மைக்கண் அகன்றோர் செல்லுதற்கண்ணும் வரவின்கண்ணும்
என்றவாறு.
உதாரணம்
"வில்லோன் காலன கழலே தொடியோள்
மெல்லடி மேலவுஞ் சிலம்பே நல்லோர்
யார்கொல் அளியர் தாமே ஆரியர்
கயிறாடு பறையிற் கால்பொரக் கலங்கி
வாகை வெண்நெற் றொலிக்கும்
வேய்பயில் அழுவம் முன்னி யோரே" (குறுந் - 7)
என வரும்.
'கண்டோர் மொழிதல் கண்டது என்ப' என்பது, இவ்விவ்விடங்களில்
கண்டோர் சொல்லுதல் வழக்கிற் காணப்பட்டதென்ப என்றவாறு. (43)
44. ஒன்றாத் தமரினும் பருவத்துஞ் சுரத்தும்
ஒன்றிய மொழியொடு வலிப்பினும் விடுப்பினும்
இடைச்சுர மருங்கில் அவள்தமர் எய்திக்
கடைக்கொண்டு பெயர்தலிற் கலங்கஞர் எய்திக்
கற்பொடு புணர்ந்த கௌவை உளப்பட
அப்பாற் பட்ட ஒருதிறத் தானும்
நாளது சின்மையும் இளமைய தருமையுந்
தாளாண் பக்கமுந் தகுதிய தமைதியும்
இன்மைய திளிவும் உடைமைய துயர்ச்சியும்
அன்பின தகலமும் அகற்சிய தருமையும்
ஒன்றாப் பொருள்வயின் ஊக்கிய பாலினும்
வாயினுங் கையினும் வகுத்த பக்கமோடு
ஊதியம் கருதிய ஒருதிறத் தானும்
புகழும் மானமும் எடுத்துவற் புறுத்தலும்
தூதிடை யிட்ட வகையி னானும்
ஆகித் தோன்றும் பாங்கோர் பாங்கினும்
மூன்றன் பகுதியும் மண்டிலத் தருமையும்
தோன்றல் சான்ற மாற்றோர் மேன்மையும்
பாசறைப் புலம்பலும் முடிந்த காலத்துப்
பாகனொடு விரும்பிய வினைத்திற வகையினும்
காவற் பாங்கின் ஆங்கோர் பக்கமும்
பரத்தையின் அகற்சியிற் பிரிந்தோள் குறுகி
இரத்தலுந் தெளித்தலும் எனஇரு வகையோடு
உரைத்திற நாட்டம் கிழவோன் மேன.
இது பிரிவின்கண் தலைமகற்குக் கூற்றுநிகழும் இடன் உணர்த்துதல்
நுதலிற்று.
ஒன்றாத் தமரினும் பருவத்தும் சுரத்தும் ஒன்றிய மொழியொடு
வலிப்பினும் விடுப்பினும் என்பது: வரைவு உடன் படாத தமர்கண்ணும்
பருவத்தின்கண்ணும் சுரத்தின்கண்ணும் பொருந்திய சொல்லொடு
தலைமகளை உடன் கொண்டுபோகத் துணியினும் விடுத்துப்போகினும்
கிழவோற்குக் கூற்று நிகழும் என்றவாறு.
'உரைத்திற நாட்டம் உளவாம் கிழவோற்கு ' என்பதை ஏனைய
பகுதிக்கும் ஒட்டுக.
வலித்தற்குச் செய்யுள்
"ஆறுசெல் வருத்தத்துச் சீறடி சிவப்பவுஞ்
சினைநீங்கு தளிரின் வண்ணம் வாடவுந்
தான்வரல் துணிந்த இவளினும் இவளுடன்
வேய்பயில் அழுவம் உவக்கும்
பேதை நெஞ்சம் பெருந்தகவு உடைத்தே"
எனவும்,
" வேட்டச் செந்நாய் கிளைத்தூண் மிச்சில்
குளவி மொய்த்த அழுகற் சின்னீர்
வளையுடைக் கையள் எம்மோ டுணீஇயர்
வருகதில் அம்ம தானே
அளியளோ அளியள்என் நெஞ்சமர்ந் தோளே" (குறுந்.56)
எனவும் வரும்.
அவ்வழி இடைச்சுரத்திற் கூறியதற்குச் செய்யுள்
"அழிவில முயலும் ஆர்வ மாக்கள்
வழிபடு தெய்வம் கண்கண் டாஅங்கு
அலமரல் வருத்தந் தீர யாழநின்
நலமென் பணைத்தோ ளெய்தின மாகலிற்
பொரிப்பூம் புன்கி னெழிற்றகை யொண்முறி
சுணங்கணி வனமுலை யணங்குகொளத் திமிரி
நிழல்காண் தோறும் நெடிய வைகி
மணல்காண் தோறும் வண்டல் தைஇ
வருந்தா தேகுமதி வாலெயிற் றோயே
மாநனை கொழுதி மகிழ்குயில் ஆலும்
நறுந்தண் பொழில் கானங்
குறும்பல் ஊரயாஞ் செல்லு மாறே " (நற். 9)
என வரும்,
விடுத்தற்குச் செய்யுள்
"இரும்புலிக் கிரிந்த கருங்கட் செந்நாகு
நாட்டயிர் கடைகுரல் கேட்டொறும் வெரூஉம்
ஆநிலைப் புள்ளி அல்க நம்மொடு
மானுண் கண்ணியும் வருமெனின்
வாரார் ஆயரோ பெருங்க லாறே "
எனவரும். இஃது உடன்கொண்டு பெயர்தல் வேண்டுமென்ற தோழிக்குக் காட்டது கடுமை கூறி விடுத்தது.
"கிளிபுரை கிளவியாய் எம்மொடு நீவரின்
தளிபொழி தளிரன்ன எழில்மேனி கவின்வாட
முளியரில் பொத்திய முழங்கழல் இடைபோழ்ந்த
வளியுறின் அவ்வெழில் வாடுவை யல்லையோ"
(கலி. பாலை.12)
என்பது தலைவிக்குக் காட்டது கடுமை கூறி விடுத்தது.
இடைச்சுரம் மருங்கின் அவள் தமர் எய்திக் கடைக்கொண்டு
பெயர்தலில் கலங்கு அஞர் எய்திக் கற்பொடு புணர்ந்த கௌவை
உளப்பட அப்பால் பட்ட ஒரு திறத்தானும் என்பது, தலைமகள்
செல்கின்ற இடைச்சுரத்திடைத்
|