தமிழகம் ஊரும் பேரும்

முதற் பதிப்பின் முகவுரை

உலகை ஒழுங்கு முறையில் இனிது நடாத்தி வரும் அமைப்புக்கள்
பலப்பல. அவைகளுள் உயிர்ப்பாய்த் திகழ்வது ஒன்று. அது நூல் என்பது.

நூலின் உள்ளுறை யாது? அறிவு. ஆதலின், நூல் அமைப்பை
அறிவுச் சுரங்கம் என்று கூறலாம்.

நூல்கள் பல திறம், பல திறத்துள் விராவியும், தனித்தும் நிற்பது
வரலாறு. வரலாறு வான் போன்றது. வான் மற்றப் பூதங்களிற் கலந்தும்,
அவற்றைக் கடந்து தனித்தும் நிற்பதன்றோ?

‘ஊரும் பேரும்’ என்னும் இந் நூல் வரலாற்றின்பாற்பட்டது. இவ்
வரலாறு தமிழ் நாட்டின் ஊரையும் பேரையும் விளக்குங் கலங்கரை.

‘ஊரும் பேரும்’ என்னுந் தலைப்பு விழுமியது. அஃது ஆழ்ந்த
பொருண்மை யுடையது; சுரங்கம் போன்றது.

‘முழுமுதற் பொருள் ஊரில்லாதது - பேரில்லாதது’ என்று
ஆன்றோர் பலர் அருளிப் போந்தனர். ஊர் பேர் இல்லாத முழுமுதற்கு
வழிபாடு நிகழ்ந்து வருகிறதா? இல்லையா? அதற்கு வழிபாடு நிகழ்ந்தே
வருகிறது, எப்படி? ஊர் பேராலேயே வழிபாடு நிகழ்ந்து வருகிறது. ‘ஒரு
நாமம் ஓருருவம் ஒன்றுமில்லாற்கு ஆயினும் திருநாமம் பாடி நாம்
தெள்ளேணங் கொட்டாமோ’ என வரூஉந் திருவாசகம் ஈண்டுக்
கருதற்பாலது. ஊரும் பேரும் இறைக்குந் தேவையாதலை ஓர்க. ஊர் பேர்
மாண்பே மாண்பு!

நாம் வாழும் இவ் வுலகம், இற்றைக்குச் சுமார் இருநூறு கோடி
ஆண்டுக்கு முன்னர், பெரிய செஞ்ஞாயிற்றினின்றும் பிளவுண்டு வீழ்ந்த ஒரு
சிறிய துண்டு, வீழ்ந்த துண்டு, முதல் ஒரு நூறு