அறுசீர் ஆசிரிய விருத்தம்

அதிக மன்றெளி யேந்துயர் புரிந்திடும்
      அறக்கடை ஆயுங்கால்
துதிகொள் ஏகம்ப வாணனார் தூயவர்
      இதயவா லயத்தூடு
குதிகொள் இன்புரு வாயவர் மாதொரு
      கூறுடைக் கோமானார்
நதிகொள் வேணியர் நாடுவோர் தமக்கமை
      நலத்தினைத் தெரிந்தாரே.                        (92)

(இ - ள்.)  துதி கொள் ஏகம்ப வாணனார் - அடியார்களது துதியைக்கொண்ட திருவேகம்பத்தில் வாழ்பவராய ஏகாம்பரநாதர், தூயவர் - அழுக்கற்றவரது, இதய ஆலயத் தூடு - மனமாகிய கோயிலினிடத்து, குதி கொள் இன்புருவாயவர் - பெருகுதல் கொண்ட இன்பமே வடிவமாய் உள்ளவர், மாதொரு கூறு உடைக் கோமானார் - உமையைத் தம் இடப்பக்கத்தே உடைய பெருமானார், நதி கொள் வேணியர் - கங்கையைத் தாங்கியிருக்குஞ் சடை முடியை உடையவர், நாடுவோர் தமக்கு - தம்மை நாடுபவர்க்கு, அமை நலத்தினை - அளித்தற்கு ஏற்ற நலத்தினை, தெரிந்தார் - தெரிந்தவராதலால், எளியேம்-அவரை நாடுகின்ற எளியேம், புரிந்திடும் அறக் கடை - செய்யும் தீவினைத் தொழிலை, ஆயுங்கால் - ஆராயுமிடத்து, துயர் அதிக மன்று - (அவர் தெரிந்து தர யாம்) நுகரும் துயர் அதிகம் அன்று.

எளியேம் என்பதால், ஆசிரியர் தம்மொடு முன்னிலையாரையும் படர்க்கையாரையும் கூட்டிக்கொண்டு கூறுகிறார் என்க.

இனி, ‘எளியேன்’ என ஒருமையிற் பன்மை வந்த மயக்கம் என்பாரு முளர்.  குதி கொளல் - குடி கொள்ளல்.

தூயவரும் இன்புரு வாயவரும் கோமானாரும் வேணியரும் ஆகிய ஏகம்பவாணனார் தம்மை நாடுபவருக்கு ஏற்ற நலத்தினைத் தெரிந்து அருள் செய்பவராதலால், அவரை நாடுகின்ற எளியேம் புரிந்திடும் அறக்கடையை ஆராயுங்கால் எளியேம் அனுபவிக்கும் துயர் அதிக மன்று.  ஆகவே, அவர் அருளுடையவரே.