இளம்பூரணர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   37
Zoom In NormalZoom Out


 

யும் காட்சி முதலாக வாழ்த்தல் ஈறாகக் கல்லொடு புணர்த்துக் கூறும்
துறையொடுங் கூடச் சொல்லப்பட்ட இருபத்தொரு துறைத்து.

வெறி அறி சிறப்பின் வெவ்வாய்   வேலன்  வெறியாட்டு  அயர்ந்த
காந்தளும் - வெறி ஆடுதலை  அறியும்  சிறப்பினையுடைய  வெவ்விய
வாயினையுடைய வேலன் வெறியாடிய காந்தளும்.

காந்தளென்பதனை  மடலேறுதற்குப் பெயராகக் கூறுவாருளராகலின்,
வெறியாட்டு அயர்ந்த  காந்த ளென்றார். அன்றியும்,  காந்தள்  என்பது
மடலேறுதலான்    அத்துணை ஆற்றாளாகிய பெண்பால்மாட்டு நிகழும்
வெறி.  'காந்தள்'    எனவும்  பெயராம்.  இதனானே காமவேட்கையின்
ஆற்றாளாகிய பெண்பாற்  பக்கமாகிய  வெறியும்,  அந்  நிலத்துள்ளார்
வென்றி வேண்டி  ஆடும்  வெறியும்  கொள்ளப்படும்.  இவ்வெறி  இந்
நிலத்திற்குச் சிறந்தமை அறிக.   இது  வெட்சிப்  பின்னர்   வைத்தார் பெரும்பான்மையும் குறிஞ்சி பற்றி நிகழுமாகலின்.

உதாரணம்

"வெய்ய நெடிதுயிரா வெற்பன் அனிநினையா
ஐய நனிநீங்க ஆடினாள் - மையல்
அயன்மனைப் பெண்டிரொடு அன்னைசொல் அஞ்சி
வியன்மனையுள் ஆடும் வெறி"
                      (புறப்.இருபாற்பெருந்திணை. 10)

இது   காமவேட்கை  தோற்றாமல்  தலைமகள்  தானே முருகுமேல்
நிறீஇ    ஆடியது.      வென்றி     வேண்டியாடுதற்குச்    செய்யுள் சிலப்பதிகாரத்து  வேட்டுவவரியுட்  கண்டுகொள்க.  இனி வேலன்தானே ஆடியதற்குச் செய்யுள் வந்தவழிக் கண்டுகொள்க.

உறு    பகை வேந்து இடை தெரிதல் வேண்டி ஏந்துபுகழ் போந்தை
வேம்பு ஆர்  என  வரும்  மா  பெருந்  தானையர்  மலைந்த  பூவும
- மிக்கபகை   வேந்தன்   வேறுபாடு   தெரிதல்   வேண்டி  உயர்ந்த
புகழையுடைய போந்தை  யெனவும்   வேம்பெனவும்      ஆரெனவும்
தமிழ்நாட்டு நிலவேந்தர் சூடிய பூவும்.

உதாரணம்

"குடையலர் காந்தட்டன் கொல்லிச் சுனைவாய்த்
தொடையவிழ் தண்குவளை சூடான் - புடைதிகழுந்
தேரதிரப் பொங்குந் திருந்துவேல் வானவன்
போரெதிரிற் போந்தையாம் பூ".           (புறப்.பொது.1)

இது சேரன் பூ.

"தொடியணிதோள் ஆடவர் தும்பை புனையக்
கொடியணிதேர் கூட்டணங்கும் போரின் - முடியணியும்
காத்தல்சால் செங்கோல் கடுமான் நெடுவழுதி
ஏத்தல்சால் வேம்பின் இணர்".            (புறப்.பொது.2)

இது பாண்டியன் பூ.

"கொல்களிறு ஊர்வர் கொலைமலி வாள்மறவர்
வெல்கழல் வீக்குவர் வேலிளையர் - மல்குங்
கலங்கல் ஒலிபுனல் காவிரி நாடன்
அலங்கல் அமரழுவத் தார்."             (புறப்.பொது.9)

இது சோழன் பூ.

நிரைகோள்     கேட்டவழி    நெடுநில    வேந்தரும்  கதுமென
 எழுவராதலின்,  நிரை மீட்டலின்கண் பூப் புகழப்பட்டது.

வாடா வள்ளி - வாடுதல் இல்லாத வள்ளி.

'வள்ளி'   என்பது  ஒருகூத்து;  அஃது  அந்நிலத்தின்  நிகழ்தலின்
வாடா வள்ளி, என்றார். உதாரணம் வந்த வழிக் கண்டுகொள்க.

வயவர் ஏத்திய ஓடா கழல் நிலை - வீரராற் புகழப்பட்ட   கெடாத
கழல் நிலை.

உதாரணம்

"வாள் அமரின் முன்விலக்கி வாள்படர்வார் யார்கொலோ
கேளலார் நீக்கிய கிண்கிணிக்கால் - காளை
கலங்கழல் வாயில் கடுத்தீற்றி அற்றால்
பொலங்கழல் கான்மேல் புனைவு."         (புறப்.பொது.7)

ஓடா   உடல்  வேந்து  அடுக்கிய  உன்ன  நிலையும்  -  ஓடாத வெகுண்ட வேந்தரைச் சாத்திய உன்ன நிலையும்.

'உன்னம்'     என்பது    மரம்.    அது    தன்    நாட்டகத்துக்  கேடுவருங்கால் உலறியும், வாராத காலம் குழைந்தும் நிற்கும்.

உதாரணம்

"துன்னருந் தானைத் தொடுகழலான் துப்பெதிர்ந்து
முன்னர் வணங்கார் முரண்முருங்க - மன்னரும்
ஈடெலாந் தாங்கி இகலவிந்தார் நீயுநின்
கோடெலா முன்னங் குழை"              (புறப்.பொது.4)

பிறவும் நிமித்தமாகி வருவன வெல்லாவற்றிற்கும் இதுவே துறையாகக்
கொள்க.

மாயோன் மேய மன் பெருஞ் சிறப்பின் தாவா விழு   புகழ்  பூவை
நிலையும் - மாயோனைப் பொருந்திய நிலைபெற்ற