந்து அருள் செய்பவராதலால்,
அவரை நாடுகின்ற எளியேம் புரிந்திடும் அறக்கடையை ஆராயுங்கால் எளியேம் அனுபவிக்கும்
துயர் அதிக மன்று. ஆகவே, அவர் அருளுடையவரே. |