| 
 
 ஓரொலி 
 வெண்டுறை  
  
 
 | வாழ்வளிக்குந் திருவிழியார் மறையளிக்கும் அருமொழியார்வணங்கி னோர் தந்
 தாழ்வகற்று மலர்ப்பதத்தார் தளர்வகற்றும் ஐம்பதத்தார்
 தண்ணந் திங்கட்
 போழ்வதியும் புரிசடையார் புகழ்க்கச்சி மேய
 ஆழ்கருணை மாகடலை அடிபணிமின் கண்டீர்!                (94)
 |  (இ - ள்.)  
 வாழ்வளிக்குந் திரு விழியார் - செல்வத்தை அளிக்கும் அருட் பார்வையை உடையார், 
 மறை யளிக்கும் அரு மொழியர் - வேதத்தை அருளும் அருமையான சொற்களை உடையார், வணங்கினோர் தம்-தம்மை வணங்கினோரது, தாழ்வு 
 அகற்றும் - கீழ்மையை அகற்றும், மலர்ப் பதத்தார் - தாமரை மலர்போன்ற திருவடியை 
 உடையார், தளர் வகற்றும் - தம்மைப் பரவி வணங்குவோருடைய தளர்ச்சியை ஒழிக்கும், 
 ஐம்பதத்தார் - ஐந்து இடங்களை உடையவர், தண்ணந் திங்கட் போழ் - குளிர்ந்த பிறைச்சந்திரன், 
 வதியும் - தங்கும், புரிசடையார் - முறுக்குண்டச் சடையையுடையார் (ஆகிய), புகழ்க்கச்சி 
 மேய - புகழை உடைய கச்சியில் தங்கிய, ஆழ் கருணை மா கடலை - ஆழ்ந்து பெரியதானக் 
 கருணைக் கடலாகிய ஏகாம்பரநாதருடைய, அடி பணிமின் - திருவடிகளை வணங்குங்கள், (வணங்கின், 
 பிறவிப் பிணி ஒழியும்.) கண்டீர் - முன்னிலை அசை. ஐம்பதத்தார் - ஐந்து இடங்களை உடையவர். ஐந்து இடங்களாவன:  பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் 
 எனப்படும் பஞ்சபூதங்கள்.  இவை, முறையே காஞ்சி, திருவானைக்கா, திருவண்ணாமலை, சீகாளத்தி, 
 சிதம்பர மென்னும் திருப்பதிகள். இரத்தின சபை முதலிய ஐந்து சபைகளை உடையவர் எனினும் 
 அமையும்.   ஐம்பதத்தர், ஐ + பதத்தர் எனப் பிரித்து, வியக்கத்தக்க 
 பதத்தை யுடையவர் எனினும் ஆம். போழ் - பிளவு. திங்கள் போழ் - சந்திரனுடைய கீற்று; ஆவது - பிறைச் 
 சந்திரன். |