முகப்பு
 
தொடக்கம்

அவளைத் தர, அவன் அவளுடன் இன்பம் நுகர்வானாம். இங்ஙனம்
திருமணம் முடிந்து மூன்று நாளும் மூன்று பேரிடம் இன்பமனுபவிக்கத் தன்
மனைவியைத் தந்ததால் மனக்குறை ஏற்படுமல்லவா? அது நான்காம்நாள்
தீர்வதுதான் ‘நெஞ்சுதளை’ அவிழ்ந்த புணர்ச்சியாம். இது வேத வழக்காம்.

     “தமிழர் கண்ட கற்பியல் இதுவா? தமிழினத்தின் நாகரிக ஏடான
     தொல்காப்பியத்துக்கு உரையா இது? இக்கருத்தெல்லாம்
     அல்தமிழ்நெறி என்று அகற்றுக”.

இன்று மணவரையில் ஐயர் மந்திரம் சொல்லி மணம்
செய்துவைக்கும்போது இவற்றையே, சமற்கிருத மொழியில் சொல்வதால்
பிழைத்துப்போகிறார். அவரே இவற்றைத் தமிழில் சொல்வாரானால்
அவர்நிலை என்ன ஆகும்? தமிழ்ப் பண்பாடு சீரழிவதையும் நினைத்துப்
பார்க்க வேண்டும்.

இங்ஙனம் தமிழ்நெறிக்குப் புறம்பானவற்றையும், பிழைபட
உணர்ந்தவற்றையும் அடியொன்ற மறுத்துத் தமிழர் பண்பாட்டை நிலை
நிறுத்தும் இத் தமிழ்க் காதல்நூல் சங்க இலக்கிய மாணவர்கட்கு ஒரு சிறந்த-
இன்றியமையாத பாடநூலாகும்.

சங்ககாலத் தமிழர்களின் பரத்தமை ஒழுக்கம் பற்றியும் பெண்ணுரிமை
பற்றியும் இந்நூலுள் வரும் செய்திகள் நடுநிலையோடும்
பொறுப்புணர்ச்சியோடும் எழுதப்பட்டுள்ளன. இக்காலப் பெண்ணிய
எழுத்தாளர்களும் எதிர்ப்புணர்ச்சியோடாயினும், கட்டாயம் படிக்க வேண்டிய
பகுதிகள் அவை.

     “பண்டைச் சமுதாயத்தில் கணிகை மடந்தையர் இயல்பாகப்
     பெற்றிருந்த நிலையான செல்வாக்கை நாம் மறைப்பதற்கில்லை”.

பழங்காலச் சமுதாயத்தில் ஒருவகைக் குடும்பவொழுக்கம் போலவும்
சமுதாயத் தேவைபோலவும் ஒழுக்கக்கேடன்று என்பது போலவும் அது
பரவிக்கிடந்ததையும் அதனை ஒளிவுமறைவின்றி இலக்கியப்படுத்திய புலவர்தம்
கடப்பாடு பற்றியும் நன்கு விவாதிக்கப்படுகின்றது. அன்றே அறநூல்கள்
இதைக் கண்டித்தன. அன்று ‘ஒருமைக் கணவன்மார்களும்’ இருந்தமையைப்
புறப்பாடல்களால் அறிகிறோம். மூதறிஞர் மாணிக்கனார் கருத்துப்படி
அளவுநெறி கடந்த பரத்தை நாடிகளை வெளிப்படுத்தும் பாடல்களை
இதுகாறும் ஐந்திணைப்பாற்படுத்து வந்திருப்பது தவறு. “ஒரு நிலைக்காமம்
துய்க்காது, கழிக்காமம் மிக்க ஆடவனது பரத்தைச்செயல் பெருந்திணையாதலே
பொருந்தும் என்பது என் துணிவு”, எனத் தீர்ப்புரைக்கின்றார் அவர்.

தமிழ்ப் பண்பாடு வீட்டில் பெண்ணுக்குத் தலைமை தந்தது; நாட்டில்
ஆணுக்குத் தலைமை தந்தது. நாட்டிலும் பெண் தலைமை ஏற்கும் காலம் இது.
மகப்பெற்று. குடும்ப மரபைக் காக்கும் பெண்ணின் வீட்டுத்தலைமை இதனால்
மாறிவிடுமெனத் தோன்றவில்லை. மனைவி, இல்லாள் எனும் வீட்டுத்
தொடர்புடைய சொற்களே இப்பண்பாட்டின் வேரினைக் காட்டிவிடும்.
பெண்ணினத்தைக் கொண்டு, சமுதாயத்தைக் கட்டுப்


முன்பக்கம்
அடுத்த பக்கம்