களபமணி     .   .   .   .   ளங்கின,

(இ-ள்.) களபம் அணி - கலவைச் சாந்து அணிந்த, அம்பிகை - உமாதேவியினது, கனகதனம் - பொற்குடம் போன்ற முலை, இன்புற - இன்பமடைய, தழுவி வரும் - தழுவுதலால் உண்டாகும், மங்கலச் சுவடால் - அன்பும் பண்பும் பொருந்திய (முலைத்) தழும்பால், விளங்கின - காணப்பட்டன (புயங்கள்).

காமக்கண்ணியார் கம்பாநதியின் வெள்ளங்கண்டு அஞ்சி ஏகம்ப முடையாரைத் தழுவியபோது முலைத்தழும்பும் வளையற்றழும்பும் அவர்பால் விளங்கின.

       “துடிகொள்நே ரிடையாள் சுரிகுழல் மடந்தை
            துணைமுலைக் கண்கள்தோய் சுவடு
       பொடிகொள்வான் தழலிற் புள்ளிபோல் இரண்டு
            பொங்கொளி தங்குமார் பினனே”

திருவா. அருட்பத்து: 5).

கதிர்மதிய   .   .   .   . நின்றன,

(இ-ள்.) கதிர்-சூரியன், மதியம்-திங்கள், அங்கி-அக்கினி ஆகிய, முக்கண்ணின்-தன் கண்களால், ஒளி தயங்கிட-ஒளி விளங்கவும், கடுவுடைய - நஞ்சுடைய, திண்-திண்ணிய, சினத்து - கோபத்தையுடைய, அரவு ஆட - பாம்பு படமெடுத்து ஆடவும், நின்றன - நிலை பெற்றன (புயங்கள்).

கதிர் என்னும் சினைப்பெயர் சூரியனுக்குச் சினையாகு பெயர்.

மதி என்பது அம் சாரியை பெற்று மதியம் என நின்றது. அக்கினி என்பது அங்கி எனத் திரிந்து நின்றது.

சரமழைபொ  .  .   .   .  வந்தன,

(இ-ள்) சரம் மழை பொழிந்த - அம்பு மழை பொழிந்த, பற்குனன் - அருச்சுனனிடத்து, அருள் பொருந்திட - அருள் வாய்க்க, பகைவர் கெடு - பகைவரை அழிக்கக்கூடிய, வன்படைக் கொடையால் -  வலிய படையினது கொடையால், (வில்லும் கணையும் பெறுதலில்) உவந்தன - மகிழ்ந்தன (புயங்கள்).

சமரபுரி    .    .    .   .  தந்தன,

(இ-ள்) சமரம் புரி - போர் செய்தற்கு இடமாகிய சமரபுரியில் எழுந்தருளிய, கந்தனை - முருகனை, புலவர் உய்ய - தேவர்கள் பிழைக்கும்படி, மண்டு அமர்த் திறல் - நெருங்கிய போர்த் தொழிலில் வல்லமையுடைய, அவுணர் - அசுரர்கள், பங்கம் உற்றிடுமாறு - புறங்கொடுத்து அழியும்படி, தந்தன - கொடுத்தன.

சமரபுரிக் கந்தனை - திருப்போரூரில் எழுந்தருளிய முருகனை, சமரபுரி - திருப்போரூர் (சென்னைக்கு 30 கல் தொலைவில் உள்ளது.)

கந்தனைத் தந்தன என முடிக்க.

புலவர் - தேவர். புலம் உடையவர் புலவர்.  புலமாவது அறிவு.

சததளம்   .   .   .   .  ணிந்தன,

(இ-ள்) சத தளம் - நூறு இதழ்கள், அலர்ந்த-விரிந்த, பொன் தவிசினில் - அழகிய தாமரையாகிய இருக்கையில், இருந்த - தங்கிய, அச் சதுமுகன் - அந்த நான்கு திருமுகங்களையுடைய பிரமனது, மறங்கெட - வலிகெட, தலை யோடு - தலையாகிய ஓட்டை, அணிந்தன - தரித்தன.  சத தளம் - நூறு இதழ்.  பொற் றவிசு - பொற்றாமரைப் பீடம் எனினுமாம்.  மறம் - வலிமை.  அநேக பிரமர்களுடைய தலை ஓட்டினைத் தொடுத்துப் புயங்களில் மாலையாகச் சிவபிரானார் அணிந்தனர் என்க.

சலமிசைது   .   .   .  .   ணங்கின,

     (இ-ள்) சலமிசை - திருப்பாற்கடலில், துயின்ற - அறிதுயில் அமர்ந்த, சக்கரதரன் - சக்கரப் படையை உடைய திருமால், நலம் பெற - நன்மை அடையும்படி, தரும விடை - தரும இடப வடிவமாகவும், அம்பு-மேரு வில்லுக்கு அம்பாகவும், உற - அமைய, பரிவோடு-அன்போடு, இணங்கின-பொருந்தின.

      சக்கரதரன் - திருமால். நன்மை பெற அம்பாகப் பொருந்தத் தோள்கள் இணங்கின.

      தருமவிடையின் அழகிய புறத்து (முதுகில்) கை வைத்து இணங்கின எனினுமாம்.

இரவினவிர்   .   .   .   .   மிஞ்சின,

(இ-ள்) இரவின் அவிர் திங்களின் - இராக்காலத்தே விளங்குகின்ற சந்திரனைப்போல, செலும் - (எங்கும்) பரவும், ஒளி பெறும் - ஒளியைப் பெற்ற, குழை - குழையை உடைய, கவுரியிடம் - உமாதேவியிடம், அன்பின் உற்றிட - அன்பின் இடமாக (அன்பு காரணமாகப்) பொருந்துதலாலே, ஆசை மிஞ்சின - ஆசை மிகப் பெற்றன (புயங்கள்.) செலும் - செல்லும். (எங்கும் பரவும்.) செலும் திங்கள் எனினுமாம்.  குழை - காதணி. கவுரி-பொன்நிற முடையாள்.  கவுரியானவள் தன் இடப்பக்கத்தே அன்பினோடு பொருந்துதலால் அவளிடம் ஆசை மிஞ்சின எனினுமாம்.

இரணியனு  .   .   .   .   வென்றன,

(இ-ள்) இரணியன் - பொன்னனைய வடிவுடையான், உரம் - மார்பை, தொலைத்து - அழித்து (பிளந்து), எழு நர மடங்கலை - எழுகின்ற நரசிங்கமூர்த்தியை, சரபம் உருவம் தரித்து - சரபப் பறவையின் வடிவு கொண்டு, அமராடி வென்றன - போர் செய்து அதன் செருக்கை அடக்கின (புயங்கள்).

சரபம் என்பது சிங்கத்தைக் கொல்ல வல்லதாகக் கூறப்படும் எட்டுக் கால்களையுடைய பறவை.

இடபமிசை  .  .   .   .  கொண்டன,

     (இ-ள்) இடபம் மிசை வந்து - எருதின்மீது தோன்றி, பொன்பதம்-தன் அழகிய திருவடியினிடத்து, நசைகொள் - அன்புகொண்டுள்ள, அன்பருக்கு-அன்பராகிய அடியவர்கட்கு, உயர் பதவி தந்து-உயர்ந்த பதவியாகிய முத்தியைக் கொடுத்து, இசைப்ப அரும் - சொல்லுதற்கு அரிய, ஓகை கொண்டன - மகிழ்ச்சி கொண்டன (புயங்கள்).

ஓகை, உவகை என்பதன் மரூஉ. பதவியைத் தருதலால் தோள் பூரித்தது என்க.

இனிமைதரு   .   .   .   .  யங்களே,

     (இ-ள்) இனிமை தரு - இன்பத்தைத் தருகின்ற, கம்பம் உற்று - திருவேகம்பத்தில் அமர்ந்து, அருள் அநகன் - அருள் செய்யும் குற்றமற்ற சிவனாரும், எந்தை-என் தந்தையாரும், நித்திய நிமலன்்-ஒன்றும் குற்றமற்றுத் தூயவடிவனாய்த் திகழும் நித்திய நிமலருமாகிய, சுந்தரப் பரனார் புயங்கள் - அழகிய பரனாருடைய புயங்கள். ஏ-அசை. அநகரும் எந்தையும் நிமலரும் ஆகிய சுந்தரப் பரனாரது புயங்கள் என்க.

‘புயங்கள்’ என்னும் சொல்லை விஞ்சின, மகிழ்ந்தன, அணைந்தன, நிமிர்ந்தன என்று நிரலே கூட்டுக.