காப்பு
உலக நீதி புராணத்தை யுரைக்கவே கலைக ளாய்வருங் கரிமுகன் காப்பு.
|
(பதவுரை) உலக நீதி - உலக நீதியாகிற, புராணத்தை -
பழஞ் செய்திகளை, உரைக்க - நான் கூறுதற்கு,
கலைகள் - வேதம் முதலிய நூல்களால், ஆய்வு அரும் -
ஆராய்ந்து காண்டற்கு அரிய, கரிமுகன் - யானை முகத்தையுடைய
விநாயகக் கடவுள், காப்பு - காப்பாவர் என்றவாறு.
(பொழிப்புரை)
உலக நீதி என்னும் பழஞ் செய்திகளைச்
சொல்லுதற்கு வேத முதலிய நூல்களாலும் அறியவொண்ணாத விநாயகக் கடவுள் காப்பாவர் எ-று.
உலகநீதி உலகத்தில் பண்டைக்காலந் தொடங்கி
உயர்ந்தோர்களால் ஏற்கப்பட்டு வரும் நீதிகள்.
இவைதாம் புதியனவாகச் சொல்வனவல்ல, தொன்று
தொட்டுள்ளனவே என்பது அறிவித்தற்குப் `புராணம்'
என்றார்; புராணம்-பழமை; பதினெண் புராணம் முதலியவற்றைப்
போல் இதனையும் புராணமென்றாரென்று
கொள்ளற்க. கலைகளாய் வரும் என்பதற்குக்
கலைகளின் வடிவாகி வரும் என்றுரைப்பினும்
அமையும்.காப்பு -
காவல்; இடையூறு வராமல் பாதுகாப்பர் என்றபடி. |