பக்கம் எண்: - 355 -

தேசிகவிநாயகம் பிள்ளை

கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை (1876 - 1954) பழைய மரபின்படியும் புதிய முறைகளின் படியும் கவிதைகள் இயற்றியவர். அவருடைய வாழ்க்கை அமைதியும் எளிமையும் இனிய பண்புகளும் நிரம்பியது. அவர் இயற்றிய கவிதைகளிலும் அமைதி எளிமை இனிமை ஆகிய இயல்புகளைக் காணலாம். போராட்டமும் பரபரப்பும் மிகுந்த காலத்தில் வாழ்ந்தபோதிலும், அவருடைய கவிதைகள் அமைதியும் இனிமையும் உடையனவாக விளங்கியது விந்தையே. வெண்பா இயற்றுவதில் வல்லவர் அவர். அந்த வெண்பாக்களின் நடையும் ஒருவகைச் சிக்கலும் இல்லாமல் எளியதாய்ச் செல்லும்; கருத்துகள் நேரே அமைந்து தெளிவாகப் புலப்படும். அவர் முற்போக்கான சீர்திருத்தக் கருத்துகள் உடையவர். அவற்றையும் எளிய இனிய வடிவிலே தருவதால், கற்பவர் நெஞ்சில் அமைதியாகவே பதிகின்றன. ‘கோயில் வழிபாடு’ என்பது அப்படிப்பட்ட பாட்டு ஆகும்.

           கோவில் முழுதும் கண்டேன் - உயர்ர்
                கோபுரம் ஏறிக் கண்டேன்
           தேவாதி தேவனையான் - தோழி
                தேடியும் கண்டிலனே.
           சிற்பச் சிலை கண்டேன் - நல்ல
                சித்திர வேலை கண்டேன்
           அற்புத மூர்த்தியினைத் - தோழி
                அங்குஎங்கும் கண்டிலனே!
           தூபம் இடுதல் கண்டேன் - தீபம்
                சுற்றி எடுத்தல் கண்டேன்
           ஆபத்தில் காப்பவனைத் - தோழி
                அங்கேயான் கண்டிலனே.
           கண்ணுக்கு இனிய கண்டு - மனதைக்
                காட்டில் அலைய விட்டுப்
           பண்ணிடும் பூசை யாலே - தோழி
                பயன் ஒன்று இல்லைஅடி.
           உள்ளத்தில் உள்ளான்அடி - அதுநீ
                உணர வேண்டும்அடி
           உள்ளத்தில் காண்பாய்எனில் - கோவில்
                உள்ளேயும் காண்பாய்அடி.